Saturday, June 28, 2008

அமிர் மற்றும் பின் கதைச் சுருக்கம் பற்றிய குறிப்புகள்

அமிர்(Amir)


"Only Sex and Sharuk sell in Bollywood"

-Neha dhupia,Actress

இது ஏறக்குறைய உண்மைதான்.பாலிவுட்டில் வணிகரீதியாக பெரும் வெற்றி பெரும் படங்களையும் அதன் தரத்தினையும் பார்த்தாலே இது விளங்கும்.என்றாலும் மணிரத்னம்,கமல் என பலரும் பாலிவுட் நோக்கியே படையெடுப்பதற்குக் காரணம் உச்சபட்ச விசிபிலிட்டியும் அதன் வாயிலாகக் கிடைக்கும் அங்கீகாரமும் தான்.வித்தியாசமான முயற்சிகள் கல்லாப் பெட்டியை நிரப்பாவிட்டாலும் மக்களின் கவனத்தைக் கவரத் தவறுவதில்லை.அம்மாதிரியான ஒரு முயற்சி தான் அண்மையில் நான் பார்த்த "அமிர்" என்ற திரைப்படம்.90 நிமிடங்களே ஓடும் இந்த ஆங்கில பாணிப்படம் 'த்ரில்லர்' என்று வகைப்படுத்தப் பட்டாலும் அதற்கு சமூகப் பிரச்சனை ஒன்றை அலசும் வேறு ஒரு முகமும் உண்டு.லண்டனிலிருந்து திரும்பும் அமிர் அலி என்ற இளைஞனின் ஒருநாளைய வாழ்க்கைதான் படம்.விமான நிலையத்தில் "அமிர்" என்ற பெயர் காரணமாக பலமுறை பரிசோதிக்கப் படுகிறான்(என் பெயர் அமர் என்று இருந்தால் இவ்வளவு நேரம் பரிசோதிப்பீர்களா?).தன்னை வரவேற்க தனது குடும்பத்தார் யாரும் வராதது கண்டு குழம்பும் அமிருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.மோட்டார் சைக்கிளில் வரும் இருவர் அமிர் கையில் செல் போனை திணித்து விட்டு மறைந்து போகிறார்கள்.செல் போன் மணியடிக்கிறது.அமிர் அதனை எடுத்துப் பேச ,அடுத்து அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் அந்த மர்மக் குரல் தீர்மானிக்கிறது.இறுதியில் அது அவனை எப்படி விபரீதத்திற்கு இட்டுச் செல்கிறது என்பது மீதிக்கதை."ஃபோன் பூத்" படத்தை கொஞ்சம் நினைவு படுத்தினாலும் இஸ்லாம் பயங்கரவாதம் பற்றிய பிரச்சனையும் கையாள்வதால் வேறுபடுகிறது.நான் அண்மையில் திரைப்படவிழாவில் பார்த்த "குதா கேலியெ" இப்பிரச்சனையை நேரடியாக அணுகுகிறது(3.30Hrs).அமிர் அதைவிட புத்திசாலித்தனமாக பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்துகிறது.மும்பையின் சேரிகள் மிகைப்படுக்தப் படாமல் காமிராவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பெரும்பாலும் CLose up காட்சிகள் நிறைந்த இப்படத்தில்,அறிமுக நாயகன் ராஜீவ் கண்டேவால் தனது இயல்பான முக பாவங்களால் கவர்கிறார்.தாராவியின் பொதுகழிப்பறையைக் காட்டும் போது பார்க்கும் நமக்கு இங்கு குமட்டிக்கொண்டு வருகிறது(காமிரா முதல் தரம்).இவ்வ்ளவு இருந்தும் படத்தின் நடுப்பகுதியில் திரும்பத் திரும்ப வரும் ஒரே மாதிரியான காட்சிகளினால் சலிப்பு ஏற்படுகிறது.இந்தத் தொய்வைப் போக்கி வேகத்தைக் கூட்டியிருந்தால் அறிமுக இயக்குநர் ராஜ்குமார் குப்தாவின் இந்தப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றிபெற்றிருக்கும்.



பின் கதைச் சுருக்கம்


நல்ல எழுத்தாளர் அடிப்படையில் நல்ல வாசகராக இருத்தல் அவசியம்.அப்படி ஒரு எழுத்தாளரின் வாசக அனுபவங்களைப் படிப்பது சுகானுபவம்.குறிப்பாக படிக்கவேண்டும் என்ற எண்ணமும், என்ன படிக்க வேண்டும் என்ற தெளிவின்மையும் உள்ள ஆரம்ப கட்ட வாசகருக்கு இத்தகைய வாசக அனுபவங்கள் நல்ல வழிகாட்டிகள் எனலாம்.அந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் மனதிற்கு நெருக்கமான ஒரு புக்தகம்.இதேபோல வாசக அனுபவங்களைச் சொல்லும் "பின் கதைச் சுருக்கம்"என்ற நூலை அண்மையில் படிக்க நேர்ந்தது.பா.ராகவன் இந்த ஒல்லியான புத்தகத்தில், இளம் வயது தொட்டு தான் படித்து வந்த நாவல்களில் தன்னைக் கவர்ந்தவற்றை பற்றி சுவாரசியமாக விவரித்திருக்கிறார்.ஆனால் கதாவிலாசம் போல ஒரு வரிசைப்படி அல்ல.க.விலாசத்தில் எஸ்.ரா தனது அனுபவம் ஒன்றைச் சொல்லி அதன் முடிவில் அதனையொத்த ஒரு கதையினை விவரித்து பின் அதன் வாயிலாக அந்த ஆசிரியரை அறிமுகப்படுத்துவார்.எல்லா அத்தியாயங்களும் இதே வரிசையில் தான் அமைந்திருக்கும். பி.க.சுருக்கத்தில் ஒரு அத்தியாயத்தில் ஒரு ஆசிரியரை பற்றி விரிவாக எழுதுகிறார்,அடுத்ததில் ஒரு புத்தகம் எழுதப்பட்டதன் பின்னணி,பிறகு ஒரு எழுத்தாளருடனான தனது அனுபவங்கள்,தான் கதை எழுதிய கதை என சுய விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசையற்ற குறிப்புகளாக விரிகின்றது.


புத்தகத்திலிருந்து...


*அலை உறங்கும் கடலான ராமேஸ்வரம் பற்றியும்,அளவிலா அதன் அதிசயங்கள் பற்றியும்,அதிசயங்களை விற்றுப்பிழைக்கும் அம்மக்களின் வாழ்நிலை பற்றியும் சொல்கிறார்.தனது"அலை உறங்கும் கடல்" நாவலுக்கான சரடு இக்கட்டான ஒரு தருணத்தில் கிட்டியதை விவரித்து 'வாழ்வின் ஏதோ ஒரு கணம் சட்டென்று சமநிலைதவறி வெடித்துச் சிதறும்போதுதான் சிறிய கலைப்படைப்புகளிலிருந்து பேரிலக்கியங்கள் வரை சுருக்கொள்கின்றன' என்கிறார்.

*அசோகமித்ரனின் 18வது அட்சக் கோடு,தண்ணீர் பொன்ற நாவல்களைக் கேள்விப்பட்ட அளவிற்கு 'ஒற்றன்' அவ்வளவு பரிச்சயமில்லை.ஆனால் பா.ரா தமிழ் எழுத்துத் துறையில் இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்று இந்நாவல் என்கிறார்.1973-ல் அயோவா நகர பல்கலைக்கழகம் பல்வேறு நாடுகளிலிருந்தும் அழைக்கப்பட்ட எழுத்தாளர்களைக்கொண்டு எழுத்துப்பட்டறை ஒன்றை 7 மாதகாலத்திற்கு நடத்தியது.அதில் பங்கேற்ற அசோகமித்ரன்,தனக்கேற்பட்ட அனுபவங்களை சுவையாக விளக்கும் நாவல் தான் ஒற்றன்.

*நோபல் இலக்கியவாதி எர்னஸ்ட் ஹெமிங்வே பற்றிய ஒரு கட்டுரை.மணவாழ்வில் அவருக்கு ஏற்பட்ட படுதோல்வியும்,சக எழுத்தாளரான பக்னரின் வெற்றியின் மீது ஏற்பட்ட பொறாமையும் இலக்கியவெற்றிக்கு அவரை உந்தித்தள்ளிய மறைமுக காரணிகள் என்கிறார்.ஹெமிங் வேயின் "Old man and the sea" இப்போது வாசிக்கத் துவங்கியிருப்பதால்,இக்கட்டுரை படிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

*இந்திரா பார்த்தசாரதியின் "ஏசுவின் தோழர்கள்"(Comrades of Jesus) தமிழில் எழுத்தப்பட்ட ஆங்கில நாவல் என்கிறார்.அரசியல் நெருக்கடி மிகுந்த காலத்தில் இ.பா போலந்தில் ஐந்தாண்டுகள் தங்கியிருக்க நேர்ந்தது.அப்போது அதன் அரசியல் நிலவரங்களைக் கூர்ந்து நோக்கி எழுதப்பட்ட நாவல் ஏசுவின் தோழரகள்.சமகால அரசியல் நிலவரங்களை இ.பா அளவுக்கு தமிழ் படைப்பிலக்கியத்தில் வெற்றிகரமாகக் கையாண்டவர்கள் குறைவு என்கிறார்.இ.பவின் எளிமை பற்றியும்,அதீத நகைச்சுவையுணர்வு பற்றியும் சிலாகிக்கிறார்.நான் இ.பா படித்ததில்லை.படிக்க வேண்டும்.
*நாகூர் ரூமியின் பெயரை முதலில் கேள்விப்பட்டபோது எதோ ஆண்மைகுறைவு லேகியம் விற்கும் லாட்ஜ் வைத்தியர் போன்ற பிம்பம்தான் தோன்றியதாகவும் பார்க்க அவர் ஜீன்ஸ் போட்ட அகத்தியர் போலிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.ரூமியின் "குட்டியப்பா" நாவலில் தமிழில் இதுகாரும் எழுதப்படாத உயர்தர நகைச்சுவை இருப்பதாகக் கூறுகிறார்.குட்டியப்பா கதாப்பாத்திரம் உண்மையில் ரூமியின் மாமனார்தான் என்பதையும், நிஜத்துக்கும் கதாபாத்திரத்திற்குமான இடைவெளி மிகக்குறைவு என்பதையும் அறிய வியப்பாக இருக்கிறது.கட்டுரை படித்தவுடன் வாங்கிப் படிக்கவேண்டு என்று தோன்றிய புத்தகங்களில் குட்டியப்பா முக்கியமானது.

*இவை தவிர பிறமொழி நாவல்களில், மார்க்குவேஸின் லத்தீன் அமெரிக்க நாவலான நூற்றாண்டுகால தனிமை(One Hundred years of Solitude), டால்ஸ்டாயின் தோல்வியுற்ற நாவல் புத்துயிர்(Resurrection), வைக்கம் முகமது பஷீரின் சரஸ்வதிதேவியுடனான காதல் மற்றும் அவரது டைரிக்குறிப்புகள் "அனுராகத்தின் நாட்கள்" என நாவலாக்கப்பட்ட விதம், ஸ்டாலின் காலத்து சித்திரவதைக் கூடங்களை விவரிக்கும் "இவானோ டெனிஸோவிச்சின் வாழ்விலே ஒருநாள்"(One day in the life of Ivan denisovich), பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

*மேலும் எம்.வி.வி தனக்கு காதில் வினோதமான ஒலிகள் கேட்பது பற்றி எழுதிய "காதுகள்" நாவல்( தமிழின் முதல் மாய-யதார்த்தவாத முயற்சி என்கிறார்.), தனது நண்பர் ஆர்.வெங்கடேஷின் "இருவர்" நாவல், உற்சாக மனிதர் வேணுகோபாலின் நுண்வெளிக்கிரணங்கள் பற்றிய கட்டுரைகள் நன்றாக எழுதப்பட்டுள்ளன. பிரபஞ்சன், சமுத்திரம், விஷ்ணுபுரம், சல்மான்ருஷ்டி பற்றிய கட்டுரைகள் அழுத்தமாக இல்லை.


வலை(பதிவு) மேய்வதின் ஆகப்பெரிய பயனாக நான் கருதுவது புத்தகங்கள்/திரைப்படங்கள்/கலைப்படைப்பு இவற்றைப்பற்றி அறிமுகம் கிடைப்பதுதான்.நல்ல அறிமுகங்கள் அவற்றைத் தேடி படிக்க/பார்க்க தேவையான உந்துதலைத் தரும். எல்லா எழுத்தாளர்களும் இதுபோல தங்களைக் கவர்ந்த புத்தகங்களைப் பற்றிய பட்டியலையும் அறிமுகத்தையும் தந்தால் நன்றாகயிருக்கும்.ஏனென்றால் எழுத்தாளர்கள் யாவரும் நல்ல வாசகர்கள் என்பதில் எனக்கு நிரம்பவும் உடன்பாடு உண்டு.

8 comments:

உங்கள் நண்பன்(சரா) said...

//வலை(பதிவு) மேய்வதின் ஆகப்பெரிய பயனாக நான் கருதுவது புத்தகங்கள்/திரைப்படங்கள்
/கலைப்படைப்பு இவற்றைப்பற்றி அறிமுகம் கிடைப்பதுதான் என்று தோன்றும்.நல்ல அறிமுகங்கள் அவற்றைத் தேடி படிக்க/பார்க்க தேவையான உந்துதலைத் தரும்.//

நிச்சயமாக! நல்ல ஒரு நூல் பற்றிய அறிமுகம் கொடுத்தமைக்கு நன்றி! நிச்சயம் தேடிப் பிடித்து படிக்க முயல்கிறேன்.

பரத் said...

கருத்துக்களுக்கு நன்றி சரா :)

கதிர் said...

ராமகிருஷ்ணனின் எழுத்து எப்போதும் தோழமையை ஏற்படுத்தும். கதாவிலாசம் தொடராக வந்தபோது எழுத்து இப்படிதான் இருக்கவேண்டும் என்று தோன்றும். உண்மைக்கு அருகில் என்பதெல்லாம் இல்லை. உண்மையை அனுபவமாக எழுதுவது ஒரு கலை அதை தரமாக செய்வது ராமகிருஷ்ணன்.

ராகவனின் எழுத்து எப்போதுமே ஒரு வேகத்தைக் கொண்டிருக்கும். எதை நோக்கியோ அதன் பயணம் பயணிக்கும் என்பது என் அனுமானம்.

குறித்துக்கொண்டேன்.
கிடைக்கும்போது வாசிக்கவேண்டும்.

Subbiah Veerappan said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

பரத் said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சுப்பையா சார்!!

பரத் said...
This comment has been removed by the author.
shamy said...

hi bharath ur Aamir film review is fine...i'm a new comerto this blog...anyway all the best.....
shamy

பரத் said...

Shamy,

thanks :)