Monday, January 19, 2009

ஒரு தமிழ் மாணவனின் கல்லறை



நான் தங்கியிருக்கும் ஆக்ஸ்ஃபோர்ட்(Oxford) நகரில் ஜி.யு.போப்பின் கல்லறை இருக்கிறது என்று அறிந்தபோது அதனைப் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. ஜி.யு.போப் என்ன செய்தார் என்பது தெரியாதவர்களுக்குக்கூட, அவர் தன் கல்லறை மீது "ஒரு தமிழ் மாணவன்" என்று எழுதச்சொன்னது தெரிந்திருக்கும். சமயப்பணி செய்வதற்காக 1841 வாக்கில் இந்தியா வந்து சேர்ந்த போது, ஜார்ஜ் க்ளோ போப்பின் வயது 17. வரும்போதே ஓரளவிற்கு தமிழ் பயின்று வந்திருந்தாலும் சென்னையின் நடைமுறைத் தமிழைக் கேட்டு அவருக்குப் பெரும் வியப்பு ஏற்பட்டது. தமிழை முழுமையாகக் கற்க வேண்டி அப்போது தமிழகத்திலிருந்த பெரும் பண்டிதர்களிடம் சென்று தமிழ் பயின்றார். தமிழ் மொழியின் தனித்தன்மையும்,ஆழமும் அதன்மீது பெரும் காதலை அவருக்கு ஏற்படுத்தின. அதன் பிறகு நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் தமிழகத்தில் அவர் தங்கியிருந்து சமயப் பணி ஆற்றினார் தமிழுக்குத் தொண்டாற்றினார்.

அதுவரை திருக்குறளின் சில பகுதிகள் மட்டுமே ஆங்கிலதில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தன. ஜி.யு போப் திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். Sacred Kural என்ற அவரது மொழியாக்கம் மிகச்சிறப்பானதாகப் போற்றப்படுகிறது. இது தவிர நாலடியார்(மொழிபெயர்ப்பு), தமிழ்-ஆங்கில அகராதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஜி.யு.போப் எழுதிய இலக்கண நூல்கள் தமிழறிஞர்களால் பாராட்டப் பெற்று பல பதிப்புகள் கண்டவை.

ஜி.யு.போப்பின் ஆகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அவரது திருவாசக மொழிபெயர்ப்பு. திருவாசகத்தை போப் மொழிபெயர்க்க ஊக்கப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியானது. தனது முதுமைக்காலத்தில் இங்கிலாந்து திரும்பிய போப் ஒரு நாள் தன் நண்பரிடம் திருவாசகத்தின் பெருமையை விவரித்திருக்கிறார். அதனைக்கேட்டு பரவசமடைந்த நண்பர், " நீ கண்டிப்பாக திருவாசகத்தை ஆங்கிலத்தில் பதிப்பிக்க வேண்டும்" என்று வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு போப் தனது முதுமையினைக் குறிப்பிட்டு, அது நீண்ட நெடிய பணி அவ்வளவு காலம் நான் உயிரோடிருப்பேன் என்று நம்பிக்கையில்லை எனக் கூறியிருக்கிறார். அதற்கு போப்பின் நண்பர்" ஒருவர் தன்னை உன்னதமான பணியில் ஈடுபடுத்திக் கொள்வதுதான் நீண்டகாலம் வாழ்வதற்குண்டான வழி.நீ கண்டிப்பாக இப்பணியினை நிறைவேற்றுவாய் என்று ஊக்கப்படுத்தி இருக்கிறார்".அதன் பின்னர் மொழிபெயர்ப்பினை துவக்கிய போப் தனது எண்பதாவது வயதில் இப்பணியினை முடித்திருக்கிறார்.தனது 80ஆவது பிறந்தநாளன்று எழுதிய கடித்தத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"I date this on my eightieth birthday. I find by reference that my first Tamil lesson was in 1837. This ends, as I suppose, a long life devoted to Tamil studies. It is not without deep emotions that I thus bring to a close my life's literary work."

அதன்பின் ஜி.யு.போப் 1908-ல் தனது 88ஆவது வயதில் மரணமடைந்தார். மரணமடைவதற்கு முன் தன் கல்லறையை எழுப்ப ஆகும் செலவில் ஒரு பகுதி தமிழர்களிடமிருந்து வசூலிக்கப்படவேண்டும் என்றும் தனது கல்லறையின் மீது"A Student of Tamil" என்று செதுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.




ஒரு குளிர்கால மாலையில் செயின்ட் செபல்ச்ர் கல்லறைத் தோட்டத்தை அடைந்த போது வெளிச்சம் குறையத் துவங்கியிருந்தது. நல்ல வேளையாக கதவுகள் பூட்டியிருக்கவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் இக்கல்லறையை பார்வையிட வந்த ஒரு தமிழ் ஆர்வலரின் குறிப்புகள் தமிழ்நேஷன் தளத்தில் சேமிக்கப்பட்டுள்ளன. கல்லறைக்கு செல்லும் வழி, அடையாளங்கள் ஆகியவை இத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. வால்டன் தெருவைப்பற்றிய அடையாளங்கள் சற்று மாறியிருந்தாலும், கல்லறைத்தோட்டத்தில் போப்பின் கல்லறையை அடையாளம் காண இவை பேருதவி செய்தன. இக்குறிப்புகளின் உதவி இன்றி 4000 கல்லறைகளிலிருந்து போப்பின் கல்லறையை தேடிக்கண்டுபிடிப்பது அந்த மாலை வேளையில் சத்தியமற்றதாய் இருந்திருக்கும். நான் எதிர் பார்த்த அளவுக்கு புதர்கள் மண்டியிருக்கவில்லை. ஆனால் பாழடைந்த நிலையில் தான் இருக்கிறது.போப்பின் கல்லறைமீது கீழ்கண்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

"George Uglow Pope D.D. of South India sometime lecturer in Tamil and Telugu in the University and chaplain of Balliol College, Oxford, born 24th April 1820. Died 11th February 1908. This stone has been placed here by his family and by his Tamil friends in South India in loving admiration of his life long labours in the cause of oriental literature and philosophy"

இக்கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட பிரபலமானவர்களின் பட்டியலில் கூட போப்பின் பெயர் இல்லாதது வருத்தமளிக்கிறது. ஆமாம், வெள்ளைக்காரர்களுக்கு என்ன வந்தது! கொண்டாட வேண்டியவர்கள் நாம்தானே? தமிழகத்தின் உயர்ந்த விருதுகள் எதுவும் ஜி.யு.போப்பிற்கு வழங்கப்பட்டதாக செய்தி இல்லை. 1968 உலகத்தமிழ் மாநாட்டில் நினைவுகூறப்பட்டிருக்கிறார்.அப்போது சிலை எழுப்பப்பட்டிருக்கிறது.வாழ்நாள் சாதனைக்காக தங்கப்பதக்கம் ஆங்கில அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் அவரது இறுதி விருப்பத்தையாவது நிறைவேற்ற அரசு ஆவன செய்திருக்கலாம்.தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் இலக்கியங்களையும் உலகத்திற்கு எடுத்துரைத்த ஜி.யு.போப், உ.வெ.சாமினாதனின் வரிசையில் வைத்து போற்றத்தக்கவர். உ.வெ.சா-வையே மறந்துவிட்ட நிலையில் ஜி.யு.போப்பிற்கு இடமில்லைதான்.கல்லறையை புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். கல்லறையை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டபின் அங்கிருந்து நடக்கத்துவங்கினேன். கல்லறையை எழுப்பி நூறுவருடங்கள் ஆகிவிட்டநிலையில் அதன் மீதான எழுத்துக்கள் அழியத் துவங்கிவிட்டன. இன்னும் இருபது முப்பது வருடங்களில் இந்த எழுத்துக்கள் முழுமையாக அழிந்துவிடலாம்.அதுசரி, இன்னும் முப்பதாண்டுகள் கழித்து ஜி.யு.போப்பின் கல்லறையைத் தேடி யார் இங்கு வரப்போகிறார்கள்?

*****
Reference: tamilnation.org தளத்திலிருந்து ஜி.யு.போப் பற்றிய தகவல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.