Thursday, February 28, 2008

தமிழ் எழுத்துலக சக்ரவர்த்தி மறைவு - அஞ்சலி



காலையில் கூகிள் ரீடரைத் திறந்தபோது எனக்குப் பிடித்த பதிவர்கள் அனைவரும் பதிவிட்டிருப்பது கண்டு ஆச்சரியப்பட்டேன்.ஆனால் முதல் பதிவைத்திறந்தவுடனேயே மற்றவர்கள் அனைவரும் என்ன எழுதியிருப்பார்கள் என்று ஊகிக்க முடிந்கது.சில வாரங்களுக்கு முன் தேசிகனின் வலையில் சுஜாதாவின் உடல்நலக்குறைவு பற்றி படித்தபோதே என்னவோ போல் இருந்தது.இன்னும் ஒரு நூற்றாண்டிரும் என்று சொல்லிக்கொண்டேன்.நண்பனிடம் இதைப்பற்றிப் பேசும்போது கூட "டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவுடன இதை பத்தி ஒரு கட்டுரை எழுதுவாரு பாரு" என்று சொன்னேன்.மார்க் ட்வைன் சொன்னது போல "DEATH,THE ONLY IMMORTAL.." அது யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை.இன்று அது தமிழின் மாபெரும் எழுத்தாளனையும் தன்னோடு அள்ளிக்கொண்டத

சிறுவயதில் சுஜாதாவை கணேஷ்,வசந்தாகத் தான் வாசிக்கத்துவங்கினேன்.ஆனால் விரைவிலேயே கதைகளைக் காட்டிலும் அவரது கட்டுரைகள் என்னைக் கவரத்துவங்கின.அப்போது குமுதத்தில் வந்துகொண்டிருந்த "21ஆம் நூற்றாண்டின் விளிம்பில்" என்ற கட்டுரைத்தொடரை அண்ணன் பைண்ட் செய்து வைத்திருப்பான்.அதில் எனக்கு பாதிக்குமேல் அர்த்தம் புரியாது ஆனால் வாசிக்க வசீகரமாக இருக்கும்.கதைகளில் துப்பறியும் கதைகளைவிட "மத்யமர் கதைகள்",நகரம்" போன்ற யதார்த்தமான கதைகள் என்னையும் அதிகமாகக் கவர்ந்தன.சுஜாதாவின் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியரையும்,நூலையும் தேடிப்பிடித்து வாசிக்கத்துவங்கினேன்.இன்று எனக்கு விரல்விட்டு எண்ணுமளவுக்காவது ஆசிரியர்களையும் ,புத்தகங்களையும் தெரிந்திருக்கிறதென்றால் அவை சுஜாவின் கட்டுரைகளினால்தான் சாத்தியப்பட்டது.


விகடன்,குமுதம் போன்ற ஜனரஞ்ஜக இதழ்களுக்கும்,கணையாளி போன்ற சிற்றிதழ்களுக்கும் இடையில் அவர் கொண்டிருந்த பேலன்ஸ் அபாரமானது.எடுத்தவுடனேயே ஒரு பாமர வாசகனை சு.ராவையும் புதுமைப்பித்தனையும் படிக்க வேண்டும் என்று எதிபார்க்கமுடியாது.தனக்கு எழுதக்கிடைத்த பத்தியில் மெதுமெதுவாக நல்ல ஆசிரியர்கள்,நல்ல கவிதைகள் என அறிமுகப்படுத்தி,ஒரு பெரும் வாசகக் கூட்டத்தை சிற்றிதழ் நோக்கி நகர்த்திய பெருமை சுஜாதாவையே சேரும்.ஜி.நாகராஜனையும்,சாமர்செட் மாமையும்,சு.ரா வையும்,மகுடேஸ்வரனையும்,எரிகா ஜஙையும் என் போன்ற பாமரர்களுக்கு அறிமுகப்படுத்தியது அவரது மிகப்பெரிய சாதனை.


அறிவியல் கட்டுரைகளை அவரைவிட தமிழில் சிறப்பாக எழுதியவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று தெரியவிலை.அதேசமயம் அவை அவற்றின் நம்பகத்தன்மைக்காக(1 % முழுக்க தவறு பாக்கி 99% தான் உண்மை என்கிற ரேஞ்சில்)அதிகம் விமர்சிக்கவும் பட்டன.அவ்வாறு அவரை விமர்சித்தவர்களும் சுஜாதா என்ற அதே நுழைவாயில் வழியாகவே அத்துறையில் நெடுந்தொலைவு சென்றவர்களாக இருப்பார்கள்.


இன்று அவரது கட்டுரைகளை எடுத்துப் படித்தபோது ஏனோ அழுகையாக வந்தது.இன்று இவ்வளவு அஞ்சலிக்கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, சுஜாதவைப் படித்த எல்லாருக்கும் அவரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது என்று தெரிகிறது.மேலும் எழுதியவர்கள் அனைவரும் நெருக்கமான நண்பர்கள் என்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.சுஜாதாவை ஒருமுறையாவது நேரில் சந்திக்கவேண்டும் என்ற என் எண்ணம் நிறைவேறாமலே போய்விட்டது.அதனால் என்ன..அவரே ஒரு பத்தியில் சொன்னது போல,


"ஆத்மாநாமை சந்திக்கக் கிடைத்த ஒரே சந்தர்பத்தை தவற விட்டு விட்டோமே என்று வருத்தமில்லை.அதேபோல் 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று சுருக்கமாகச் சொன்ன கணியன் பூங்குன்றனார் குடுமி வைத்திருந்தாலோ,கடுக்கண் போட்டிருந்தாலோ எனக்குக் கவலையில்லை.ஆத்மாநாமோ,பூங்குன்றனாரோ...அவர்கள் கவிதைகளுடன் நான் பேச முடிகிறது.Our words knew each other.That was enough(Erica Jong)"

ஆம்.. our words knew each other.thats enough .

2 comments:

Anonymous said...

enakkum roamba manasu kastama irukku...

:(

Anonymous said...

Barath,

I was also really shocked to hear the demise of the legend , who has been an inspiration to many in lot many ways.

Anyone who loves reading will never his contributions.

Your post is an excellent tribute to the departed soul.

MAY HIS SOUL REST IN PEACE.

- Vijay