Sunday, September 09, 2007

நோ கமெண்ட்ஸ்

1)எழுத்தாளர்கள் கையாலாகாதவர்கள்

2)தமிழில் நல்ல மரபுக்கவிதைகள் எல்லாம் எழுதப்பட்டுவிட்டன.

3)லா.சா.ரா-வைப் படிக்காதவன் தமிழ் சிறுகதையைப் பற்றிப்பேச லாயக்கற்றவன்.

மேலுள்ள இந்த ஸ்டேட்மெண்ட்களை உதிர்த்த தமிழ் எழுத்தாளப் பிரபலங்கள் யார் யார் என்று கண்டுபிடியுங்கள்.விடை இறுதியில்..

********************

ஆதவனின் "கார்த்திக்" என்ற சிறுகதையிலிருந்து (தொடர்ச்சியற்று)உருவப்பட்ட இரண்டு பத்திகள்

அவன்,தன் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒருத்தியைத் தேடிக்கொண்டிருந்தான்.மனிதகுலம் இழந்துவிட்டிருந்த நிரபராதம் குறித்துச்சோகம்.இயற்கையை நசுக்கித் தேய்த்தவாறு எங்கும் செயற்கை படர்ந்து வருவது குறித்துச் சோகம்.

ஆம்,கார்த்திக் ஓர் உலர்ந்த,ஒற்றைப் பரிமாணப் பகுத்தறிவு வாதியல்ல.அவன் எதிர்த்தது பழமைவாதிகளின் மூட நம்பிக்கைகளை மட்டுமல்ல. புதுமைவாதிகளின் மூடநம்பிக்கைகளும்தான் அவனுக்குப் பிடிக்கவில்லை.அதிலும் இந்தப் பெண்கள்...

நவநாகரீக உடைகள் உடுத்து,ஆங்கிலத்தில் பேசவும் சிகரெட் குடிக்கவும் தெரிந்து விட்டதால் மட்டுமே,தாங்கள் முன்னேற்றமடைந்துவிட்டதாக எண்ணுகிற இவர்களுடைய மேலோட்டமான போக்கு...

இவர்களைப்போல உடுக்காத ஆங்கிலம் பேசாத பெண்களைவிட - தம் தாயாரையும் பாட்டியையும் விட - தங்களை உயர்ந்தாவர்களாக நிரூபித்துக்கொள்ள ஒவொவொரு கட்டத்திலும் முயற்சி செய்கிற பரிதாபம்...
புதுப் பணக்காரர்களின் ஆர்பாட்டத்தையும்,திடீரென உரிமையும்,சக்திகளும் பெற்ற மாஜி அடிமைகளின் பழிவாங்கும் குரோதத்தையும் வஞ்ஜகத்தையுமே இவர்களிடம் அவன் கண்டான்.பழைய பெண்களின் அசட்டு நம்பிக்கைகள்,பிடிவாதங்கள் இவையே மீண்டும் மாறு வேஷமணிந்து வந்தது போலிருந்தது.

ஒருவேளை தனக்கு எத்தகைய பெண்மைக்குத் தகுதி உள்ளதோ,அத்தகைய பெண்மையையே ஒரு சமூகம் பெறுகிறது, என்பதாக இருக்கலாம்.

சிந்தனைகளிலும் செயல்களிலும் இந்தச் சமூகத்திடமிருந்து வேறுபடுகிறவர்களும்கூட, அதில் வாழ்கின்ற காரணத்தாலேயே,இச்செயல்கள் விளைவிக்கும் தண்டனைகளிலிருந்து தப்ப முடிவதில்லை.
****
அவனைப் போலவே அவளும் மலர்களையும் இலைகளையும் மரங்களையும் செடிகளையும் விரும்புகிறவள்.அமைதியை விரும்புகிறவள்.அதிகம் பேசாதவள்.மூட மரபுகள்,பழக்கங்கள் ஆகியவற்றைத் தொடர விரும்பாதவள்.அதே சமயத்தில் இந்த நம்பிக்கையை அல்லது நம்பிக்கையின்மையை உரக்க பறைசாற்றிக்கொண்டு அதன் மூலமாகத் தனக்கு ஒரு ஹோதாவை உருவாக்கிக் கொள்ள முயலாதவள்.மனதில் மூளியில்லாதவள்.தன்னைத் தானாகவே உணருவதில் சங்கடமில்லாதவள்.ஒன்றைச் சார்ந்தவளாகவோ மற்றொன்றைச் சாராதவளாகவோ,சிலரைவிட உயர்ந்தவளாகவோ,சிலருக்குத் தாழ்ந்தவளல்லாதவளாகவோ தன்னைக்காட்டிக்கொள்ளாமலேயே ஸ்திரமாக உணருகிறவள்.

அவளுடைய உறுதியும் திண்மையும் கார்திக்கிற்கு மீண்டும் மீண்டும் வியப்பளித்தன,தெம்பூட்டின.

'இவள் எனக்கேற்ற விசேஷமானவள்.நான் தவறு செய்யவில்லை' என்று அவன் நினைத்தான்.இன்பம் நிறைந்த எதிர்காலம் அவன் கண்முன் விரிந்தது.

ஆனால் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிரம்பியது.நம்மைப் பற்றியும் பிறரைப்பற்றியும் புதிய கண்டுபிடிப்புகளை நம் முகத்தில் எறிந்து, சரியை தவறாகவும், தவறைச் சரியாகவும் மாற்றுவது.

********************************

திடுக்கிடும் திருப்பங்களையோ,அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலையோ ஏற்படுத்தாத நின்று நிதானமாகப் பயணிக்கும் மேற்கூரியவகை கதைசொல்லல் உங்களைக் கவர்கிறது என்றால் கை கொடுங்கள் நீங்கள் தான் ஆதவனின் எழுத்துக்கள் தேடும் வாசகர்! ரெடி...ஸ்டெடி..ஸ்டார்ட்........

ஆதவனின் எழுத்துக்கள் குறித்த எனது முந்தைய பதிவு

*******************
கேள்விகள் ஒன்றிலிருந்து மூன்றுவரைக்கான பதில்கள் முறையே சுஜாதா, சுஜாதா மற்றும் சுஜாதா !!!!

11 comments:

Chittoor Murugesan said...

நான் சொல்ல நினத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள்..

Anonymous said...

நெனச்சேன், சுஜாதாவா தான் இருக்கும்னு

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இரண்டாவது/மூன்றாவது கமெண்டுகள் சரியெனவே தோன்றுகிறது நண்பரே...
முதலாவது differs with individuals !

ஜீவி said...

ஆதவன், நம் மனசோடு பேசக்கூடிய
எழுத்தாளர். அவரின் இழப்பு, தமிழ்ச் சிறுகதை உலகின் சோகம்.

அதுசரி, அந்த மூன்றாவது கமெண்ட்
சுஜாதாவா சொன்னார்..ஆச்சரியமாக
இருக்கிறது.

என்னைப் பொருத்தவரை, லா.சா.ரா.வின் எழுத்து படித்துப் புரிந்து கொள்வதல்ல; அவரின் எழுத்துக்களைப் படிக்கும் நேரத்திலேயே, அவருக்கு சரிக்குசமமாக நாமும் அவர் உணர்வில், அவர் லெவலில் பயணித்து, விதிர்விதிர்த்து அனுபவிக்கும் ஒன்று. அவரது
"புத்ர.." "பச்சைக்கனவுகள்" "ஜனனி"
எல்லாமே இந்த அனுபவிப்புக்கு உதாரணம். எத்தனை பேருக்கு இந்த
அனுபவம் சாத்தியம்?..சாத்தியப்படாதவர்களெல்லாம், தமிழ்ச் சிறுகதைப் பற்றி பேச
லாயக்கானவர்கள் இல்லையா?..
புரியவில்லை.
ஆனால், என்ன சூழ்நிலையில் இதை
சுஜாதா சொன்னாரோ தெரியவில்லை.
லா.சா.ராவிற்கான ஏதாவது பாராட்டு
விழாவில் சொல்லியிருந்தால், உயர்வு
நவிற்சி என்று கொள்ளலாம்.

மாலன் said...

நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் Catch her in the rye ஓர் அருமையான புத்தகம். அது உங்களை வசீகரித்தால், சாலிங்கர் ஆசிரியராக இருந்து பதிப்பித்த நியூயார்க்கர் இதழ்களையும் கிடைத்தால் படியுங்கள். சாலிங்கர் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் உருவாகும்.-மாலன்

Anonymous said...

Dai mapla...

Indha charactera engayo anubavichu innamum en kooda anubavikkira madhiri irukku da.....

Simple to say-->Aadhavan has blended Creativity with Reality

பரத் said...

chittoor.S.Murugeshan ,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி முருகேசன்

பரத் said...

அனானி,
:-)

சங்கப் பலகை,
//முதலாவது differs with individuals !
//
ஆம்.
சல்மான் ருஷ்டிக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்ட போது மற்ற எழுத்தாளர்கள் அதனை எதிர்த்து குரல் கொடுக்காதது குறித்து ஜூ.வி யில் எழுதிய கட்டுரையில் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.சொல்லப்பட்ட காலத்தையும்,இடத்தையும் கருத்தில் கொள்ளும் போது சரியென்றே தோன்றுகிறது

பரத் said...

ஜீவி,
//அவரின் இழப்பு, தமிழ்ச் சிறுகதை உலகின் சோகம்//
முற்றிலும் உண்மை

//சாத்தியப்படாதவர்களெல்லாம், தமிழ்ச் சிறுகதைப் பற்றி பேச
லாயக்கானவர்கள் இல்லையா?..
புரியவில்லை.
ஆனால், என்ன சூழ்நிலையில் இதை
சுஜாதா சொன்னாரோ தெரியவில்லை.
லா.சா.ராவிற்கான ஏதாவது பாராட்டு
விழாவில் சொல்லியிருந்தால், உயர்வு
நவிற்சி என்று கொள்ளலாம்.
//

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.இது "உயர்வு
நவிற்சி" என்றுதான் தோன்றுகிறது.ஏனெனில் மற்றொரு இடத்தில்
இவ்வாறு குறிப்பிடுகிறார் "லா.சா.ரா எழுதிய பாற்கடல் என்ற கதையைப் படித்துப் பாருங்கள் அதற்கு ஈடான கதை இன்னும் எழுதப் படவில்ல"

பாற்கடல் தான் தமிழின் மிகச்சிறந்த சிறுகதை என்று அவர் சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது.இவை தனிமனித ரசனையைச் சார்ந்தவை.ஒரு நல்ல கதையைப் படித்துவிட்டு "கொன்னுட்டான்யா" என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்வோமில்லையா ,அதுபோன்ற பாராட்டுதான் என்று தோன்ருகிறது.

விரிவான கருத்துப் பகிர்விற்கு நன்றி.

பரத் said...

மாலன்,
//அது உங்களை வசீகரித்தால்//
ஆம் மிக அருமையான நூல்.அது பற்றி தனிப்பதிவு இடும் எண்ணமுள்ளது
//ஆசிரியராக இருந்து பதிப்பித்த நியூயார்க்கர் இதழ்களையும் கிடைத்தால் படியுங்கள். //
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாலன்

பரத் said...

Vijay Chandran.R ,
//Aadhavan has blended Creativity with Reality
//
absolutely true
thanks for sharing your views