Saturday, June 07, 2008

சுப்ரமண்ய ராஜு கதைகள் - வாசக அனுபவம்

எளிமையாக எழுதுவதுதான் உலகிலேயே கடினமான விஷயம்,எழுதிப்பாருங்கள் தெரியும் -Ruskin Bond

நேற்று இச்சிறுகதைத் தொகுப்பினைப் படித்துமுடித்தபோது, இது பற்றிய எனது எண்ணங்களைப்பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.சரியாகச் சொன்னால் ஆறு மாதங்களுக்கு முன்னரே எழுதியிருக்க வேண்டியது.புத்தகம் வாங்கி ஆறுமாதங்களாகிறது.ஏதேனும் ஒரு புது விஷயம் நம்மை ஈர்க்கத் துவங்கும்போது அதனைப் பற்றிய தகவல்கள் பல்வேறு திசைகளிலிருந்த்தும் நம்மை நோக்கி வந்தபடியே இருக்கும். இது எனக்கு பலமுறை நிகழ்ந்திருக்கிறது.சுப்ரமண்ய ராஜுபற்றி கேள்விப் பட்டதிலிருந்து அவரைப் பற்றிய செய்திகள் வலைபதிவுகள் வாயிலாகவும், நண்பர்கள்வாயிலாகவும் வந்து கொண்டே இருந்தன.ஆர்வம் மேலிட இந்தபுத்தகத்தை வாங்கிவந்துவிட்டேன். வரிசையாக கதைகளை வாசிக்கத் துவங்கி சிறிது நேரத்தில் ஆர்வம் குன்றி அங்கொன்று இங்கொன்றுமாக வாசித்து பத்து கதைகளுக்குள்ளாகவே மூடிவைத்துவிட்டேன்.அப்போது பரணுக்குபோன புத்தகத்தை இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வெளியிலெடுத்தேன். இந்தமுறை அவ்வளவு ஏமாற்றமில்லை.பெரிய எதிர்பார்ப்பு இன்மையும் காரணமாக இருக்கலாம். உண்மையில் பல கதைகள் என்னை ஆச்சரியபடுத்தின.
x
முப்பத்தியிரண்டு கதைகள் கொண்ட இத்தொகுப்பில் முப்பது சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும் அடங்கும்.ஒரு எழுத்தாளனின் முழு ஆக்கங்கள் என நோக்கும் போது அளவில் இது மிகவும் குறைவு.இதற்கு காரணம் அவர் 39 வயது வரைதான் வாழ்ந்தார் என தெரியவரும்போது மனது கனக்கிறது. ஆதவனின் கதைக்களம் டெல்லியை அடிப்படையாகக் கொண்டிருப்பது போல ராஜுவின் கதைக்களம் சென்னையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நடுத்தர மக்களின் அன்றாடபிரச்சனைகளும் தனிமனித ஒழுக்கச் சிக்கல்களும் தான் பெரும்பாலான கதைகளின் கரு.இவரது கதை சொல்லும் பாணியில் இருக்கும் அதீத எளிமைதான் இவரது பலம்.அருகில் ஒருவர் அமர்ந்த்து கதை சொல்லிக்கொண்டிருப்பதைப் போல மனதில் காட்சிகளை விரியச் செய்கிறார். ராஜுவின் வார்த்தை உலகமும் சிறியது என்றே தோன்றுகிறது. படிக்கும் பொழுது எந்த எதிர்பாராத வார்த்தையும் உங்களைஆச்சரியப் படுத்துவதில்லை. சுஜாதா போல வார்த்தைக் கலப்போ,ஆதவன் போல வடமொழிச்சொல் பிரயோகமோ இருக்காது(ஆனால் ஆங்கிலக் கலப்பு உண்டு)தெளிந்த நீரோடை போன்று ஓடிக்கொண்டே இருக்கிறது இவரது வர்ணனைகள். பார்க்கின்ற எதையும் இயல்பாக வர்ணிக்கத் துவங்கிவிடுகிறார். இது பல நேரங்களில் சுவாரசியமாகவும் சில நேரங்களில் சோர்வாகவும் இருக்கிறது.
x
கதையின் நாயகர்கள் பெரும்பாலும் சுவாமி நாதன், ராஜாராமன்என்ற பெயர்களையும் நாயகிகள் லதா, ராஜி என்ற பெயர்களையும்
கொண்டிருக்கிறார்கள். நாயகர்கள் எல்லாரும் ஸ்த்ரீ லோலர்கள்.பார்க்கிற பெண்ணையெல்லாம் புணருகிறார்கள் குறைந்த்தபட்சம் மனைவியையாவது சந்தேகிக்கிறார்கள். சொல்லி வைத்ததுபோல,கதை துவங்கி மூன்றாவது பாராவில்”ஹவ் அபெளட் விஸ்கி?” என்று கேட்கிறார்கள்.பெண்கள் அந்நியாயதுக்கு சோரம் போகிறார்கள்.
x
ராஜுவின் கதைகளில் பெரிய குறையாக நான் கருதுவது கதை முடிவுகளைத்தான்.மிக மிக சம்பிரதாயமான கதை முடிவுகள்.எந்த்த கதை முடிவும் அழுத்தமாகவோ வித்தியாசமாகவோ இல்லை(விதிவிலக்குகள்
உண்டு). சுஜாதாவிடம் சிறுகதை நுணுக்கங்களைப் பயின்றவர் ராஜு என்று படித்திருக்கிறேன்.ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறது இவர் பாணி. சுஜாதாவின் சுமாரான சில சிறுகதைகள் கூட அதன் எதிர்பாராத முடிவு காரணமாக மனதில் பதிந்து போகும். ஆனால் ராஜுவின் நல்ல சில சிறுகதைகள் கூட அதன் சோகையான முடிவு காரணமாக மனதில்பதிய
மறுக்கிறது.
x
இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த சிறுகதைகளாக கேள்விகள்,இன்னொரு கனவு,சாமி அலுத்துப் போச்சு,தூண்டில்,கொடி,நாலு பேர், வழியில்
சில முட்டாள்கள் மற்றும் காதலிக்கணும் சார் இவற்றைக் குறிப்பிடலாம். இரண்டு குறுநாவல்களில் 'இன்று நிஜம்' நாவலைக்காட்டிலும் 'இரவுகள் தவறுகள்' பிடித்திருந்த்தது. கொஞசம் இடறினாலும் ராஜேஷ் குமார் நாவல் போலாகிவிடும் அபாயம் இருந்தாலும் ராஜுவின் எழுத்துநடையால் தப்பிக்கிறது.'இன்று நிஜம்' ஒரு அருமையான நாவலுக்கான கதைக்களமும் துவக்கமும் இருந்த்தும் கூட சுவையற்ற இரண்டாவது பாதியால் கவனம் இழக்கிறது.
x
சுப்ரமண்ய ராஜுவின் நண்பரும் எழுத்தாளருமான தேவக்கோட்டை மூர்த்தி, ராஜு பற்றிய நினைவுகளை முன்னுரையில் சுவையாகப் பகிர்கிறார்.ஒரு எழுத்தாளரின் முழு ஆக்கங்களையும் தொகுப்பாகக் கொண்டுவரும் போது இத்தகைய விரிவான கட்டுரை அவசியமாகிறது. அந்த எழுத்தாளரை முதன்முறையாக படிப்பபவருக்கு அவரைப் பற்றிய பிம்பம் கட்டமைய இது உதவுகிறது.அவ்வகையில் மூர்த்தியின் கட்டுரை நன்றாகவே இருக்கிறது(அதற்காக ரயில்வே க்ராஸிங்கை கடக்க உதவியதையெல்லாம் குறிப்பிட்டு புளகாங்கிதம் அடைவது கொஞ்சம் ஓவர்).எழுத்தாளர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதராகவும் ராஜு நம்மைக் கவர்கிறார்.மூர்த்தியின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
x
”கற்பனை கலைக்கு முரண்” என்ற நகுலனின் கொள்கைதான் ராஜுவின் எழுத்தில் மீண்டும் மீண்டும் பரிமளித்தது.நெர்மாறாக அனுபவத்தை எழுதுவது அநேகமாக ரிபோர்ட்டேஜில்தான் முடிகிறது; எனவே கலைக்கு கரு கற்பனைதான் என்பதை விடாப்பிடியாக வைத்துக்கொண்டிருக்கிற ஆள் நான்.இந்த விவாதம் எங்களுக்குள் பலவருடங்கள் நடந்துகொண்டிருந்தது.ஒரு சமயம் பொறுமை மீறி,அவன் பாராட்டிய,என் ”புளிக்கும் திராட்சைகள்” நாவலின் கதாநாயகி கற்பனையில்தானே சாத்தியம் என்று கேட்டேன். ”யார் சொன்னது? உனக்கு புடவை கட்டினா அப்படித்தான் இருக்கும்” என்று சிரிக்காமல் சொன்னான் ராஜு.ஆனால் உன்னோட ஆர்க்யூமெண்ட் எனக்குதான் சாதகமா இருக்கு.எனக்கு புடவை கட்டினா என் நாயகி மாதிரி இருக்கும்ங்கறதே கற்பனைதானே ராஜு? என்று நான் பதில் சொல்ல,ராஜு சிரித்தான். ஆனால் என் கதாநாயகி போன்ற புத்திசாலியான பொறுமைசாலியான பரோபகாரியான, அதே சமயம் லேசான குறும்புக்காரியான பார்ப்பதற்கும் ரம்மியமான ஒரு பெண்,ராஜுவுக்கு,புடவை கட்டியிருந்தால் சுலபசாத்தியம் என்பது புரிந்தபோது,கலைக்கு அடிப்படை கற்பனையா அனுபவமா என்ற எங்கள் விவாதம் அன்றோடு முடிந்தது. 'How things ought to be' என்ற அயன் ராண்ட் விதியை கற்பனை என்ற சொல்லால் நான் வரையறுக்க, அனுபவம் எனற சொல்லால் ராஜு விவரித்தான். அதனால்தான் எழுத்தும் வாழ்வும் ஒன்றுதான் என்று இறுதிவரை ராஜுவால் இயங்க முடிந்தது.

காலத்தைக் கடந்து நிற்கும் 25 சிறுகதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன், அதில் சுப்ரமண்ய ராஜுவின் கதையும் ஒன்று, என்று சுஜாதா சொன்னதில் வியப்பேதும் இல்லை.தொகுப்பில் சிறப்பானவையாக பத்து கதைகளாவது தேறுகின்றன. ராஜுவின் எழுத்து யாரையும் பின்பற்றாத தனித்த ஒன்று. சிறுகதை சூத்திரங்களில் முக்கியமானதான எளிமை இவரது கதைகளில் இருந்தும் அதே எளிமை காரணமாக இலக்கிய சர்ச்சைகளிலிருந்தும் புறக்கணிக்கப்படவும் கூடும்.பெரிய எழுத்தாளர்கள் சிலரின் ஆரம்பகால கதைகளை படிக்கும் போது அவரா எழுதினார் என்றிருக்கும்.எல்லாருடைய எழுத்துக்களும் கால மாற்றத்திற்குட்பட்டவைதான், பண்படுதலுக்கு உட்பட்டவைதான்.ஆனால் ராஜுவிற்கு அந்த கால அவகாசம் கூட கிடைக்காமல் இளம்வயதிலேயே மாண்டது தமிழ் சிறுகதை உலகிற்கு மிகப்பெரிய இழப்புதான்.

5 comments:

கதிர் said...

தெளிவான பார்வை. இன்னும் வாசிப்பதற்குண்டான வாய்ப்பு கிடைக்கல. (யாரும் ஓசில குடுக்கலன்னு சொல்றத இப்படியும் டீசண்டா சொல்லலாம் :))

துளசி கோபால் said...

இப்பத்தான் ரெண்டாவது முறையா வாசிக்க ஆரம்பிச்சேன்.

உறக்கம் வராத ஒரு இரவு தேவகோட்டை மூர்த்தி எழுதிய முன்னுரையை மட்டுமே வாசிச்சுட்டு, அதைப்பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

நேத்துதான் முதல் கதை ( கல்லாவில் உட்காரும்வரை உரிமை இருந்தவர், வேலையை விட்டுப் போனது) படிச்சேன்.

பரத் said...

தம்பி,
நன்றி.
இந்தியா வரும்போது சொல்லுங்க,
அனுப்பி வைக்கிறேன். ;)

பரத் said...
This comment has been removed by the author.
பரத் said...

வாங்க டீச்சர்..
என்னோட சிறிய யோசனை,ஒரேடியா தொடர்ந்த்து பல கதைகள படிக்காம அவ்வப்போது ஒவ்வொண்ணா படிச்சா சலிப்பு ஏற்படாமல் இருக்கும்னு நெனைக்கறேன்.

வாசித்துவிட்டு உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.

வருகைக்கு நன்றி :)