Showing posts with label விழா. Show all posts
Showing posts with label விழா. Show all posts

Monday, January 21, 2008

புனே திரைப்பட விழா - ஒரு பார்வை

ஜனவரி மாதத்து மென்குளிரில் ஆரவாரமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது ஆறாவது சர்வதேச திரைப்படவிழா.43 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 150க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட்டன.சுமார் ஒருவார காலம் நடைபெற்ற இவ்விழாவை அமைச்சர் சுரேஷ் கல்மாதி துவக்கிவைத்தார்.ஷர்மிளா டாகூருக்கும் ஷம்மி கபூருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.ஷமிளா டாகூர் 'ரே' படங்களில் நடித்து சாபல்யம் பெற்றவர்.ஷம்மி கபூர் என்ன சாதித்தார் என்றுதான் விளங்கவில்லை(பான் பராக்!!).

எல்லாமே நல்ல படங்கள் தானே என்று நினைத்து எதாவது ஒரு படத்தில் போய் உட்கார்ந்து கொள்வது தவறு.இது நான் முதல் நாளே பட்டு தெரிந்து கொண்டது.அதன் பின்னர் கூக்ளி,சினாப்சிஸ் படித்துத்தான் படங்களைத் தேர்ந்தெடுத்தேன். இவ்விழாவில் நான் பார்த்த படங்களில் குறிப்பிடத்தக்கவை

-In the name of gods(குதா கேலியே)
இந்திய விழாவில் திரையிடப்பட்டிருக்கும் முதல் பாகிஸ்தானிய படமிது.பழைமைவாதிகளால் மதத்தின் பெயரால் பாகிஸ்தானிய இளைஞர்கள் எவ்வாறு சீரழிக்கப் படுகிறார்கள் என்பதையும், 9/11 க்குப் பிறகு உலக அரங்கில் பாகிஸ்தானியர்கள் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதையும் பேசும் படம்.தைரியமான முயற்சி.பாகிஸ்தான் அரசின் தடைகளிலிருந்து தப்பி இப்படம் உலக அரங்குக்கு வந்ததே பெரிய ஆச்சரியம்.இசை இஸ்லாமில் தடைசெய்யப்பட்டிருக்கிறது என்று ஒரு பிரிவினர் நம்புகிறார்கள்,பாகிஸ்தானில் பெரும்பான்மையினருக்கு அராபிக் படிக்கத்தெரியும் ஆனால் சிலருக்குதான் அர்த்தம் புரிந்து கொள்ளத்தெரியும் போன்றவை எனக்கு புதிய செய்திகள்.வெடிகுண்டு மிரட்டல்களைத்தாண்டி அங்கு இப்படம் வசூலில் சாதனை புரிந்து வருவது அம்மக்களின் மனநிலையையே பிரதிபலிக்கின்றது.


-Cherries (china)
I am Sam படம் பார்த்ததிலிருந்து அதில் ஷான் பென்னின் கதாபாத்திரத்தை அவரைக்காட்டிலும் வேறுயாராலும் சிறப்பாக செய்யமுடியாது என்று திடமாக எண்ணிக்கொன்டிருந்தேன்.ஆனால் இந்த சீன படத்தைப் பார்த்தபோது அந்த எண்ணம் மாறிப்போனது.கிட்டத்தட்ட "I am sam" போன்றதொரு கதையில் மனநலம் குன்றிய கதாபாத்திரத்தில் மையோ பு என்ற நடிகை மிக அருமையாக நடித்திருந்தார்.இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்காதது வருத்தமே.


-Black Book (Netherland)
இரண்டாம் உலகப் போரின் போது நாஸிக்களின் பிடியிலிருந்து தப்பிக்கும் ஒரு யூத பாடகியின் கதை.விறுவிறுப்பான நாவல் படிப்பது போல இருந்தது.அக்மார்க் ஹாலிவுட் மசாலா.எக்கச்சக்க படங்களில் பார்த்ததாலோ என்னவோ யூதர்களை கூட்டம் கூட்டமாக கொல்லும் பொது வருத்தமே ஏற்படவில்லை.மாறாக போர்முடிந்தவுடன் யூதர்கள் நாஸிக்களைக் கொல்வது மனிதனின் அடிப்படை குணத்தைக் காட்டுகிறது.

கவனம் கவர்ந்த மற்ற படங்கள்
Seventh Heaven(egypt),Tricks(Poland),Bliss(Turkey)

தமிழ் படங்களில் அம்முவாகிய நான்,பருத்திவீரன்,பெரியார் ஆகியவையும் மலையாளப் படங்களில் ஒரே கடல்,நாலு பெண்கள் மற்றும் ராத்திரி மழா ஆகியவையும் திரையிடப்பட்டன.மெயின் ஸ்ட்ரீம் படங்கள் என்று சொல்லி ஓம் ஷாந்தி ஓம்,ஹே பேபி,பாட்னர் போன்ற படங்களைத் திரையிட்டது அபத்தம்.

பெட்ரோ அல்மொடோவரின் சில படங்கள் திரையிடப்பட்டன.ஆஸ்கர் இயக்குனர் ஆயிற்றே விஷயமிருக்கும் என்று நினைத்துப் பார்க்கபோனால்,ஐந்து நிமிடங்களில் "அவனா நீயி" என்று தலைதெறிக்க ஓடிவரவேண்டியதாயிற்று.

இங்க்மர் பெர்க்மென்னின் cries and whispers என்ற படம் திரையிடப்பட்டது.இவரைப் பற்றி வலை பதிவுகளிலும் புத்தகங்களிலும் ஏற்கனவே படித்திருந்ததால் படத்தைப் பார்க்கப்போயிருந்தேன்.அரங்கு நிறைந்த காட்சி.படம் முடிந்ததும் எல்லாரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் கைத்தட்டினார்கள்.நானும் தட்டினேன்'என்னைப் போல எத்தனை ப்ரகஸ்பதிகள் புரியாமலே கைத்தட்டுகிறார்களோ என்று எண்ணிக்கொண்டே'.