Monday, June 04, 2007

கமல்ஹாசன் பற்றி சுஜாதா(பழைய பேப்பர்!)



கமலஹாசனுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவருடைய off-screen personality சுவாரஸியமாக வெளிப்பட்டது.இருபத்து மூன்று வயது. ஒரு மலையாளப் படப்பிடிப்பிலிருந்து வந்திருந்தார்.பஞ்சு மிட்டாய் வண்ணத்தில் ஜிப்பா,ஜரிகை வேஷ்டி.

அவர் அறையில் ஆடம்பரங்கள் எதுவும் இல்லை.ஏர்கண்டிஷனிரின் செளகரியத்தைத் தவிர.ஒரே ஒரு படம் இருந்தது.உக்கிரமாக முறைக்கும் ப்ரூஸ்லி. அமெரிக்க சினிமா சரித்திரத்தைப்பற்றியும் Sound in cinema பற்றியும் புத்தகங்கள் தென்பட்டன.படிக்கிறார்.இங்கிலிஷ் பண்பட்டு இருக்கிறது.கணையாளி போன்ற புத்தகங்களையும் புதுக்கவிதைகளையும் ரசிக்கிறார்.தன் தொழிலில் உள்ள சிரிப்பான விஷயங்களை இயல்பாக எடுத்துச்சொல்கிறார்.போலன்ஸ்கி,கோடார்ட் போன்ற ஐரோப்பிய டைரக்டர்களைப் பற்றிஅவருக்கு தெரிந்திருக்கிறது.ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் Frenzy என்ற படத்தில் ஒரு ஷார்ட்டைப் பற்றி உற்சாகமாக அவருடன் பத்து நிமிடங்கள் அலச முடிகிறது."மலையாளப் படங்கள் இப்போது பரவாயில்லை போலிருக்கிறதே" என்றேன்.அவர் "அதெல்லாம் அந்தக்காலம்,இப்போது மலையாளப் படங்கள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன"தன் சட்டையைக் காட்டி "மலையாளப் படம்" என்றார்.

"எனக்கு அழவரவில்லை அழு அழு என்கிறார்கள்.ஒரு சமீபத்திய தமிழ் படத்துக்கு மூன்று பாட்டில் கிளிசரின் ஆயிற்று."

"பாடலைப் படமெடுக்கும் போது கதாநாயகிக்கு கூந்தல் விரிந்திருப்பது ஒரு செள்கரியம்.உதட்டசைவு மறந்துவிட்டால்! சட்டென்று கூந்தலைப் பிரித்து அதில் மறைந்து கொள்ளலாம்."

"டேய் முத்து,மாடசாமி,பிடிடா"என்று கிராமத்தில் குடிசையில் வின்சென்டர் ரைபிள்களை வினியோகிக்கும் கர்ணன் படங்களையும் படுத்துக்கொண்டே படமெடுக்கும் காமிராக்கோணங்களையும்(imagine ஜோதிலட்சுமி)அம்மாக்களையும்,தியாகங்களையும் மிகவும் ரசித்து அவருடன் விமர்சித்துக் கொண்டிருந்ததில் எனக்கு நேரம் போனது தெரியவில்லை.படப்பிடிப்பு காத்திருந்தது.ஆப்பிள் ஜூஸ் கொடுத்து அனுப்பிவிட்டார்.

உரக்கப் பேசும் உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக,கற்பனையுடன்,நம்பும்படி நடக்கும் கமலஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பார்க்கிறேன்.

அக்டோபர் 1976

6 comments:

Anonymous said...

//கமலஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பார்க்கிறேன்//

சுஜாதா நிஜமாகவே ஒரு தீர்க்கதரிசி தான்

வெட்டிப்பயல் said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

அனுசுயா said...

1976 லயிருந்து இன்னும் அப்டியேதான் இருக்கு எந்த மாற்றமும் இல்லாம :)

Sundar Padmanaban said...

thanks for sharing this article. very interesting.

பரத் said...

Prakash ,
//சுஜாதா நிஜமாகவே ஒரு தீர்க்கதரிசி தான் //
உண்மைதான் பிரகாஷ்.
வருகைக்கு நன்றி.

வெட்டிப்பயல்,
யான் பெற்ற இன்பம் :-)
வருகைக்கு நன்றி

அனுசுயா
//1976 லயிருந்து இன்னும் அப்டியேதான் இருக்கு எந்த மாற்றமும் இல்லாம :)//
:))
அந்த வயசிலயே கமலுக்கு இருந்த ஆர்வம் பாராட்டப்பட வேண்டியது


சுந்தர் ,

வருகைக்கு நன்றி சுந்தர்

Anonymous said...

சினிமாவுல 1976 க்குப் பிறகு என்னய்யா வளர்ச்சி வந்து தொலைச்சிடுச்சு?

பார்க்கப் போனா.... அன்னையை விட இப்போ குப்பையும் சாக்கடையும் கூடுதலா போயிடுச்சு..