Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Tuesday, March 09, 2010

Tuesday Teasers 2

# Grab your current read.
# Let the book fall open to a random page.
# Share with us few “teaser” sentences from that page.
# You also need to share the title of the book that you’re getting your “teaser” from … that way people can have some great book recommendations if they like the teaser you’ve given!
# Please avoid spoilers!

ஒரு பூ
--------
மஞ்சள் வண்ணம்
அடுக்கடுக்காக இதழ்கள்.
ஒற்றைக் கொத்தில் ஏழெட்டாக பூப்பவை.
வஸந்த காலம் வருவதை
முதலில் தெரிந்துகொண்டு முதலில் பூப்பவை.
உற்றுப் பார்த்தால் அல்லது
சற்றே அருகில் சென்று பார்த்தால்
செந்நிறமாக மாறும் குணம் உடையவை.
முகர்ந்தால் எப்படி இருக்கும் என்று
கொத்துப் பூவைப் பறித்தேன்.
முகர்ந்தால் நாற்றம்.
இதைப்போல் அதைப்போல் என்றில்லை.
எனக்குக் குமட்டல். கிறுகிறுப்பு.
மெல்லச் சரிந்தேன்.
அற்பத்தில் அற்பம் ஒரு மஞ்சட் பூங்கொத்தை
மார்பின் மேல் வைத்துக்கொண்டு
கிடக்கிறான் என்று உலகம் சொல்கிறது

---
பக்கம் எண்: 34
புத்தகம்: பென்சில் படங்கள்
ஆசிரியர்: ஞானக்கூத்தன்
பதிப்பகம்: விருட்சம்

Tuesday, June 26, 2007

சு.ரா வின் கடைசிக் கவிதை



அந்தக் குழந்தையின் காலோசை
நம்மை அழைக்கிறது


குழந்தையின் வடிவம் நம்
பார்வைக்குப் புலப்படவில்லை.


நம் கலவரம் நம் பதற்றம்
நம் பார்வையை மறக்கிறது.


தன் காலோசையால்
நம்மை அணைத்துக் கொள்ள

அந்தக் குழந்தை நம்மைத்
தேடி வருகிறது.


நாம் நம் தத்தளிப்பை மறைக்க
மேலும் உரக்கப் பேசுகிறோம்.


சுந்தர ராமசாமி மரணமடைவதற்கு 19 நாட்களுக்கு முன்பு எழுதிய கவிதை இது.இதுவே அவரது கடைசிப் படைப்பு.துவக்கத்தில் பசுவய்யா என்ற புனைப்பெயரிலும்,பின்னர் தன் இயற்பெயரிலும் அவர் எழுதிய மொத்த கவிதைகளின் தொகுப்பு இந்த "சுந்தர ராமசாமி கவிதைகள்" .மேற்குறிப்பிட்ட இந்த கவிதையையும் சேர்த்து மொத்தம் 108 கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன.பத்து பதினைந்து கவிதைகள் தேறினாலே புத்தகங்கள் வெளிவரும் நிலையில்,இது மிகப்பெரிய தொகுப்பாகும்.அடித்துத்,திருத்தி அவர் கவிதைகளுக்கு உருக்கொடுத்த விதம் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப் பட்டுள்ளது.
இத்தொகுப்பிலிருந்து சில கவிதைகள்


நடுவழியில் மறித்த வயோதிகம்


வயோதிகம் மறித்தது நடுவழியில்
நான் காதலைத் தேடிச் சென்றுகொண்டிருந்தபோது
'விடு என்னை
இப்போதுதான் உணர்ந்துகொண்டேன் காதலின் அருமையை'
என்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன்.
'சற்று முந்தான் நான் வயோதிகம்
இப்போதோ மரணம்' என்று
என்னை இறுகத் தழுவிக்கொண்டது
அது


-கொல்லிப்பாவை 1987

*****
கன்னியாகுமரியில்


இன்று அபூர்வமாய்
மேகமற்ற வானம்
மிகப்பெரிய சூரியன்
ஒரே ரத்தக் கலங்கல்.

எங்கிருந்தோ வந்து
சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது
இந்த ஆட்டுக்குட்டி
அசடு
அப்போதும்
தன்னிலை அறியாதது.

இடம் பெயர்வதா
நின்ற நிலையில் நிற்பதா?

மூளையில் தர்க்கம்
அறுபட்டு விழித்ததும்
நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி.

சூரியனைக் காணோம்.


-சதங்கை 1975

*****
நம்பிக்கை


தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்

அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.

வேறு யாரோ.

அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.


-வைகை 1977


மேலும் சில கவிதைகளை வாசிக்க நதியலை

Saturday, March 31, 2007

The Namesake - விமர்சனம்



'சலாம் பாம்பே' மூலம் ஹாலிவுட்டின் கவனம் கலைத்த மீரா நாயருக்கு இது அடுத்த படி. ஜும்ப்பா லஹிரியின் புழ்பெற்ற நாவலை அதே பெயரில் திரைக்கு மொழிமாற்றியிருக்கிறார்.நான் நாவலை படிக்கவில்லை என்பதால் "என்னயிருந்தாலும் புத்தகம் அளவுக்கு படம் சிறப்பா இல்லை" போன்ற கிளிஷே புலம்பலைத் தவிர்க்க முடிந்தது.நாவல் முழுமையையும் திரையில் சொல்லிவிடவேண்டும் என்ற பதட்டம் எந்த பிரேமிலும்(frame) தெரியாதது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

எவ்வளவு யோசித்தும் கதையை ஒரே பாராவில் சொல்வது எப்படி என விளங்கவில்லை.காரணம் அதிரடித் திருப்பங்களின்றி அதீத இயல்புத்தன்மையுடன் பயணிக்கிறது படம்(ஆதவன் கதை போல).எழுபதுகளின் துவக்கத்தில் நியூயார்க் சென்று குடியேறும் பெங்காலி குடும்பத்தைப் பற்றியது கதை.அங்கு பிறக்கும் அவர்களின் குழந்தைகள் சந்திக்கும் Cross-Culture குழப்பங்களையும்,Identity குறித்தான வினாக்களையும் எழுப்பிச்செல்கிறது படம்.

பெங்காலி தம்பதிகளாக இர்பான் கான்(Irfan Khan), தபு(Tabu) நடித்திருக்கிறார்கள் இல்லை வாழ்ந்திருக்கிறார்கள்.அதுவும் இர்பான் கானின் சின்ன சின்ன முகபாவ மாற்றங்கள் கூட அருமை(அட யாருப்பா அங்க,இவர தமிழுக்கு கூட்டீட்டு வாங்க).இவர்களின் மகனாக வரும் கால் பென்னும்(Kal Penn) நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்க வாழ் இந்தியர்களின் பிரச்சனைகளை மிகைப்படுத்தி ஜல்லியடிக்கும் வழக்கமான 'இந்திய-ஆங்கில' படம் போலன்றி உள்ளபடி காட்டியதற்கு பாராட்டலாம்.அதே சமயம் அஷோக் கங்கூலி அனாமத்தாக இறந்துபோகும் போது சற்று கிலி ஏற்படுகிறது.குறிப்பாக அவர் இறந்து போவதை விஸ்தாரமாகக் காட்டாமல் ஒரு செய்தியாகக் குறிப்பிடுவது நிகழ்வின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது(சலாம் மீரா!).

வசனங்கள் பல இடங்களில் பளிச்சிடுகின்றன.திருமணமாகி பலவருடங்கள் கழித்து தாஜ்மஹால் வருகிறார்கள் தபுவும் இர்பானும்,
இர்பான்:ரொம்ப நாளா கேக்கணும்னு நெனைசேன்.பொண்ணுபாக்க வந்தப்ப என்ன பிடிசிருக்குன்னு ஏன் சொன்ன?
தபு:என்ன பாக்க வந்தவங்கள்ள நீ தான் Best.ஒரு கை மட்டும் இருந்த கார்டூனிஸ்ட்,ரெண்டு குழந்தைங்களோட வந்த விடோவர் இவங்களுக்கு நீ பரவால்ல.அதுவும் நீ போட்டுகிட்டு வந்த அமெரிக்கன் ஷூ எனக்கு ரொம்ப பிடிசிருந்தது
(இர்பான் ஏமாற்றத்தோட பாக்க)
தபு:ஏன் அமெரிக்க காரங்க மாதிரி "I Love You" சொல்லுவேன்னு பாத்தியா?

3.5/5 . கண்டிப்பாகப் பார்க்கலாம்.குரூர மான சிந்தனைகளுக்கு விரட்டிச் செல்லாத சாதாரணமான அமைதியான விடுமுறை நாளை வேண்டுபவர்கள் பார்க்க நான் பரிந்துரைக்கும் மற்றொரு படம் "The Pursuit of happyness"