Thursday, November 08, 2007

சுமாரான தீபாவளி வாழ்த்துக்களும்,சூப்பரான பிறந்தநாள் வாழ்த்துக்களும்



நடிப்பு மேதை கமல் ஹாசனுக்கு உளம் கனிந்த(belated)பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------------------------------
இந்த முறை தீபாவளிக்கு ஊருக்குப் போக லீவு கிடைக்கவில்லை.போதாக்குறைக்கு, வட நாட்டில் தீபாவளி வெள்ளிக்கிழமையிலிருந்துதானாம்.அதனால் வியாழக்கிழமை(தீபாவளியன்று)அலுவலகம் உண்டு.எரியும் விளக்கில் எண்ணையை ஊற்றுவது போல பல்பீர் சிங்,ரங்பீர் சிங் என பரிச்சயம் இல்லாத மக்களெல்லாம் "Diwali Wishes" அனுப்பி மெயில் பாக்ஸை ரொப்புகிறார்கள்.அதனால் வெறுப்பில் ஒரு தீபாவளி (சிக்)ஜோக்,



குழந்தை: நம்ம மட்டும் ஏன் இந்த தடவை ஆகஸ்ட்லயே தீபாவளி கொண்டாடறோம்?
அம்மா:சும்மா இருடா உங்கப்பாவுக்கு உடம்பு சரியில்ல.
------------------------------------------------------------------------------------------------
சிரிப்புவராட்டி என்னைத் திட்டாதீர்கள்.இது சுஜாதா சொன்ன ஜோக் :)
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

Thursday, November 01, 2007

லா.சா.ரா - அஞ்சலி

'ஜனனி' சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து,

தபஸ்

நண்ப,
இது உனக்கும் எனக்கும் இடையில் ஒரு வார்த்தை.உனக்கு இதைச் சொல்ல வேண்டுமென்று வெகு நாட்களாய்க் காத்துக் கொண்டிருந்தேன்.இப்போது வகையாய் மாட்டிக்கொண்டோம்.

'இப்புத்தகத்தில் வரும் பெயரோ பாத்திரங்களோ ஒருவரையும் குறிப்பிடுவன அல்ல' என்ற சம்பிரதாயச் சொல் ஒரு பெரும் புளுகு என்று அறிந்து கொள்.ஏனெனில் ,எவரும் எவரையும் குறிப்பிடாது இருக்க முடியாது.தெய்வமே ஒரு குறிப்பிட்ட பொருள் தான்.அந்த குறிப்பைச் சுற்றி சுற்றி நாம் இயங்கி,அதனால் குறிக்கப்பட்ட பொருள்கள் ஆய்விட்டோம்.
வாழ்க்கையில் இறப்பும் பிறப்பும் இருக்கும் வரை இந்தத் தன்மையை விட்டு நாம் தப்ப முடியாது.நாம் தெரிந்தோ தெரியாமலோ இஷ்ட்டப் பட்டோ இஷ்ட்டப் படாமலோ,அர்ப்பணமானவர்கள்.இந்த அர்பணிக்கப்பட்ட தன்மையை நாம் அங்கீகரித்துக்கொண்டு விட்டோமானால் அவரவரின் உண்மையின் உள் சத்தை ஓரளவு இப்பவே புரிந்து கொள்ள முடியும்.இதனால், நம்மையும் ஆட்டுவித்துக்கொண்டு நம்முடன் தானும் ஆடிக்கொண்டிருக்கும் தெய்வத்திற்கோ,அல்லது அந்த தெய்வத்திற்கும் காரணமாயுள்ள சக்தி எதுவோ அதற்கோ நாம் உதவி புரிந்தவர்கள் ஆவோம்.

கண்ணிலிருந்து திரை கிழிந்து விழுகையில் உலகமே பீங்கான் சக்கரங்களின் மேல் நம்முன் தேர் போல் நகர்ந்து திரும்பும் கம்பீரத்தையும்,அதன் பெரும் உடலையும், அது திரும்ப முடியாமல் திரும்புவதில் துளிக்கும் சோக சாயையையும் நாம் அதனுள்ளிருந்துகொண்டே பார்க்கமுடியும்.இவ்வநுபவம் ஒருவனுடையது மாத்திரமல்ல.ஒவ்வொருவனுடைய உரிமையே ஆகும்.ஆகையால் இக்கதைகளில் எதோ ஒன்றில் ஏதோ ஒரு பக்கத்திலோ,அல்லது ஒரு வாக்கியத்திலோ,சொற்றொடரிலோ,பதங்களிலோ அல்லது இரு பதங்களுக்கிடையில் தொக்கி, உன்னுள்ளேயே நின்று கொண்டு உன்னைத் தடுக்கும் அணு நேர மெளனத்திலோ உன் உண்மையான தன்மையை நீ அடையாளம் கண்டு கொள்வாய்.இறப்புக்கும் பிறப்புக்கும் இடையில் நம் எல்லாரையும் ஒன்றாய் முடித்துப்போட்டு,நம் உள் சரடாய் ஓடிக்கொண்டிருக்கும் உண்மையின் தன்மை ஒன்றே தான்.ஆகையால் ,இக்கதைகளில் நான் உன்னையும் என்னையும் பற்றி தான் எழுதுகிறேன்.வேறு எப்படியும் எழுத முடியாது.இக்கதைகளைப் படித்ததும் உன்னிடமிருந்து உன் பாராட்டையோ,உன் நன்றியையோ நான் எதிர்பார்க்கவில்லை,உன்னைச் சில இடங்களில் இவைகள் கோபப்படுத்தினால் அக்கோபத்திற்கும் நான் வருத்தப் படப் போவதில்லை.உடன் பிறந்தவர்களிடையில் இவ்விரண்டையும் பாராட்டுவதிலேயே அர்த்தம் இல்லை.ஆனால் இவைகளின் மூலம் உன்னை நீ அடையாளம் கண்டு கொண்டாயெனில் இவைகளின் நோக்கம் நிறைவேறிய மாதிரியே.
இக்கதைகள்,தாம் வெளிப்படுவதற்கு என்னை ஒரு காரணமாக உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம்; ஆனால் இவைகள் வெளிப்பட்ட பிறகுஇவைகளைப் பார்க்கையில் நானும் உன் மாதிரி தான்.எப்படியும் இப்புத்தகத்திற்கு நான் காரணமில்லை.நீ தான் அல்லது உன் மாதிரி நாலு பேர் மாசு, வை,சு ,தாத்து,வேம்பு,செல்லம்,ரங்கன் - இவைகள் உனக்கு வெறும் பெயர்கள்.எனக்கு இவர்கள் இப்பெயரின் அர்த்தங்கள்-உன் மாதிரி.
ஆகையால் இந்த உண்மையை-வெளிப்பூச்சின் அடியில்புதைந்து கிடக்கும் உண்மையின் ஒரே தன்மையைப் பற்றி உன்னிடம் சொல்லத் தான் வந்தேன்.இது எனக்கு எப்பவும் அலுக்காது.
நான் இருக்கும் வரை,இதை நீ புரிந்து கொண்டாலும்,புரிந்து கொள்ளாவிட்டாலும்.செவி சாய்த்தாலும்,சாய்க்காவிட்டாலும் சொல்லிக்கொண்டு தான் இருப்பேன்.இனி இவைகள் உன்னுடையவை.

லா.சா.ராமாமிருதம்

Friday, October 05, 2007

திரை விமர்சனம்

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக\தோல்விகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சில ஹிந்திப்படங்களின் குறு விமர்சனங்கள்.


நான்கு(மார்கெட் போன)கதாநாயகர்கள்.நான்கு பேரும் முட்டாள்கள்.இவர்களுக்கு வேலை வெட்டி இருக்காது.இவர்களை தூக்கி சாப்பிடும் விதமாக அடிமுட்டாளாக ஒரு வில்லன்.இவர்கள் எல்லாரும் பணத்தையோ பெண்ணையோ தேடி அலைய வேண்டும் + ஒரு மூட்டை பழைய ஜோக்குகள்(பீர்பால் நகச்சுவைகள்,தெனாலி ராமன் துணுக்குகள்,சர்தார்ஜி ஜோக்குகள்).
இது தான் பாலிவுட்டில் தற்போது எல்லா நகைச்சுவைப் படங்களும் இன்ஹெரிட் செய்யும் பொதுவான டெம்ப்ளேட்.



தமால்(Dhamaal)




Director :Indra Kumar
Actors :Sanjay Dutt,Arshad Warsi,iJaved Jaffrey,
Ritesh Deshmukh, Aashish Chaudhary,Asrani
Music Director:Adnan Sami

சாகும் தருவாயில் பிரேம் சோப்ரா புதையல் பற்றிய ரகசியத்தை நான்கு பேரிடம் சொல்லிவிட்டு இறந்து போகிறார்.புதயலைத் தேடி வரும் (போலீஸ்)சஞ்சய்தத்துக்கும் இந்த நால்வருக்கும் நடக்கும் சண்டைகளும்,புதையலை அடைய ஒவ்வொருவரும் தனித்தனியே செய்யும் முயற்சிகளும் தான் கதை.இரண்டு மணி நேரத்துக்குத் தொடர்ந்து துணுக்கு மழை.ஆனால் எல்லாம் நாம் ஏற்கனவே கேட்டு சிரித்த பழைய ஜோக்குகள்.காதலா காதலாவில் இறந்தவர் வீட்டுக்குபோய் ஓவியம் விற்கும் காட்சியைக் கூட காப்பியடித்திருக்கிறார்கள்(காதலா காதலா ஒரிஜினலா??).அங்கங்கே சிரிப்பை வரவழைத்தாலும் மொத்ததில் படம் சுமார்.

மதிப்பெண்கள்: 1/5

டோல்(Dhol)




Director :Priya Darshan
Actors :Sharman Joshi,Tusshar Kapoor,Kunal Khemu,
Tanushree Datta,Rajpal Yadav,Om Puri
Music Director:Pritam chakraborty

நான்கு வெட்டி கதாநாயகர்கள்.எதிர் வீட்டுக்குக் குடிவரும் தனுஷ்ரீயை கவர நால்வரும் வித விதமாக முயற்சி செய்கிறார்கள் .தனுஷ்ரீ தத்தாவோ இறந்துபோன தன் அண்ணனின் சாவில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்று தோன்றியது.ராஜ்பால் யாதவ் "பக்கியா கல்டி மாரோ" என்று அலறிய போது மூளையில் பல்ப் எறிந்தது."கோபாலா பிச்சுக்கோ" ஞாபகம் இருக்கிறதா?.படம் பெயர் எம்.ஜி.ஆர் காலனி என்று நினைக்கிறேன்.ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்தது.இதன் மூலம்- "ஹரிஹர் நகர்"(மலையாளம்) .பிரியதர்ஷன் ஆனாலும் அர்த்தபழசுகளைக்கூட விடாமல் ரீமேக் செய்துகொண்டிருக்கிறார்.முதல் பாதி அறுவை,இரண்டாவது பாதி தப்பிப்பிழைக்கிறது.

மதிப்பெண்கள்: 1/5


மனோரமா-Six Feet Under



Director :Navdeep Singh
Actors :Abhay Deol,Raima Sen,Gul Panag,Sarika,Vinay Pathak,Kulbhushan Kharbanda

MusicDirector: Jayesh Gandhi,Raiomond Mirza


வாரத்திற்கு ஐந்து ஆறு படங்கள் ரிலீஸாவதில் உள்ள சங்கடம் சில நல்ல முயற்சிகள் கவனம் பெறாமல் போவது தான்.நான் போனவாரம் பார்த்த மனோரமா-six feet under அப்படிப்பட்ட முயற்சி எனலாம்.ரோமன் பொலன்ஸ்கியின் "சைனா டவுன்" படத்தை லேஸாகத் தழுவி எடுக்கப் பட்டிருக்கிறது.ஜெய்பூர் அருகே வறசியான ஒரு கிராமத்தில் கதை நடக்கிறது.இரிகேஷன் டிப்பார்ட்மெண்டில் ஜூனியர் இஞ்சினியராக வேலை பார்க்கும் 'அபய் தியோல்' லஞ்ச ஊழல் காரண்மாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு வீட்டில் இருப்பவர்.எழுத்து தான் இவருக்கு முதல் காதல்.துப்பறியும் கதைகள் எழுதிபெயர் பெறவிரும்பும் இவரின் முதல் கதையே படுதோல்வி.போததற்கு சதா தொணதொணக்கும் மனைவி.இந்நிலையில் ஒருநாள் இரவு இவரது வீட்டிற்கு வரும் சரிகா தன்னை மந்திரியின் மனைவியாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.மந்திரிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகவும்,அவரை வேவு பார்க்கவேண்டும் என்றும் கூறி பெருந்தொகை ஒன்றைக்கொடுத்துச் செல்கிறார்.விளையாட்டாக 'அபை' இதில் இறங்க, அடுத்தடுத்து நிகழும் கொலைகளும்,விழும் முடிச்சுகளும் அவரை பெரும் சிக்கலில் மாட்டிவிடுகின்றன.சாகசங்கள் எதுவும் செய்யத்தெரியாத ஹீரோ இதனை எப்படி எதிர் கொள்கிறார் என்பது மீதிக்கதை.வித்தியாசமான கதையையும்,கதைக்களத்தையும் தேர்ந்தெடுத்ததற்காகவே அறிமுக இயக்குநர் 'நவ்தீப் சிங்கை' பாராட்டலாம்.மிக மெதுவாகவும்,இயல்பாகவும் பயணிப்பதே இப்படத்தின் பலம் மற்றும் பலவீனம்.பாலைவனத்தின் வெய்யில் அருமையாக சிறைபடுத்தப்பட்டிருக்கிறது கேமராவில்(அரவிந்த் கண்ணபிரான்).இப்படத்தின் ஹீரோ 'அபை தியோல்' எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர்.வழக்கமான மசாலா படங்களை ஒதுக்கி வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர்(சோச் நா தா,ஆஹிஸ்தா ஆஹிஸ்தா,ஏக் சாலிஸ்..),இந்த படத்திலும் படு இயல்பாக நடித்திருக்கிறார்.கொஞ்ச நேரம் வந்தாலும் விநாயக் பதக்(பேஜா ஃரை) கலக்குகிறார்.கடைசி இருபது நிமிடங்களில் நிகழும் திரைக்கதைக் குழப்பங்கள் படத்திற்கு மைனஸ்.மொத்தத்தில் இது ஒரு Refreshing Movie.

Noir என்று சொல்லப்படும் Black Film வகையைச் சேர்ந்தது இந்தப்படம்.தமிழில் இவ்வகைப்படங்கள் உள்ளனவா?தெரிந்தவர்கள் குறிப்பிடலாம்.

மதிப்பெண்கள்: 3/5


ஜானி கத்தார்(Johny Gaddar)



Director :Sriram Raghavan
Actors :Neil Mukesh,Zakir Hussain,Dharmendra,Rimi Sen,Vinay Pathak
Music Director:Vishal Dadlani · Shekhar Ravjiani

"மனோரமா" விற்கு எதிர் மாறாக ஒரு த்ரில்லர்.படத்தின் முதல் பத்து பதினைந்து நிமிடங்களிலேயே யார் செய்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் ,இருந்தும் அடுத்து வரும் இரண்டுமணி நேரமும் உங்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து படம் பார்க்க வைக்கிறார் இயக்குநர்.ஐந்து பிரதான கதாப்பாத்திரங்களைச் சுற்றி கதை சுழல்கிறது என்றாலும் படத்தின் உண்மையான கதாநாயகன் திரைக்கதை தான்.ஹாலிவுட் பாணியில் புத்திசாலித்தனமான படம் கொடுத்ததற்காக ஸ்ரீராம் ராகவனுக்கு(தமிழ்?) ஒரு "சபாஷ்".நடிகர்களின் நடிப்பு OK ரகம்.தர்மேந்திரா,விநாயக் பதக் நன்றாக நடித்திருக்கிறார்கள்.ஹீரோ அவ்வப்போது என்ன முகபாவம் கொடுப்பது என்று தெரியாமல் விழிக்கிறார்(அது கதைக்கு பொருத்தமாகவும் உள்ளது!).சின்ன சின்ன லாஜிக் வழுக்கல்கள் தவிர பெரிதாகக் குறிப்பிட குறைகளெதுவும் இல்லை.பின்னணி இசை கச்சிதம்.இரண்டு ஹிட் பாடல்கள்,இரண்டுமே திரையில் வராது.
பாக்கிய ராஜின் "விடியும் வரை காத்திரு" பார்த்திருக்கிறிர்களா?அந்த ஜாதிப் படம் இது.

மதிப்பெண்கள்: 3/5

Friday, September 21, 2007

உதிரிக் குறிப்புகள்

இந்தக் கலைநயமிக்க புகைப்படத்தை எடுத்த தமிழ் நடிகர் யார் என்று கண்டுபிடியுங்கள்.விடை இறுதியில்


*போலி,போலியல்லாத,கருப்பு,சிவப்பு மற்றும் ஜாதீயப் பதிவுகளைத் தொடர்ந்து படித்துவிட்டு,கடந்த இரண்டுநாட்களாக அத்தகைய பதிவுகள் எதுவும் சூடான இடுகைகளில் காணக்கிடைக்காத போது கைநடுக்கம் ஏற்பட்டது.


*வாராவாரம் (மெனக்கெட்டு) "ராஸ்தா பேட்" வரை சென்று விகடன் வாங்கிவர எனக்கு மீதமிருந்த ஒரு காரணமும் தீர்ந்து போனது(க.பெ).


*சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்கள் ரொம்பவும் வெறுமையை உணரச்செய்தன.


(1)Metamorphosis(Kafka)

ஒரு நாவலுக்கு இவ்வளவு அருமையான துவக்க வரிகள் அமைவது அபூர்வம்.

"As Gregor Samsa awoke one morning from uneasy dreams he found himself transformed in his bed into a gigantic insect."


(2)நாளை மற்றுமொரு நாளே(ஜி.நாகராஜன்)


"உங்களுக்கு வாழ்க்கையில லட்சியம் என்னண்ணே?" என்றான் முத்துசாமி.

"அப்படீன்னா?" என்றான் கந்தன்.

"நீங்க வாழ்க்கையில எதை சாதிக்கணூம்னு திட்டம் போட்டிருக்கீங்க?"

கந்தன் சிரித்தான்."எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா வயத்துல வந்து பொறந்தேன்?"என்றுவிட்டு மீண்டும் சிரித்தான்.


பின்நவீனத்துவமாக சொல்கிறேன் பேர்விழி என்று சாதாரண விஷயங்களைக் கூட குழப்பியடித்து படிப்பவனை மண்டைகாயவைக்கும் நூல்கள் ஒருபுறமிருக்க, நா.ம.நா போன்ற நாவல்கள் "இருத்தலியல்" போன்ற பெரிய தத்துவங்களைக்கூட அதன் பளு தெரியாமல் வாசகனுக்குள் இறக்கி வைத்துவிடுகின்றன.
தஞ்சை பிரகாஷின் "கள்ளம்" இந்த நாவலுடன் நிறைய ஒப்புமைகளைக் கொண்டிருக்கிறது.கள்ளம் இந்த நாவலுக்குப் பின்னால் வெளிவந்தது என்று நினைக்கிறேன்.


* "சக்தே இண்டியா" இரண்டாவதுமுறை பார்த்தபோது,திரைக்கதை நேர்த்தியும்,படம் ரியலிஸ்டிக்காக இருக்கவேண்டும் என்பதில் இயக்குனருக்கிருந்த சிரத்தையும் வியக்கவைத்தன.ஆண்கள் அணியுடன் பெண்கள் அணி மோதும் காட்சி இதற்கு உதாரணம்.பெண்கள் அணி வலுவானது என்று காட்ட வேண்டும் அதேசமயம் ஆண்கள் அணியைத் தோற்கடிப்பது போன்றும் காட்டமுடியாது,அபத்தமாக இருக்கும்.ஒரே ஒரு கோல்(Goal) குறைவாக இருப்பதுபோல ஆட்டத்தை முடிப்பது புத்திசாலித்தனம். 'அப் தக் சப்பன்' பட டிவிடியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.


* ஷாருக் கான் "ஓம் ஷாந்தி ஓம்" படத்திற்காக உடம்பை கல்லாக இறுக்கியிருப்பது பிரமிக்க வைக்கிறது.இப்படத்தில் வரும் "Aanhko mein teri " பாடலைக் கேட்டீர்களா?அதில் கேகே வின் குரல் மயிலிறகால் வருடுவது போலுள்ளது.

ஆரம்பக் கேள்விக்கான பதில்: கமல் ஹாசன்

Sunday, September 09, 2007

நோ கமெண்ட்ஸ்

1)எழுத்தாளர்கள் கையாலாகாதவர்கள்

2)தமிழில் நல்ல மரபுக்கவிதைகள் எல்லாம் எழுதப்பட்டுவிட்டன.

3)லா.சா.ரா-வைப் படிக்காதவன் தமிழ் சிறுகதையைப் பற்றிப்பேச லாயக்கற்றவன்.

மேலுள்ள இந்த ஸ்டேட்மெண்ட்களை உதிர்த்த தமிழ் எழுத்தாளப் பிரபலங்கள் யார் யார் என்று கண்டுபிடியுங்கள்.விடை இறுதியில்..

********************

ஆதவனின் "கார்த்திக்" என்ற சிறுகதையிலிருந்து (தொடர்ச்சியற்று)உருவப்பட்ட இரண்டு பத்திகள்

அவன்,தன் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒருத்தியைத் தேடிக்கொண்டிருந்தான்.மனிதகுலம் இழந்துவிட்டிருந்த நிரபராதம் குறித்துச்சோகம்.இயற்கையை நசுக்கித் தேய்த்தவாறு எங்கும் செயற்கை படர்ந்து வருவது குறித்துச் சோகம்.

ஆம்,கார்த்திக் ஓர் உலர்ந்த,ஒற்றைப் பரிமாணப் பகுத்தறிவு வாதியல்ல.அவன் எதிர்த்தது பழமைவாதிகளின் மூட நம்பிக்கைகளை மட்டுமல்ல. புதுமைவாதிகளின் மூடநம்பிக்கைகளும்தான் அவனுக்குப் பிடிக்கவில்லை.அதிலும் இந்தப் பெண்கள்...

நவநாகரீக உடைகள் உடுத்து,ஆங்கிலத்தில் பேசவும் சிகரெட் குடிக்கவும் தெரிந்து விட்டதால் மட்டுமே,தாங்கள் முன்னேற்றமடைந்துவிட்டதாக எண்ணுகிற இவர்களுடைய மேலோட்டமான போக்கு...

இவர்களைப்போல உடுக்காத ஆங்கிலம் பேசாத பெண்களைவிட - தம் தாயாரையும் பாட்டியையும் விட - தங்களை உயர்ந்தாவர்களாக நிரூபித்துக்கொள்ள ஒவொவொரு கட்டத்திலும் முயற்சி செய்கிற பரிதாபம்...
புதுப் பணக்காரர்களின் ஆர்பாட்டத்தையும்,திடீரென உரிமையும்,சக்திகளும் பெற்ற மாஜி அடிமைகளின் பழிவாங்கும் குரோதத்தையும் வஞ்ஜகத்தையுமே இவர்களிடம் அவன் கண்டான்.பழைய பெண்களின் அசட்டு நம்பிக்கைகள்,பிடிவாதங்கள் இவையே மீண்டும் மாறு வேஷமணிந்து வந்தது போலிருந்தது.

ஒருவேளை தனக்கு எத்தகைய பெண்மைக்குத் தகுதி உள்ளதோ,அத்தகைய பெண்மையையே ஒரு சமூகம் பெறுகிறது, என்பதாக இருக்கலாம்.

சிந்தனைகளிலும் செயல்களிலும் இந்தச் சமூகத்திடமிருந்து வேறுபடுகிறவர்களும்கூட, அதில் வாழ்கின்ற காரணத்தாலேயே,இச்செயல்கள் விளைவிக்கும் தண்டனைகளிலிருந்து தப்ப முடிவதில்லை.
****
அவனைப் போலவே அவளும் மலர்களையும் இலைகளையும் மரங்களையும் செடிகளையும் விரும்புகிறவள்.அமைதியை விரும்புகிறவள்.அதிகம் பேசாதவள்.மூட மரபுகள்,பழக்கங்கள் ஆகியவற்றைத் தொடர விரும்பாதவள்.அதே சமயத்தில் இந்த நம்பிக்கையை அல்லது நம்பிக்கையின்மையை உரக்க பறைசாற்றிக்கொண்டு அதன் மூலமாகத் தனக்கு ஒரு ஹோதாவை உருவாக்கிக் கொள்ள முயலாதவள்.மனதில் மூளியில்லாதவள்.தன்னைத் தானாகவே உணருவதில் சங்கடமில்லாதவள்.ஒன்றைச் சார்ந்தவளாகவோ மற்றொன்றைச் சாராதவளாகவோ,சிலரைவிட உயர்ந்தவளாகவோ,சிலருக்குத் தாழ்ந்தவளல்லாதவளாகவோ தன்னைக்காட்டிக்கொள்ளாமலேயே ஸ்திரமாக உணருகிறவள்.

அவளுடைய உறுதியும் திண்மையும் கார்திக்கிற்கு மீண்டும் மீண்டும் வியப்பளித்தன,தெம்பூட்டின.

'இவள் எனக்கேற்ற விசேஷமானவள்.நான் தவறு செய்யவில்லை' என்று அவன் நினைத்தான்.இன்பம் நிறைந்த எதிர்காலம் அவன் கண்முன் விரிந்தது.

ஆனால் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிரம்பியது.நம்மைப் பற்றியும் பிறரைப்பற்றியும் புதிய கண்டுபிடிப்புகளை நம் முகத்தில் எறிந்து, சரியை தவறாகவும், தவறைச் சரியாகவும் மாற்றுவது.

********************************

திடுக்கிடும் திருப்பங்களையோ,அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலையோ ஏற்படுத்தாத நின்று நிதானமாகப் பயணிக்கும் மேற்கூரியவகை கதைசொல்லல் உங்களைக் கவர்கிறது என்றால் கை கொடுங்கள் நீங்கள் தான் ஆதவனின் எழுத்துக்கள் தேடும் வாசகர்! ரெடி...ஸ்டெடி..ஸ்டார்ட்........

ஆதவனின் எழுத்துக்கள் குறித்த எனது முந்தைய பதிவு

*******************
கேள்விகள் ஒன்றிலிருந்து மூன்றுவரைக்கான பதில்கள் முறையே சுஜாதா, சுஜாதா மற்றும் சுஜாதா !!!!

Monday, September 03, 2007

ஜானகி அம்மாள்




கணித மேதை ராமானுஜன் இங்கிலாந்தில கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது ஒரு முறை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார்.அவரைப் பார்க்க அவரின் நண்பரும் , கணித மேதையுமான ஹார்டி வாடகைக்காரில் வந்திறங்கினார்.அவர் பயணித்த கார் எண் 1729.அவர் கணித மேதையில்லையா..அதனால் வரும் வழியெல்லாம் அந்த எண்ணின் சிறப்பைப்பற்றி ஆராய்ந்து கொண்டேவந்தார்.ராமானுஜத்தை சந்தித்தபோது இந்த எண்ணைக் குறிப்பிட்டு "இந்த எண்ணிற்கு எந்த சிறப்புமே இல்லை.போரிங் நம்பர்" என்று சொல்லியிருக்கிறார்.ஒரு விநாடி யோசித்த ராமானுஜன்"நீங்கள் சொல்வது தவறு.இது மிகவும் சுவாரஸியமான எண்" என்றாராம்.இந்த எண்ணின் சிறப்பாக ராமானுஜன் என்ன சொல்லியிருப்பார் என்று இப்பதிவின் இறுதிவரை யோசித்துப் பாருங்கள்.


*******************************************

ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டுகையில்,அவரது துணைவியார் ஜானகி அம்மாள் பற்றிய செய்திகள் ஆச்சரியம் அளிக்கின்றன.10வயதில் திருமணம்,திருமணம் என்றால் என்ன என்று புரியத்துவங்கும் முன்னரே(21) விதவைக்கோலம்.சொற்பகாலமே வாழ்ந்த ராமானுஜனுக்கு எதிப்பதமாக கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுகாலம்(94 வயதுவரை)வாழ்ந்து மறைந்திருக்கிறார்,தனிமையில்.

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில்,ஆச்சாரமான ஒரு பிராமணக் குடும்பத்தில் ஒரு இளம் விதவையின் விதி எவ்வாறு அமையும் என்பது நன்றாகவே தெரியும்.அப்பெண் தன் பெற்றோரையோ,சகோதரனையோ அண்டி,ராமா ராமா என்று ஜெபித்தபடி தன் மிதமுள்ள வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதுதான்.ஆனால் ஜானகி தன் வாழ்க்கை அவ்வாறு அமைய அனுமதிக்கவில்லை.கணவன் இறந்தபின் பம்பாய்யில் தன் சகோதரனின் வீட்டில் தங்கி முறையாக தையலும்,ஆங்கிலமும் பயின்றிருக்கிறார்.பின் சென்னை வந்து அனுமந்தராவ் தெருவில் குடியேறிய ஜானகி அடுத்து வந்த 50 ஆண்டுகளை தனியாக இல்லை தனித்து வாழ்ந்திருக்கிறார்.அவர் பயின்ற தையல் தொழில் அவருக்கு நல்ல பொருள் ஈட்டித்தந்திருக்கிறது.இதற்கிடையில் அவரது தோழி ஒருவர் திடீரென்று இறந்து போக,அவரின் குழந்தையை தத்தெடுத்து படிப்பு செலவு முழுமையையும் ஏற்றிருக்கிறார்.ஏழ்மைகாரணமாக படிப்பைத்தொடரமுடியாத பலருக்கு பொருள் கொடுத்து உதவியிருக்கிறார்.
ராமனுஜருக்கு சிலை ஒன்று வைக்கக் கோரிக்கை விடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

Dear Sir,
I understand from Mr. Richard Askey,
Wisconsin, U.S.A., that you have contributed
for the sculpture in memory of
my late husband Mr. Srinivasa Ramanujan.
I am happy over this event.
I thank you very much for your good
gesture and wish you success in all your
endeavours.
Yours faithfully,
Signed S. Janaki Ammal
மறுமணம் செய்துகொள்வதைவிட ஒரு பெண் தனியாக வாழ்ந்துகாட்டுவது இன்னும் புரட்சிகரமானதாகத் தோன்றுகிறது.மறுமணம் செய்துகொள்ளும் போது மறுபடியும் ஒரு ஆணைசார்ந்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்.ஆனால் எவருடைய துணையுமின்றி தனியாக வாழ அதிக மன உறுதியும்,தன்னம்பிக்கையும் தேவைப்படுகிறது.பெண்விடுதலை,பெண்ணுரிமை என்று எந்தவித முழக்கங்களுமின்றி அதேசமயம் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்திருக்கும் ஜானகி, சந்தேகத்திற்கிடமின்றி பாரதியின் புதுமைப் பெண்களுள் ஒருவர்.

********************************************
1729 சிறப்பு:

இரண்டு கன சதுரங்களின் கூட்டுத்தொகையாக இருவேறு முறைகளில் சொல்லக் கூடிய மிகச்சிறிய எண்.புரியும்படி சொன்னால்

"It is the smallest number expressible as the sum of two cubes in two different ways."

two different ways

1) 10X10X10 + 9X9X9 = 1729

2) 12X12X12 + 1X1X1 = 1729

1729 ராமானுஜன் எண் என்று அழைக்கப் படுகிறது.

Saturday, August 25, 2007

लक... लक... लक (லக... லக.. லக...)


மணிசித்திரத்தாள் என்ற அருமையான மலையாளப்படத்தை ஹீரோயிச மசாலாக்கள் சேர்த்து கன்னடத்திலும் தமிழிலும் குடலாப்பரேஷன் செய்தாயிற்று.இப்போது ஹிந்திக்காரர்களின் முறை.இருக்கவே இருக்கிறார் ரீமேக் மன்னன் ப்ரியதர்ஷன்.எந்தப் படத்தை ரீமேக் பண்ணப்போகிறோம் என்று முடிவுசெய்வதற்கு முன்னமே பர்வேஷ்ராவல்,அக்ஷய் குமார் இருவரிடமும் கால்ஷீட் வாங்கி வைத்துக்கொள்வாராம் :))

ஆக மோகன்லால்,ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்(தேவுடா)
ஷோபனா நடித்த கதாபாத்திரத்தி வித்யா பாலன் ...
"Bhool Bhulaiya " என்ற பெயரில் முழு நீள நகைச்சுவைப் படமாக வெளிவரவிருக்கிறது மணிசித்திரத்தாள்.

மொழி மாநிலங்களை கடந்த "பேய் இருக்கிறதா இல்லையா?" என்ற வசீகரமான பிரச்சனையும் , சுவாரஸியமான கடைசி இருபது நிமிஷங்களும் இந்த படத்தை எல்லா மொழிகளிலும் வெற்றியடையச் செய்கின்றன.
அடுத்து போஜ்பூரியில் நக்மாவை வைத்துகூட ரீமேக் செய்யப்படலாம்,யார்கண்டார்கள்!.

Friday, August 10, 2007

ஹி ..ஹி...

ஒரு டெலி போன் சம்பாஷனை

"ஹலோ"

"ஹலோ"

"யார் பேசறது?"

"நான் தான்"

"நான் தான்னா யார்?"

"நான் தான் ரேவதி"

"ரேவதி! அப்பா இல்லையா?"

"இல்லை"

"அம்மா"

"இல்லை"

"சரி அப்பா வந்தா ராமன் போன் பண்ணினதாகச் சொல்கிறாயா?"

"யாரு?"

"ராமன்.எழுதிக்கோ ரா - ம - ன் "

"ரா எப்படி எழுதறது?"

"சரிதான்! பாப்பா , வீட்ல வேற ஒருத்தரும் இல்லையா?"

"சேகர் இருக்கான்"

"சரி சேகரைக் கூப்பிடு"

"சேகர் இந்தா" என்று ரேவதி சேகரிடம் (வயது 1) டெலிபோனைக் கொடுக்கிறாள்...


- சுஜாதா

Tuesday, August 07, 2007

"Gandhi My Father" - விமர்சனம்


'Spoiler Warning'போடுவதற்கு அவசியம் ஏற்படாதபடி போஸ்டரிலேயெ கதை சொல்லிவிடுகிறார்கள்.ஒரு தேசத்திற்கே தந்தை என கொண்டாடப்படும் மனிதர் தன் மகனுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருந்திருக்கவில்லை என்பது தான் கதை.

(1948)முதல்காட்சியில், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரனை மருத்துவமனைக்குக் கொண்டுவருகிறார்கள்.சுயநினைவு தப்பிக்கொண்டிருக்கும் அவனிடம், நீ யார்? உன் அப்பா பெயர் என்ன ? என்று கேட்கிறார்கள்."பாபு" என்று ஈனசுவரத்தில் முனகுகிறான்.மெதுவாக பின்னோக்கி விரிகின்றன காட்சிகள்.(1906) இளமையான காந்தி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகிறார்.மூத்தமகனான ஹரிலால் குஜராத்தில் படித்துக்கொன்டிருக்கிறான்.கால்பந்தாடுகிறான்.பாரீஸ்டர் பட்டம் பெற ஆசைப் படுகிறான்.ஹரிலால் தன் தந்தையின் பேச்சை மீறி திருமணம் செய்துகொள்வதில் தொடங்குகிறது இருவருக்குமிடையேயான முதல் இடைவெளி.


சிறிது காலம் கழித்துத் தென்னாப்பிரிக்காவரும் ஹரிலாலை , காந்தி தன் ஐடியாலஜியை பரிசோதிக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்.தந்தைக்காக சிறை செல்கிறான்.இதனால் கல்வியில் தொடர்ச்சியற்று பாரீஸர் பட்டம் வாங்கும் அவனது கனவு தகர்கிறது.இந்தியா வந்து துணி வியாபாரம் செய்து நஷ்டமடைகிறான்.மனைவி இறக்கிறாள்.மது அருந்துகிறான்.மீண்டும் காந்தியுடன் சேர்ந்து சிறிது காலம் சுதந்திரத்திற்காகப் போராடுகிறான்.இஸ்லாமிற்கு மதம் மாற்றப் படுகிறான்.விபசாரியிடம் செல்கிறான்.யாகம் வளர்த்து இந்து மதத்திற்கு மீண்டும் வந்து சேருகிறான்.கஸ்தூர்பாவின் இறப்பிற்குக்கூட வரமுடியாமல் தொலைந்துபோகிறான்.இறுதியாக காந்திஜி இறந்ததற்கு ஐந்து மாதங்கள் கழித்து பம்பாயில் ஒரு மருத்துவமனையில் அனாதையாக இறந்து போகிறான்.
யாரும் தொடத்தயங்கும்,யாரும் அறியாத காந்தியின் மறுபக்கத்தை படமாக்கத் துணிந்ததற்காக இயக்குனரையும்(Feroz Abbas Khan),தயாரிப்பாளரையும்(Anil Kapoor) பாராட்டியே ஆகவேண்டும்.அதுவும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் அனில் கபூருக்கு இது முதல் படம்!

இளவயது காந்தியாக மனதில் ஒட்டமறுக்கும் 'தர்ஷன் தாரிவாலா' வயதாக ஆக உருவம்,நடை ...என அனைத்திலும் காந்தியாகவே மாறியிருக்கிறார்.

அக்க்ஷை கன்னாவிற்கு இந்த படம் நடிப்பில் ஒரு மைல்கல்.காந்தியை எதிர்த்துப் பேசமுடியாமலும்,தன் விருப்பங்களை விட்டுக்கொடுக்க முடியாமலும் ஆற்றாமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.குறிப்பாக ரயில் நிலையத்தில் "காந்தி மகாத்மாவாக போற்றப்படுவதற்கு கஸ்தோர்பா தான் காரணம்" என்று சொல்லிவிட்டுப் போகும் காட்சியில் அவரது நடிப்பு அருமை.
நடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் கஸ்தூர்பா வாக வரும் ஷிவாலி சாயா.பெங்காலி நடிகைகளுக்கு நடிப்பு ரத்தத்தில் ஊறியிருக்கும் விஷயம் போல.இவர் இந்த படத்திற்காக சில விருதுகளை எதிர்பார்க்கலாம்.பூமிகாவின் நடிப்பும் நிறைவாக இருக்கிறது.
தேங்கிய நீரில் மழைத்துளி விழும் காட்சி,தென்னாப்பிரிக்காவில் ஹரிலால் காந்தியை சந்திக்கும் முதல் காட்சி என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கவிதை எழுதியிருக்கிறது மெக்டொனால்டின் கேமரா.

இவ்வளவு இருந்தும் படம் பல இடங்களில் சறுக்குகிறது.குறிப்பாக வசனம் இது ஒரு பாலிவுட் படம் என்பதை அடிக்கடி நியாபகப் படுத்துகிறது.இரண்டாவது பாதி ரொம்பவே நீளம்.நிறைய வெட்டியிருக்கலாம்.காந்தியின் மற்ற குழந்தைகள் என்ன செய்தார்கள்,அவர்களுடன் காந்தியின் உறவு எப்படியிருந்தது என்பதை சொல்ல விட்டுவிட்டார்கள்.காந்தி- ஹரிலாலின் உறவினை சொல்லத்துவங்கி , ஒரு தோல்வியுற்ற மனிதனின் வாழ்க்கையை சொல்லிமுடிகிறது படம்.

"அட காந்தி தன் மகன்கிட்ட இவ்வளவு ஓரவஞ்சனையால்லாம் நடந்துகல்ல.இயக்குனர் மிகையா காட்டிட்டார்" என்று ஒரு பேசுக்குக் கூட வாதிக்கமுடியாத அளவுக்கு காந்தி பற்றிய என்(நம்?) அறியாமை பிடுங்கித் தின்கிறது .

காந்தி என்கிற மாமனிதனின் மற்றொறு பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறது என்கிற வகையிலும்,நடிகர்களின் தேர்ந்த நடிப்பினாலும் பார்க்கவெண்டிய படங்களின் வரிசையில் இடம் பிடிக்கிறது "Gandhi My Father".

Thursday, July 26, 2007

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் ஓஷோ-எனது நிலைப்பாடுகள்





அய்யனார் தமது பதிவில் குறிப்பிடிருப்பது போல,ஓஷோவின் தியான முறைகள் யாவும் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டு உலக அளவில் பெரும் வெற்றி கண்டவை.கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓஷோ ஆசிரமதிற்கு வருவோரின் எண்ணிக்கை இருமடங்காகப் பெருகியுள்ளது.

ஆனால்...

ஓஷோ மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவரா..Medium தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டவரா என்பதை அறிய கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பதும் அவசியமாகிறது.


* ஓஷோ என்ற தனி நபருக்கு 93 Rolls-Royce கார்கள் சொந்தமாக இருந்திருக்கின்றன.அதுபோக விலைஉயர்ந்த கற்கள் பதிக்கப் பட்ட ladies watch களின் தொகுப்பும் உண்டு.
"My religion is the only religion." என்று பெருமையாகக் குறிப்பிடும் ஓஷோவிற்கு எளிமையை போதிக்காத எந்த மதமும் நிலைத்திருக்கமுடியாது என்பது புரியாமல் போனது ஏனோ?

(1985ல் immigration fraud காரணமாக கைதாகி கார்கள் ,சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டு நாடுகடத்தப்பட்டார்.பார்க்க படம்)








* 20ம் நூற்றாண்டி அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரே ஒரு Bio-Terror attack ஓஷோ பக்தர்களால் நிகழ்த்தப்பட்டது.ஓஷோ அமெரிக்காவில் ஆசிரமமைத்துத் தங்கியிருந்தபோது,அவரது மடத்தில் இருந்த சன்யாசிகள் அருகில் இருந்த ஹோட்டல்களில் மித அபாய விஷத்தைக் கலந்துள்ளனர்.உணவை உண்ட 700க்கும் அதிகமானோர் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளனர்(உயிரிழப்பில்லை).

இவை ஓஷோ சொல்லித்தான் செய்யப்பட்டது என்று சொல்லவில்லை.ஆனால் 'அடுத்த உயிர்களுக்கு தீங்கு விளைவிப்பது தவறு'என்கிறஆதார தத்துவத்தைக் கூட சீடர்களுக்கு விளங்கவைக்காதது தவறில்லயா?


* அவரது பல நல்ல கருத்துக்களை விட்டு விட்டு செக்ஸ் பற்றியவற்றை மட்டும் பிடித்துக்கொண்டு "செக்ஸ் சாமியார்" என்று முத்திரை குத்துவது தவறு.அதே சமயம் "Open Sex" பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும் ஆகாது இல்லயா?தியானம் மட்டும் செய்ய வருகிறார்கள் என்றால் அங்கு சேருவதற்கு கட்டாய HIV Test ஏனோ?அருகில் அமர்ந்து தியானம் செய்வதால் எய்ட்ஸ் பரவுமா?

துவக்கத்தில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில்(அனுமதிக்கப்பட்ட அளவு) வாலியமும்,நைட்ரஸ் ஆக்ஸைடும் உட்கொள்ளத் துவங்கி பின் அதுவே எல்லை மீறிஅதற்கு அடிமையும் ஆனார்.பின்"Actually oxygen and nitrogen are basic elements of existence. They can be of much use, but for reasons the politicians have been against chemicals of all kinds, all drugs." என்று சொல்லுமளவிற்கு போனது இப்பதிவிற்கு சம்பந்தமில்லாதது என்பதால் விட்டு விடுவோம்.


இன்றைய நவயுக சாமியார்கள் யாவரும் ஓஷோவின் கருத்துக்களை பயன்படுத்துகிறார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.சிலர் ஒத்துக் கொள்கிறார்கள்.சிலர் அப்படிச் செய்வதில்லை.அதிருஷ்ட வசமாக ஓஷோவும் முதல் வகையினரிலேயே சேர்கிறார்.அதாவதுஓஷோ அதிக அளவில் சரதுஸ்திராவின் கருத்துக்களை ப்ரதிபலிக்கிறார்.பல இடங்களில் புத்தரின் கருத்துக்களை மேற்கோள் காட்டுகிறார்.அதனால் அவர்களை இவர் காப்பி அடிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?ஓஷோ சரதுஸ்ராவின் கருத்துக்களை காப்பியடிக்கிறார் என்பது அவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் மற்றவர்கள் அவரைக் காப்பியடிக்கிறார்கள் என்பதும்.

"No Saint comes to the world with a new teaching or philosophy;
he brings the same ancient wisdom"
என்பதுதான் உண்மை.
சரதுஸ்த்ரா,ஓஷோ உருவ ஒற்றுமை



ஓஷோ ஒரு சிறந்த சிந்தனாவாதி.அவரது புத்தகங்கள் போற்றப் படவேண்டியவை,தியான முறைகள் கொண்டாடப் பட வேண்டியவை.மற்றபடி அவர் சர்வ பலவீனங்களும் கொண்ட சாதாரணர்.என்னைக் கேட்டால் ரெண்டு அவுன்ஸ் எக்ஸ்ட்ரா சாதாரணர்.எல்லா சாமியார்களைப் போல அவரது வீழ்ச்சியும் தனிமனிதத் துதியை ஆதரிப்பதில் தான் துவங்கியது.

"Rich men's Guru" என்று செல்லமாக அழைக்கப்படும் ஓஷோ சமூகத்தில் அடைந்திருக்கும் இந்த பிம்பம் சரியானதா,தவறானதா என்று தெரியவில்லை.ஆனால் போதுமானது என்றே தோன்றுகிறது.

"OSHO. Never Born, Never Died.
Only Visited this Planet Earth between Dec 11 1931 – Jan 19 1990"

தலைமயிர் நீளமாக வைத்துக் கொண்டு,ஒரு கையில் சிகரட்டும் மறுகையில் கேர்ல் பிரண்டுமாக கொரேகான் பார்க்கில்(புனே) திரியும் வெளி நாட்டவரை வேண்டுமானால் இந்த சினிமாத்தனமான வசனங்கள் கவரலாம்.
நம்மள இல்லீங்கோ!!!!

Wednesday, July 04, 2007

கடவுளின் பள்ளத்தாக்கு



மலையேறுபவர்களின் சொர்கபுரி என்றே அழைக்கலாம் பூனாவை(Pune).கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட மலைமீதமைந்த கோட்டைகள் பூனா,மும்பையைச் சுற்றி அமைந்துள்ளன.இவற்றில் சில சிவாஜியால் நிர்மாணிக்கப் பட்டவை,பல இவரால் கையகப்படுத்தப்பட்டவை.இவரது கொரில்லா யுத்தயுக்தியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இக்கோட்டைகளின் அமைப்பே.ஆண்டுமுழுவதும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து போகிறார்கள் என்றாலும் மழைக்கால துவக்கத்திலும்,இறுதியிலும் கூட்டம் சற்று அதிகம்.காரணம் பரவசமூட்டும் பசுமையும்,மழைக்கால அருவிகளும்தான்.

கீழுள்ள படங்களில் நீங்கள் பார்ப்பது இப்படிபட்ட மலைக்கோட்டை ஒன்றைத்தான்.இதன் பெயர் ஷிவ்னேரி(சிவனேரி).புனேவிலிருந்து சுமார் 90Km தொலைவில் உள்ளது இம்மலை.மற்ற எந்த கோட்டைக்கும் இல்லாத பெருமை இந்தக் கோட்டைக்கு உண்டு.மராட்டிய மாவீரன் சத்ரபதி ஷிவாஜி பிறந்த இடம் இது என்பதாகும்.
ஷிவாஜியின் தந்தை ஷாகாஜிக்கு அரசியல் எதிரிகள் அதிகம்.அவர்களிடமிருந்து கர்பவதியான தன் மனைவியைக் காப்பாற்ற அவர் தேடிக்கண்டுபிடித்த கோட்டைதான் இது.இதனை நேரில் பார்த்தபோது ஷாகாஜின் தேர்வு எவ்வளவு சரியென்று புரிந்தது.எவரும் எளிதில் ஏறிவிட முடியாதபடி வழுக்குப்பாறைகளாலானது இந்த மலை.மலை உச்சியை அடைய இருக்கும் ஒரே வழிக்கு ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் ஏழு கோட்டை வாசல்கள்.
நானும் என் நண்பனும் மலை அடிவாரத்தை அடைந்து சில கிராமவாசிகளிடம் விசாரித்தோம்.அவர்கள் உச்சியை அடைய மற்றொரு வழி இருப்பதாகச்சொன்னார்கள்.மொகலாயர்கள் அல்லது பேஷ்வாக்களின் காலத்தில் போடப்பட்டிருக்கலாம்.அதாவது கரடுமுரடான காட்டுப்பாதையில் போய் 70% உயரத்தைத் தாண்டினால் 'சாக்கடு தண்டா' என்ற பாதை வரும் அதில் போய் பாறைகளை தாண்டிவிடலாம்.இது கோட்டையின் பின்புற வாயிலுக்குக் கூட்டிச்செல்லும்.மேலும் இவ்வழியில் போனால் தான் மலைக்குகைகளைப் பார்க்கலாம் என்றார்கள்(மொத்தம் 64 குககள் இருக்கிறதாம்).நாங்களும் ஒரு அசட்டு தைரியத்தில் ஏறத்துவங்கினோம்.சற்றே நெட்டுக்குத்தலாக இருந்ததால் விரைவில் சோர்ந்தோம்.இடையில் சில குகைகளைப் பார்த்தோம்.அந்தகுகைகளில்,அப்படியே திருச்சி மலைக்கோட்டையில் இருப்பதுபோன்று சதுர வடிவ கீழ்நோக்கிச்செல்லும் சுரங்கப்பாதைகள்.யார் இருந்தார்கள்,என்ன செய்தார்கள் விவரமில்லை.இவை சாத்வாகனர்கள் காலத்தில் புனையப்பட்டவை என்ற தகவல்கள் மட்டும் உள்ளன.

ஒருவழியாக முக்கால்வாசிமலையைத் தாண்டிவிட்டோம்(45நிமிடங்கள்).பின் பெரிய பெரிய பாறைகளாக இருந்தன.அதில் படிகள் செதுக்கியிருந்தார்கள்.படிகள் என்றால் ஒரு பாதத்தைக்கூட ஒருசமயத்தில் முழுமையாக வைக்கமுடியாத அளவுக்குக் குறுகியவை.அருகில் 'ழ' போல வளைந்த கம்பிகள்,எனக்கென்ன என்பதுபோல நின்றிருந்தன.இதுதான் சாக்கடு தண்டாவாம் !சாக்கடுதண்டா என்றால் என்ன என்று நண்பனிடம் வினவினேன்.குத்து மதிப்பாக சங்கிலிப் பாதை என்றான்.அடிமேல் அடிவைத்து உச்சியை அடைந்தோம்.பச்சைபசேலென்ற புல்வெளியும்,மெல்லிய தூறலும் எங்களை வரவேற்றன.நண்பன் உற்சாகத்தில்"சொர்க்கம் போல இருக்கிறது" என்று கூவினான்.சங்கிலிப்பாதையிலிருந்து நழுவியிருந்தால் அங்கதான் போயிருப்போம் என்றேன்.


இனி படங்கள்....
போகும் வழி











எஞ்சியிருக்கும் அரண்மனையின் சொச்ச மிச்சங்கள்
பிரதான அரண்மனையின் மாடம்



ஷிவாஜி ஜென்மஸ்தானம்
பதாமி நீர் தொட்டி



அம்பர்கானா தானிய செமிப்புக் கிடங்கு

கடேலாட்
கைதிகளை இங்கிருந்து கீழே தள்ளிவிட்டுக் மரணதண்டனையை நிறைவேற்றுவார்களாம்.அதளபாதாளம்..பிழைக்க வாய்ப்பே இல்லை



ஏழு கோட்டைக் கதவுகளில் ஒன்று
புகழ்பெற்ற அஷ்ட்ட வினாயகர் திருத்தலங்களில் ஒன்றான ஓஸர் விக்னேஷ்வர் திருக்கோயில்.இது சிவனேரியிலிருந்து 5 Km தொலைவில் உள்ளது.
உச்சியிலிருந்து காணக் கிடைக்கும் காட்சிகள்
(கண்டிப்பாக enlarge செய்து பாருங்கள்)









Tuesday, June 26, 2007

சு.ரா வின் கடைசிக் கவிதை



அந்தக் குழந்தையின் காலோசை
நம்மை அழைக்கிறது


குழந்தையின் வடிவம் நம்
பார்வைக்குப் புலப்படவில்லை.


நம் கலவரம் நம் பதற்றம்
நம் பார்வையை மறக்கிறது.


தன் காலோசையால்
நம்மை அணைத்துக் கொள்ள

அந்தக் குழந்தை நம்மைத்
தேடி வருகிறது.


நாம் நம் தத்தளிப்பை மறைக்க
மேலும் உரக்கப் பேசுகிறோம்.


சுந்தர ராமசாமி மரணமடைவதற்கு 19 நாட்களுக்கு முன்பு எழுதிய கவிதை இது.இதுவே அவரது கடைசிப் படைப்பு.துவக்கத்தில் பசுவய்யா என்ற புனைப்பெயரிலும்,பின்னர் தன் இயற்பெயரிலும் அவர் எழுதிய மொத்த கவிதைகளின் தொகுப்பு இந்த "சுந்தர ராமசாமி கவிதைகள்" .மேற்குறிப்பிட்ட இந்த கவிதையையும் சேர்த்து மொத்தம் 108 கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன.பத்து பதினைந்து கவிதைகள் தேறினாலே புத்தகங்கள் வெளிவரும் நிலையில்,இது மிகப்பெரிய தொகுப்பாகும்.அடித்துத்,திருத்தி அவர் கவிதைகளுக்கு உருக்கொடுத்த விதம் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப் பட்டுள்ளது.
இத்தொகுப்பிலிருந்து சில கவிதைகள்


நடுவழியில் மறித்த வயோதிகம்


வயோதிகம் மறித்தது நடுவழியில்
நான் காதலைத் தேடிச் சென்றுகொண்டிருந்தபோது
'விடு என்னை
இப்போதுதான் உணர்ந்துகொண்டேன் காதலின் அருமையை'
என்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன்.
'சற்று முந்தான் நான் வயோதிகம்
இப்போதோ மரணம்' என்று
என்னை இறுகத் தழுவிக்கொண்டது
அது


-கொல்லிப்பாவை 1987

*****
கன்னியாகுமரியில்


இன்று அபூர்வமாய்
மேகமற்ற வானம்
மிகப்பெரிய சூரியன்
ஒரே ரத்தக் கலங்கல்.

எங்கிருந்தோ வந்து
சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது
இந்த ஆட்டுக்குட்டி
அசடு
அப்போதும்
தன்னிலை அறியாதது.

இடம் பெயர்வதா
நின்ற நிலையில் நிற்பதா?

மூளையில் தர்க்கம்
அறுபட்டு விழித்ததும்
நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி.

சூரியனைக் காணோம்.


-சதங்கை 1975

*****
நம்பிக்கை


தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்

அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.

வேறு யாரோ.

அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.


-வைகை 1977


மேலும் சில கவிதைகளை வாசிக்க நதியலை

Sunday, June 10, 2007

உருக்குலைந்து வரும் உன்னதக் கலைகள்


சமீபத்தில் 'வாஷிங்டன் போஸ்டில்' வெளியாகியிருந்த,நசிந்து வரும் இந்திய பட்டு நெசவு பற்றிய கட்டுரை(Emily Wax) கவனத்தைக் கவர்ந்தது.இந்தியா வளர்ந்துவிட்டதோ? என சந்தேகிக்கும்,கிலிகொள்ளும் தருணங்களில் அதன் ரணங்களைத் தேடிப்பிடித்து ஆசுவாசம் கொள்ளும் அமெரிக்கர்களின் நோக்கம் இக்கட்டுரையிலும் தெரிகிறது.என்றாலும் ஆய்வு செய்தோ,செய்யாமலோ எழுதப்பட்ட இந்த கட்டுரையின் உண்மை நம்மை சுடாமலில்லை.அதில்,

"The new India is home to smooth highways and shiny high-rises, all the accouterments of the developed world. But millions of craftsmen, manual laborers and rural workers are being left out of the economic boom. Nearly 70 percent of India's population lives on less than $2 a day, and with more than 40 percent of its young malnourished, India is worse off than Africa in terms of children's health, according to the United Nations"

என்கிறார்கள்.மேலும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் சேரும் அவசரகதியில் ஆதார தொழில் செய்யும் உழவர்களையும்,நெசவாளர்களையும் நிர்கதியாக விட்டுச்செல்வதாக மன்மோகன் சிங்கை சாடுகிறார்கள்.
இந்தியா வளர்கிறது,மிளிர்கிறது என்பதெல்லாம் சுத்த ஹம்பக்.நாட்டின் வளர்ச்சியென்பது அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியேயன்றி ஓரிரு துறைகளை மட்டும் சார்ந்ததன்று.இதுநாள்வரையில் நாட்டின் இரண்டாவது பெரிய தொழிலாக கருதப்பட்டு வந்த நெசவுத்தொழில் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.மலிவு விலை துணிநெய்யும் இயந்திரங்களும்,தளர்த்தப்பட்ட அந்நிய முதலீட்டுக் கொள்கைகளுமே இதற்குக் காரணம்.நாமும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விடுத்து,'நெசவாளர்கள் தற்கொலை' பற்றிய செய்திகளை குற்ற உணர்வின்றி தாண்டிச்செல்ல பழகிக்கொண்டுள்ளோம்.உண்மையில்,ஓரிரு துறைகளில் ஏற்பட்டுள்ள இந்த அபரிமிதமான வளர்ச்சியும் பாராட்டுக்குரியதல்ல.காரணம் சமூகத்தில் மேல்தட்டு ,கீழ்தட்டுக் கிடையேயான வர்க்க இடைவெளியை இது அதிகப்படுத்தியுள்ளது.

கட்டுரையிலிருந்து சில பகுதிகள்,

"This is the ugly, painful side of globalization. It's a real crisis. If India is booming, you don't see it among weavers or farmers or other rural laborers, which is to say most of the country," said Lenin Raghuvanshi, head of the People's Vigilance Committee for Human Rights, an aid group here. "Helping those left behind is India's greatest challenge."

Despite the boom in many information technology hubs in southern Indian cities, Varanasi's weaver quarters look like a ghetto, with men sleeping under broken-down looms strung with cobwebs, rutted streets with trash fuming at every turn and donkeys hauling in water for cooking and bathing, tugged along by barefoot urchins.

"I hardly care about booming India when I have no food or money," said Poochland Dash, 60, a white-haired grandfather and a once-wealthy weaver who said through tears that he is considering suicide. He is trying to sell the house he built during the golden years of the sari-weaving industry, with his saris featuring embroidery of men atop animals in rich indigos and reds.
"If a buyer insults me with a too-low price, I swear I will kill myself," Dash said.
Listening nearby, his wife started crying. "If he takes his life, I will take my life, too," she said, staring at the ground.

KFC-யில் பர்கர் சாப்பிட்டு விட்டு,பரிஸ்தாவில் காப்பி குடித்துவிட்டு அப்படியே மல்டிப்ளக்ஸில் கொஞ்சமே புரிகிற ஹிந்திபடம் பார்க்க போக நேரமாகிவிட்டதால் நலிந்தோர் குறித்து கவலைப்படும் இந்தக் கட்டுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

Monday, June 04, 2007

கமல்ஹாசன் பற்றி சுஜாதா(பழைய பேப்பர்!)



கமலஹாசனுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவருடைய off-screen personality சுவாரஸியமாக வெளிப்பட்டது.இருபத்து மூன்று வயது. ஒரு மலையாளப் படப்பிடிப்பிலிருந்து வந்திருந்தார்.பஞ்சு மிட்டாய் வண்ணத்தில் ஜிப்பா,ஜரிகை வேஷ்டி.

அவர் அறையில் ஆடம்பரங்கள் எதுவும் இல்லை.ஏர்கண்டிஷனிரின் செளகரியத்தைத் தவிர.ஒரே ஒரு படம் இருந்தது.உக்கிரமாக முறைக்கும் ப்ரூஸ்லி. அமெரிக்க சினிமா சரித்திரத்தைப்பற்றியும் Sound in cinema பற்றியும் புத்தகங்கள் தென்பட்டன.படிக்கிறார்.இங்கிலிஷ் பண்பட்டு இருக்கிறது.கணையாளி போன்ற புத்தகங்களையும் புதுக்கவிதைகளையும் ரசிக்கிறார்.தன் தொழிலில் உள்ள சிரிப்பான விஷயங்களை இயல்பாக எடுத்துச்சொல்கிறார்.போலன்ஸ்கி,கோடார்ட் போன்ற ஐரோப்பிய டைரக்டர்களைப் பற்றிஅவருக்கு தெரிந்திருக்கிறது.ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் Frenzy என்ற படத்தில் ஒரு ஷார்ட்டைப் பற்றி உற்சாகமாக அவருடன் பத்து நிமிடங்கள் அலச முடிகிறது."மலையாளப் படங்கள் இப்போது பரவாயில்லை போலிருக்கிறதே" என்றேன்.அவர் "அதெல்லாம் அந்தக்காலம்,இப்போது மலையாளப் படங்கள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன"தன் சட்டையைக் காட்டி "மலையாளப் படம்" என்றார்.

"எனக்கு அழவரவில்லை அழு அழு என்கிறார்கள்.ஒரு சமீபத்திய தமிழ் படத்துக்கு மூன்று பாட்டில் கிளிசரின் ஆயிற்று."

"பாடலைப் படமெடுக்கும் போது கதாநாயகிக்கு கூந்தல் விரிந்திருப்பது ஒரு செள்கரியம்.உதட்டசைவு மறந்துவிட்டால்! சட்டென்று கூந்தலைப் பிரித்து அதில் மறைந்து கொள்ளலாம்."

"டேய் முத்து,மாடசாமி,பிடிடா"என்று கிராமத்தில் குடிசையில் வின்சென்டர் ரைபிள்களை வினியோகிக்கும் கர்ணன் படங்களையும் படுத்துக்கொண்டே படமெடுக்கும் காமிராக்கோணங்களையும்(imagine ஜோதிலட்சுமி)அம்மாக்களையும்,தியாகங்களையும் மிகவும் ரசித்து அவருடன் விமர்சித்துக் கொண்டிருந்ததில் எனக்கு நேரம் போனது தெரியவில்லை.படப்பிடிப்பு காத்திருந்தது.ஆப்பிள் ஜூஸ் கொடுத்து அனுப்பிவிட்டார்.

உரக்கப் பேசும் உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக,கற்பனையுடன்,நம்பும்படி நடக்கும் கமலஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பார்க்கிறேன்.

அக்டோபர் 1976

Sunday, May 13, 2007

திகம்பர சாமியார் திடும் பிரவேசம் (அல்லது) திரிபுரசுந்தரி






நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் என்று நினைக்கிறேன்,வாண்டுமாமாவின் மந்திரக்கம்பளங்கள் போரடிக்கத் துவங்கிருந்தன.ஹாங்காங்கில் சங்கர்லால்,அமிஞ்சிகரையில் சங்கர்லால் என கையில் கிடைத்த துப்பறியும் கதைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்துக்கொண்டிருந்தேன்.அப்போது என் அண்ணன் 'இதுவும் துப்பறியும் கதைதான்,படி' என்று நைந்து பொடிப்பொடியாகும் நிலையில் இருந்த ஒரு (நூலக)புத்தகத்தைக் கொடுத்தான்.அந்த புத்தகம் தான் தி.தி.பிரவேசம் அல்லது திரிபுரசுந்தரி(இரண்டு தலைப்புகள் :) ).எழுதியவர் வடுவூர் K துரைசாமி ஐயங்கார்.1920களில் எழுதப்பட்ட நாவல்.பழைய கதையாதலால் சுவாரஸியமாயிராது என்ற அபிப்ராயத்தாலும்,வழக்கொழிந்து போன பல எழுத்துக்கள் பயன்படுத்தப் பட்டிருந்ததாலும் சோர்ந்து போய் 10பக்கங்களில் நிறுத்திவிட்டேன்.பிறகு என் அண்ணன் பாதிவரை கதை சொல்லி நிறுத்த ,ஆர்வமாகி முழுக்கதையையும் படித்துமுடித்ததாக ஞாபகம்.

வடுவூராரின் கதைகளில்(பிரதான)துப்பறியும் கதாபாத்திரம் இந்த திகம்பர சாமியார்.விதவிதமாக வேடமணிந்து எதிர்பாராத சமயங்களில் entry கொடுப்பதும் பின்னால் நடக்கப்போவதை யூகித்து சாதுர்யமாக செயல்படுவதும் இவரது ஸ்பெஷாலிட்டி.கடந்தவாரம் திருச்சியில் நடந்த புத்தகக் கண்காட்சி ஒன்றில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்கள் அனைத்தும் அல்லயன்ஸ் பதிப்பகத்தாரால் திரும்பக் கொண்டு வரப்பட்டிருப்பது கண்டு பரவசமடைந்தேன்.அதிலிருந்து "வித்தியாசாகரம்" என்ற ஹாஸிய நாவல் ஒன்றை வாங்கி வந்தேன்.நாவலைக்காட்டிலும் புத்தகத்தின் முதற்சில பக்கங்களில் இருந்த துரை சாமி ஐயங்கார் பற்றிய தகவல்கள் படிக்க பிரமிப்பாகவும்,சுவாரஸியமாகவும் இருந்தன.நெட்டில் இவரைப்பற்றித் துழாவியதில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் கிடைக்காதது வருத்தமளித்தது.வடுவூர் துரைசாமி ஐயங்கார் பற்றிய தகவல்களை இப்பதிவின் மூலம் சேமிக்கிறேன்.

******
இந்த நூற்றாண்டின் தொடக்க 30 ஆண்டுகளில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களை தம் துப்பறியும் கதைகளால் பிணைத்தவர்.புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி,பரந்த ஓர் வாசக உலகினைப் படைத்துக்கொண்ட பெருமையர்.Reynolds போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு,சொந்தமாகவும் படைத்துள்ளார்.இவரது படைப்பில் சிறந்ததாக மேனகா,கும்பகோணம் வக்கீல் குறிப்பிடத்தக்கன;படமாகவும் வந்தவை.

நடுத்தர உயரம்,ஒல்லியான உடல்,கருத்தமேனி,கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு,அங்கவஸ்திரம்,பஞ்சகச்சம்,தலையில் குல்லா,காலில் கட் ஷூ,கையில் தடி,நெற்றியில் எப்போதும் திருமண்வாய்,வாய் நிறைய வெற்றிலை,புகையிலை,தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார் இளமையோடிருக்க.மொத்தத்தில் கைநிறைய சம்பாதித்த கவலையில்லாத உல்லாச மனிதர்.இவர் மாடிக்கு ஜே.ஆர்.ரங்கராஜூ,வை.மு.கோ,எஸ்.எஸ்.வாசன் வந்து போவர்.

-தமிழ் இலக்கிய வரலாறு (மது.ச.விமலானந்தம்)

******



முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் கல்கி என்கிற எழுத்தாளர் தமிழ் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்ததுபோல இருபதுகளில் தமிழ் வாசகர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் என்று ஜே.ஆர்.ரங்கராஜூ என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும்.

1923,24 முதல் 27 வரையில் தஞ்சையில் கல்யாண சுந்திரம் ஹைஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது பச்சை,மஞ்சள்,சிவப்பு அட்டையில் டெமி சைஸில் அவர்கள் நாவல்கள் ஒவ்வொன்றாக அப்பாவுக்குத் தெரியாமல் ரெயில்வே ஸ்டேஷன் ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிப்படித்த நினைவிருக்கிறது.படித்துவிட்டு வீட்டுக்கு எடுத்துப் போனால் அப்பா சண்டை பிடிப்பாரென்று அப்போது மேல வீதியில் தெற்கு கோடியில் இருந்த ஒரு லைப்ரரிக்கு இனாமாகக் கொடுத்து விடுவேன்.இப்படிப் படித்த நாவல்கள் என்று கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலை மகளும்,வஸந்த கோகிலம்,பூரண சந்திரோதயம்,விலாஸவதி,திகம்பர சாமியார்,மேனகா இவை நினைவுக்கு வருகிறன.ஒரு நாவல் கலைப்பிரஞையுடன்,சுலபமாகப் படிக்கக் கூடிய நடையுடன்,விரஸமான விஷயங்களைக்கூட அதிக விரஸம் தட்டாமல் எழுதுவதில் சிரத்தையுடன் எழுதிய வடுவூரார் உண்மையிலேயே இலக்கியப் பிரக்ஞை உடையவர் என்பதில் சந்தேகத்துகிடமேயில்லை.

ரெயினால்ட்ஸின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதினார் பெரும்பாலும் என்றாலும் அவர் விக்டர் ஹ்யூகோவின் Les Miserablesஎன்கிற நாவலை அற்புதமாகத் தமிழில் எழுதியிருக்கிறார்.

எகிப்தில் தலைமுறை தலைமுறையாக பாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்கிற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும்,அதையெல்லாம் சொல்லி தான் ஒரு நூல் எழுதிகொண்டிருப்பதாகவும் சொன்னார்.இந்த சரித்திர உண்மையில் இருந்த அவரது அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக ஆங்கிலத்தில் Long missing Links என்று ஒரு 900 பக்க நூல் எழுதி அதைத் தன் சொந்த செலவிலேயெ அச்சிட்டு விற்க முயன்றார்.புஸ்தகம் விற்கவில்லை.அச்சுக்கும் பேப்பருக்கும் ஆன கடனை புதுசாக வாங்கிய வீட்டை விற்று அடைத்து விட்டு,பேசாமல் கிராமத்துக்கு போய்விட்டார் என எண்ணுகிறேன்.
தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை;புரிந்து கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

-இலக்கிய சாதனையாளர்கள் - க.நா.சு.

******



துரைசாமி ஐயங்காரின் மிகப் பிரசித்தமான மேனகா என்ற நாவலின் முதல் பக்கத்திலேயே ஓர் அடிக்குறிப்பு காணப்படுகிறது:

'சாம்பசிவையங்கார்,மேனகா என்பவை உண்மைப் பெயர்களை மறைக்கும் பொருட்டு வைக்கப்பட்ட கற்பனைப் பெயர்கள்'
என்று அந்த குறிப்பு விளக்குகிறது.

இவரது நாவல்களில் மேனகாவை அடுத்து மிகப்பிரசித்தி பெற்றது கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பரசாமியார் என்பது.பல மர்மங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்த இந்த நாவலில் தஞ்சை பிராந்தியத்தில் அன்று நிலவிய சூழ்நிலை வருணிக்கப்பட்டிருக்கிறது.

துரைசாமி ஐயங்காரின் செல்வாக்கைப் பயன் படுத்தி,குடும்ப சூழ்நிலையை வைத்து,ஜனரஞ்சகமான நாவல்களை எழுதிப் பெயரடைந்தவர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.

- தமிழ் நாவலிம் தோற்றமும் வளர்ச்சியும் - சிட்டி,சிவபாத சுந்திரம்.

******
புராணக் கதைகளும்,இதிகாசக் கதைகளும்,ராஜா ராணிக் கதைகளும் படமாக எடுக்கப்பட்ட தமிழ்த்திரையின் தொடக்க காலத்தில்... முதன் முதலாக நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் மேனகா.1935ல் மேனகா நாவலை படமாக்கியபோது அதில் டி.கே.பகவதி,டி,கே.ஷண்முகம்,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.கே.சங்கரன்,எஸ்.வி.சகஸ்ரநாமம்,கே.ஆர்.ராமசாமி,சிவதாணு ஆகியோர் நடித்தனர்.இவர்கள் அனைவருக்கும் இதுவே முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி.பாரதியாரின் பாடல் ஒலித்த படம் என்ற வரலாற்றுப் பெருமையும் மேனகா படத்தையே சேரும்.

- பதிப்புத் தொழிலில் உலகம்

*******

வடுவூராரின் நவீனம் 'மைனர் ராஜாமணி' சினிமாவாக வந்து திரையிட்டதும் ஒரு சமூகத்தை இழிவு செய்வதாக வழக்கு தொடர்ந்து நிறுத்த்ப்பட்டது.இந்த அதிர்ச்சி,அவமானம் தாங்காது குருதிக்கொதிப்பால் மாண்டார்

Monday, May 07, 2007

அழகு(சில)குறிப்புகள்

அழகு அந்நியாயத்திற்கு ரிலேடிவ் டெர்ம்.எனக்கு அழகாய்த்தோன்றும் ஒரு விஷயம் உங்களுக்கும் அப்படியே தோன்ற வெண்டிய அவசியமில்லை.அதே போல இது காலத்தைப் பொருத்தும் ரிலேடிவ்.எனக்கு ஒருசமயத்தில் அழகாய்த்தோன்றும் விஷயம் எல்லாசமயங்களிலும் அப்படியே தோன்றவெண்டியதுமில்லை.எப்போதும் ரம்மியமாய்,அழகாய்த்தோன்றும் அதிகாலை வானம் பரீட்சை நாட்களில் மட்டும் கொடூரமாய்த்தோன்றுவது ஒரு உதாரணம்.

ஆக universal அழகு என்று எதுவுமில்லை.இடம்,பொருள்,ஏவல் என எல்லாம் சரியாக அமையும் பொழுது நம் மனதுக்கு பிடித்துப் போகிற விஷயம் தான் இந்த "அழகு" என்று தோன்றுகிறது.எனக்குப் பிடித்த,நான் அழகு எனக்கருதுகிற சில விஷயங்களை இங்கு பட்டியலிடுகிறேன்.

தேர்
எங்கள் கிராமத்துத் திருவிழாவில் ,வடம் பிடித்து இழுக்காமல் ஆட்களால் சுமந்து வரப்படும் பனையுயர தேரும் அப்போது ஊரெங்கும் பரவும் மரிக்கொழுந்து வாசமும்.

மழை
பூனேயில் பெய்கிற ஆளை அடிக்காத ஜூன் மாதத்து மழை.ஊர் முழுவதையும் நனைத்து பச்சையாக்கியபின் ,மெதுவாக மனதுக்குள்ளும் மழை பெய்யத்துவங்கும் அந்த தருணங்கள்.

வீடு
"உலகத்துல இத விட அழகான இடம் இருக்கான்னு தெரியல,தெரிஞ்சுகர ஆசையும் இல்ல" என்று காக்க காக்க ஜோதிகா சொல்வது போல அவரவர்க்கு அவரவர் வீடு அழகு.எனக்கும் எங்கள் வீடு...

அமைதியான பெண்கள்
இது ஆக்ஸிமோரன்(Oxymoron) போல தோன்றினாலும் அபூர்வமாக சில சாந்தமான பெண்களைப் பார்க்க நேர்ந்ததுண்டு :)

புத்தகக்கடை
என்ன வேலையாகப் போய்க் கொண்டிருந்தாலும்,வழியில் புத்தகக் கடையைப் பார்த்தால் உள்ளே புகுந்து விடுவேன்.வஞ்சனையின்றி எல்லா புத்தகங்களையும் மேய்ந்து விட்டு இருப்பதிலேயே ஒல்லியாக ஒரு புத்தகத்தையோ சில சமயங்களில் வெறுங்கையுடனோ வந்து விடுவேன்.புத்தகக் கடைகள் எப்போதும் அழகானவை,கவர்ச்சியானவை.

என்னை விளையாட்டுக்கு சேர்த்துக்கொண்ட ப்ரசன்னாவிற்கு நன்றி.இந்தப் பதிவைப் படிக்கும் அனைவரையும் சங்கிலியைத்தொடருமாறு பணிக்கிறேன்.

Wednesday, April 04, 2007

ஆதவனின் எழுத்துக்கள் -எனது பார்வையில்



"நாம் எதை நம்ப வேண்டுமோ அதனை நம்புவதில்லை.நாம் நம்ப விரும்புகிறதைத்தான் நம்புகிறோம்"
- ஆதவன்
எனக்குப் பிடித்தமான ஆதவனின் வரிகள் இவை.எனக்குமட்டுமில்லை ஆதவனுக்கே பிடித்தமானதாயிருந்திருக்கவேண்டும்.இல்லையென்றால் 'என் பெயர் ராமசேஷன்','இரவுக்கு முன் வருவது மாலை','இந்த மரம் சாட்சியாக..' என பல இடங்களில்
இந்த வரிகளைப் பயன்படுத்தியிருப்பாரா?

சுஜாதா எழுத்துக்களுக்காக அலைபாய்கிறது மனது,சு.ராவின் எழுத்தாழம் கண்டு பிரமிக்கிறது.என்றாலும் மனது அன்யோன்யமாக உணர்வது ஆதவனின் எழுத்துக்களில்தான்.இதன் காரண்ங்கள் பற்றி யோசிப்பது சுவாரஸியமாக இருக்கிறது.

முதலாவதாக, ஆதவனின் ஹீரோக்கள் யாவரும் சாமானியர்கள்.கனேஷ்-வசந்த் போன்று சாமார்த்திய சாலிகளோ,சு.ராவின் JJ போன்று கொள்கைப்பிடிப்பாளிகளோ அல்லர்.மாறாக நிர்தர்சனர்கள்.யாரையும் நிதாட்சண்யமாகப் புறக்கணிக்கக்கூட தயங்குபவர்கள்.உடல் ஆகிருதியும்,அதிகார அகிருதியும் கொண்டவர்களால் Dominate செய்யப்படுபவர்கள்.அந்த பிரக்ஞை காரணமாக சதா புலம்பித் தீர்ப்பவர்கள்.கனவுலகில் மிதப்பவர்கள்.தங்களை மற்றவர்களிடமிருந்து தனித்தவர்களாக இன்டலெக்சுவல்களாக உணருபவர்கள்.ராம சேஷனும்,செல்லப்பாவும்(காகித மலர்கள்),சேஷாத்ரியும்(கனவுக்குமிழிகள்)இப்படிப்பட்டவர்கள்தான்.இந்த ஹீரோக்கள்தான் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்.

அடுத்து உணர்வுகள் கொண்டு கதை சொல்லும் முறை.ஆதவனின் கதைகள் யாவும் மனித உணர்வுகளை அடுக்கி உருவானவை.இவ்வளவு நெருக்கமாக உணர்வுகளைப் பின் தொடர்ந்து அதற்கு வார்த்தை வடிவம் கொடுத்தவர்(எனக்குத் தெரிந்து)யாரும் இல்லை.இவர் ஒரு மனோதத்துவ நிபுணர் என்ற எண்ணம்,இவரது கதைகளைப் படிக்கும் போது தோன்றுவதுண்டு.
கதைகளில் வரும் சம்பாஷணைகள் இயல்பாக அதேசமயம் சுவாரஸியமாகவும் இருக்கும்.ஆதவனைப் படிப்பதில் இன்னொரு வசதி,புத்தகத்தை எப்போதுவேண்டுமானலும் மூடிவைக்கலாம்.எப்போதுவெண்டுமானாலும் எடுத்துப்படிக்கலாம்.படித்ததை சிறிது நேரம் மனதில் அசைபோடலாம்.மறுவாசிப்பின் போது புரியாத ஒன்று புரிபடும் அல்லது புரிந்த ஒன்று குழப்பத்துவங்கும்.

சில அபாயங்கள்:ஆதவனின் எழுத்துக்களில் ஒரு மெல்லிய சோகம் இழையோடும்.இந்த மென்சோகம் மனதுக்கு இதம் தரும் என்றாலும் சில வேளைகளில் நம்மை உற்சாகம் இழக்கச்செய்யும்.மேலும் வாழ்வின் ஆதார சுருதியாக நாம் நம்பும் காதல்,பாசம்,நட்பு இவற்றின் மீது தர்க்கம் செய்து அதன் வேரை அசைத்து விடுவதும் நிகழும்.உதாரணதிற்கு ஒரு சிறுகதையில்....

சிநேகிதன் என்ற வார்த்தையே பலவீனமான ஒரு கணத்தின் உருவமாக, தன்னைத் தானே ஏமற்றிக் கொள்வதாகத் தோன்றியது.நான் தேடிச்சென்றது,மீண்டும் மீண்டும்,என் சுய முக்கியத்துவத்தைதான் என்று தோன்றியது


- என் புத்திசாலித்தனத்தின் பெரிதிலும் பெரிதான ரீங்காரத்தைத் தேடி


- என் நகைச்சுவைக்கேற்ற உரத்த சிரிப்பையும் கண்ணீருக்கேற்ற வழவழப்பான கைக்குட்டையையும் தேடி


- பெண்களிடம் ஆசைத் தீயை மூட்டி விரகத்தினால் அவர்களைத் துடிதுடிக்கச்செய்யும் ஒரு மகத்தான ஒரு காதலனை என்னில் தேடி


- கயவாளித்தனமொ,குரோதமோ கொச்சையான கெட்டிகாரத்தனமோ துளியும் ஒட்டிக்கொள்ளாத என் 'தாமரை இலை' மனப்பாங்கின்(!)தூய்மையின்,அங்கீகாரத்தைத் தேடி.


எனக்கென்றே அளவெடுத்துத் தைத்த,நேர்த்தியான மிடுக்கான வண்ணக்குல்லாய்கள்.திடீரென்று ஒரு நாள் இவையெல்லாம் வெறும் கோமாளிக்குல்லாய்களாக தோன்றின. ..........


ஆதவன் எழுத்துக்கள் பற்றிய எனது இந்த கருத்துக்கள் பக்குவமற்றதாய் தோன்றலாம்.எனினும் அவரின் கடைமட்ட வாசகன் என்ற முறையில் எனது கருத்துக்கள் இவை.சில காலம் கழித்து மறுவாசிப்புக்குப்பின் என் புரிதல் மாறுபடலாம் அல்லது மாறாமலும் போகலாம்.

Saturday, March 31, 2007

The Namesake - விமர்சனம்



'சலாம் பாம்பே' மூலம் ஹாலிவுட்டின் கவனம் கலைத்த மீரா நாயருக்கு இது அடுத்த படி. ஜும்ப்பா லஹிரியின் புழ்பெற்ற நாவலை அதே பெயரில் திரைக்கு மொழிமாற்றியிருக்கிறார்.நான் நாவலை படிக்கவில்லை என்பதால் "என்னயிருந்தாலும் புத்தகம் அளவுக்கு படம் சிறப்பா இல்லை" போன்ற கிளிஷே புலம்பலைத் தவிர்க்க முடிந்தது.நாவல் முழுமையையும் திரையில் சொல்லிவிடவேண்டும் என்ற பதட்டம் எந்த பிரேமிலும்(frame) தெரியாதது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

எவ்வளவு யோசித்தும் கதையை ஒரே பாராவில் சொல்வது எப்படி என விளங்கவில்லை.காரணம் அதிரடித் திருப்பங்களின்றி அதீத இயல்புத்தன்மையுடன் பயணிக்கிறது படம்(ஆதவன் கதை போல).எழுபதுகளின் துவக்கத்தில் நியூயார்க் சென்று குடியேறும் பெங்காலி குடும்பத்தைப் பற்றியது கதை.அங்கு பிறக்கும் அவர்களின் குழந்தைகள் சந்திக்கும் Cross-Culture குழப்பங்களையும்,Identity குறித்தான வினாக்களையும் எழுப்பிச்செல்கிறது படம்.

பெங்காலி தம்பதிகளாக இர்பான் கான்(Irfan Khan), தபு(Tabu) நடித்திருக்கிறார்கள் இல்லை வாழ்ந்திருக்கிறார்கள்.அதுவும் இர்பான் கானின் சின்ன சின்ன முகபாவ மாற்றங்கள் கூட அருமை(அட யாருப்பா அங்க,இவர தமிழுக்கு கூட்டீட்டு வாங்க).இவர்களின் மகனாக வரும் கால் பென்னும்(Kal Penn) நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்க வாழ் இந்தியர்களின் பிரச்சனைகளை மிகைப்படுத்தி ஜல்லியடிக்கும் வழக்கமான 'இந்திய-ஆங்கில' படம் போலன்றி உள்ளபடி காட்டியதற்கு பாராட்டலாம்.அதே சமயம் அஷோக் கங்கூலி அனாமத்தாக இறந்துபோகும் போது சற்று கிலி ஏற்படுகிறது.குறிப்பாக அவர் இறந்து போவதை விஸ்தாரமாகக் காட்டாமல் ஒரு செய்தியாகக் குறிப்பிடுவது நிகழ்வின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது(சலாம் மீரா!).

வசனங்கள் பல இடங்களில் பளிச்சிடுகின்றன.திருமணமாகி பலவருடங்கள் கழித்து தாஜ்மஹால் வருகிறார்கள் தபுவும் இர்பானும்,
இர்பான்:ரொம்ப நாளா கேக்கணும்னு நெனைசேன்.பொண்ணுபாக்க வந்தப்ப என்ன பிடிசிருக்குன்னு ஏன் சொன்ன?
தபு:என்ன பாக்க வந்தவங்கள்ள நீ தான் Best.ஒரு கை மட்டும் இருந்த கார்டூனிஸ்ட்,ரெண்டு குழந்தைங்களோட வந்த விடோவர் இவங்களுக்கு நீ பரவால்ல.அதுவும் நீ போட்டுகிட்டு வந்த அமெரிக்கன் ஷூ எனக்கு ரொம்ப பிடிசிருந்தது
(இர்பான் ஏமாற்றத்தோட பாக்க)
தபு:ஏன் அமெரிக்க காரங்க மாதிரி "I Love You" சொல்லுவேன்னு பாத்தியா?

3.5/5 . கண்டிப்பாகப் பார்க்கலாம்.குரூர மான சிந்தனைகளுக்கு விரட்டிச் செல்லாத சாதாரணமான அமைதியான விடுமுறை நாளை வேண்டுபவர்கள் பார்க்க நான் பரிந்துரைக்கும் மற்றொரு படம் "The Pursuit of happyness"

Saturday, January 06, 2007

படித்ததில் பிடித்தது(3)

பொதுவாக, எதுவும் எழுதத் தோன்றாதபோது(வராதபோது) மற்றவர்களின் கவிதையையோ,கதையையோ போட்டு ஒப்பேற்றுவது வழக்கம்.என் 75% பதிவுகள் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.அந்த வரிசையில் சுஜாதா சொன்ன 'நபகோவின்' சிறுகதை ஒன்றையும் கல்யாண்ஜியின் கவிதை ஒன்றையும் இப்பதிவில் தருகிறேன்.

இனி...

நாபகோவ்(Nabakov) 'லோலிடா' எழுதிப் பெயர் அடைந்தவர்.கொஞ்சம் ஆபாசமான விஷயத்தை மிக அருமையான வசன நடையில் எழுதித் தப்பித்தவர்.இவரது சிறுகதை ஒன்று என் ஞாபகத்திலிருந்து சொல்கிறேன்:-

ஒரு அப்பா,ஒரு அம்மா; ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான்.ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது!

பெற்றோர்களுக்கு ஒருதினம் ஆஸ்பத்திரியிலிருந்து போன் வருகிறது. பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும் உடனே என்றால் மறுதினம் தான் போக முடியும்.அதற்குள் என்ன நேர்ந்து விடுமோ என்று கவலைகடலில் இரவெல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்போது:-

டெலிபோன் மணி அடிக்கிறது.பதற்றத்துடன் பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.

"ஹென்றி இருக்கிறானா?" என்கிறது ஒரு பெண்குரல்.

"ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை,தப்பு நம்பர்" என்று வைத்து விடுகிறார்.

மறுபடி சில நிமிஷம் கழித்து டெலிபோன் மணி அடிக்கிறது.

"ஹென்றி இருக்கிறானா" அதே பெண்.

"மிஸ்,உனக்கு என்ன நம்பர் வேண்டும்?

"5365849"

"என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச்சுழற்றுகிறாய் போலிருக்கிறது"

"ரொம்ப தாங்க்ஸ்" என்று அந்தப் பெண் வைத்துவிடுகிறாள்.

கதையில் இன்னும் ஒருவரிதான் இருக்கிறது.

சிலநிமிஷ்ம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.

நபகோவின் புத்திசாலித்தனம்! புரிகிறதா?

- சுஜாதா,1966


************

நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்குபோல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக்கொண்டது முற்றிலும்
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.

-கல்யாண்ஜி,அந்நியமற்ற நதி


அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!