Thursday, July 26, 2007

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் ஓஷோ-எனது நிலைப்பாடுகள்





அய்யனார் தமது பதிவில் குறிப்பிடிருப்பது போல,ஓஷோவின் தியான முறைகள் யாவும் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டு உலக அளவில் பெரும் வெற்றி கண்டவை.கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓஷோ ஆசிரமதிற்கு வருவோரின் எண்ணிக்கை இருமடங்காகப் பெருகியுள்ளது.

ஆனால்...

ஓஷோ மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவரா..Medium தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டவரா என்பதை அறிய கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பதும் அவசியமாகிறது.


* ஓஷோ என்ற தனி நபருக்கு 93 Rolls-Royce கார்கள் சொந்தமாக இருந்திருக்கின்றன.அதுபோக விலைஉயர்ந்த கற்கள் பதிக்கப் பட்ட ladies watch களின் தொகுப்பும் உண்டு.
"My religion is the only religion." என்று பெருமையாகக் குறிப்பிடும் ஓஷோவிற்கு எளிமையை போதிக்காத எந்த மதமும் நிலைத்திருக்கமுடியாது என்பது புரியாமல் போனது ஏனோ?

(1985ல் immigration fraud காரணமாக கைதாகி கார்கள் ,சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டு நாடுகடத்தப்பட்டார்.பார்க்க படம்)








* 20ம் நூற்றாண்டி அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரே ஒரு Bio-Terror attack ஓஷோ பக்தர்களால் நிகழ்த்தப்பட்டது.ஓஷோ அமெரிக்காவில் ஆசிரமமைத்துத் தங்கியிருந்தபோது,அவரது மடத்தில் இருந்த சன்யாசிகள் அருகில் இருந்த ஹோட்டல்களில் மித அபாய விஷத்தைக் கலந்துள்ளனர்.உணவை உண்ட 700க்கும் அதிகமானோர் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளனர்(உயிரிழப்பில்லை).

இவை ஓஷோ சொல்லித்தான் செய்யப்பட்டது என்று சொல்லவில்லை.ஆனால் 'அடுத்த உயிர்களுக்கு தீங்கு விளைவிப்பது தவறு'என்கிறஆதார தத்துவத்தைக் கூட சீடர்களுக்கு விளங்கவைக்காதது தவறில்லயா?


* அவரது பல நல்ல கருத்துக்களை விட்டு விட்டு செக்ஸ் பற்றியவற்றை மட்டும் பிடித்துக்கொண்டு "செக்ஸ் சாமியார்" என்று முத்திரை குத்துவது தவறு.அதே சமயம் "Open Sex" பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும் ஆகாது இல்லயா?தியானம் மட்டும் செய்ய வருகிறார்கள் என்றால் அங்கு சேருவதற்கு கட்டாய HIV Test ஏனோ?அருகில் அமர்ந்து தியானம் செய்வதால் எய்ட்ஸ் பரவுமா?

துவக்கத்தில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில்(அனுமதிக்கப்பட்ட அளவு) வாலியமும்,நைட்ரஸ் ஆக்ஸைடும் உட்கொள்ளத் துவங்கி பின் அதுவே எல்லை மீறிஅதற்கு அடிமையும் ஆனார்.பின்"Actually oxygen and nitrogen are basic elements of existence. They can be of much use, but for reasons the politicians have been against chemicals of all kinds, all drugs." என்று சொல்லுமளவிற்கு போனது இப்பதிவிற்கு சம்பந்தமில்லாதது என்பதால் விட்டு விடுவோம்.


இன்றைய நவயுக சாமியார்கள் யாவரும் ஓஷோவின் கருத்துக்களை பயன்படுத்துகிறார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.சிலர் ஒத்துக் கொள்கிறார்கள்.சிலர் அப்படிச் செய்வதில்லை.அதிருஷ்ட வசமாக ஓஷோவும் முதல் வகையினரிலேயே சேர்கிறார்.அதாவதுஓஷோ அதிக அளவில் சரதுஸ்திராவின் கருத்துக்களை ப்ரதிபலிக்கிறார்.பல இடங்களில் புத்தரின் கருத்துக்களை மேற்கோள் காட்டுகிறார்.அதனால் அவர்களை இவர் காப்பி அடிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?ஓஷோ சரதுஸ்ராவின் கருத்துக்களை காப்பியடிக்கிறார் என்பது அவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் மற்றவர்கள் அவரைக் காப்பியடிக்கிறார்கள் என்பதும்.

"No Saint comes to the world with a new teaching or philosophy;
he brings the same ancient wisdom"
என்பதுதான் உண்மை.
சரதுஸ்த்ரா,ஓஷோ உருவ ஒற்றுமை



ஓஷோ ஒரு சிறந்த சிந்தனாவாதி.அவரது புத்தகங்கள் போற்றப் படவேண்டியவை,தியான முறைகள் கொண்டாடப் பட வேண்டியவை.மற்றபடி அவர் சர்வ பலவீனங்களும் கொண்ட சாதாரணர்.என்னைக் கேட்டால் ரெண்டு அவுன்ஸ் எக்ஸ்ட்ரா சாதாரணர்.எல்லா சாமியார்களைப் போல அவரது வீழ்ச்சியும் தனிமனிதத் துதியை ஆதரிப்பதில் தான் துவங்கியது.

"Rich men's Guru" என்று செல்லமாக அழைக்கப்படும் ஓஷோ சமூகத்தில் அடைந்திருக்கும் இந்த பிம்பம் சரியானதா,தவறானதா என்று தெரியவில்லை.ஆனால் போதுமானது என்றே தோன்றுகிறது.

"OSHO. Never Born, Never Died.
Only Visited this Planet Earth between Dec 11 1931 – Jan 19 1990"

தலைமயிர் நீளமாக வைத்துக் கொண்டு,ஒரு கையில் சிகரட்டும் மறுகையில் கேர்ல் பிரண்டுமாக கொரேகான் பார்க்கில்(புனே) திரியும் வெளி நாட்டவரை வேண்டுமானால் இந்த சினிமாத்தனமான வசனங்கள் கவரலாம்.
நம்மள இல்லீங்கோ!!!!

Wednesday, July 04, 2007

கடவுளின் பள்ளத்தாக்கு



மலையேறுபவர்களின் சொர்கபுரி என்றே அழைக்கலாம் பூனாவை(Pune).கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட மலைமீதமைந்த கோட்டைகள் பூனா,மும்பையைச் சுற்றி அமைந்துள்ளன.இவற்றில் சில சிவாஜியால் நிர்மாணிக்கப் பட்டவை,பல இவரால் கையகப்படுத்தப்பட்டவை.இவரது கொரில்லா யுத்தயுக்தியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இக்கோட்டைகளின் அமைப்பே.ஆண்டுமுழுவதும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து போகிறார்கள் என்றாலும் மழைக்கால துவக்கத்திலும்,இறுதியிலும் கூட்டம் சற்று அதிகம்.காரணம் பரவசமூட்டும் பசுமையும்,மழைக்கால அருவிகளும்தான்.

கீழுள்ள படங்களில் நீங்கள் பார்ப்பது இப்படிபட்ட மலைக்கோட்டை ஒன்றைத்தான்.இதன் பெயர் ஷிவ்னேரி(சிவனேரி).புனேவிலிருந்து சுமார் 90Km தொலைவில் உள்ளது இம்மலை.மற்ற எந்த கோட்டைக்கும் இல்லாத பெருமை இந்தக் கோட்டைக்கு உண்டு.மராட்டிய மாவீரன் சத்ரபதி ஷிவாஜி பிறந்த இடம் இது என்பதாகும்.
ஷிவாஜியின் தந்தை ஷாகாஜிக்கு அரசியல் எதிரிகள் அதிகம்.அவர்களிடமிருந்து கர்பவதியான தன் மனைவியைக் காப்பாற்ற அவர் தேடிக்கண்டுபிடித்த கோட்டைதான் இது.இதனை நேரில் பார்த்தபோது ஷாகாஜின் தேர்வு எவ்வளவு சரியென்று புரிந்தது.எவரும் எளிதில் ஏறிவிட முடியாதபடி வழுக்குப்பாறைகளாலானது இந்த மலை.மலை உச்சியை அடைய இருக்கும் ஒரே வழிக்கு ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் ஏழு கோட்டை வாசல்கள்.
நானும் என் நண்பனும் மலை அடிவாரத்தை அடைந்து சில கிராமவாசிகளிடம் விசாரித்தோம்.அவர்கள் உச்சியை அடைய மற்றொரு வழி இருப்பதாகச்சொன்னார்கள்.மொகலாயர்கள் அல்லது பேஷ்வாக்களின் காலத்தில் போடப்பட்டிருக்கலாம்.அதாவது கரடுமுரடான காட்டுப்பாதையில் போய் 70% உயரத்தைத் தாண்டினால் 'சாக்கடு தண்டா' என்ற பாதை வரும் அதில் போய் பாறைகளை தாண்டிவிடலாம்.இது கோட்டையின் பின்புற வாயிலுக்குக் கூட்டிச்செல்லும்.மேலும் இவ்வழியில் போனால் தான் மலைக்குகைகளைப் பார்க்கலாம் என்றார்கள்(மொத்தம் 64 குககள் இருக்கிறதாம்).நாங்களும் ஒரு அசட்டு தைரியத்தில் ஏறத்துவங்கினோம்.சற்றே நெட்டுக்குத்தலாக இருந்ததால் விரைவில் சோர்ந்தோம்.இடையில் சில குகைகளைப் பார்த்தோம்.அந்தகுகைகளில்,அப்படியே திருச்சி மலைக்கோட்டையில் இருப்பதுபோன்று சதுர வடிவ கீழ்நோக்கிச்செல்லும் சுரங்கப்பாதைகள்.யார் இருந்தார்கள்,என்ன செய்தார்கள் விவரமில்லை.இவை சாத்வாகனர்கள் காலத்தில் புனையப்பட்டவை என்ற தகவல்கள் மட்டும் உள்ளன.

ஒருவழியாக முக்கால்வாசிமலையைத் தாண்டிவிட்டோம்(45நிமிடங்கள்).பின் பெரிய பெரிய பாறைகளாக இருந்தன.அதில் படிகள் செதுக்கியிருந்தார்கள்.படிகள் என்றால் ஒரு பாதத்தைக்கூட ஒருசமயத்தில் முழுமையாக வைக்கமுடியாத அளவுக்குக் குறுகியவை.அருகில் 'ழ' போல வளைந்த கம்பிகள்,எனக்கென்ன என்பதுபோல நின்றிருந்தன.இதுதான் சாக்கடு தண்டாவாம் !சாக்கடுதண்டா என்றால் என்ன என்று நண்பனிடம் வினவினேன்.குத்து மதிப்பாக சங்கிலிப் பாதை என்றான்.அடிமேல் அடிவைத்து உச்சியை அடைந்தோம்.பச்சைபசேலென்ற புல்வெளியும்,மெல்லிய தூறலும் எங்களை வரவேற்றன.நண்பன் உற்சாகத்தில்"சொர்க்கம் போல இருக்கிறது" என்று கூவினான்.சங்கிலிப்பாதையிலிருந்து நழுவியிருந்தால் அங்கதான் போயிருப்போம் என்றேன்.


இனி படங்கள்....
போகும் வழி











எஞ்சியிருக்கும் அரண்மனையின் சொச்ச மிச்சங்கள்
பிரதான அரண்மனையின் மாடம்



ஷிவாஜி ஜென்மஸ்தானம்
பதாமி நீர் தொட்டி



அம்பர்கானா தானிய செமிப்புக் கிடங்கு

கடேலாட்
கைதிகளை இங்கிருந்து கீழே தள்ளிவிட்டுக் மரணதண்டனையை நிறைவேற்றுவார்களாம்.அதளபாதாளம்..பிழைக்க வாய்ப்பே இல்லை



ஏழு கோட்டைக் கதவுகளில் ஒன்று
புகழ்பெற்ற அஷ்ட்ட வினாயகர் திருத்தலங்களில் ஒன்றான ஓஸர் விக்னேஷ்வர் திருக்கோயில்.இது சிவனேரியிலிருந்து 5 Km தொலைவில் உள்ளது.
உச்சியிலிருந்து காணக் கிடைக்கும் காட்சிகள்
(கண்டிப்பாக enlarge செய்து பாருங்கள்)









Tuesday, June 26, 2007

சு.ரா வின் கடைசிக் கவிதை



அந்தக் குழந்தையின் காலோசை
நம்மை அழைக்கிறது


குழந்தையின் வடிவம் நம்
பார்வைக்குப் புலப்படவில்லை.


நம் கலவரம் நம் பதற்றம்
நம் பார்வையை மறக்கிறது.


தன் காலோசையால்
நம்மை அணைத்துக் கொள்ள

அந்தக் குழந்தை நம்மைத்
தேடி வருகிறது.


நாம் நம் தத்தளிப்பை மறைக்க
மேலும் உரக்கப் பேசுகிறோம்.


சுந்தர ராமசாமி மரணமடைவதற்கு 19 நாட்களுக்கு முன்பு எழுதிய கவிதை இது.இதுவே அவரது கடைசிப் படைப்பு.துவக்கத்தில் பசுவய்யா என்ற புனைப்பெயரிலும்,பின்னர் தன் இயற்பெயரிலும் அவர் எழுதிய மொத்த கவிதைகளின் தொகுப்பு இந்த "சுந்தர ராமசாமி கவிதைகள்" .மேற்குறிப்பிட்ட இந்த கவிதையையும் சேர்த்து மொத்தம் 108 கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன.பத்து பதினைந்து கவிதைகள் தேறினாலே புத்தகங்கள் வெளிவரும் நிலையில்,இது மிகப்பெரிய தொகுப்பாகும்.அடித்துத்,திருத்தி அவர் கவிதைகளுக்கு உருக்கொடுத்த விதம் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப் பட்டுள்ளது.
இத்தொகுப்பிலிருந்து சில கவிதைகள்


நடுவழியில் மறித்த வயோதிகம்


வயோதிகம் மறித்தது நடுவழியில்
நான் காதலைத் தேடிச் சென்றுகொண்டிருந்தபோது
'விடு என்னை
இப்போதுதான் உணர்ந்துகொண்டேன் காதலின் அருமையை'
என்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன்.
'சற்று முந்தான் நான் வயோதிகம்
இப்போதோ மரணம்' என்று
என்னை இறுகத் தழுவிக்கொண்டது
அது


-கொல்லிப்பாவை 1987

*****
கன்னியாகுமரியில்


இன்று அபூர்வமாய்
மேகமற்ற வானம்
மிகப்பெரிய சூரியன்
ஒரே ரத்தக் கலங்கல்.

எங்கிருந்தோ வந்து
சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது
இந்த ஆட்டுக்குட்டி
அசடு
அப்போதும்
தன்னிலை அறியாதது.

இடம் பெயர்வதா
நின்ற நிலையில் நிற்பதா?

மூளையில் தர்க்கம்
அறுபட்டு விழித்ததும்
நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி.

சூரியனைக் காணோம்.


-சதங்கை 1975

*****
நம்பிக்கை


தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்

அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.

வேறு யாரோ.

அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.


-வைகை 1977


மேலும் சில கவிதைகளை வாசிக்க நதியலை

Sunday, June 10, 2007

உருக்குலைந்து வரும் உன்னதக் கலைகள்


சமீபத்தில் 'வாஷிங்டன் போஸ்டில்' வெளியாகியிருந்த,நசிந்து வரும் இந்திய பட்டு நெசவு பற்றிய கட்டுரை(Emily Wax) கவனத்தைக் கவர்ந்தது.இந்தியா வளர்ந்துவிட்டதோ? என சந்தேகிக்கும்,கிலிகொள்ளும் தருணங்களில் அதன் ரணங்களைத் தேடிப்பிடித்து ஆசுவாசம் கொள்ளும் அமெரிக்கர்களின் நோக்கம் இக்கட்டுரையிலும் தெரிகிறது.என்றாலும் ஆய்வு செய்தோ,செய்யாமலோ எழுதப்பட்ட இந்த கட்டுரையின் உண்மை நம்மை சுடாமலில்லை.அதில்,

"The new India is home to smooth highways and shiny high-rises, all the accouterments of the developed world. But millions of craftsmen, manual laborers and rural workers are being left out of the economic boom. Nearly 70 percent of India's population lives on less than $2 a day, and with more than 40 percent of its young malnourished, India is worse off than Africa in terms of children's health, according to the United Nations"

என்கிறார்கள்.மேலும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் சேரும் அவசரகதியில் ஆதார தொழில் செய்யும் உழவர்களையும்,நெசவாளர்களையும் நிர்கதியாக விட்டுச்செல்வதாக மன்மோகன் சிங்கை சாடுகிறார்கள்.
இந்தியா வளர்கிறது,மிளிர்கிறது என்பதெல்லாம் சுத்த ஹம்பக்.நாட்டின் வளர்ச்சியென்பது அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியேயன்றி ஓரிரு துறைகளை மட்டும் சார்ந்ததன்று.இதுநாள்வரையில் நாட்டின் இரண்டாவது பெரிய தொழிலாக கருதப்பட்டு வந்த நெசவுத்தொழில் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.மலிவு விலை துணிநெய்யும் இயந்திரங்களும்,தளர்த்தப்பட்ட அந்நிய முதலீட்டுக் கொள்கைகளுமே இதற்குக் காரணம்.நாமும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விடுத்து,'நெசவாளர்கள் தற்கொலை' பற்றிய செய்திகளை குற்ற உணர்வின்றி தாண்டிச்செல்ல பழகிக்கொண்டுள்ளோம்.உண்மையில்,ஓரிரு துறைகளில் ஏற்பட்டுள்ள இந்த அபரிமிதமான வளர்ச்சியும் பாராட்டுக்குரியதல்ல.காரணம் சமூகத்தில் மேல்தட்டு ,கீழ்தட்டுக் கிடையேயான வர்க்க இடைவெளியை இது அதிகப்படுத்தியுள்ளது.

கட்டுரையிலிருந்து சில பகுதிகள்,

"This is the ugly, painful side of globalization. It's a real crisis. If India is booming, you don't see it among weavers or farmers or other rural laborers, which is to say most of the country," said Lenin Raghuvanshi, head of the People's Vigilance Committee for Human Rights, an aid group here. "Helping those left behind is India's greatest challenge."

Despite the boom in many information technology hubs in southern Indian cities, Varanasi's weaver quarters look like a ghetto, with men sleeping under broken-down looms strung with cobwebs, rutted streets with trash fuming at every turn and donkeys hauling in water for cooking and bathing, tugged along by barefoot urchins.

"I hardly care about booming India when I have no food or money," said Poochland Dash, 60, a white-haired grandfather and a once-wealthy weaver who said through tears that he is considering suicide. He is trying to sell the house he built during the golden years of the sari-weaving industry, with his saris featuring embroidery of men atop animals in rich indigos and reds.
"If a buyer insults me with a too-low price, I swear I will kill myself," Dash said.
Listening nearby, his wife started crying. "If he takes his life, I will take my life, too," she said, staring at the ground.

KFC-யில் பர்கர் சாப்பிட்டு விட்டு,பரிஸ்தாவில் காப்பி குடித்துவிட்டு அப்படியே மல்டிப்ளக்ஸில் கொஞ்சமே புரிகிற ஹிந்திபடம் பார்க்க போக நேரமாகிவிட்டதால் நலிந்தோர் குறித்து கவலைப்படும் இந்தக் கட்டுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

Monday, June 04, 2007

கமல்ஹாசன் பற்றி சுஜாதா(பழைய பேப்பர்!)



கமலஹாசனுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவருடைய off-screen personality சுவாரஸியமாக வெளிப்பட்டது.இருபத்து மூன்று வயது. ஒரு மலையாளப் படப்பிடிப்பிலிருந்து வந்திருந்தார்.பஞ்சு மிட்டாய் வண்ணத்தில் ஜிப்பா,ஜரிகை வேஷ்டி.

அவர் அறையில் ஆடம்பரங்கள் எதுவும் இல்லை.ஏர்கண்டிஷனிரின் செளகரியத்தைத் தவிர.ஒரே ஒரு படம் இருந்தது.உக்கிரமாக முறைக்கும் ப்ரூஸ்லி. அமெரிக்க சினிமா சரித்திரத்தைப்பற்றியும் Sound in cinema பற்றியும் புத்தகங்கள் தென்பட்டன.படிக்கிறார்.இங்கிலிஷ் பண்பட்டு இருக்கிறது.கணையாளி போன்ற புத்தகங்களையும் புதுக்கவிதைகளையும் ரசிக்கிறார்.தன் தொழிலில் உள்ள சிரிப்பான விஷயங்களை இயல்பாக எடுத்துச்சொல்கிறார்.போலன்ஸ்கி,கோடார்ட் போன்ற ஐரோப்பிய டைரக்டர்களைப் பற்றிஅவருக்கு தெரிந்திருக்கிறது.ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் Frenzy என்ற படத்தில் ஒரு ஷார்ட்டைப் பற்றி உற்சாகமாக அவருடன் பத்து நிமிடங்கள் அலச முடிகிறது."மலையாளப் படங்கள் இப்போது பரவாயில்லை போலிருக்கிறதே" என்றேன்.அவர் "அதெல்லாம் அந்தக்காலம்,இப்போது மலையாளப் படங்கள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன"தன் சட்டையைக் காட்டி "மலையாளப் படம்" என்றார்.

"எனக்கு அழவரவில்லை அழு அழு என்கிறார்கள்.ஒரு சமீபத்திய தமிழ் படத்துக்கு மூன்று பாட்டில் கிளிசரின் ஆயிற்று."

"பாடலைப் படமெடுக்கும் போது கதாநாயகிக்கு கூந்தல் விரிந்திருப்பது ஒரு செள்கரியம்.உதட்டசைவு மறந்துவிட்டால்! சட்டென்று கூந்தலைப் பிரித்து அதில் மறைந்து கொள்ளலாம்."

"டேய் முத்து,மாடசாமி,பிடிடா"என்று கிராமத்தில் குடிசையில் வின்சென்டர் ரைபிள்களை வினியோகிக்கும் கர்ணன் படங்களையும் படுத்துக்கொண்டே படமெடுக்கும் காமிராக்கோணங்களையும்(imagine ஜோதிலட்சுமி)அம்மாக்களையும்,தியாகங்களையும் மிகவும் ரசித்து அவருடன் விமர்சித்துக் கொண்டிருந்ததில் எனக்கு நேரம் போனது தெரியவில்லை.படப்பிடிப்பு காத்திருந்தது.ஆப்பிள் ஜூஸ் கொடுத்து அனுப்பிவிட்டார்.

உரக்கப் பேசும் உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக,கற்பனையுடன்,நம்பும்படி நடக்கும் கமலஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பார்க்கிறேன்.

அக்டோபர் 1976

Sunday, May 13, 2007

திகம்பர சாமியார் திடும் பிரவேசம் (அல்லது) திரிபுரசுந்தரி






நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் என்று நினைக்கிறேன்,வாண்டுமாமாவின் மந்திரக்கம்பளங்கள் போரடிக்கத் துவங்கிருந்தன.ஹாங்காங்கில் சங்கர்லால்,அமிஞ்சிகரையில் சங்கர்லால் என கையில் கிடைத்த துப்பறியும் கதைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்துக்கொண்டிருந்தேன்.அப்போது என் அண்ணன் 'இதுவும் துப்பறியும் கதைதான்,படி' என்று நைந்து பொடிப்பொடியாகும் நிலையில் இருந்த ஒரு (நூலக)புத்தகத்தைக் கொடுத்தான்.அந்த புத்தகம் தான் தி.தி.பிரவேசம் அல்லது திரிபுரசுந்தரி(இரண்டு தலைப்புகள் :) ).எழுதியவர் வடுவூர் K துரைசாமி ஐயங்கார்.1920களில் எழுதப்பட்ட நாவல்.பழைய கதையாதலால் சுவாரஸியமாயிராது என்ற அபிப்ராயத்தாலும்,வழக்கொழிந்து போன பல எழுத்துக்கள் பயன்படுத்தப் பட்டிருந்ததாலும் சோர்ந்து போய் 10பக்கங்களில் நிறுத்திவிட்டேன்.பிறகு என் அண்ணன் பாதிவரை கதை சொல்லி நிறுத்த ,ஆர்வமாகி முழுக்கதையையும் படித்துமுடித்ததாக ஞாபகம்.

வடுவூராரின் கதைகளில்(பிரதான)துப்பறியும் கதாபாத்திரம் இந்த திகம்பர சாமியார்.விதவிதமாக வேடமணிந்து எதிர்பாராத சமயங்களில் entry கொடுப்பதும் பின்னால் நடக்கப்போவதை யூகித்து சாதுர்யமாக செயல்படுவதும் இவரது ஸ்பெஷாலிட்டி.கடந்தவாரம் திருச்சியில் நடந்த புத்தகக் கண்காட்சி ஒன்றில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்கள் அனைத்தும் அல்லயன்ஸ் பதிப்பகத்தாரால் திரும்பக் கொண்டு வரப்பட்டிருப்பது கண்டு பரவசமடைந்தேன்.அதிலிருந்து "வித்தியாசாகரம்" என்ற ஹாஸிய நாவல் ஒன்றை வாங்கி வந்தேன்.நாவலைக்காட்டிலும் புத்தகத்தின் முதற்சில பக்கங்களில் இருந்த துரை சாமி ஐயங்கார் பற்றிய தகவல்கள் படிக்க பிரமிப்பாகவும்,சுவாரஸியமாகவும் இருந்தன.நெட்டில் இவரைப்பற்றித் துழாவியதில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் கிடைக்காதது வருத்தமளித்தது.வடுவூர் துரைசாமி ஐயங்கார் பற்றிய தகவல்களை இப்பதிவின் மூலம் சேமிக்கிறேன்.

******
இந்த நூற்றாண்டின் தொடக்க 30 ஆண்டுகளில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களை தம் துப்பறியும் கதைகளால் பிணைத்தவர்.புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி,பரந்த ஓர் வாசக உலகினைப் படைத்துக்கொண்ட பெருமையர்.Reynolds போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு,சொந்தமாகவும் படைத்துள்ளார்.இவரது படைப்பில் சிறந்ததாக மேனகா,கும்பகோணம் வக்கீல் குறிப்பிடத்தக்கன;படமாகவும் வந்தவை.

நடுத்தர உயரம்,ஒல்லியான உடல்,கருத்தமேனி,கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு,அங்கவஸ்திரம்,பஞ்சகச்சம்,தலையில் குல்லா,காலில் கட் ஷூ,கையில் தடி,நெற்றியில் எப்போதும் திருமண்வாய்,வாய் நிறைய வெற்றிலை,புகையிலை,தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார் இளமையோடிருக்க.மொத்தத்தில் கைநிறைய சம்பாதித்த கவலையில்லாத உல்லாச மனிதர்.இவர் மாடிக்கு ஜே.ஆர்.ரங்கராஜூ,வை.மு.கோ,எஸ்.எஸ்.வாசன் வந்து போவர்.

-தமிழ் இலக்கிய வரலாறு (மது.ச.விமலானந்தம்)

******



முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் கல்கி என்கிற எழுத்தாளர் தமிழ் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்ததுபோல இருபதுகளில் தமிழ் வாசகர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் என்று ஜே.ஆர்.ரங்கராஜூ என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும்.

1923,24 முதல் 27 வரையில் தஞ்சையில் கல்யாண சுந்திரம் ஹைஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது பச்சை,மஞ்சள்,சிவப்பு அட்டையில் டெமி சைஸில் அவர்கள் நாவல்கள் ஒவ்வொன்றாக அப்பாவுக்குத் தெரியாமல் ரெயில்வே ஸ்டேஷன் ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிப்படித்த நினைவிருக்கிறது.படித்துவிட்டு வீட்டுக்கு எடுத்துப் போனால் அப்பா சண்டை பிடிப்பாரென்று அப்போது மேல வீதியில் தெற்கு கோடியில் இருந்த ஒரு லைப்ரரிக்கு இனாமாகக் கொடுத்து விடுவேன்.இப்படிப் படித்த நாவல்கள் என்று கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலை மகளும்,வஸந்த கோகிலம்,பூரண சந்திரோதயம்,விலாஸவதி,திகம்பர சாமியார்,மேனகா இவை நினைவுக்கு வருகிறன.ஒரு நாவல் கலைப்பிரஞையுடன்,சுலபமாகப் படிக்கக் கூடிய நடையுடன்,விரஸமான விஷயங்களைக்கூட அதிக விரஸம் தட்டாமல் எழுதுவதில் சிரத்தையுடன் எழுதிய வடுவூரார் உண்மையிலேயே இலக்கியப் பிரக்ஞை உடையவர் என்பதில் சந்தேகத்துகிடமேயில்லை.

ரெயினால்ட்ஸின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதினார் பெரும்பாலும் என்றாலும் அவர் விக்டர் ஹ்யூகோவின் Les Miserablesஎன்கிற நாவலை அற்புதமாகத் தமிழில் எழுதியிருக்கிறார்.

எகிப்தில் தலைமுறை தலைமுறையாக பாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்கிற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும்,அதையெல்லாம் சொல்லி தான் ஒரு நூல் எழுதிகொண்டிருப்பதாகவும் சொன்னார்.இந்த சரித்திர உண்மையில் இருந்த அவரது அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக ஆங்கிலத்தில் Long missing Links என்று ஒரு 900 பக்க நூல் எழுதி அதைத் தன் சொந்த செலவிலேயெ அச்சிட்டு விற்க முயன்றார்.புஸ்தகம் விற்கவில்லை.அச்சுக்கும் பேப்பருக்கும் ஆன கடனை புதுசாக வாங்கிய வீட்டை விற்று அடைத்து விட்டு,பேசாமல் கிராமத்துக்கு போய்விட்டார் என எண்ணுகிறேன்.
தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை;புரிந்து கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

-இலக்கிய சாதனையாளர்கள் - க.நா.சு.

******



துரைசாமி ஐயங்காரின் மிகப் பிரசித்தமான மேனகா என்ற நாவலின் முதல் பக்கத்திலேயே ஓர் அடிக்குறிப்பு காணப்படுகிறது:

'சாம்பசிவையங்கார்,மேனகா என்பவை உண்மைப் பெயர்களை மறைக்கும் பொருட்டு வைக்கப்பட்ட கற்பனைப் பெயர்கள்'
என்று அந்த குறிப்பு விளக்குகிறது.

இவரது நாவல்களில் மேனகாவை அடுத்து மிகப்பிரசித்தி பெற்றது கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பரசாமியார் என்பது.பல மர்மங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்த இந்த நாவலில் தஞ்சை பிராந்தியத்தில் அன்று நிலவிய சூழ்நிலை வருணிக்கப்பட்டிருக்கிறது.

துரைசாமி ஐயங்காரின் செல்வாக்கைப் பயன் படுத்தி,குடும்ப சூழ்நிலையை வைத்து,ஜனரஞ்சகமான நாவல்களை எழுதிப் பெயரடைந்தவர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.

- தமிழ் நாவலிம் தோற்றமும் வளர்ச்சியும் - சிட்டி,சிவபாத சுந்திரம்.

******
புராணக் கதைகளும்,இதிகாசக் கதைகளும்,ராஜா ராணிக் கதைகளும் படமாக எடுக்கப்பட்ட தமிழ்த்திரையின் தொடக்க காலத்தில்... முதன் முதலாக நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் மேனகா.1935ல் மேனகா நாவலை படமாக்கியபோது அதில் டி.கே.பகவதி,டி,கே.ஷண்முகம்,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.கே.சங்கரன்,எஸ்.வி.சகஸ்ரநாமம்,கே.ஆர்.ராமசாமி,சிவதாணு ஆகியோர் நடித்தனர்.இவர்கள் அனைவருக்கும் இதுவே முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி.பாரதியாரின் பாடல் ஒலித்த படம் என்ற வரலாற்றுப் பெருமையும் மேனகா படத்தையே சேரும்.

- பதிப்புத் தொழிலில் உலகம்

*******

வடுவூராரின் நவீனம் 'மைனர் ராஜாமணி' சினிமாவாக வந்து திரையிட்டதும் ஒரு சமூகத்தை இழிவு செய்வதாக வழக்கு தொடர்ந்து நிறுத்த்ப்பட்டது.இந்த அதிர்ச்சி,அவமானம் தாங்காது குருதிக்கொதிப்பால் மாண்டார்

Monday, May 07, 2007

அழகு(சில)குறிப்புகள்

அழகு அந்நியாயத்திற்கு ரிலேடிவ் டெர்ம்.எனக்கு அழகாய்த்தோன்றும் ஒரு விஷயம் உங்களுக்கும் அப்படியே தோன்ற வெண்டிய அவசியமில்லை.அதே போல இது காலத்தைப் பொருத்தும் ரிலேடிவ்.எனக்கு ஒருசமயத்தில் அழகாய்த்தோன்றும் விஷயம் எல்லாசமயங்களிலும் அப்படியே தோன்றவெண்டியதுமில்லை.எப்போதும் ரம்மியமாய்,அழகாய்த்தோன்றும் அதிகாலை வானம் பரீட்சை நாட்களில் மட்டும் கொடூரமாய்த்தோன்றுவது ஒரு உதாரணம்.

ஆக universal அழகு என்று எதுவுமில்லை.இடம்,பொருள்,ஏவல் என எல்லாம் சரியாக அமையும் பொழுது நம் மனதுக்கு பிடித்துப் போகிற விஷயம் தான் இந்த "அழகு" என்று தோன்றுகிறது.எனக்குப் பிடித்த,நான் அழகு எனக்கருதுகிற சில விஷயங்களை இங்கு பட்டியலிடுகிறேன்.

தேர்
எங்கள் கிராமத்துத் திருவிழாவில் ,வடம் பிடித்து இழுக்காமல் ஆட்களால் சுமந்து வரப்படும் பனையுயர தேரும் அப்போது ஊரெங்கும் பரவும் மரிக்கொழுந்து வாசமும்.

மழை
பூனேயில் பெய்கிற ஆளை அடிக்காத ஜூன் மாதத்து மழை.ஊர் முழுவதையும் நனைத்து பச்சையாக்கியபின் ,மெதுவாக மனதுக்குள்ளும் மழை பெய்யத்துவங்கும் அந்த தருணங்கள்.

வீடு
"உலகத்துல இத விட அழகான இடம் இருக்கான்னு தெரியல,தெரிஞ்சுகர ஆசையும் இல்ல" என்று காக்க காக்க ஜோதிகா சொல்வது போல அவரவர்க்கு அவரவர் வீடு அழகு.எனக்கும் எங்கள் வீடு...

அமைதியான பெண்கள்
இது ஆக்ஸிமோரன்(Oxymoron) போல தோன்றினாலும் அபூர்வமாக சில சாந்தமான பெண்களைப் பார்க்க நேர்ந்ததுண்டு :)

புத்தகக்கடை
என்ன வேலையாகப் போய்க் கொண்டிருந்தாலும்,வழியில் புத்தகக் கடையைப் பார்த்தால் உள்ளே புகுந்து விடுவேன்.வஞ்சனையின்றி எல்லா புத்தகங்களையும் மேய்ந்து விட்டு இருப்பதிலேயே ஒல்லியாக ஒரு புத்தகத்தையோ சில சமயங்களில் வெறுங்கையுடனோ வந்து விடுவேன்.புத்தகக் கடைகள் எப்போதும் அழகானவை,கவர்ச்சியானவை.

என்னை விளையாட்டுக்கு சேர்த்துக்கொண்ட ப்ரசன்னாவிற்கு நன்றி.இந்தப் பதிவைப் படிக்கும் அனைவரையும் சங்கிலியைத்தொடருமாறு பணிக்கிறேன்.

Wednesday, April 04, 2007

ஆதவனின் எழுத்துக்கள் -எனது பார்வையில்



"நாம் எதை நம்ப வேண்டுமோ அதனை நம்புவதில்லை.நாம் நம்ப விரும்புகிறதைத்தான் நம்புகிறோம்"
- ஆதவன்
எனக்குப் பிடித்தமான ஆதவனின் வரிகள் இவை.எனக்குமட்டுமில்லை ஆதவனுக்கே பிடித்தமானதாயிருந்திருக்கவேண்டும்.இல்லையென்றால் 'என் பெயர் ராமசேஷன்','இரவுக்கு முன் வருவது மாலை','இந்த மரம் சாட்சியாக..' என பல இடங்களில்
இந்த வரிகளைப் பயன்படுத்தியிருப்பாரா?

சுஜாதா எழுத்துக்களுக்காக அலைபாய்கிறது மனது,சு.ராவின் எழுத்தாழம் கண்டு பிரமிக்கிறது.என்றாலும் மனது அன்யோன்யமாக உணர்வது ஆதவனின் எழுத்துக்களில்தான்.இதன் காரண்ங்கள் பற்றி யோசிப்பது சுவாரஸியமாக இருக்கிறது.

முதலாவதாக, ஆதவனின் ஹீரோக்கள் யாவரும் சாமானியர்கள்.கனேஷ்-வசந்த் போன்று சாமார்த்திய சாலிகளோ,சு.ராவின் JJ போன்று கொள்கைப்பிடிப்பாளிகளோ அல்லர்.மாறாக நிர்தர்சனர்கள்.யாரையும் நிதாட்சண்யமாகப் புறக்கணிக்கக்கூட தயங்குபவர்கள்.உடல் ஆகிருதியும்,அதிகார அகிருதியும் கொண்டவர்களால் Dominate செய்யப்படுபவர்கள்.அந்த பிரக்ஞை காரணமாக சதா புலம்பித் தீர்ப்பவர்கள்.கனவுலகில் மிதப்பவர்கள்.தங்களை மற்றவர்களிடமிருந்து தனித்தவர்களாக இன்டலெக்சுவல்களாக உணருபவர்கள்.ராம சேஷனும்,செல்லப்பாவும்(காகித மலர்கள்),சேஷாத்ரியும்(கனவுக்குமிழிகள்)இப்படிப்பட்டவர்கள்தான்.இந்த ஹீரோக்கள்தான் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்.

அடுத்து உணர்வுகள் கொண்டு கதை சொல்லும் முறை.ஆதவனின் கதைகள் யாவும் மனித உணர்வுகளை அடுக்கி உருவானவை.இவ்வளவு நெருக்கமாக உணர்வுகளைப் பின் தொடர்ந்து அதற்கு வார்த்தை வடிவம் கொடுத்தவர்(எனக்குத் தெரிந்து)யாரும் இல்லை.இவர் ஒரு மனோதத்துவ நிபுணர் என்ற எண்ணம்,இவரது கதைகளைப் படிக்கும் போது தோன்றுவதுண்டு.
கதைகளில் வரும் சம்பாஷணைகள் இயல்பாக அதேசமயம் சுவாரஸியமாகவும் இருக்கும்.ஆதவனைப் படிப்பதில் இன்னொரு வசதி,புத்தகத்தை எப்போதுவேண்டுமானலும் மூடிவைக்கலாம்.எப்போதுவெண்டுமானாலும் எடுத்துப்படிக்கலாம்.படித்ததை சிறிது நேரம் மனதில் அசைபோடலாம்.மறுவாசிப்பின் போது புரியாத ஒன்று புரிபடும் அல்லது புரிந்த ஒன்று குழப்பத்துவங்கும்.

சில அபாயங்கள்:ஆதவனின் எழுத்துக்களில் ஒரு மெல்லிய சோகம் இழையோடும்.இந்த மென்சோகம் மனதுக்கு இதம் தரும் என்றாலும் சில வேளைகளில் நம்மை உற்சாகம் இழக்கச்செய்யும்.மேலும் வாழ்வின் ஆதார சுருதியாக நாம் நம்பும் காதல்,பாசம்,நட்பு இவற்றின் மீது தர்க்கம் செய்து அதன் வேரை அசைத்து விடுவதும் நிகழும்.உதாரணதிற்கு ஒரு சிறுகதையில்....

சிநேகிதன் என்ற வார்த்தையே பலவீனமான ஒரு கணத்தின் உருவமாக, தன்னைத் தானே ஏமற்றிக் கொள்வதாகத் தோன்றியது.நான் தேடிச்சென்றது,மீண்டும் மீண்டும்,என் சுய முக்கியத்துவத்தைதான் என்று தோன்றியது


- என் புத்திசாலித்தனத்தின் பெரிதிலும் பெரிதான ரீங்காரத்தைத் தேடி


- என் நகைச்சுவைக்கேற்ற உரத்த சிரிப்பையும் கண்ணீருக்கேற்ற வழவழப்பான கைக்குட்டையையும் தேடி


- பெண்களிடம் ஆசைத் தீயை மூட்டி விரகத்தினால் அவர்களைத் துடிதுடிக்கச்செய்யும் ஒரு மகத்தான ஒரு காதலனை என்னில் தேடி


- கயவாளித்தனமொ,குரோதமோ கொச்சையான கெட்டிகாரத்தனமோ துளியும் ஒட்டிக்கொள்ளாத என் 'தாமரை இலை' மனப்பாங்கின்(!)தூய்மையின்,அங்கீகாரத்தைத் தேடி.


எனக்கென்றே அளவெடுத்துத் தைத்த,நேர்த்தியான மிடுக்கான வண்ணக்குல்லாய்கள்.திடீரென்று ஒரு நாள் இவையெல்லாம் வெறும் கோமாளிக்குல்லாய்களாக தோன்றின. ..........


ஆதவன் எழுத்துக்கள் பற்றிய எனது இந்த கருத்துக்கள் பக்குவமற்றதாய் தோன்றலாம்.எனினும் அவரின் கடைமட்ட வாசகன் என்ற முறையில் எனது கருத்துக்கள் இவை.சில காலம் கழித்து மறுவாசிப்புக்குப்பின் என் புரிதல் மாறுபடலாம் அல்லது மாறாமலும் போகலாம்.

Saturday, March 31, 2007

The Namesake - விமர்சனம்



'சலாம் பாம்பே' மூலம் ஹாலிவுட்டின் கவனம் கலைத்த மீரா நாயருக்கு இது அடுத்த படி. ஜும்ப்பா லஹிரியின் புழ்பெற்ற நாவலை அதே பெயரில் திரைக்கு மொழிமாற்றியிருக்கிறார்.நான் நாவலை படிக்கவில்லை என்பதால் "என்னயிருந்தாலும் புத்தகம் அளவுக்கு படம் சிறப்பா இல்லை" போன்ற கிளிஷே புலம்பலைத் தவிர்க்க முடிந்தது.நாவல் முழுமையையும் திரையில் சொல்லிவிடவேண்டும் என்ற பதட்டம் எந்த பிரேமிலும்(frame) தெரியாதது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

எவ்வளவு யோசித்தும் கதையை ஒரே பாராவில் சொல்வது எப்படி என விளங்கவில்லை.காரணம் அதிரடித் திருப்பங்களின்றி அதீத இயல்புத்தன்மையுடன் பயணிக்கிறது படம்(ஆதவன் கதை போல).எழுபதுகளின் துவக்கத்தில் நியூயார்க் சென்று குடியேறும் பெங்காலி குடும்பத்தைப் பற்றியது கதை.அங்கு பிறக்கும் அவர்களின் குழந்தைகள் சந்திக்கும் Cross-Culture குழப்பங்களையும்,Identity குறித்தான வினாக்களையும் எழுப்பிச்செல்கிறது படம்.

பெங்காலி தம்பதிகளாக இர்பான் கான்(Irfan Khan), தபு(Tabu) நடித்திருக்கிறார்கள் இல்லை வாழ்ந்திருக்கிறார்கள்.அதுவும் இர்பான் கானின் சின்ன சின்ன முகபாவ மாற்றங்கள் கூட அருமை(அட யாருப்பா அங்க,இவர தமிழுக்கு கூட்டீட்டு வாங்க).இவர்களின் மகனாக வரும் கால் பென்னும்(Kal Penn) நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்க வாழ் இந்தியர்களின் பிரச்சனைகளை மிகைப்படுத்தி ஜல்லியடிக்கும் வழக்கமான 'இந்திய-ஆங்கில' படம் போலன்றி உள்ளபடி காட்டியதற்கு பாராட்டலாம்.அதே சமயம் அஷோக் கங்கூலி அனாமத்தாக இறந்துபோகும் போது சற்று கிலி ஏற்படுகிறது.குறிப்பாக அவர் இறந்து போவதை விஸ்தாரமாகக் காட்டாமல் ஒரு செய்தியாகக் குறிப்பிடுவது நிகழ்வின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது(சலாம் மீரா!).

வசனங்கள் பல இடங்களில் பளிச்சிடுகின்றன.திருமணமாகி பலவருடங்கள் கழித்து தாஜ்மஹால் வருகிறார்கள் தபுவும் இர்பானும்,
இர்பான்:ரொம்ப நாளா கேக்கணும்னு நெனைசேன்.பொண்ணுபாக்க வந்தப்ப என்ன பிடிசிருக்குன்னு ஏன் சொன்ன?
தபு:என்ன பாக்க வந்தவங்கள்ள நீ தான் Best.ஒரு கை மட்டும் இருந்த கார்டூனிஸ்ட்,ரெண்டு குழந்தைங்களோட வந்த விடோவர் இவங்களுக்கு நீ பரவால்ல.அதுவும் நீ போட்டுகிட்டு வந்த அமெரிக்கன் ஷூ எனக்கு ரொம்ப பிடிசிருந்தது
(இர்பான் ஏமாற்றத்தோட பாக்க)
தபு:ஏன் அமெரிக்க காரங்க மாதிரி "I Love You" சொல்லுவேன்னு பாத்தியா?

3.5/5 . கண்டிப்பாகப் பார்க்கலாம்.குரூர மான சிந்தனைகளுக்கு விரட்டிச் செல்லாத சாதாரணமான அமைதியான விடுமுறை நாளை வேண்டுபவர்கள் பார்க்க நான் பரிந்துரைக்கும் மற்றொரு படம் "The Pursuit of happyness"

Saturday, January 06, 2007

படித்ததில் பிடித்தது(3)

பொதுவாக, எதுவும் எழுதத் தோன்றாதபோது(வராதபோது) மற்றவர்களின் கவிதையையோ,கதையையோ போட்டு ஒப்பேற்றுவது வழக்கம்.என் 75% பதிவுகள் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.அந்த வரிசையில் சுஜாதா சொன்ன 'நபகோவின்' சிறுகதை ஒன்றையும் கல்யாண்ஜியின் கவிதை ஒன்றையும் இப்பதிவில் தருகிறேன்.

இனி...

நாபகோவ்(Nabakov) 'லோலிடா' எழுதிப் பெயர் அடைந்தவர்.கொஞ்சம் ஆபாசமான விஷயத்தை மிக அருமையான வசன நடையில் எழுதித் தப்பித்தவர்.இவரது சிறுகதை ஒன்று என் ஞாபகத்திலிருந்து சொல்கிறேன்:-

ஒரு அப்பா,ஒரு அம்மா; ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான்.ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது!

பெற்றோர்களுக்கு ஒருதினம் ஆஸ்பத்திரியிலிருந்து போன் வருகிறது. பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும் உடனே என்றால் மறுதினம் தான் போக முடியும்.அதற்குள் என்ன நேர்ந்து விடுமோ என்று கவலைகடலில் இரவெல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்போது:-

டெலிபோன் மணி அடிக்கிறது.பதற்றத்துடன் பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.

"ஹென்றி இருக்கிறானா?" என்கிறது ஒரு பெண்குரல்.

"ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை,தப்பு நம்பர்" என்று வைத்து விடுகிறார்.

மறுபடி சில நிமிஷம் கழித்து டெலிபோன் மணி அடிக்கிறது.

"ஹென்றி இருக்கிறானா" அதே பெண்.

"மிஸ்,உனக்கு என்ன நம்பர் வேண்டும்?

"5365849"

"என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச்சுழற்றுகிறாய் போலிருக்கிறது"

"ரொம்ப தாங்க்ஸ்" என்று அந்தப் பெண் வைத்துவிடுகிறாள்.

கதையில் இன்னும் ஒருவரிதான் இருக்கிறது.

சிலநிமிஷ்ம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.

நபகோவின் புத்திசாலித்தனம்! புரிகிறதா?

- சுஜாதா,1966


************

நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்குபோல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக்கொண்டது முற்றிலும்
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.

-கல்யாண்ஜி,அந்நியமற்ற நதி


அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Wednesday, December 13, 2006

படித்ததில் பிடித்தது(2)

காடுகளும் வழித்துணைகளும்

மூன்று பேர்கள்
அமர்ந்திருக்கும் அறையில்
அனேகமாக யாராவது ஒருவர்
தனியே விடப்படுகிறார்

இருவர் ஆணாய்
ஒருவர் பெண்ணாய்
ஒருவர் ஆணாய்
இருவர் பெண்ணாய்
இருந்துவிட்டால்
இந்தக் கொடுமைகளுக்கு
முடிவே இல்லை

அந்த ஒருவர்
மயங்கி விழுகிறார்

தேம்பி அழுகிறார்

பெரிய தத்துவத்தையோ
கவிதையையோ
பேசமுற்படுகிறார்

கதவை திறந்து கொண்டு
வெளியேறுகிறார்

என்னன்னவோ
செய்ய வேண்டியிருக்கிறது
இந்த உலகில்
இன்னொருவரின்
கவனத்தை ஈர்க்க

நானாக இருந்தால்
ஒருவெடிகுண்டை
பற்றவைப்பது பற்றி யோசிப்பேன்

-மனுஷ்யபுத்திரன்

இது போன்ற தருணங்களில் அடிக்கடி சிக்கிக்கொள்வதாலோ என்னவோ இந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.இறுதி வரி அழகாக அதேசமயம் மன அழுத்தத்தின் உச்சத்தை உணர்த்துவதாக இருக்கிறது.மனுஷ்யபுத்திரனின் "என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்" என்ற கவிதைத் தொகுப்பில் "காடுகளும் வழித்துணைகளும்" என்ற நீள் கவிதையின் கீழ் வருகிறது இப்பகுதி.

Sunday, November 19, 2006

The Departed - விமர்ஜனம்

படம் வெளியாகி மூன்று வாரங்கள் கழித்து சாவகாசமாக ஒரு நாள் (காலை)11மணிக் காட்சிக்கு போனபோது "House full" போர்டு போட்டுவிட்டிருந்தார்கள்."அட நல்லபடமா இருக்குமோ?" என்று முயற்சித்ததில் இரவு 11 மணிக்காட்சிக்கு டிக்கட் கிடைத்தது.புனேவில் குளிர் தொடங்கிவிட்டபடியால் சுவெட்டர்,பனிக்குல்லாய் சகிதம் போய் அமர்ந்தோம்.படம் மொத்தம் 8 ரீல் என்று போட்டார்கள்.ஆங்கிலப்படம் சின்னபடமாக இருக்குமென்பது தெரியும்,அதற்காக இவ்வளவு சின்னபடமா என்று கண்ணைக்கசகிவிட்டுப் பார்த்ததில் 18 ரீல் என்பது தெளிவாகத்தெரிந்தது!


ஆரம்பக் காட்சிகளில் ஜாக் நிகல்சன் "I don't wanna be a product of my environment, I want my environment to be a product of me"என்று கூறிப் புன்னகைக்கும்போதே தெரிந்துவிடுகிறது நின்று விளையாடப் போகிறார்கள் என்பது.இரவு தூக்கத்தைத் தியாகம் செய்து படம் பார்த்ததை, படம் நியாயப்படுத்தியது.

கதைக்களம்(spoiler warning)
தெற்கு பாஸ்டனில் உலாவரும் மாபியா தலைவன் பிராங்க் காஸ்டெல்லோ(ஜாக் நிக்கல்சன்).அவரது கண்காணிப்பில் வளரும் காலின் சல்லிவன்(மாட் டாமன்),வளர்ந்து போலீஸில் சேருகிறான்.சேர்ந்து காஸ்டெல்லோவின் உளவாளியாக செயல் படுகிறான்.

மோசமான குடும்ப பின்னணியிலிருந்து வளர்ந்து,கடின உழைப்பால் போலீஸில் சேரும் பில்லி காஸ்டிகன்(டி-கேப்ரியோ) காஸ்டெல்லோவின் கூட்டத்திற்கு அனுப்பப்படுகிறான் போலீஸின் ரகசிய உளவாளியாக செயல்பட.

ஒருகட்டத்தில் இரு குழுக்களும் தங்களுக்குள் ஒரு ஒற்றன் இருப்பதை உணர்கிறார்கள்.டிகேப்ரியோ,மாட் டாமன் இருவருக்குமே எதிர் உளவாளியைக் கண்டுபிடிப்பது வாழ்வா சாவா போராட்டம்.இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள்.இப்படியாகச் செல்கிறது கதை.
----------------------------------------------------------------
Frank costello:When I was your age they used to say you could become cops or criminals. What I'm saying to you is this... When your facing a loaded gun, what's the difference?
--------------------------------------------------------------------------------------
ஒரு மசாலபடம் எடுப்பதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தும்,கண்னியமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் Martin Scorsese .இது "Infernal affairs"என்ற ஹாங்காங் படத்தின் தழுவல் தான் என்றாலும்,கட்சிகுக் காட்சி remake பண்ணாமல் கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம்.

படத்தின் மிகப்பெரிய பலம் "நடிகர்கள்".நடிகர்கள் தேர்வு சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.ஜாக் நிகல்சன்,டிகேப்ரியோ,மாட் டாமன்,மார்க் வில்பர்க் என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் கனகச்சிதமாகப் பொருந்துகிறார்கள்.ஜாக் நிகல்சன் படம் முழுவதும் அனாயாசமாக வில்லத்தனம் கலந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.தன் மன உளைச்சலை வெளிப்படுத்தும் இடங்களிலும்,ஜாக் நிகல்சனுடனான உரையாடல்களின் போதும் டி-கேப்ரியோவின் நடிப்பு Class !

படத்தின் மற்றொரு பலம் 'வசனங்கள்'.Frank costello:When I was your age they used to say you could become cops or criminals. What I'm saying to you is this... When your facing a loaded gun, what's the difference? போன்ற வசனங்கள் கைத்தட்டலைப் பெறுகின்றன.ஆங்கிலப்படம் பார்க்கையில் எல்லாரும் சிரிக்கும்போது சேர்ந்து சிரிக்கும் எனக்கே இப்படத்தின் வசனங்கள் புரிந்தன :)


சில குறைகள்:

*தமிழ்படங்கள் நிறைய பார்த்து பழக்கப்பட்டதாலோ என்னவோ படத்தின் முடிவு அவ்வளவு உடன்பாடுடையதாக இல்லை.படத்தின் முடிவில் Director ,லைட் பாய் தவிர மற்றெல்லாரையும் சுட்டு வீழ்த்திவிடுகிறார்கள்.
*படத்தில் நான்கெழுத்துக் கெட்டவார்த்தை வரும் நேரத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், படம் ஒன்றரை மணிநேரமாகச் சுருங்கிவிடும்.
* படத்தின் கதாநாயகி கதாப்பாத்திரம் சற்று முரண்பாடுடையதாக இருக்கிறது."Infernal Affairs" படத்தில் இரண்டு பெண்கள் செய்த தனித்தனி கேரக்டர்களை இதில் ஒரே பெண்செய்வது போலக் காட்டியிருப்பது ,திரையில் சரியாக வரவில்லை.

இந்தமுறை ஆஸ்கர் ரேஸில் நடிப்பு உட்பட சிலபிரிவுகளில் "The Departed" விருதுகளை அள்ளப்போவது உறுதி.

Monday, October 02, 2006

யாமறிந்த மொழிகளிலே....

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள்கடியும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னே ரிலாத தமிழ்


மென்பொருள் துறையில் தென்னிந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது தெரிந்ததே.குறிப்பாக தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களின் எண்ணிக்கை அதிகம்.இதில் தமிழர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும்
தெலுங்குதேசத்தவரின் எண்ணிக்கை சற்றே கூடுதல்
எனலாம்.குறைந்தபட்ஷம் ஒரு சிறு குழுவிற்கு(Team) ஒருவராவது இருப்பர்(இவர்களில் பெர்ம்பாலானவர்களின் வாழ்க்கை லட்சியம் அமெரிக்கா சென்று குடியேறுவதாகத்தான் இருக்கும்.நம்மவர்களுக்கும் இந்த ஆசை உண்டென்றாலும் ,தெலுங்கர்கள் இவ்விஷயத்தில் மிகத்தீவிரமாக இருப்பார்கள்).

உடன் பணிபுரியும் தெலுங்கு மக்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது,பேச்சு மொழியை நோக்கிச்சென்றது.தமிழ் தெலுங்கை விடத்தொன்மையானது என்ற என்வாதத்தை அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை. ரங்கராஜுலு,வெஙட்ராமுலு என்று ஏதேதோ அறிஞர்களின் பெயர்களைச்சொல்லி,அவர்களெல்லாம் தெலுங்குதான் தென்னிந்திய மொழிகளில் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளதாகச் சொன்னார்கள்.பாதிவிவாதத்தில் என் விஷயஞானமின்மை காரணமாக நிராயுதபாணியாக நிறுத்தப்பட்டேன்.அவர்கள் சொல்வது தவறு என எனக்கு தெரிந்திருந்தும்,அதனை நிரூபிக்கத்தேவையான சரித்திரசான்றுகள் என்னிடமில்லை.சரி,இணையத்தில் ஏதாவது கிடைக்குமா என்று கூக்ளியதில் George L. Hart என்பவர் எழுதிய அருமையான ஒரு கட்டுரை கிடைத்தது.கட்டுரை கூட இல்லை,கடிதம்.தமிழை செம்மொழியாக அறிவிக்கப் பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அவர் எழுதிய கடிதம் அது.தமிழைப்பற்றி எழுதப்பட்ட சிறந்த கட்டுரைகளில் ஒன்றாகக்கொள்ளலாம் இதனை.ஒரு வார்த்தைகூட ,கூடுதலாகவோ,குறைவாகவோ இல்லாமல் நேர்த்தியான பாரதியின் கவிதை போல இருக்கிறது இக்கடிதம்.இலக்கிய நடையில் சொல்லவேண்டுமென்றால் "நறுக்குத் தெரித்தாற்போல்" இருக்கிறது ,பேச்சு நடையில் சொல்லவேண்டுமென்றால் "நெத்தியடி".

தமிழின் தொன்மையை சான்றுடன் விளக்கும் இக்கடிதம் அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று.கட்டுரையின் இறுதியில் Hart இவ்வாறு குறிப்பிடுகிறார்"தமிழை செம்மொழியாக அறிவிக்கக்கோரி கட்டுரை எழுத வேண்டியுள்ளது வினோதமாக உள்ளது.இது எதனைப் போன்றுள்ளது என்றால் இந்தியாவை உலகின் சிறந்த நாடுகளில் ஒன்று என்றோ ,ஹிந்து மதத்தை உலகின் சிறந்த மதங்களில் ஒன்று என்றோ அறிவிக்கக் கோருவதைப்போல உள்ளது " .

அந்தக் கடிதத்தை உங்கள் பார்வைக்குத்தருகிறேன்.அதற்குமுன் Hart பற்றி ஒரு சிறுகுறிப்பு.

Hart கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.சம்ஸ்கிருதம்,லத்தீன்,கிரீக் மற்றும் பல ஐரோப்பிய மொழிகளில் மிகுந்த புலைமையுடையவர்.புறநானூறு,கம்பராமாயணம் போன்ற பல நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்.தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார்.இவரது மனைவியின் பெயர் கெளசல்யா.இவர் இக்கடிதத்தை எழுதிய ஆண்டு 2000.அரசு தமிழை செம்மொழியாக அறிவித்தது 2004-ல்.

அக்கடிதத்தைக் காண Tamil as a Classical Language


George L. Hart

Hart உடனான சந்திப்பு தமிழில் சந்திப்பு 1
சந்திப்பு 2

(பின்குறிப்பு:தமிழறிந்த சான்றோர் பலருக்கு இது பழைய செய்தியாக இருக்கும் :)) )

Sunday, September 17, 2006

லிப்ட் கிடைக்குமா மீனாட்சிக்கு?



இந்த ஓவியத்தை நன்றாகப் பாருங்கள்.ரவிவர்மாவின் ஓவியத்தைவிட சிறந்தது இது.பிகாஸோவின் ஓவியத்தைவிட விலைஉயர்ந்தது இது.இந்த ஓவியத்தை வரைந்த,இரண்டாம் வகுப்பு படிக்கும் மீனாட்சியை பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?ஒருவேளை இவளது அன்னையைப் பார்த்திருக்கலாம்.இரவு நேரங்களில் புனாவின்(Poona) ஏதாவதொரு தெருமுனையில் நின்றுகொண்டிருப்பாள்.பொருந்தாத உதட்டுசாயதுடனும்,அதீத ஒப்பனையுடனும் நின்றிருக்கும் இவள்,நீங்கள் கடந்துபோகையில் உங்களைப் பார்த்து கண்சிமிட்டக் கூடும்.ஆம்,இந்தக் குழந்தையின் தாய் ஒரு பாலியல் தொழிலாளி.

அண்மையில்,'ஏகலைவ்ய நியாசா' என்ற தொண்டுஅமைப்பு (Pune)பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டியொன்றை நடத்தியது.அதில் அக்குழந்தைகள் வரைந்த ஓவியங்களை நான் பணிபுரியும் நிறுவனத்தில் விற்பனைக்காக வைத்திருந்தார்கள்.அக்கண்காட்சியில் நான் வாங்கிய ஓவியம் இது.

இந்தியாவின் மூன்றாவது பெரிய சிவப்பு விளக்குப்பகுதி புனாவில் உள்ளது."புத்வார் பேட்" என்றழைக்கப்படும் இப்பகுதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான பாலியல் தொழிலாளிகள் வசித்து வருகிறார்கள்.மீனாட்சி போன்று இங்கு ஏராளமான குழந்தைகள் இருக்கின்றார்கள்.உலகி மிகக்கொடியது 'இளமையில் வறுமை' என்றாள் அவ்வை.அதனினும் கொடிது இங்குள்ள குழந்தைகளின் நிலைமை.மனித வாழ்க்கைக்கு சற்றும் அருகதையற்ற இப்பகுதிகளில் வசித்துவரும் இந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு சமூகம் கொடுத்திருக்கும் அடையாளம் கொடுமையானது.
தங்கள் பெற்றோரைப் பற்றிய இக்குழந்தைகளின் புரிதல் என்னவாக இருக்கும் என்பது வருத்ததிற்குரிய கேள்வி.பொதுவாக இங்கு கணவன் - மனைவி உறவுசம்பிரதாயங்கள் அவ்வளவாகப் பின்பற்றப் படுவதில்லையாம்.எனவே,இவர்களில் எத்தனைபேரின் குழந்தைகளுக்கு தந்தை என்ற உறவு கிடைத்திருக்கிறது என்பது தெரியவில்லை.

இக்குழந்தைகளின் நல்வாழ்வுக்காக பல சேவை நிறுவனக்கள் போராடி வருகின்றன.இப்பகுதியில் இவர்களுக்காக நடத்தப்ப்டும் பிரத்தியேகப் பள்ளி,மற்றும் அரசு பள்ளிகளைத்தவிர மற்ற பள்ளிகளில் இக்குழந்தைகளுக்கு இடம் கிடைப்பது கடினமான காரியமாக உள்ளது என்று சேவைஅமைப்பைச்சேர்ந்த ஒரு நண்பர் குறிப்பிட்டார்.இந்த குழந்தைகளுக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி,நல்ல கல்வியை இவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதாகத்தான் இருக்கும்.மாறாக இவர்களது கல்வி பாதியில் தடைபடுமானால்,இவர்களும் இதே படுகுழியில் விழாதிருப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

மீனட்சியின் ஓவியத்தில், நம் பாரதக் கொடி எப்படி பட்டொளி வீசிப்பறக்கிறது பாருங்கள் !

Tuesday, August 29, 2006

புத்தகங்கள்

Tagged by KK

One book that changed my life

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யூவினால் எழுதப்பட்ட இருத்தலியல்(Existentialism) பற்றிய "The Stranger"(L'Étranger) என்ற நாவல்தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.என் வாழ்க்கையில் என்று சொல்வதைக்காட்டிலும் என் மனப்போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
தனக்கு ஏற்படும் சுகதுக்கங்களை ஒரு வெளிமனிதனாக விலகி நின்று உற்றுநோக்கும் அதன் கதாநாயகனின்(Meursault) மனப்பங்கு என்னை மிகவும் கவர்ந்தது.
அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள இருத்தலியல் பற்றிய கருத்துகள் என்ன்னுள் பல வினாக்களை எழுப்பின.ஆல்பர்ட் காம்யூ, தான் ஒரு எக்ஸிஸ்டன்ஷியலிஸ்ட்டாக அடையாளம் காட்டப்படுவதை விரும்பாவிட்டாலும், எக்ஸிஸ்டன்ஷியலிசம் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு முதலில் பரிந்துரைக்கப்படும் நூல் "L'Étranger"
நிற்க...

இப்படியெல்லாம் எழுத இது போன்ற பெரிய பெரிய புத்தகங்களையெல்லாம் படித்திருக்க வேண்டும்.ஆனால் என் வாசிப்பு குமுதம்,விகடன்..இத்தோடு சரி ஹீ...ஹீ
இதுவரை..அப்படிப்பட்ட வாழ்வை மாற்றக்கூடிய புத்தகங்கள் எதையும் நான் படிக்கவில்லை.

The book you have read more than once

ஜேஜே சில குறிப்புகள் - சுந்திர ராமசாமி
முதல் வாசிப்பில் நிறைய புரியவில்லை என்பதால் மீண்டும் படித்தேன்.இன்னமும் அந்த புத்தகத்தில் எனக்கு புரியாத பகுதிகள் நிறைய உண்டு.சு.ரா வின் பாஷையிலேயே சொல்ல வேண்டும் என்றால்..ஒரு வேட்டை நாயின் தீவிரத்துடன் அவரது எழுத்துக்களை பிந்தொடர்ந்து...பாதிவழியில் மூச்சிரைத்து நின்று விட்டேன்.

துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
வாழ்வின் எதார்த்தங்களையும்,சிக்கல்களையும்,அழகினையும் தன் பயணத்தினூடாக விளக்க்கியிருப்பார்.உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தை எத்தனைமுறைவேண்டுமானாலும் படிக்கலாம்.

One book you would want on dessert island

ஆதவனின் சிறுகதைத்தொகுப்பு
(or)
அசோகமித்ரனின் கட்டுரைகள்(தொகுப்பு)
(or)
இரண்டும் :)

One book that made you laugh

ஆதலினால் காதல் செய்வீர் - சுஜாதா

one book that made me cry

இதுவரை அப்படி ஒரு புத்தகத்தைப் படிக்கவில்லை(மோசமாக எழுதப்பட்டிருக்கும் சில புத்தகங்களைப் படிக்கும்போது அழுகைவருவது வேறுவிஷயம்)

One book you wish you had written

சுஜாதாவின் படைப்புகள் அனைத்தையும்

One book that you wish had never been written

ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா
புரியவில்லை என்பதும் ஒரு காரணம்....
(சு.ரா: புரியாத எழுத்துகளில் இரண்டுவகை உண்டு.முதலாவது ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியது.பின்னது அதன் எதிமறை)

சாருவின் இந்த புத்தகம் இரண்டாவது வகை என நினைக்கிறேன்

One book you are currently reading

ஒன்றல்ல மூன்று புத்தகங்கள்
1) கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதாசுஜாதாவின் கட்டுரைகளைத் தொகுத்திருப்பது தேசிகன்
2)என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - மனுஷ்ய புத்திரன்
Sample கவிதை:

பாபருக்கு
வேண்டும் மசூதி

ராமருக்கு
வேண்டும் கோவில்

ஜனங்களுக்கு
வேண்டும் சுகாதாரமான
கழிப்பறைகள்
3)Bhagavat Gita -A rational enquiry
Prof Veerabathrappa

One book you have been meaning to read
லா.சா.ரா , பிரமிள், மெளனி,வண்ண நிலவன்,வண்ணதாசன்,காப்கா,தஸ்தோவெஸ்கி,எரிக்கா ஜங்,ஜேம்ஸ் தர் பர்,புதுமைப் பித்தன்...
இவர்களின் புத்தகங்களில் தலைக்கு ஒன்றாவது படித்துவிட வேண்டும்.

Tagging anusuya to write 'book post'

Friday, August 25, 2006

வேட்டையாடு விளையாடு Review(India Glitz)


There is a universal charm to a policeman in search of clues to crack a series of murders. Its attraction is almost primordial. And when you have somebody like Kamal who can get into the flesh of any character and Gautham Menon, who knows how to set up the right ambient mood and field, what you have is two and half hours of sustained and quality entertainment. Vettaiyaadu Vilaiyaadu is proof for that.

It is technically superior ----- the edges are pared down to give that steely and glassy Yankee feel. The lighting is moody and menacing in turns, just the backdrop for an urban thriller. The editing is cutting edge ---where events coalesce in easy and effective links. The way Gautham explores New York is something that even Woody Allen would have approved of.
The broad plot of a policeman trying to crack a case ---- a variation of a cat and mouse theme ---- gets the right backing from Gautham, who goes beyond Kaakha Kaakha where he showed what happens when a cop uses his brawn and pin-pointed aggression. Here he lets the man use his mental craft.

Gautham sets the mood right from the start as he introduces DCP Raghavan (Kamal Haasan) in typical style. Raghavan sets off on the trail of the killers of Rani, the daughter of Arogya Raj (Praksh Raj). Raghavan and Arogya Raj go back long way together. They share a unique relationship.

While Raghavan is stunned by the gut-wrenching morbidity in Rani’s killing, Arogya Raj and his family set off to New York to escape from the memories of their daughter. But there he is hacked and bumped off in the most violent of manners.
Raghavan is off to crack this perplexing mystery. In NY, he runs into Aradhana (Jyothika). Raghavan is a widower (his wife Kamalini is taken out by thugs) while Aradhana is trying to get out of a failed marriage. The two make a pair. And Raghavan gets down catching the killers with the help of American police.

It is slick and shiny all through with all the pauses and poise that such a script requires. Kamal’s acting need not be elaborated. He brings a sharp idiom to the role of a cop who has to hunt to some faceless killers.

Kamal’s strength is that he can shine in even lonely roles (even when he can’t feed off from somebody else’s intensity). Kamal understates and underplays the cop character with remarkable discernment. The narrative simply unfolds from him. Jyothika too is quiet and restrained. Kamalini is cute and plays a simple role with elegance. Prakash Raj is as ever bankable. This man never ceases to amaze us with his variety. Balaji as the villain fits the bill.
Harris Jeyaraj and Gautham share a unique rapport. Harris songs not only rock but the re-recording too is simply superb.

The other hero of the film is Ravi Varman, the camera man. He has given the entire flavor and feels to the movie. In a lesser craftsman’s hand, the film would not have got this polish and finesse. His visual metaphors are apt and the lighting is amazing. The angles too are novel and keep you interested all through.

Gautham knows how to let the story flow in trendy narratives. He has the feel for the medium as well he knows how to wrest good performances from his team. In the event, Vettaiyaadu Vilaiyaadu is a worthy successor to his Kaakha Kaakha.

Thanks: Indiaglitz.com

Thursday, August 17, 2006

ஐபெல் டவர்(Eiffel Tower) -விற்பனைக்கு!




"உண்மை பலநேரங்களில் கற்பனையைவிட சுவாரஸியமானது"

ஐபெல் டவரை(Eiffel Tower) ஒருவர் இரண்டுமுறை விற்றிருக்கிறார் என்று படித்தபோது எனக்கும் இப்படித்தான் தோன்றியது. LIC கட்டிடத்தை விற்பதாக திரைப்படங்களில் நகைச்சுவைக்காட்சிகள் வந்தபோது கூட இந்த கோணத்தில் சிந்திததில்லை."King of all con men " என்று அழைக்கப்படும் Victor Lustig என்பவர் தான் அந்த மகாஎத்தன்.

1890-ல் செக்கோஸ்லுவாக்கியாவில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர் Victor Lustig .சிறுவயதிலேயெ பல மொழிகளைப் பேசக் கற்றுக்கொண்ட Lustig சக மனிதர்களின் பழக்கவழக்கங்களையும்,பல்வீனங்களையும் எளிதில் கிரகிக்கும் திறன் கொண்டிருந்தார்.தனது 20வது வயதில் ஒரு சிறந்த கான் ஆர்டிஸ்டாக(Con-Artist) மலர்ந்த அவர் தன் 30வது வயதில் போலீஸால் பெரிதும் தேடப்படுபவராக(Most wanted) தேர்ந்திருந்தார்(!).

சில்லறை பித்தலாட்டங்களில் போரடித்துப்போன Lustig புதியதிட்டம் ஒன்றை தீட்டினார்.அத்ற்காக அவ்ர் கண்டறிந்ததுதான் Money Printing Machine.அந்த எந்திரத்தில் 100$-ஐ வைத்தால் 6 மணி நேரத்தில் மற்றுமொரு புதிய 100$ நோட்டினை(வேறு சீரியல் நம்பர்களுடன்)வெளித்தள்ளும்.இதனை 50,000$ வரை விற்றிருக்கிறார்.விற்ற 12 மணிநேரத்திற்குப்பிறகு அந்த டுபாகூர் எந்திரம் தன் வேலையைக் காட்டத்துவங்கிற்று.அதாவது வெறும் வெள்ளைத்தாளை கக்கத்த் தொடங்கியது.வாங்கியவர்கள் Victor Lustig-ன் கடையை முற்றுகை இடத்துவங்கினார்கள்.அச்சமயத்தில் அவர் வேறொரு தேசத்தில் பறந்து கொண்டிருந்தார்.

1925-ல், முதலாம் உலக யுத்ததிற்கு பிறகு பிரான்சில் தொழிற்புரட்சி ஏற்பத்துவங்கியிருந்த காலமது.அப்போது அங்கு தங்கியிருந்த Lustig-ன் கவனத்தை கவர்ந்தது,அன்றைய நாளிதளில் வெளியாகியிருந்த செய்தி ஒன்று.அதன் தலைப்பு இது தான்

"Eiffel Tower in drastic need of renovation"
ஐபெல் டவரை பராமரிப்பதில் அரசிற்குண்டான கஷ்டங்களையும்,அது முழுமையாக புதுப்பிக்கபடவேண்டியதன் அவசியத்தையும் அக்கட்டுரை அலசியிருந்தது.டவரை அகற்றிவிட்டால் கூட பரவாயில்லை என்பதுபோன்ற செய்திகளை வெளியிட்டிருந்தது அப்பத்திரிக்கை.இதனைப் படிக்க படிக்க Lustig-ன் மனதில் ஒரு திட்டம் உருவானது.ஒருவேளை அரசு ஐபெல் டவரை விற்க நேர்ந்தால்!

Lustig உடனடியாக செயலில் இறங்கினார்.ஒரு அரசு அதிகாரின் உதவியுடன் அரசு முத்திரை இடப்பட்ட தாள்களைப்பெற்றார்.அதனைக் கொண்டு பிரான்சின் முன்னணி இரும்பு வியாபாரிகள் சிலருக்கு ரகசியக்கூட்டம் ஒன்றிற்கான அழைப்பை விடுத்தார்."Deputy director General of the Ministry of Mail and Telegraps" என்று ஒரு பதவியை தனக்குத்தானே அளித்துக்கொண்டார்.அவரது நண்பர் டாப்பர் டான் தான் அவரது Personal secretary.இந்த சந்திப்பினை பிரான்சின் மிகப்பெரிய ஹோட்டல்களில் ஒன்றான Crillonல் ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த ரகசிய சந்திப்பில்(!) ஐபெல் டவரினால் அரசிற்கு ஏற்படும் சங்கடங்களையும்,அரசு அதனை விற்க முன்வந்திருப்பதாகவும் சாதுர்யமாகப் பேசினார்.பெயர் பெற்ற,நேர்மையான வியாபாரிகளை மட்டுமே அரசு பேரத்திற்கு அழைத்திருப்பதாகக் கூறினார்.ஐபெல் டவரை விற்க மக்கள் கடும்எதிர்ப்பு தெரிவிப்பார்களென்பதால்,இந்த ஒப்பந்தமும்,வாங்குபவர் பற்றிய விபரங்களும் ரகசியம்மாக வைத்திருக்கப்படும் என்று உறுதி கூறினார்.இதில் Mr.Poisson என்பவர் ஆர்வமாக இருப்பதை உணர்ந்து கொண்ட Lustig,அவரைத்தனியாக அழைத்து ஒப்பந்தத்தை பேசி முடித்தார்.ஐபெல் டவரை ஒரு பெரிய தொகைக்கு விற்றார்.இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்ன தெரியுமா?தான் ஒரு அரசு அதிகாரி என்பதால் தன்க்கு சம்பளம் குறைவு என்றும் ,இந்த ஒப்பந்ததை அவர் பெயரில் முடிக்க தனக்கு லஞ்சம் வெண்டும் என்று ஒரு பெரிய தொகையும் Poisson-னிடமிருந்து பெற்று கொண்டு விட்டார்.பணத்தை வாங்கிக்கொண்டு வெளி நாட்டுக்குப் பறந்தவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.பணத்தை ஏமந்தவர் போலீஸில் புகார் கொடுக்கவில்லை.தன் மானம் போய்விடும் என்று கருதி பேசாமல் இருந்து விட்டார்."அட இது நல்லயிருக்கே" என்று நினைத்தவர் மீண்டும் ஒருமுறை இதேபோன்று மற்றொரு நபரிடம் விற்றிருக்கிறார்.ஆனால் இம்முறை பணத்தை இழந்தவர் போலீஸில் புகார் செய்துவிட வேறு வழியில்லாம அமெரிக்காவிற்கு பறந்து விட்டார்.அதன் பிறகு அவர் பிரான்சுக்குத்திரும்பவே இல்லை.

அடுத்து Victor Lustig தன் கைவரிசையைக் காட்டியது பொது மக்களிடம் அல்ல,மாறாக அக்காலகட்டத்தில் அமெரிக்காவில் மிகப்பெரிய கிரிமினல்லாக இருந்த Al Capone னிடம்.அவரிடம் தனக்கு 500,000டாலர்களைத்தந்தால் ஒரு வணிகத்தின் மூலம் அறுபதே நாட்களில் இருமடங்காக்கித்தருவதாகக் கூறியிருக்கிறார்.இதற்கு ஒத்துக்கொண்ட Capone..ஏமாற்ற நினைத்தால் என்ன நடக்கும் என்பதையும் எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.பணத்தை ஒரு வங்கியில் பத்திரமாக பொட்டுவிட்டு Lustig ஹாயாக ஊர்சுர்றியிருக்கிறார்.60 நாட்களுக்குப்பின் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு Capone-ஐ சந்தித்திருக்கிறார்.தன் முயற்சியில் தோல்வி அடைந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.ஆத்திரமடைந்த capone க்கு ஒரு இன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறார்.ஆம் அவரது 50,000 டாலர்களையும் திருப்பித் தந்திருக்கியிருக்கிறார்.இதனால் ஆசரியமடைந்த capone - இவரது நேர்மையை பாராட்டி 1000 டாலர்களை இவருக்கு பரிசளித்திருக்கிறார்.அவருக்கு வேண்டியதும் அதுதானே! தான் ஏமாற்றப்பட்டதைக்கூட உணராத Capone - ஐ பார்த்து புன்னகைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் Lustig.மனித உணர்வுகளைப்படிக்கத்தெரிந்த அவரது திறமைக்குக் கிடைத்த பரிசு அது.

அதன் பின் பல ஆண்டுகளுக்குப்பிறகு 1935 -ல் போலி டாலர்களைக் கைமாற்றும் போது போலீஸில் பிடிபட்ட Lustig, 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.தனது இறுதி காலத்தை 'அல்கார்ட்ஸ்' சிறையில் கழித்தார்.அங்கு தனது சக கைதி ஒருவரால் தாக்கப்பட்டு,பின் போலீஸாரால் வேறு ஒரு அறைக்கு அனுப்பப்பட்டார்.அந்த சககைதியின் பெயர் Al Capone !.

1947-ல் நிமோனியா காய்ச்சல் கண்டு சிறையிலேயே இறந்து போனார் Lustig.அவரது இறப்பு சான்றிதழ் படிவத்தை நிரப்பிக்கொண்டுவந்த அலுவலர் OCCUPATION என்ற கட்டத்தின் அருகில் சற்று நிறுத்தி,யோசித்தார்..பின்பு SALES MAN எனநிரப்பினார்.

"There's a suker born every minute"
-P.T.Barnum

Thursday, August 03, 2006

Lajjo-மணிரத்னத்தின் அடுத்த படம்!!!


நல்ல சினிமாமீது நம்பிக்கை உள்ள தமிழ் ரசிகர்களின் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி மணிரத்னம் தனது அடுத்த ஹிந்தி படத்தை துவக்கி உள்ளார்.

பாபி பேடியுடன் மணிரத்னம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசை நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்,ஒளிப்பதிவு ப்.சி.ஸ்ரீராம்.நல்ல கலைஞர்களெல்லாம் இப்படி ஹிந்திக்குப் போய்விட்டால்...பேரரசு,எஸ்.ஜே.சூர்யா..இவர்களின் படங்கள் 100 நாள் ஓடுவதில் வியப்பேதும் இல்லை.
மணிரத்னம் ஏன் இப்படி ஹிந்திக்கு ஓடுகிறார் என்பது புரியவில்லை?அங்குதான் நிறைய காசு தருகிறார்கள் என்பதாலா?இல்லை நல்ல ரசிகர்கள் அங்குதான் இருக்கிறார்களா?அதிகமான மக்களை சென்றடைய ஹிந்திதான் சரியான ஊடகம் என்றாலும்,தமிழில் எடுத்து பின் டப் செயப்பட்ட படங்கள் தான் இந்திய அளவில் பேசப்பட்டன(ரோஜா,பம்பாய்).தில் ஸே,யுவா போன்ற படங்கள் திரையிடப்பட்ட ஒரேவாரத்தில் கால் நீட்டி குப்புறப் படுத்துக்கொண்டுவிட்டன..

"குரு"படம் அம்பானி பற்றிய கதை என்பதால் ஹிந்தியில் எடுத்தால் தான் பொருத்தமாக இருக்கும்..OK.ஆமிர்கானையும்,கரீனா கபூரையும் வைத்து ராஜஸ்தான் based lovestory எடுக்கவாண்டியதன் அவசியம் என்னவோ?(கேட்டா படைப்பு சுதந்திரம்னு சொல்லுவாங்க)

2008-ல் 'The Mahabarat Trilogy' என்ற மிகப்பெரிய படைப்பை துவங்க இருக்கிறார்.அதயாவது ஆங்கிலத்தில் எடுப்பார் என்று நம்புவோம்.
Lajjo-shy girl

Tuesday, July 25, 2006

நடிகை ஜலஜாவின் நாய்க்குட்டி......

நடிகை பிரமீளாவுக்கு நகத்தைக் கடிக்கும் பழக்கம் உண்டு என்று ஒரு பத்திரிக்கை கட்டத்துக்குள் பதிப்பிக்கிறது.பிரமீளாவுக்கு நகம்கடிக்கும் பழக்கம் இருந்தால் என்ன?வேறு எவளுக்கோ தொடையில் மச்சம் இருந்தால் நமக்கு என்ன என்று ஒருவரும் கேட்பதில்லை.கேள்வி கேட்காமல் இந்த Trivia அனைத்தையும் உட்கார்ந்து கொண்டு படித்துக்கொண்டிருக்கிறோம்.இதைவிட அதிகமாக ஒரு ஜனக்கூட்டத்தை எவனும் அவமானப்படுத்த முடியாது என எண்ணுகிறேன்.

- சுஜாதா,கணையாளி,1973 ஆகஸ்ட்




* ரீமசென் ஐந்து கிலோ எடையை குறைத்திருக்கிறார்

* அஸினுக்கு பிடித்தமான உணவு பொறித்த ஆற்று மீன் தான்

* படப்பிடிப்பின் போது கிடைக்கும் இடைவேளையில் நடிகை சதா அவரது தந்தையின் மடியில் தலை வைத்துத் தூங்குகிறார்

-குமுதம்,2006,ஜுலை



இந்த 33 வருடங்களில், பதிரிக்கை தொழில்நுட்பத்தில் அபரிமிதமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்.ஆனால் அதன் உள்ளடக்கத்தில் எவ்வித முன்னேற்றமும்
இல்லை.பின்னோக்கிப்போய்க்கொண்டிருக்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.குமுதம் போன்று விற்பனையில் முன்னணியில் இருக்கும் வார இதழ்களின் 90% பக்கங்களை ஆக்கிரமிப்பது நடிகைகளின் தொப்புள்களும் அவர்களைப்பற்றிய செய்தியும் தான்.சினிமா செய்திகளே வெளியிடக்கூடாது என்று சொல்லவில்லை.ஏனெனில் தமிழகம் போன்று சினிமாவுடன் மக்கள்பிணைப்பு அதிகமாக உள்ள மாநிலத்தில் இது சாத்தியமற்ற ஒன்று.மேலும் உ.வெ.சாமிநாதைய்யரின் படத்தையோ,அருந்ததிராயின் படத்தையோ அட்டைப்படமாகப் போட்டால் நானே வாங்க மாட்டேன்.ஆனால் எதற்கும் அளவு, வரைமுறை வேண்டாமா?
இந்தவார குமுதம் பத்திரிக்கையின் உள்ளடக்கம் என்ன தெரியுமா?


*நடிகை நமீதா ஒரு படப்பிடிபில் நடனக்காட்சியில் எவ்வாறு குத்தாட்டம் போட்டார் என்பதை விவரிக்கும் கட்டுரை.

*ரீமாசென் நடிகர் விஷாலைக் காதலிக்கிறாரா? என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்கு விடையைக் கண்டறிய அவருடன் ஒரு பேட்டி.

*நடிகர் விஜயின் அடுத்தபடத்தின் கதை என்னவாயிருக்கும் என்ற நாட்டின் தலையாய பிரச்சனையை தீர்க்கும் வகையில் ஒரு கட்டுரை.அப்படத்தில் வரும் பன்ச் டயலாக் தான் கட்டுரையின் தலைப்பு."நான் முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்".(உன் பேச்சை நீயே கேக்க மாட்டேன்னா...நீ என்ன லூஸா??)

*டி.வி நடிகர் ஒருவர் சண்டை போட்டுப்பிரிந்த தன் மனைவியுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சியான கதை.

*நான்கு இளம் பெண்கள் நடிகர் சூர்யாவை 108வது தடவையாகப் பேட்டிகண்டு,109தடவையாக "நீங்க எப்டி இவ்ளவு handsome-ஆ இர்க்கீங்க?" என்ற அற்புதமான கேள்வியைக்கேட்கும் பேட்டி.

*நடிகை மீனவின் பேட்டி. இது தவிர லைட்ஸ் ஆன்,சினிமா விமர்சனம்,சினிமாத்துணுக்குகள்.

கடைசீ பக்கத்துக்கு முந்தின பக்கத்தில் மும்பை குண்டு வெடிப்பு பற்றிய சிறியகட்டுரை.இதில் காமெடியே தலையங்கம் தான்.புத்தகம் முழுவதும் இப்படிப்பட்ட செய்திகளை நிறைத்துக்கொண்டு, நாட்டில் அரசியல் வாதிகள் எப்படி நாட்டுப்பற்றுடன் செயல் படவேண்டும் என்று எழுதுகிறார்கள்.இதை எழுத இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை.

2039ஆம் வருடம் ஜூலை இதழில் கீழ் கண்டது போன்ற செய்தி வெளியானால்,முகத்தில் எவ்வித ஆச்சரிய ரேகையும் தோன்றாமல் படித்து முடிப்போமாக!

"நடிகை ஜலஜாவின் நாய்க்குட்டி இரண்டு வாரமாக மஞ்சள் நிறத்தில் மூச்சா போவதால், நடிகை மிகவும் கவலையாக உள்ளார்"


Sunday, July 02, 2006

6பதிவு

என்னை ஆறு விளையாட்டுக்கு டேகிய(taggia) அனுசுயா வுக்கு dankx(அப்பாடா எப்டியோ ஒரு பதிவு ஒப்பேத்தியாச்சு).எனக்கு பிடித்த ஆறு பிரபலங்களைப்பற்றி இந்தப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

(1)சுப்பிரமணிய பாரதி



தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
என இறுமாப்புடன் கேட்டதோடன்றி காலத்தின் பக்கங்களில் தன் பெயரை அழியாஎழுத்துக்களால் எழுதியும் சென்றவன்."எமக்குத்தொழில் கவிதை" எனசொன்னாலும் தன் வாழ்க்கையையே கவிதை போல வாழ்ந்தவன்.அல்பாயுசுக்கும் மேதைமைக்குமான தொடர்பு இவன் விஷயத்தில் மீண்டும் ஒருமுரை நிரூபணமானது.வாழ்ந்தகாலதில் சரியான முறையில் அங்கீகரிக்காமல் இறந்தபின் விழா எடுத்துக்கொண்டாடும் தமிழர்களை (மேலுலகத்திலிருந்து) இவன் பார்க்க நேர்ந்தால் ஒரு ஏளனப் புன்னகையை வீசக்கூடும்.


(2)எம்.எஸ்.சுப்புலட்சுமி



"குறை ஒன்றும் இல்லை" என்ற இவரது பாடலுக்கு உருகாதவர் எவரும் இருக்க முடியாது.கர்நாடக சங்கீதத்தை பற்றிய அடிப்படை ஞானம் எதுவும் இல்லதவர்களைக்கூட அந்த இசையை கேட்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.கருணையும் சாந்தமும் ததும்பி வழியும் இவரது உருவம் பெண்மையின் அடையாளம்.

(3)சுஜாதா

"இவர் வீட்டு Laundry பில்லை ப்ரசுரித்தால் கூட படிக்க ஒரு கூட்டம் இருக்கிறது" ஒரு வலைதளத்தில் விளையாட்டாக இப்படி குறிப்பிட்டிருந்தார்கள்.என்னைக்கேட்டால் இது ஒரு மிகைப் படுத்தப்பட்ட உண்மை அவ்வளவே.நவீன கதை சொல்லலின் தந்தை என இவரை சொல்லலாம்.எழுத்துக்கான உயர்ந்த விருதுகளை பெருமைப்படுத்த நினைத்தால்,அவற்றை இவருக்குக் கொடுக்கலாம்.இவர் தமிழ் எழுத்துலக சூப்பர் ஸ்டார்.

(4)எஸ்.பி.பி

"தேன் வந்து பாயுது காதினிலே"இப்டீன்னா என்னன்னு யாராவது கேட்டால் இவர் குரலைக் கேட்க சொல்லலாம்.பாடல்களை உதட்டிலிருந்து அல்லாமல் இதயத்திலிருந்து பாடுபவர்.ஒண்ணுமே இல்லாத சில சப்பையான பாடல்கள் இவர் பாடியதால் சூப்பர் ஹிட்டாகி இருக்கின்றன.பாடல் களுக்கு நடுவில் இரும,சிரிக்க,பேசக்கூட முடியும் என செய்து காடியவர்(அதை இவர் செய்தால் மட்டுமே நன்றாக இருக்கும்).பாடகர் மட்டுமல்ல இசையமைப்பாளர்,சிறந்த நடிகர்.


(5)கமல் ஹாசன்

இவர் செய்த ஒரே தவறு நம்ம நாட்டில் பிறந்தது தான்.

கேள்வி:அன்பே சிவம்,குருதிப்புனல்,மகாநதி இந்த படமெல்லாம் ஏன் நன்றாக ஓடவில்லை?பதில்:திருப்பாச்சி-200நாள்,சிவகாசி-100நாள்,ஆஅ-75 நாள் .....

பொக்ரான் அணுகுண்டு சோதனையினால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியன்.இவரது நற்பணி மன்றங்கள் மூலமாக இதுவரை 5000லிட்டருக்கும் மேல் ரத்ததானம் செய்யப்பட்டுள்ளது.தன் உடல் உறுப்புக்கள் அனைத்தயும் தானமாக தர ஒப்புக்கொண்ட நடிகர்.ஆயிரக்கணக்கில் இதுவரை புத்தகங்களை நூலகங்களுக்கு தானமாக வழங்கியுள்ளார்.உயிருள்ள கண்கள் என்று சொல்லுவார்களே அது இவருக்குப் பொருந்தும்.

(6)இளையராஜா

இவரது சோகப்பாடல்களைக் கேட்டால் அழுகை வரும்.உற்சாக பாடலைக்கேட்டால் குதூகலம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்,குத்துப்பாடலைக்கேட்டால் ஆடத் தோன்றும்,தாலாட்டுப்பாடலைக்கேட்டால் தூக்கம் வரும்...ஆம் இவர் ஒரு மந்திரவாதிதான்.இளையராஜாவால் கூட அவரது இசையின் தாக்கத்தை,வீச்சை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.அந்த அளவுக்கு இரண்டு தலைமுறையினரை பாதித்துவிட்ட இசை இவருடையது.

இவர்களை 6 பதிவுக்கு அழைக்கிறேன்

(1)Gopalan Ramasubbu

(6)mscongeniality