Friday, July 03, 2009

யோக வசிஷ்ட்டமும் ரிலேட்டிவிட்டி தத்துவமும்




பில்லி ப்ரிசன் என்று ஒரு ஆசாமி இருக்கிறார். அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் இவர் "A Short History of Nearly Everything" என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில் பெரும்பாலான அறிவியல் தத்துவங்களுக்கு எளிமையாக விளக்கமளித்துள்ளார். எல்லாருக்கும் புரியும்படியான எளியமொழியும், மெல்லிய நகைசுவையும் கொண்ட இந்த நூல் ஒரு Best Seller. சுஜாதா தன் வாழ்நாள் முழுவதும் எழுதிய கட்டுரைகளை முறையாக ஒன்று திரட்டினால் ஒரு மினி "A Short History of Nearly Everything" கிடைக்குமென்பது எனது எண்ணம்.
'உங்களில் யார் அடுத்த சுஜாதா' நடத்தி அடுத்த சுஜாதாவாகவோ, குட்டி சுஜாதாவாகவோ, இல்லை சுஜாதாவின் வாரிசாகவோ வர விரும்புகிறவர்கள் அவர் அறிவியல் தமிழுக்கு செய்த பங்களிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும்

சுஜாதாவின் , "ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து" மின்னூலை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.

Saturday, June 27, 2009

32 கேள்விகள் - மீம்



1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பெற்றோர் வைத்த பெயர் தான். எனக்கு என் பெயர் பிடிக்கும்.மேலும் வேறு எழுத்தாளர்கள் யாரும் இந்தப் பெயரில் இல்லாததால் எனது எழுத்துலக வாழ்க்கைக்கும் இதே பெயரையே....(சரி சரி..இதுக்கே அசந்துட்டா எப்படி!! இன்னும் நுப்பத்திரெண்டு கேள்விகள் இருக்கே!)


2. கடைசியாக அழுதது எப்போ?

சில நாட்களுக்கு முன்பு, வெங்காயம் நறுக்கும் போது.


3. உங்களுக்கு உங்க கையெழுத்துப் பிடிக்குமா?
சில சமயங்களில். என் கையெழுத்து என் மனம் போல அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். செக்கில் கையெழுத்து போடக் கூட இரண்டு நிமிடம் வெயிடீஸ் விட்டு பழகி, பின்தான் போடுவேன்.


4. பிடித்த மதிய உணவு?
பருப்பு சாதம் , வெண்டைக்காய் கறி. புனேவில் சென்று தென்னிந்திய உணவு கிடைக்காமல் திண்டாடிய போதும் இதுதான் வேறு ரூபத்தில் வந்து கை கொடுத்தது. தால் ச்சாவல், பிண்டி பாஜி.



5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

உங்களையே உங்களுக்குப் பிடிக்குமான்னு பின் நவீனத்துவ முறையில் கேட்கிறீர்கள். பிடிக்கும்..அதாவது நட்பு வைத்துக்கொள்வேன்.



6. கடலில் குளிக்கப் பிடிக்குமா, அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
அருவியில்


7. ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
முதலில் பேச்சை, பின்னர் பேச்சுக்கும் செயலுக்குமுள்ள தொடர்பை


8.உங்க கிட்ட உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்த விஷயம் - இரக்ககுணம்,adaptability,உழைப்பு
பிடிக்காதவிஷயம் - அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கருதி சுயவிருப்பத்தினை தெரிவிக்காமல் விட்டுவிடுவது.


9. உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்? 31. கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
மணம் ஆகவில்லை.

10. இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
பெற்றோர் பக்கத்துல இல்லாததற்கு.


11. இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
(காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு போல வாசிக்கவும்) பதிவை எழுதிய அன்று இவர் வெள்ளை நிறத்தில் மேலாடையும், பழுப்பு நிறத்தில் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தார். இவரைப் பற்றிய தகவல் அறிந்தால் தொடர்புகொள்ள வேண்டிய........


12. என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
P.B.ஸ்ரீநிவாஸ் பாடல்கள்



13.வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
நீலம்.(அய்யா ராசா...யாருய்யா இப்படியெல்லாம் ரூம் போட்டு கெள்விகளை யோசிச்சது??)

14. பிடித்த மணம்?
புது புத்தகத்திலிருந்த்து வரும் மணம், புது காப்பிப்பொடியின் மணம், மல்லிகைப்பூ மணம்.


15. நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
நானே ரொம்ப காலதாமதமாகத்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.எனினும் அழைக்கவிரும்பும் நபர் ப்ரகாஷ். இவரது சுவாரஸியமான எழுத்துநடையும் அதில் தெறிக்கும் நகைச்சுவையும் பிடிக்கும். ஆனால் இப்போதெல்லாம் இவர் பதிவெழுதுவதில்லை. என்ன கேட்டாலும் 140 எழுத்துகளுக்குள்ளாகவே பதில்
சொல்கிறார்
. இவர் எழுதினால் மகிழ்வேன்.


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
இவர் அவ்வப்போது பார்த்த சினிமா பற்றி எழுதுகிற குறிப்புகள் பிடிக்கும். கதைகள்ள உடனே நியாபகத்துக்கு வருவது கமிஷன் மண்டி சுப்பையா. வெட்டியா மொக்கைபதிவுகள் போடாம சிறுகதை எழுதுவதில் தீவிரமா இருக்கறது பிடிக்கும்.

18.பிடித்த விளையாட்டு?
பிடித்த அல்ல பீடித்த விளையாட்டு கிரிக்கெட்.


19. கண்ணாடி அணிபவரா?
இன்னமும் இல்லை.


20. எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
எல்லாவகைப் படங்களும் என்றாலும் எதார்த்தமான படங்கள் கொஞ்சம் கூடுதலாகப் பிடிக்கும்.


21. கடைசியாகப் பார்த்த படம்?
Hangover. நகைச்சுவைப் படம், பிடித்திருந்தது.


22. என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
"பூமியின் பாதி வயது" - அ.முத்துலிங்கம் அவர்களின் அனுபவக் கட்டுரைகள்.


23. உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
கணக்கு வைத்துக்கொள்வதில்லை.


24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடிக்காத சத்தம் - வெடி சத்தம்.
பிடித்த சத்தம் - வெடி சத்தம்..நான் பற்றவைக்கும் போது மட்டும்(சும்மா அதிருதில்ல!!)


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
இதோ இங்கே..ஆக்ஸ்ஃபோர்ட்,இங்கிலாந்து.

26.உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
ஓ இருக்கிறதே! அபார ஞாபக சக்தி உண்டு. உதாரணாமா , இருபத்தாறு வருடங்களுக்கு முன்னால் எனக்கு வைத்த பெயரை இன்னமும் யார் கேட்டாலும் சரியாக சொல்லிவிடுகிறேன்.(அய்யோ, அடிக்க வராதிங்க..இது சொந்த மொக்கை இல்ல. கல்கி ஒருமுறை சொன்னது)


27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அடக்குமுறை மற்றும் அடங்குமுறை

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சாத்தான்களுக்கா பஞ்சம்? சாத்தானுக்குள் இருக்கும் என்னை அல்லவா தேடிக்கொண்டு இருக்கிறேன்.(நோட்பண்ணுங்கப்பா..நோட்பண்ணுங்கப்பா)

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
மூணாரு

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே..அப்படின்னு சொன்னா அது உடான்ஸ். இன்னும் கொஞ்சம் சந்தோஷமா, சுத்தி இருக்கறவங்களையும் சந்தோஷமா வச்சிருக்கணும்.


32. வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
(கொஞ்சம் நீளமான வரி)
Reverence for Life affords me my fundamental principle of morality, namely, that good consists in maintaining, assisting, and enhancing life and that to destroy, harm, or to hinder life is evil and the affirmation of the world ,that is affirmation of the will to live, which appears in phenomenal forms all around me -- is only possible for me in that I give myself out for other life -(Albert Schweitzer)

Life Quotes அப்படின்னு கூளில் தேடி, பொறுக்கினதாக்கும். லேசில் புரியாது....வாழ்க்கையைப் போலவே.....


விளையாட்டிற்கு அழைத்தமைக்கு நன்றிகள் ஸ்ரீதர்


Tuesday, June 23, 2009

உலகத் திரைப்படங்கள் - மீம்

சில மாமாங்களுக்கு முன் சந்தோஷ் குரு என்னை உலகத் திரைப்படங்கள் குறித்த மீம் ஒன்றினைத் தொடர அழைத்திருந்தார். வேலைபளு, இந்திய பயணம்,சோம்பல் என பல காரணங்களால் கொஞ்சகாலம் பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. பதிவு எதுவும் எழுதாத இந்த இரண்டு மாதங்களில் ,கூகிள் ரீடரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சிந்திக்க வைக்கிறது ;) .தற்போது அடுத்த மீமிற்கு அழைப்பு வந்துவிட்ட நிலையில், பாக்கியை முதலில் தீர்த்துவிடலாம் என்றிருக்கிறேன்.

உலகத் திரைப்படங்கள் பற்றிப் பேசுவது எனக்கு மிக விருப்பமானது தான். ஆனால் மிக சொற்ப எண்ணிக்கையிலேயே வெளிநாட்டுப்படங்களைப் பார்த்திருக்கிறேன். மேலும் ஒரு உலகத் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்னரே அது குறித்த விமர்சனக்கள், செய்திகளைப் படித்து , அது ஒரு மிகச் சிறப்பான படம் என்று நம்பத் துவங்கிவிடுவேன். அதனால் பெரும்பாலும் அவை ஏமாற்றம் அளிப்பதிலை. இவை தாண்டி என்னை மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டிய பத்து படங்களைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறேன். வரும் ஆண்டுகளில் இந்தப் பட்டியல் மாறலாம், மாற வேண்டும்.

1.Amelie


















அமேலியின் உலகம் சின்னச் சின்ன சந்தோஷங்களால் ஆனது. வாழ்க்கை நிகழ்வுகளை வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் இவள், நுட்பமான உதவிகள் செய்து அடுத்தவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை நிகழ்த்துகிறாள்." Life is Beautiful" படத்தைத் தொடர்ந்து, அமேலியும் நம் ஊர் இயக்குனர்களுக்கு அவ்வப்போது ஐடியாக்களை வாரி வழங்கும் அமுதசுரபியாகவே இருக்கிறாள்.

2.12 Angry Men















ஒரு பாடல் காட்சிக்கு ஸ்விட்சர்லாந்து, சண்டைக்கு ஹாங்காங், கருப்பு ஹீரோவுக்கு வெள்ளையடி, கதாநாயகியாக உலக அழகி, பாடல் வெளியீட்டுக்கு ஜாக்கிசனை கூப்பிடு என்று எதிலெதிலோ கவனத்தை செலுத்தி கதையைக் கோட்டைவிடும் இயக்குனர்கள் பார்க்க வேண்டிய (பா)படம். ஒரு அறை, 12 கதாபாத்திரங்கள் , ஒரு கொலை வழக்கு இதனை வைத்துக்கொண்டு நம்மை ஒன்றரை மணிநேரத்துக்கு இருக்கையின் நுனியில் கட்டிப் போடுகிறார்கள்.

3.City of God

















ரியோ டி ஜெனிரோ நகர சேரிகளில் அறுபது எழுபதுகளில் நடந்த குழு சண்டை, போதை மருந்துக் கடத்தல் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். பெரும்பாலும் அப்பகுதிகளில் வாழும் மக்களையே நடிக்கவைத்து படமாக்கியிருக்கிறார்கள். அற்புதமான ஒளிப்பதிவு.

4.Shindler's List

















ஸ்டீவன் ஸ்பீல்பர்க் தான் இயக்கிய படங்களில் தனக்கு மிக விருப்பமான படமாக இதனைக் குறிப்பிடுகிறார். இரண்டாம் உலகப் போரின் துவக்கத்தில் ஆஸ்கர் ஷிண்ட்லர் என்ற ஜெர்மன்காரர், தான் துவங்கவிருக்கும் தொழிற்சாலைக்கு ஜ்யூக்களை குறைந்தவிலைக்கு வேலைக்கு எடுக்க வருகிறார். அங்கு ஜ்யூக்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டு மனம் மனம் மாறுகிறார். நாஸிக்களை ஏமாற்றி சுமார் 1100பேர்களின் உயிரைக் காப்பாற்றுகிறார்.உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

5.Se7en


















அந்நியன், காக்க காக்க போன்ற படங்களில் இருந்தெல்லாம் ஐடியாக்களை சுட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால் என்ன, இந்த படங்கள் வெளி வருவதற்கு ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னரே Seven வெளியாகிவிட்டது ;) மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட த்ரில்லர். படத்தின் முடிவு யூகிக்க முடியாதது.

6.Seven Samurai


















ஒரு ஏழை விவசாய கிராமம் தங்களை கொள்ளையர் களிடமிருந்து காத்துக் கொள்ள சாமுராய்களின் உதவியை நாடுகிறது. ஏழு சாமுராய்கள் ஒன்று சேர்ந்து அந்த கிராமத்தைக் காப்பாற்று வது தான் கதை. ஷோலே, The Magnificent seven போன்றவை இந்தப் படத்தின் பாதிப்பில் உருவாக்கப் பட்டவை. தொழில் நுட்பங்கள் சுத்தமாக வளர்ச்சியடையாத 1954ல் எடுக்கப்பட்ட இப்படத்தின் காட்சியமைப்புகள் பிரமிப்பூட்டுபவை.

7.The Shawshank Redemption



















எனது All time favorite இது. ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் ஒரு புதிய கோணமும், புதிய வசனமும் நம்மைக் கவரும். பத்து படங்கள் இல்லாமல் ஒரே ஒரு படத்தை மட்டும் குறிப்பிடச் சொல்லியிருந்தால் இந்தப் படத்தைத்தான் சொல்லியிருப்பேன். A Must Watch movie!!




8.Pather Panchali
















இந்தியாவின் வறுமையை கூறு போட்டு விற்கிறார் 'ரே' போன்ற புலம்பல்களை எல்லாம் தாண்டி என்னை இந்தப் படம் கவர்ந்தது. கருப்பு வெள்ளையில் கிராமத்தின் அழகைப் படம்பிடித்த கேமரா, ரவி ஷங்கரின் இசை,துர்காவின் அழகிய முக பாவங்கள் என குறிப்பிட பல விஷயங்கள் இருக்கின்றன. தனித்துவிடப்படும் அந்தக் கிழவியின் பாடல் மனதில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

9.Let the right one in














இது வாம்பைர் (vampire) படம் என்று சொல்லுங்கள். மாய எதார்த்தவாதம் (Magical Realism) என்று சொல்லுங்கள், குழந்தைகள் படமென்று சொல்லுங்கள். இல்லை உளவியல் சார்ந்த படம் என்று சொல்லுங்கள். ஆனால் படத்தின் ஏதோவொன்று நம்மை அதனுடன் ஒன்றச் செய்கிறது. அந்த சிறு பெண்ணுக்கும், சிறுவனுக்குமான நட்பு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. அதிக எதிர்பார்ப்பின்றி பார்த்த இப்படம் மிகுந்த ஆச்சரியமளித்தது.

10.Requiem For a Dream























இந்தப் படத்தை ஏன் குறிப்பிடுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. இதுவரை இந்த அளவுக்கு மன அழுத்தம் தந்த வேறொரு படத்தை நான் பார்த்ததில்லை.போதை மருந்துக்கு அடிமையாவது, அதன் பின்விளைவுகள் பற்றி பேசும் படம். எடுக்கப்பட்டிருக்கும் முறையும் முற்றிலும் வித்தியாசமானது. என்னை பாதித்தது என்றவகையில் இந்தப் படத்துக்கும் பட்டியலில் இடமுண்டு.

சந்தோஷ் , அழைப்பிற்கு நன்றி, தாமதத்திற்கு மாப்பு

Sunday, March 22, 2009

புத்தகப் பார்வை: The Stranger

"Mother died today. Or maybe yesterday, I don't know. I had a telegram from the home: 'Mother passed away. Funeral tomorrow. Yours sincerely.' That doesn't mean anything. It may have happened yesterday."

ஆல்பெர் காம்யூவுக்கு நோபல் பரிசை பெற்றுத் தந்த "The Stranger" என்ற நாவலின் பிரசித்தி பெற்ற துவக்க வரிகள் இவை. இருத்தலியல் குறித்த மிக முக்கியமான புனைவாக இன்றளவும் இந்நாவல் கொண்டாடப் படுகிறது . இரண்டாம் உலகப்போருக்கு சற்றுமுன் துவங்கும் கதை ,மெர்சால்(Mersault) என்ற அல்ஜீரிய இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை அவனது மன ஓட்டங்களின் ஊடாக விவரிக்கிறது. அயின் ராண்டிற்கு(Ayn Rand) அவரது சித்தாந்தங்களின் முழு உருவமாக ஹோவர்ட் ரோக் திகழ்ந்தது போல காம்யூவின் இருத்தலியல் கொள்கைகளின் மொத்தவடிவமாக மெர்சால் விளங்குகிறான். தாய் இறந்துவிட்ட துக்க செய்தியை, யாருக்கோ நடந்ததைப் போல உணர்ச்சியற்று அணுகுவதிலிருந்து துவங்குகிறது கதை. மெர்சால் உடல் சார்ந்த உணர்ச்சிகளுக்கு மட்டுமே இடமளித்து , நிகழ்கால செளகரியங்களை மட்டுமே பேணி வாழ்பவன். அவனைப் பொருத்தவரை உலக நியதி, உறவுகள்,வாழ்வின் அர்த்தம் எல்லாம் மனிதனால் கற்பித்துக் கொள்ளப்படுபவவை. உள்ளபடியே அவற்றுக்குப் பொருளேதும் இல்லை, அறிவியல் சார் உண்மைகள் உட்பட.

தாயின் சவ அடக்கத்திற்கு செல்கிறான் மெர்சால். அங்கு, தாயின் முகத்தைப் பார்ப்பதற்கு கூட அவன் ஆர்வமற்று இருப்பதை கண்டு அங்குள்ளவர்கள் வியப்படைகிறார்கள். அடுத்தநாள் அலுவலகத்திற்கு சென்று வழகம்போல் தன் பணியைத் தொடர்கிறான். அவனது மேலதிகாரி அவனது பணி உயர்வினைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் மெர்சால் அதில் ஏதும் விருப்பமின்றி இருப்பது கண்டு அவருக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. அதற்கு மெர்சால் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
I answered,that one never changed his way of life; one life was as good as another. I’d have preferred not to vex him, but I saw no reason for “changing my life.”

மெர்சாலைக் காதலிக்கும் மேரி, அவனும் தன்னைக் காதலிக்கிறானா, திருமணம் செய்துகொள்ளலாமா எனக் கேட்கிறாள். அதற்கு மெர்சால், காதலிக்கவில்லை ஆனால் திருமணம் செய்துகொள்வதைப் பற்றி ஆட்சேபம் ஏதும் இல்லை என்கிறான். மெர்சாலின் இயல்பினைப் புரிந்துகொள்ள முடியாமல் மேரி திணருகிறாள்.

மெர்சால் ஒரு நாள் நண்பர்களுடன் கடற்கரைக்கு செல்கிறான். அங்கு ஒரு அரேபிய கும்பலுடன் ஏற்படும் சண்டையில் அவனது நண்பனுக்குக் காயம் ஏற்படுகிறது. பின் மெர்சால் தனியாக மீண்டும் கடற்கரைக்கு வருகிறான். அங்கே அசந்தர்பமான வேளையில் ஒரு அரேபியனை சுட்டுக் கொன்றுவிடுகிறான். மதுவின் போதையிலும், வெய்யில் ஏற்படுத்திய அசெளகரியத்தாலும் முற்றிலும் தற்செயலாக நிகழ்ந்துவிடுகிறது அந்தக் கொலை. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் மெர்சாலை கைதுசெய்து அழைத்துச் செல்வதுடன் முடிகிறது முதல் பகுதி.

இரண்டாவது பகுதி வழக்கு விசாரணையையும், சிறையில் மெர்சாலின் வாழ்க்கையையும் விவரிக்கிறது.மெர்சால் நீதிபதியால் விசாரிக்கப்படுகிறான்.தனது குற்றத்தை முழுமையாக ஒத்துக்கொள்கிறான். ஆனால் தாயின் மரணத்துக்குகூட கண்ணீர் சிந்தாத அவனது வினோதமான இயல்பு கண்டு அனைவரும் ஆச்சரியப் படுகிறார்கள்.அவனது தாய் தங்கியிருத்ந்த காப்பகத்தின் அதிகாரி, சவ அடக்கம் செய்தவர், மேரி, அவனது நண்பர்கள் யாவரும் விசாரிக்கப் படுகிறார்கள். விசாரணை கொலைக்கு சம்பந்தமில்லாத திசையில் மெர்சாலின் போக்கைப் பற்றியதாக இருக்கிறது.அவன் செய்த கொலையைக் காட்டிலும் அவனது மாற்று இயல்புகள் பாதகமானவையாகப் பார்க்கப் படுகின்றன.அபத்தத்தின் உச்சக் கட்டமாக , 'இத்தகைய வினோத போக்குடையவர்கள் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்கள்' என முடிவுசெய்யப்பட்டு அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

காம்யூ மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கிறார் என்று சிலர் சொல்வதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. மாற்றுக்கருத்துடையவர்களை சமுதாயம் எப்படி நடத்துகிறது என்பதன் குறியீடாகவே மரணதண்டனையைப் பயன்படுத்துகிறார் என்று தோன்றுகிறது.மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முதல் நாள் ஒரு பாதிரியார் அவனை சிறையில் சந்திக்கிறார். அவன் செய்திருக்கும் பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு இறைவனிடம் மன்றாடும் படி சொல்கிறார். மெர்சால் இதனை மறுத்து அவரை அங்கிருந்து விரட்டிவிடுகிறான். தான் செய்த செயலுக்கான முழுப்பொறுப்பையும் தானே ஏற்க விரும்புகிறான். சாவையும் அபத்தம் நிறைந்த இந்தவாழ்வின் ஒரு அங்கமாகவே பார்க்கிறான். வாழ்க்கையின் இந்த பாரபட்சமற்ற தன்மை குறித்து அவனுக்கு ஆசுவாசம் உருவாகிறது.மெர்சால் தன்னை சிறை வாழ்க்கைக்குப் பழக்கப்படுதிக்கொள்வதை விளக்கும் பகுதிகள் காஃப்காவின் உருமாற்றம்(Metamorphosis) நாவலை நியாபகப்படுத்துகின்றன.

இருத்தலியல் கொள்கையின் முக்கிய கூறுகளான இறப்பு, தனிமனித சுயதேர்வு அல்லது சுதந்திரம், உலக வாழ்வின் அபத்தம்,பாரபட்சமற்ற தன்மை யாவும் இந்நாவலில் விளக்கப்பட்டுள்ளன. இருப்பியல்வாதத்தை விளக்கும் மிகச்சிறந்த புத்தகம் இது இல்லை என்றாலும் புனைவின் வழியே அதனை அணுகும் முக்கிய நூலாகக் குறிப்பிடலாம். மேலும் காம்யூவின் அபத்தவியல்(Absurdism) தொடர்பான கருத்துக்ள் அடங்கிய "The Myth of Sisyphus" என்ற தலைப்பிலான கட்டுரைகளுக்கு அவர் கொடுத்த புனைவு வடிவங்கள்தான் "The Stranger" முதலான கதைகள் என்றும் சொல்லப்படுகிறது. ஹெமிங் வேயின் நடையை நினைவூட்டும் கச்சிதமான சிறுசிறு வாக்கியங்களால் எழுதப்பட்டுள்ளது நாவல். நோபல் இலக்கியம் என்றால் சுமார் எழுநூறு பக்கங்களுக்குக் குறையாமல் புரியாத மொழியில் எழுதப்பட்டிருக்கும் என்ற எனது எண்ணத்தை மாற்றியிருக்கிறது இந்நூல்.

Wednesday, February 11, 2009

திரும்பிப் பார்க்கிறேன்

ஏழெட்டு வாரங்கள் House full ஆக ஓடியது படம். அதன் பிறகு அந்த நிலையிலிருந்து கொஞ்சம் குறைந்தது.’என்னடா இது ஆரம்பத்திலிருந்த வேகம் தொடராது போலிருக்கே’ என்று நான் கவலைப்படத் தொடங்கிய சமயம் ஒரு சர்ச்சை வெடித்தது!

“படத்தின் பெயரிலேயே ஆபாசம் தொனிக்கிறது; காட்சிகளும் ஆபாசமாய் உள்ளன;சமுதாயத்தைக் கெடுக்ககூடிய இத்தகைய படங்களைஅரசு அனுமதிக்கலாமா?” என்று ஒரு எம்.எல்.ஏ சட்டசபையிலே பிரச்சனை கிளப்ப, வேறு சிலர்,”படம் ஆபாசமில்லை;கவர்ச்சிகரமாக எடுக்கப்பட்டுள்ள காதல் கதை அவ்வளவே; அது எடுக்கப்பட்டுள்ள விதம் பாரட்டுக்குரியது” என்று எதிர்வாதம், விவாதம் சூடு பிடித்து பத்திரிக்கைகளில் பிரமாதப்பட்டது.
விவகாரம் சட்டசபை வரை போய்விட்டதால் நான் உள்ளூர பயந்தேன்.’படத்தைத் தடை செய்து விடுவார்களோ’ என்ற கவலையில்,கோர்ட்டுக்குப் போய் ‘ஸ்டே’ வாங்கும் உத்தேசத்தில், “வக்கீலை இப்போதே சந்தித்துப்பேசலாம்” என்று கூட பார்ட்னர்கள் யொசனை சொன்னார்கள்.


ஆனால் நல்லவேளையாக அப்படி தடை உத்தரவு எதுவும் பிரப்பிக்கப் படவில்லை.சட்ட சபையில் நடந்த விவாதங்கள் அதற்கு வெளியேயும் நடந்த பரபரப்புடன் தொடர,படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது.அது மட்டுமா? ஏற்கனவே பார்த்தவர்கள் கூட ‘படம் ஆபாசமா?’ என்று எடை போட்டுப் பார்க்க மறுபடியும் பார்த்தார்கள்! பிறகு படத்தின் வெற்றிக்குக் கேட்பானேன்! ஆக மொத்தம் ‘கலக்‌ஷன்’ கொஞ்சம் குறைய ஆரம்பித்த சமயம் வெடித்த சர்ச்சை, பெரிய அனுகூலமாக முடிந்தது.

--oOo--


இயக்குநர் ஸ்ரீதர் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் "திரும்பிப் பார்க்கிறேன்" என்ற நூலை அவரது செமி-பயாகிராபி எனலாம். கல்கியில் தொடராக வந்து பின் தொகுக்கப்பட்டதாக முன்னுரை சொல்கிறது. வாரமலரில் வாசிக்கக் கிடைப்பது போன்ற லெளசியான மொழி நடை தான் என்றாலும் சம்பவங்களால் சுவாரசியப்படுகிறது. இளம்வயதில் நாடகங்களில் பணியாற்றத் துவங்கியது, சினிமாவில் கதாசிரியராக நுழைந்து இயக்குனரானது, இந்தி படவுலகில் கால் பதித்தது, சித்ராலயா துவக்கம், வெற்றி தோல்விகள், சிவாஜி, எம்.ஜி.ஆர்-ஐ இயக்கியது என அவரது திரையனுபவங்களை சிறுசிறு பத்திகளாக விரித்து செல்கிறது புத்தகம்.

மேலோட்டமாகப் பார்த்தால் வழக்கமான ட்ரிவியா புத்தகம் போல தோன்றினாலும், ஸ்ரீதர் இதில் சொல்லாமல் சொல்லியிருக்கும் சங்கதிகள் பல. உதாரணாமாக, அந்நாளில் திரையுலகில் நிலவிய அரசியலை அவரின் அனுபவங்களின் ஊடாக ஓரளவிற்கு விளங்கிக் கொள்ள முடிகிறது. தனக்கு ஏற்பட்ட ஈகோ பிரச்சனைகளைப் பகிர்ந்துகொள்வதில் ஸ்ரீதரின் நேர்மை தெரிகிறது. தனக்குக் கீழிருந்த நடிகர்களிடம் " நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?" என்பது போன்ற மனோபாவத்த்தில் நடந்துகொண்டதும் அதையே எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோர் இவருக்கு செய்ததையும் வரிகளுக்கு இடையே இருந்து அறிந்துகொள்ளலாம். ஒரு படத்துக்காக ராஜசுலோச்சனாவை ஒப்பந்தம் செய்யப் போனபோது, அவர் தான் ஒரு ஒப்பந்த படிவம் வைத்திருப்பதாகவும் இயக்குனர் அதில் கையெழுத்திட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். அதனை அவமதிப்பாக நினைத்து அவருக்கு பதிலாக விஜயகுமாரியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்தபடம் கல்யாண பரிசு. பின்னாளில் விஜயகுமாரியை வேறு ஒரு படத்திற்கு நடிக்கக் கேட்க, அவரோ தன் கணவர் எஸ்.எஸ்.ஆர் தான் தனக்கு கதை கேட்பார் என சொல்லியிருக்கிறார். உன் கணவருக்கெல்லாம் கதை சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று சொல்லி, அப்போது படங்களில் இராண்டாவது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த தேவிகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்தப் படம் 'நெஞ்சில் ஓர் ஆலயம்'. எம்.ஜி.ஆரை வைத்து துவங்கிய 'அன்று சிந்திய ரத்தம்' படத்துக்கான பத்திரிக்கை விளம்பரத்தில் "கலர் படம்" என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டார். அதே பத்திரிக்கையில் வந்திருந்த அவருடைய 'காதலிக்க நேரமில்லை' படத்துக்கு கலர் படம் என்ற விளம்பரமிருந்தது. இதனால் எம்.ஜி.ஆர் கால்ஷீட் குழப்படிகள் செய்து படத்தை நிறுத்திவிட்டார். 'யாருக்காக அழுதான்' படத்தில் சிவாஜியின் சிகைஅலங்காரம் நன்றாக இல்லை என்று சொல்லப்போக, சிவாஜி அந்த படத்திலிருந்து விலகிக் கொண்டார். ஆக 2 + 2= 4.

ஸ்ரீதர் படங்களில் வரும் பாடல்கள் காலத்தைவென்று மக்கள் மனதில் நிலைத்திருக்கக் காரணம் அவரது உழைப்பும் சமரசம் செய்துகொள்ளாத
உறுதியும்தான். ஒரு குறிப்பிட்ட படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் எடுத்துமுடிக்கப்பட்ட பின்னரும், அப்படத்தின் முக்கியமான பாடல் அமையவே இல்லை. ஏதாவது ஒரு பாடலை வைத்துப் படத்தை முடித்துவிடுங்கள் என தயாரிப்பாளர் நச்சரித்தும் ஸ்ரீதர் ஒப்புக்கொள்ளவே இல்லை. எம்.எஸ்.வி நூற்றுக்கணக்கான ட்யூன்கள் போட்டுக் காட்டியும் அவருக்கு எதிலும் திருப்தியே ஏற்படவில்லை. இறுதியாக சிலமாதங்கள் கழித்து தன் மனதிற்குப் பிடித்த பாடல் அமைந்தபின் தான் படத்தை தொடர்ந்து இயக்கி இருக்கிறார். அந்தப் பாடல் "நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை".இப்படத்தின் பெயரைச் சொன்னால் முதலில் மனது இந்தப் பாடலைத்தான் முணுமுணுக்கும். அக்காலத்திலேயே ஆங்கிலப் படங்களைப் பற்றிய பரந்த அறிவும், தொழில் நுட்ப ஞானமும் அவரை மற்ற இயக்குனர்களிலிருந்து தனித்துக் காட்டியதோடு புதுமை இயக்குனர் என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தன.

--oOo--

முதல் பத்தியில் ஸ்ரீதர் சொல்லியிருக்கும் அந்த ஆபாசப்படம் "காதலிக்க நேரமில்லை"(1964). புத்தகத்திலிருந்து மற்றொரு சிறு பகுதி...

பரணி ஸ்டூடியொவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டோடியோவில் நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி."அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு" என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார். "அண்ணே வாங்க வாங எங்க இவ்வளவு தூரம்?"என்றேன். தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி "இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன்.வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?" என்று கூறி விடைபெற்றார். அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , "என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலே யிருந்து மாறிடுவாங்க" என்றார்.

சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா?


Monday, January 19, 2009

ஒரு தமிழ் மாணவனின் கல்லறை



நான் தங்கியிருக்கும் ஆக்ஸ்ஃபோர்ட்(Oxford) நகரில் ஜி.யு.போப்பின் கல்லறை இருக்கிறது என்று அறிந்தபோது அதனைப் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. ஜி.யு.போப் என்ன செய்தார் என்பது தெரியாதவர்களுக்குக்கூட, அவர் தன் கல்லறை மீது "ஒரு தமிழ் மாணவன்" என்று எழுதச்சொன்னது தெரிந்திருக்கும். சமயப்பணி செய்வதற்காக 1841 வாக்கில் இந்தியா வந்து சேர்ந்த போது, ஜார்ஜ் க்ளோ போப்பின் வயது 17. வரும்போதே ஓரளவிற்கு தமிழ் பயின்று வந்திருந்தாலும் சென்னையின் நடைமுறைத் தமிழைக் கேட்டு அவருக்குப் பெரும் வியப்பு ஏற்பட்டது. தமிழை முழுமையாகக் கற்க வேண்டி அப்போது தமிழகத்திலிருந்த பெரும் பண்டிதர்களிடம் சென்று தமிழ் பயின்றார். தமிழ் மொழியின் தனித்தன்மையும்,ஆழமும் அதன்மீது பெரும் காதலை அவருக்கு ஏற்படுத்தின. அதன் பிறகு நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் தமிழகத்தில் அவர் தங்கியிருந்து சமயப் பணி ஆற்றினார் தமிழுக்குத் தொண்டாற்றினார்.

அதுவரை திருக்குறளின் சில பகுதிகள் மட்டுமே ஆங்கிலதில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தன. ஜி.யு போப் திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். Sacred Kural என்ற அவரது மொழியாக்கம் மிகச்சிறப்பானதாகப் போற்றப்படுகிறது. இது தவிர நாலடியார்(மொழிபெயர்ப்பு), தமிழ்-ஆங்கில அகராதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஜி.யு.போப் எழுதிய இலக்கண நூல்கள் தமிழறிஞர்களால் பாராட்டப் பெற்று பல பதிப்புகள் கண்டவை.

ஜி.யு.போப்பின் ஆகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அவரது திருவாசக மொழிபெயர்ப்பு. திருவாசகத்தை போப் மொழிபெயர்க்க ஊக்கப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியானது. தனது முதுமைக்காலத்தில் இங்கிலாந்து திரும்பிய போப் ஒரு நாள் தன் நண்பரிடம் திருவாசகத்தின் பெருமையை விவரித்திருக்கிறார். அதனைக்கேட்டு பரவசமடைந்த நண்பர், " நீ கண்டிப்பாக திருவாசகத்தை ஆங்கிலத்தில் பதிப்பிக்க வேண்டும்" என்று வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு போப் தனது முதுமையினைக் குறிப்பிட்டு, அது நீண்ட நெடிய பணி அவ்வளவு காலம் நான் உயிரோடிருப்பேன் என்று நம்பிக்கையில்லை எனக் கூறியிருக்கிறார். அதற்கு போப்பின் நண்பர்" ஒருவர் தன்னை உன்னதமான பணியில் ஈடுபடுத்திக் கொள்வதுதான் நீண்டகாலம் வாழ்வதற்குண்டான வழி.நீ கண்டிப்பாக இப்பணியினை நிறைவேற்றுவாய் என்று ஊக்கப்படுத்தி இருக்கிறார்".அதன் பின்னர் மொழிபெயர்ப்பினை துவக்கிய போப் தனது எண்பதாவது வயதில் இப்பணியினை முடித்திருக்கிறார்.தனது 80ஆவது பிறந்தநாளன்று எழுதிய கடித்தத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"I date this on my eightieth birthday. I find by reference that my first Tamil lesson was in 1837. This ends, as I suppose, a long life devoted to Tamil studies. It is not without deep emotions that I thus bring to a close my life's literary work."

அதன்பின் ஜி.யு.போப் 1908-ல் தனது 88ஆவது வயதில் மரணமடைந்தார். மரணமடைவதற்கு முன் தன் கல்லறையை எழுப்ப ஆகும் செலவில் ஒரு பகுதி தமிழர்களிடமிருந்து வசூலிக்கப்படவேண்டும் என்றும் தனது கல்லறையின் மீது"A Student of Tamil" என்று செதுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.




ஒரு குளிர்கால மாலையில் செயின்ட் செபல்ச்ர் கல்லறைத் தோட்டத்தை அடைந்த போது வெளிச்சம் குறையத் துவங்கியிருந்தது. நல்ல வேளையாக கதவுகள் பூட்டியிருக்கவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் இக்கல்லறையை பார்வையிட வந்த ஒரு தமிழ் ஆர்வலரின் குறிப்புகள் தமிழ்நேஷன் தளத்தில் சேமிக்கப்பட்டுள்ளன. கல்லறைக்கு செல்லும் வழி, அடையாளங்கள் ஆகியவை இத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. வால்டன் தெருவைப்பற்றிய அடையாளங்கள் சற்று மாறியிருந்தாலும், கல்லறைத்தோட்டத்தில் போப்பின் கல்லறையை அடையாளம் காண இவை பேருதவி செய்தன. இக்குறிப்புகளின் உதவி இன்றி 4000 கல்லறைகளிலிருந்து போப்பின் கல்லறையை தேடிக்கண்டுபிடிப்பது அந்த மாலை வேளையில் சத்தியமற்றதாய் இருந்திருக்கும். நான் எதிர் பார்த்த அளவுக்கு புதர்கள் மண்டியிருக்கவில்லை. ஆனால் பாழடைந்த நிலையில் தான் இருக்கிறது.போப்பின் கல்லறைமீது கீழ்கண்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

"George Uglow Pope D.D. of South India sometime lecturer in Tamil and Telugu in the University and chaplain of Balliol College, Oxford, born 24th April 1820. Died 11th February 1908. This stone has been placed here by his family and by his Tamil friends in South India in loving admiration of his life long labours in the cause of oriental literature and philosophy"

இக்கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட பிரபலமானவர்களின் பட்டியலில் கூட போப்பின் பெயர் இல்லாதது வருத்தமளிக்கிறது. ஆமாம், வெள்ளைக்காரர்களுக்கு என்ன வந்தது! கொண்டாட வேண்டியவர்கள் நாம்தானே? தமிழகத்தின் உயர்ந்த விருதுகள் எதுவும் ஜி.யு.போப்பிற்கு வழங்கப்பட்டதாக செய்தி இல்லை. 1968 உலகத்தமிழ் மாநாட்டில் நினைவுகூறப்பட்டிருக்கிறார்.அப்போது சிலை எழுப்பப்பட்டிருக்கிறது.வாழ்நாள் சாதனைக்காக தங்கப்பதக்கம் ஆங்கில அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் அவரது இறுதி விருப்பத்தையாவது நிறைவேற்ற அரசு ஆவன செய்திருக்கலாம்.தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் இலக்கியங்களையும் உலகத்திற்கு எடுத்துரைத்த ஜி.யு.போப், உ.வெ.சாமினாதனின் வரிசையில் வைத்து போற்றத்தக்கவர். உ.வெ.சா-வையே மறந்துவிட்ட நிலையில் ஜி.யு.போப்பிற்கு இடமில்லைதான்.கல்லறையை புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். கல்லறையை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டபின் அங்கிருந்து நடக்கத்துவங்கினேன். கல்லறையை எழுப்பி நூறுவருடங்கள் ஆகிவிட்டநிலையில் அதன் மீதான எழுத்துக்கள் அழியத் துவங்கிவிட்டன. இன்னும் இருபது முப்பது வருடங்களில் இந்த எழுத்துக்கள் முழுமையாக அழிந்துவிடலாம்.அதுசரி, இன்னும் முப்பதாண்டுகள் கழித்து ஜி.யு.போப்பின் கல்லறையைத் தேடி யார் இங்கு வரப்போகிறார்கள்?

*****
Reference: tamilnation.org தளத்திலிருந்து ஜி.யு.போப் பற்றிய தகவல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.