Thursday, August 07, 2008

நூல் அறிமுகம் : 18வது அட்சக்கோடு


இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வடநாட்டில் நிகழ்ந்த கலவரங்களைக் குறிப்பாக இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட வலிகளையும், துயரங்களையும் பலர் வரலாற்றில் பதிவு செய்துள்ளனர். அதேசமயம் தென்னிந்தியாவிலும் பல இடங்களில் கலவரங்கள் மூண்டன. பலர் கொல்லப்பட்டனர், பலர் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர், பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். இந்தியாவுடன் இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம்களின் சமஸ்தானத்தில் இத்தகைய கலவரங்கள் அதிகம் நடந்தேறின. 1946 லிருந்து 1948 வரை ஐதராபாத்தில் நிலவிய அரசியல் சூழலையும், கலவரங்களையும் ஒரு தமிழ் இளைஞனின் பார்வையினூடாக பதிவு செய்யும் நூல் 18வது அட்சக்கோடு. மத நல்லிணக்க விருது பேற்ற இந்நூல் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயற்கப்பட்டு, இதன் கன்னட மொழிபெயற்பாளருக்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது.

இதற்கு முன்பு அசோகமித்ரனின் கட்டுரைகளை வாசித்திருந்தாலும், இதுவே நான் படித்த அவருடைய முதல் நாவல்.வெகு நிதானமான எழுத்து. அனாவசியமான பரபரப்பினை எழுத்தின் மீது ஏற்றாமல் அந்தந்த நிகழ்விற்கேற்ப தீவிரம் கொள்ளச் செய்கிறார். இதில் ”செய்தி” படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அபாயம் இருந்தாலும், நாவல் முழுவதும் இழையோடும் மெல்லிய நகச்சுவையும், சுய எள்ளலும் அதிலிருந்து காப்பாற்றுகின்றன. ஒவ்வொரு நிகழ்வினையும் மிக நுணுக்கமாக விவரிக்கிறார். விவரிப்பில் ஒரு கிண்டல். உதாரணமாக அவர்கள் குடியிருந்த லான்ஸ் பாராக்ஸ் வீட்டினை இவ்வாறாக வர்ணிக்கிறார்.

// எப்போது கட்டியிருப்பார்களோ தேரியாது. பத்தடி உயரமுள்ள அரக்க உருவமுள்ளவர்களுக்காக அவற்றைக் கட்டியிருக்க வேண்டும்...ஒரு கதவுக்கும் ஸ்டூல் அல்லது நாற்காலி உதவி இல்லாமல் மேல் தாழ்ப்பாள் போடமுடியாது. வீட்டு நடுவில் கூரை இருபது இருபத்தைந்து அடிக்கு மேலே உயர்ந்து முன்பக்கம் பின்பக்கமாக சரிந்து வரும்.ஒவ்வொரு சுவரும் இரண்டடி பருமனுக்குக் குறையாது. வீட்டில் ஒட்டடையே அடிக்க முடியாது. அரைகுறை வெளிச்சத்தில் கூரையை அண்ணாந்து பார்த்தால் பயமாகக்கூட இருக்கும். வெள்ளைக்கார பட்டாளக்காரர்களுக்காக, அதுவும் ஈட்டி தாங்குபவர்களுக்காக என்று அகராதியில் பார்த்துத் தெரிந்தது. பட்டாளக்காரர்கள் ஒருவேளை எப்போதும் ஈட்டியைத் தாங்கியவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் ஈட்டி ஏகப்பட்ட நீளம் உடையதாக
இருக்கவேண்டும். ஈட்டி கூரையில் இடிக்கக்கூடாது என்றுதான் அவ்வளவு உயரமாகக் கட்டினார்களோ என்னவோ.//

இந்நாவலின் இந்தி மொழிபெயர்ப்பு வெளிவரும் முன்னர், மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டார் என அறிந்தபோது ஆச்சரியமாக இருந்த்தது. நாலாவது
அத்தியாயத்தில் அதற்குக் காரணம் தெரிந்தது “ஊரிலே எந்த ராஜாக்கார் தேவடியா மகன் சைக்கிளுக்கு லைட் ஏத்திண்டு போகிறான்? போலீஸ்காரன்
அவங்களைப் பிடிக்கறானா?”.

நாவல் கலவரத்தைப் பற்றியது தான் என்றாலும் கடைசி 4 அத்தியாயங்கள் தான் அதனைப்பற்றித் தீவிரமாகப் பேசுகின்றன. மற்றவற்றில் தெலுங்குதேசம் சென்று குடியேறிய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை நுட்பமாக விவரிக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகன் சந்த்திரசேகரனின் பார்வையிலிருந்து கதை சொல்லப்படுகிறது. சந்திரசேகரனின் கிருஷ்ணசாமி சகோதர்களுடனான விரோதம், தற்கொலை செய்துகொண்டபின்
தன்னை பத்திரப்படுத்திக்கொள்ள இடம் தேடி அலைவது, சட்டைகாரர்களுடனான நட்பு, குடும்பத்துடன் படம் பார்க்கசெல்லும் வைபோகம், ஆழ்வார் தன் தமக்கைகளுக்கு பாட்டு சொல்லித்தருவது என ஒவ்வொன்றையும் சுவாரஸியமாக விவரிக்கிறார். குறிப்பாக சந்திரசேகரனை பிரின்ஸ்பால் மேடையில் பாட அழைக்கும் போது நிகழும் சம்பவங்களை படு நகைச்சுவையாக எழுதியுள்ளார். நாவலைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் இந்தப்பகுதியை முதலில் படித்தால் இது ஏதோ ஹாஸிய நாவல் என்றுதான் எண்ணவேண்டியிருக்கும். இந்த சம்பவஙள் அடங்கிய ஐந்து பக்கங்களை ஒரு நகச்சுவை சிறுகதையாகத் தர முடியும்.

//அன்று நான் அணிந்திருந்த ஷர்ட் மிகவும் சிறியது. இடுப்புவரைதான் இருந்தது. அதன் பக்கவாட்டிலுள்ள இரு பிளவுகள் வழியாக என் இடுப்பும் அதில் ஒரு தொளதொள நிக்கரை நான் சுற்றிசுற்றி இறுக வைத்திருப்பதையும் எல்லாரும் பார்க்கலாம். பார்த்தார்களோ தெரியாது. நான் என் ஷர்ட்டை இழுத்துப் பிடித்த வண்ணம் மேடை நோக்கி ஊர்ந்தேன். நிக்கர் ரொம்பப் பெரியது. அதன் கால்கள் இரண்டும் கோபியர்கள் பாவாடை மாதிரி படபடவென்று அடித்துக்கொண்டன. அந்த பிரமாண்ட நிக்கர் கால்கள் வழியாகக் குளிர்ந்த காற்று வீசியடித்து என் அடிவயற்றுப் பாகத்தை அப்படியே மரத்துப் போக வைத்த மாதிரி இருந்த்தது//

இறுதியில் லம்பாடிகள் நிஜாமியர்களால் கொல்லப்படுவது, காந்தியின் மறைவு, போர் தீவிரமடைந்து எங்கும் வெளியில் செல்லமுடியாமல்
தனிமைப்படுத்தப்படுவது பொன்றவையும் சொல்லப்படுகின்றன.இவை நிகழ்ந்து சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு அசோகமித்ரன் இந்நாவலை
எழுதியிருக்கின்றார். கண்முன் காட்சிகளை விரியச்செய்யும் நுண்ணிய விவரிப்பும், நிகழ்வுகளை நேர்மையுடன் பதிவு செய்திருக்கும் விதமும் இந்நாவலை தமிழின் தலை சிறந்த நாவல்களின் பட்டியலில் இடம்பெறச் செய்கின்றன.

Wednesday, August 06, 2008

இரண்டு திரைப்படங்கள்

கடந்தவாரம் அருமையான இரண்டு மராத்திப் படங்களைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அப்போதுதான் நாம் பிற(இந்திய)மொழிப்படங்களை எந்த அளவிற்கு தவறவிடுகின்றோம் என்பதை உணர முடிந்தது. இரானியப் படங்களையும், ஜெர்மன் படங்களையும் சிலாகிக்கத் தெரிந்த நாம் பெங்காலிப் படங்களையும், மராத்திப் படங்களையும் கொண்டாடுவதில்லை. அகிரா க்ரொசொவாவையும், ராபர்ட் பென்கினியையும் அடையாளம் காண்டு கொள்ளத் தெரிந்த நமக்கு அடூர் கோபாலகிருஷ்ணனையும், ஷாந்தாரமையும் யாரென்றே தெரியவில்லை.உலகத் தரத்திற்கு இணையாக நம் நாட்டிலும் படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதற்கு இந்த இரு படங்களுமே சாட்சி.

Shwaas(ஸ்வாசம்)


2004 ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த திரைப்படத்திற்கான தேசியவிருதினைப் பெற்ற இப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தினை அடிப்படைகயாகக் கொண்டது. கிராமத்திலிருந்து தனது ஏழுவயது பேரன் பரசுராமை அழைத்துக் கொண்டு நகரத்திலிருக்கும் மருத்துவமனைக்கு வருகிறார் முதியவர் ஒருவர். தூரப்பார்வையில் சிரமப்படும் அந்த சிறுவனுக்கு பரிசோதனைகள் எடுக்கப் படுகின்றன.பின் அவனுக்கு மிக அரிய வகை "ரெட்டினொப்ளாஸ்டோமா" என்ற ரெட்டினல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அவன் உயிர்வாழ இரண்டு கண்களையும் அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவதுதான் ஒரேவழி என்று மருத்துவர் கூறிவிடுகிறார். இந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாமல் தவிக்கும் முதியவருக்கு மேலும் சங்கடங்கள் காத்திருக்கின்றன. அதாவது ஒருவரது உடலிலிருந்து அவயங்கள்
நீக்ககுவதற்கு முன் அவருக்கு அதுபற்றி தெரியப்படுத்த படவேண்டும் என்பது சட்டம். இந்தக் கொடிய செய்தியை அந்த சிறுவனுக்கு சொல்லமுடியாமல்
தவிக்கிறார்கள். ஒரு சமூகசேவகி,மருத்துவர் இவர்களின் உதவியால் ஒருவாறு அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடுசெய்யப்படுகிறது.அறுவைசிகிச்சைக்கு முதல்நாள் அந்த சிறுவனும்,அந்த முதியவரும் மருத்துவமனையிலிருந்து காணாமல் போகிறார்கள்.அடுத்த நாளிலிருந்து இருளுக்குள் செல்லப்போகும் தன் பேரனுக்கு அன்றைய நாள்முழுவதும் வண்ணங்களைக் காட்டுகிறார்.இறுதியாக விழியிழந்த்தோர் விடுதிக்கு அழைத்துச் சென்று நிதர்சனத்தை அறியப்படுத்துகிறார். அடுத்தநாள் அறுவைசிகிச்சை நடக்கிறது. இறுதிக்காட்சியில் சிறுவனும்,முதியவரும் படகில் தங்கள் ஊருக்கு போகிறார்கள். படகு மெதுவாக கரையை நோக்கி வருகிறது.அந்த சிறுவன் கறுப்புக்கண்ணாடி அணிந்து அமர்ந்திருக்கிறான்.படகு கரையை
அடைந்துவிட்டதை உணர்ந்துகொண்ட சிறுவன் உற்சாகத்தில் குதூகலிக்கிறான். அத்துடன் படம் முடிவடைகிறது.

கொஞ்சம் தப்பினாலும் அழுகாச்சி நாடகமாகிவிடும் அபாயம் இருக்கும் கதை. அழகான திரைக்கதையாலும், இயல்பான காட்சி அமைப்புகளாலும் தேர்ந்த
நடிப்பினாலும் குறிப்பிடத்தக்க படமாகிறது. தனக்கு ஏற்படப்போகும் பயங்கரத்தை உள்வாங்கிக் கொள்ளமுடியாமலும், பார்வை மங்குவதன் கஷ்டங்களை தாங்கிக்கொள்ள முடியாமலும் உணர்ச்சிகளை அச்சிறுவன் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளான்.மருத்துவரும்,முதியவரும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்கள். பார்வை பறிபோகும் விஷயத்தை அந்த சிறுவனுக்கு புரியவைக்கும் காட்சி, முதியவர் சிறுவனுக்கு ஊர்சுற்றிக்காட்டும் காட்சி போன்றவை சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன.குறிப்பாக கருப்புக்கண்ணாடியுடன் சிறுவன் படகில் அமர்ந்திருக்கும் இறுதிக்காட்சி கண்களைப் பனிக்கசெய்கிறது.அந்த வருடத்தின் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியாவிலிருந்து இப்படம் அனுப்பிவைக்கப்பட்டது. இயக்குனர் சந்தீப் சாவந்திற்கு இது முதல் படம் என்பதை நம்பமுடியவில்லை.

Tingya(டிங்யா)


விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில் அதனை ஒட்டி வெளிவந்திருக்கும் திரைப்படம். இதுவும் ஒரு குழந்தை கதாபாத்திரத்தை (டிங்யா) மய்யமாகக் கொண்ட கதைதான். டிங்யா என்ற சிறுவன் அவர்கள் வீட்டு மாட்டுடன் மிகுந்த்த பாசத்துடன் இருக்கிறான். மாடு திடீரென நோய்வாய்படுகிறது. உழவுமாடு நோய்வாய்ப்பட்டதால் டிங்கியாவின் தந்தைக்கு விவசாயம் பாதிக்கப் படுகிறது.மிகுந்த யோசனைக்குப் பின் மாட்டினை விற்க(இறைச்சி) முடிவு செய்கிறார். அதனைத் தடுக்க டிங்க்யா எடுக்கும் ப்ரயத்தனங்களும், அதன் விளைவுகளும் தான் கதை. ஒரு படம் ஒன்பது மாநில விருதுகளைப் பெறுவதென்பது இதுவே முதல் முறை.

படம் துவங்கிய 10 நிமிடங்களில் அந்த கிராமத்துடன் ஒன்றிப் போகிறோம். படம் எந்த பிரச்சனையையும் நேரிடையாகச் அணுகாமல் மறைமுகமாக சொல்லியிருபது இப்படத்தின் சிறப்பு.தற்கொலை செய்துகொண்ட விவசாயின் மனைவி கதறும் அந்த இரண்டுவினாடிக்காட்சி ஏற்படுத்தும் பதைபதைப்பு இதற்கு ஒரு உதாரணம். கள்ளம் கபடமற்ற அந்த சிறுவனின் அப்பாவித்தனமான கேள்விகளும் அதன் பின்னணியில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள பெரிய சங்கதிகளும்தான் படத்தின் கரு. உதாரணமாக டிங்யா வாசற்படியில் அமர்ந்திருக்க, அவனது தாய் 'வாசற்படியில் உட்காராதே லட்சுமி வீடுக்குள் வரும் நேரம்' என்கிறார். உண்மையிலேயே
லட்சுமி வருகிறாளா என்று ஆச்சரியமாகக் கேட்கிறான் டிங்யா. வறுமையில் வாடும் அந்த விவசாயின் மனைவி பதில் சொல்ல முடியாமல் மலைக்கிறாள். கிராம மக்கள் கால் நடைகளுடன் கொண்டிருக்கும் அன்பு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. மொழி புரியாவிட்டாலும் பின்னணியில் வரும் அந்த நாடோடிப் பாடல் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது. காமிரா மலையின் இளம் வெயிலையும், இரவையும், குளிரையும் கூட படம் பிடிக்கிறது. இப்படி ஒரு மிகையில்லாத அசலான கிராமத்துப்படம் பார்த்து எத்தனை காலமாகிறது.

*********
இந்த இரண்டு படங்களையும் பார்த்தபோது போது தொன்றியவை
பாலுமகேந்திரா, மகேந்த்திரனுக்குப் பிறகு இயல்பான படங்கள் எடுப்பதற்கு தமிழில் இன்னும் ஆள்வரவில்லை.

அதிகப் பிரசங்கித்தனமாக பேசுவதுதான் நல்ல நடிப்பு என குழந்தை நட்சத்திரங்களுக்கு சொல்லிக்கொடுத்து வைத்திருக்கும் நம்ம ஊர் இயக்குநர்கள்(மணிரத்னம் முதற்கொண்டு) அனைவரும் பார்க்கவேண்டிய படங்கள் இவை.

Monday, August 04, 2008

தேசியகீதச் சிந்தனைகள்

சமீபத்தில் தூக்கம் தொலைந்த ஒரு இரவில் படம் பார்க்கத் திரையரங்கிற்கு சென்றிருந்த்தேன். அந்த பதினோரு மணிக்காட்சிக்கும் திரையரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.எனக்கருகில் இருந்த இரு காலி இருக்கைகளில் நல்ல பிகர்கள் வந்தமர ஆண்டவனை வேண்டிக்கொண்டிருந்தவேளையில் அழகான இரானிய பெண் வந்து ஒரு இருக்கை தள்ளி அமர்ந்தாள்.பிரார்த்தனை வேலைசெய்வதாய் சந்தோஷப்பட்ட தருணத்தில் என் எண்ணத்தில் மண்.எங்களுக்கு இடையிலிருந்த இருக்கையில்தாடி வைத்த ஒரு இரானிய இளைஞன் வந்தமர்ந்தான்.அந்த பெண்ணின் காதலன் என்று நினைத்துக்கொண்டேன்.படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதத்திற்கு அனைவரும் எழுந்து நிற்குமாறு அறிவிப்பு வந்தது.அனைவரும் எழுந்துநிற்க அந்த இளைஞன் மட்டும் உட்கார்ந்து கொண்டே இருந்தான்.சுற்றி இருப்பவர்கள் அவனை ஒருமாதிரியாகப் பார்க்க,உடன் வந்த பெண்ணும் வற்புறுத்த வேறு வழியின்றி முனகிக்கொண்டே எழுந்து நின்றான்.போதாக்குறைக்கு அன்று வழக்கமான 52 வினாடி தேசியகீதம் பாடப்படவில்லை.லதாமங்கேஷ்கர் பாட்டி மெதுவாக முதல் அடி பாட,அவரதுசகோதரி ஆஷா போஸ்லே இரண்டாவது அடியை எடுத்துக்கொடுக்க,இதற்கிடையில் புல்லாங்குழல் வித்வான் அவரது திறமையைகாண்பிக்க, தேசியகீதத்திற்கு நடுவிலும் இடைவேளை விட்டால் பரவாயில்லை என்று தோன்றியது.இப்போது அந்த இரானிய இளைஞனின் மனோநிலையில் தான் நானும் இருந்தேன்.இந்த அர்த்தராத்திரி வேளையில் திரையரங்கங்களில்தேசியகீதம் பாடப்படுவதன் தாத்பரியம் என்னவென்று விளங்கவில்லை. தேசப்பற்றினை இதன் வாயிலாக இஞ்ஜெக்ட் செய்வதுதான் நோக்கமெனில் அது நிகழவில்லை.



தேசியகீதம் பற்றி நான் இப்படி சிந்திப்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.ஏனெனில் பள்ளி நாட்களில் தேசியகீதம், தேசியகொடி, சுதந்திரதினம் போன்ற வஸ்த்துக்களின் மீது அதிக பற்றுடன் இருந்தது நினைவில் இருக்கிறது. ஒவ்வொரு வகுப்பிலும் தேசம் பற்றிபேசும்,தேசப்பற்று பற்றி பேசும் ஒரு ஆசிரியர் அமைந்தார். என்னுடன் எட்டாம் வகுப்பு படித்த தோழன், “ஜெயஹே ஜெயஹே சொல்ரப்பொ எனக்குசிலிர்க்கும் டா” என்பான். உண்மையாகவே அவனது கைமயிர்கள் குத்திட்டு நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.நானும் பல முறை முயற்சித்துப்பார்த்தேன். தேசியகீதத்தின்போது திருப்பூர்குமரனையெல்லாம் நினைவில் நிறுத்தியும் ஒன்றும் சிலிர்க்காததால் முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.என்றாலும் அவனைவிட எனக்கு தேசப்பற்று இரண்டு டீஸ்பூன் குறைவு என்பதில் ரொம்ப நாளைக்கு வருத்தமிருந்தது. கிராமங்களில் சுதந்த்திரதினம் திருவிழாவுக்கு இணையாகக் கொண்டாடப்படும்பண்டிகை. தியாகிகளின் சொற்பொழிவுகள்,பேச்சுப்போட்டி,கொடியேற்றம் என சுதந்திரம் தொடர்பான சிந்தனைகளாலேயே அன்றைய நாள் முழுவதும் கழியும். நகரத்திற்கு குடிபெயர்ந்தபிறகு சுதந்திரதினம் ஒரு விடுமுறைதினமாக மட்டுமே பாவிக்கப்படுவது கண்டு வியப்பாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக,திரைக்கு வந்து சில மாதங்களே ஆன ஏதோ ஒருகளிசடையைப் பார்க்கும் கூட்டத்தோடு நானும் இணைந்துகொண்டேன்.


தொலைக்காட்சியில் அப்போது பார்த்த 'அபூர்வராகங்கள்' படத்தின் ஒரு காட்சி மிகப் பிடித்த காட்சியாக மனதில் தங்கிப்போனது.தேசியகீதம் பாடப்படும்போது ஒருநபர் மட்டும் சாவகாசமாக வேர்க்கடலையை சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அதைப் பார்த்துகமல் கோபம்கொப்பளித்தது, பாடல் முடிந்தவுடன் அந்த நபரைப் புரட்டி எடுத்துவிடுவார்.அந்தக் காட்சியைப் பார்த்ததிலிருந்த்தது நானும்தேசியகீதத்தை அவமதிக்கும் ஒரு நபரையாவது குத்துவிடவேண்டும் என்று முஷ்ட்டியை மடக்கிக் கவனமாகக் காத்திருந்தேன்.ரொம்ப நாட்களாகியும் அப்படி யாரும் அகப்படாதது எனது நல்லநேரம் என்றுதான் சொல்லவேண்டும். இப்போது அப்படி ஒருநபரைப் பார்த்தால் கோபப்படமாட்டேன் என்பயதைவிட நானேகூட தேசியகீதத்தின்போது கடலைசாப்பிட தயங்கமாட்டேன் என்பதுதான் உண்மை. காரணம் தேசப்பற்று அற்றுப்போய்விட்டது என்பதல்ல,தேசபக்தி பற்றிய எனது கண்ணோட்டம் மாறியிருக்கிறது என்பதே.”உன் அயலானுக்கு நீ செய்யும் நன்மைகள் யாவும் எனக்கே செய்யப்படுகின்றன”என்று பைபிளில் இறைவன் சொல்வதுபோல ஒரு வாசகம் வரும். அதுபோலத்தான் தேசப்பற்றும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும்,நலிந்தவர்களுக்கும் உதவும் ஒவ்வொரு தருணங்களிலும் தேசப்பற்று உடையவர்களாகின்றோம். அதனைவிடுத்து மனம்போல் சுயநலவாழ்வு வாழ்ந்துகொண்டு தேசியகீதத்திற்கும்,தேசியக்கொடிக்கும் மாத்திரம் விறைப்பாக சல்யூட் அடிப்பது என்பது,நட்சத்திர ஹோட்டலில் ஆயிரங்களை செலவழித்து உணவருந்திவிட்டு வாசலில் பிச்சைக்காரனுக்கு 1 ரூபாய் போடுவதன்மூலம் தன்னை கொடைவள்ளலாக கற்பனை செய்துகொள்வதற்கு சமம்.


இதனால் தேசியகீதத்திற்கு மரியாதை செய்யாதீர்கள் என்று நான் சொல்லவரவில்லை. உன்மையான தேசப்பற்று இல்லாதபட்சத்தில்இந்த போலி மரியாதைகளால் எந்த புண்ணியமும் இல்லை என்றுதான் சொல்கிறேன். எனக்குமே இந்த குற்றஉணர்ச்சி இருப்பதால்தான் இதனை உறுதியாகச்சொல்ல முடிகிறது. படிக்கும் காலங்களில் சமூகத்திற்கு இதை செய்ய வேண்டும், அதைச் செய்யவேண்டும் என மனக்கோட்டைகட்டி வேலைக்குவந்து சம்பாதிக்கத் துவங்கியபின் அங்கொன்று இங்கொன்றுமாக செய்து நாளடைவில் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகத்தான் நானும் மாறிப்போனேன்.வரி ஏய்ப்புசெய்யும்,கருப்புப் பணத்தைப் பதுக்கும் பணமுதலைகளுக்கு நடுவில் ஒழுங்காக வரியைச் செலுத்தும் நாம் எவ்வளவோ மேல் என்றாலும், அது மட்டுமே போதாது என்பதும் தெரிந்தே இருக்கிறது.



மனம் திரைப்படத்தில் லயிக்கவில்லை. அலைபோல எண்ணங்கள் வந்துகொண்டே இருந்தன.அடுத்தமுறை தேசியகீதத்திற்கு எழுந்து நிற்கையில் “தவ சுப நாமே ஜாகே” யில் கவனம் செலுத்தாமல் உருப்படியாக ஏதாவது செய்வதைப் பற்றி யோசிக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். படம் விட்டு வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மனதில் சுகிர்தாரிணியின் இந்தக் கவிதை நிழலாடிச் சென்றது.இந்த கவிதைக்கும் எனது இந்தக் கருத்துக்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்ன?



இடமற்று நிற்கும்

கர்பிணியின்

பார்வை தவிர்க்க

பேருந்துக்துக்கு

வெளியே பார்ப்பதாய்

பாசாங்கு செய்யும் நீ

என்னிடம் எதை

எதிர்பார்க்கிறாய்

காதலயா?

************


தெளிவான சிந்தனைகளால் தான் ஒரு கருத்தை சரியாகச்சொல்லமுடியும் என்று படித்திருக்கிறேன்.ஆனால் எனதுஇந்தப் பதிவு தெளிவற்ற சிந்த்தனைகளினால் விளைந்தது.எனவே தவறுகள் இருப்பின் பொருத்தருள்க.கருத்துக்களுக்காகவும் திருத்தங்களுக்காகவும் காத்திருக்கிறேன்.என்னை இந்த வாரத்தின் நட்சத்திரமாக தேர்ந்தெடுத்திருக்கும் தமிழ்மணத்திற்கும்,ஒருவாரகாலத்திற்கு என்னைப் பொருத்துக்கொள்ளப் போகும் வாசகர்களுக்கும் வணக்கங்கள்.

Saturday, June 28, 2008

அமிர் மற்றும் பின் கதைச் சுருக்கம் பற்றிய குறிப்புகள்

அமிர்(Amir)


"Only Sex and Sharuk sell in Bollywood"

-Neha dhupia,Actress

இது ஏறக்குறைய உண்மைதான்.பாலிவுட்டில் வணிகரீதியாக பெரும் வெற்றி பெரும் படங்களையும் அதன் தரத்தினையும் பார்த்தாலே இது விளங்கும்.என்றாலும் மணிரத்னம்,கமல் என பலரும் பாலிவுட் நோக்கியே படையெடுப்பதற்குக் காரணம் உச்சபட்ச விசிபிலிட்டியும் அதன் வாயிலாகக் கிடைக்கும் அங்கீகாரமும் தான்.வித்தியாசமான முயற்சிகள் கல்லாப் பெட்டியை நிரப்பாவிட்டாலும் மக்களின் கவனத்தைக் கவரத் தவறுவதில்லை.அம்மாதிரியான ஒரு முயற்சி தான் அண்மையில் நான் பார்த்த "அமிர்" என்ற திரைப்படம்.90 நிமிடங்களே ஓடும் இந்த ஆங்கில பாணிப்படம் 'த்ரில்லர்' என்று வகைப்படுத்தப் பட்டாலும் அதற்கு சமூகப் பிரச்சனை ஒன்றை அலசும் வேறு ஒரு முகமும் உண்டு.லண்டனிலிருந்து திரும்பும் அமிர் அலி என்ற இளைஞனின் ஒருநாளைய வாழ்க்கைதான் படம்.விமான நிலையத்தில் "அமிர்" என்ற பெயர் காரணமாக பலமுறை பரிசோதிக்கப் படுகிறான்(என் பெயர் அமர் என்று இருந்தால் இவ்வளவு நேரம் பரிசோதிப்பீர்களா?).தன்னை வரவேற்க தனது குடும்பத்தார் யாரும் வராதது கண்டு குழம்பும் அமிருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.மோட்டார் சைக்கிளில் வரும் இருவர் அமிர் கையில் செல் போனை திணித்து விட்டு மறைந்து போகிறார்கள்.செல் போன் மணியடிக்கிறது.அமிர் அதனை எடுத்துப் பேச ,அடுத்து அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் அந்த மர்மக் குரல் தீர்மானிக்கிறது.இறுதியில் அது அவனை எப்படி விபரீதத்திற்கு இட்டுச் செல்கிறது என்பது மீதிக்கதை."ஃபோன் பூத்" படத்தை கொஞ்சம் நினைவு படுத்தினாலும் இஸ்லாம் பயங்கரவாதம் பற்றிய பிரச்சனையும் கையாள்வதால் வேறுபடுகிறது.நான் அண்மையில் திரைப்படவிழாவில் பார்த்த "குதா கேலியெ" இப்பிரச்சனையை நேரடியாக அணுகுகிறது(3.30Hrs).அமிர் அதைவிட புத்திசாலித்தனமாக பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்துகிறது.மும்பையின் சேரிகள் மிகைப்படுக்தப் படாமல் காமிராவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பெரும்பாலும் CLose up காட்சிகள் நிறைந்த இப்படத்தில்,அறிமுக நாயகன் ராஜீவ் கண்டேவால் தனது இயல்பான முக பாவங்களால் கவர்கிறார்.தாராவியின் பொதுகழிப்பறையைக் காட்டும் போது பார்க்கும் நமக்கு இங்கு குமட்டிக்கொண்டு வருகிறது(காமிரா முதல் தரம்).இவ்வ்ளவு இருந்தும் படத்தின் நடுப்பகுதியில் திரும்பத் திரும்ப வரும் ஒரே மாதிரியான காட்சிகளினால் சலிப்பு ஏற்படுகிறது.இந்தத் தொய்வைப் போக்கி வேகத்தைக் கூட்டியிருந்தால் அறிமுக இயக்குநர் ராஜ்குமார் குப்தாவின் இந்தப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றிபெற்றிருக்கும்.



பின் கதைச் சுருக்கம்


நல்ல எழுத்தாளர் அடிப்படையில் நல்ல வாசகராக இருத்தல் அவசியம்.அப்படி ஒரு எழுத்தாளரின் வாசக அனுபவங்களைப் படிப்பது சுகானுபவம்.குறிப்பாக படிக்கவேண்டும் என்ற எண்ணமும், என்ன படிக்க வேண்டும் என்ற தெளிவின்மையும் உள்ள ஆரம்ப கட்ட வாசகருக்கு இத்தகைய வாசக அனுபவங்கள் நல்ல வழிகாட்டிகள் எனலாம்.அந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் மனதிற்கு நெருக்கமான ஒரு புக்தகம்.இதேபோல வாசக அனுபவங்களைச் சொல்லும் "பின் கதைச் சுருக்கம்"என்ற நூலை அண்மையில் படிக்க நேர்ந்தது.பா.ராகவன் இந்த ஒல்லியான புத்தகத்தில், இளம் வயது தொட்டு தான் படித்து வந்த நாவல்களில் தன்னைக் கவர்ந்தவற்றை பற்றி சுவாரசியமாக விவரித்திருக்கிறார்.ஆனால் கதாவிலாசம் போல ஒரு வரிசைப்படி அல்ல.க.விலாசத்தில் எஸ்.ரா தனது அனுபவம் ஒன்றைச் சொல்லி அதன் முடிவில் அதனையொத்த ஒரு கதையினை விவரித்து பின் அதன் வாயிலாக அந்த ஆசிரியரை அறிமுகப்படுத்துவார்.எல்லா அத்தியாயங்களும் இதே வரிசையில் தான் அமைந்திருக்கும். பி.க.சுருக்கத்தில் ஒரு அத்தியாயத்தில் ஒரு ஆசிரியரை பற்றி விரிவாக எழுதுகிறார்,அடுத்ததில் ஒரு புத்தகம் எழுதப்பட்டதன் பின்னணி,பிறகு ஒரு எழுத்தாளருடனான தனது அனுபவங்கள்,தான் கதை எழுதிய கதை என சுய விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசையற்ற குறிப்புகளாக விரிகின்றது.


புத்தகத்திலிருந்து...


*அலை உறங்கும் கடலான ராமேஸ்வரம் பற்றியும்,அளவிலா அதன் அதிசயங்கள் பற்றியும்,அதிசயங்களை விற்றுப்பிழைக்கும் அம்மக்களின் வாழ்நிலை பற்றியும் சொல்கிறார்.தனது"அலை உறங்கும் கடல்" நாவலுக்கான சரடு இக்கட்டான ஒரு தருணத்தில் கிட்டியதை விவரித்து 'வாழ்வின் ஏதோ ஒரு கணம் சட்டென்று சமநிலைதவறி வெடித்துச் சிதறும்போதுதான் சிறிய கலைப்படைப்புகளிலிருந்து பேரிலக்கியங்கள் வரை சுருக்கொள்கின்றன' என்கிறார்.

*அசோகமித்ரனின் 18வது அட்சக் கோடு,தண்ணீர் பொன்ற நாவல்களைக் கேள்விப்பட்ட அளவிற்கு 'ஒற்றன்' அவ்வளவு பரிச்சயமில்லை.ஆனால் பா.ரா தமிழ் எழுத்துத் துறையில் இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்று இந்நாவல் என்கிறார்.1973-ல் அயோவா நகர பல்கலைக்கழகம் பல்வேறு நாடுகளிலிருந்தும் அழைக்கப்பட்ட எழுத்தாளர்களைக்கொண்டு எழுத்துப்பட்டறை ஒன்றை 7 மாதகாலத்திற்கு நடத்தியது.அதில் பங்கேற்ற அசோகமித்ரன்,தனக்கேற்பட்ட அனுபவங்களை சுவையாக விளக்கும் நாவல் தான் ஒற்றன்.

*நோபல் இலக்கியவாதி எர்னஸ்ட் ஹெமிங்வே பற்றிய ஒரு கட்டுரை.மணவாழ்வில் அவருக்கு ஏற்பட்ட படுதோல்வியும்,சக எழுத்தாளரான பக்னரின் வெற்றியின் மீது ஏற்பட்ட பொறாமையும் இலக்கியவெற்றிக்கு அவரை உந்தித்தள்ளிய மறைமுக காரணிகள் என்கிறார்.ஹெமிங் வேயின் "Old man and the sea" இப்போது வாசிக்கத் துவங்கியிருப்பதால்,இக்கட்டுரை படிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

*இந்திரா பார்த்தசாரதியின் "ஏசுவின் தோழர்கள்"(Comrades of Jesus) தமிழில் எழுத்தப்பட்ட ஆங்கில நாவல் என்கிறார்.அரசியல் நெருக்கடி மிகுந்த காலத்தில் இ.பா போலந்தில் ஐந்தாண்டுகள் தங்கியிருக்க நேர்ந்தது.அப்போது அதன் அரசியல் நிலவரங்களைக் கூர்ந்து நோக்கி எழுதப்பட்ட நாவல் ஏசுவின் தோழரகள்.சமகால அரசியல் நிலவரங்களை இ.பா அளவுக்கு தமிழ் படைப்பிலக்கியத்தில் வெற்றிகரமாகக் கையாண்டவர்கள் குறைவு என்கிறார்.இ.பவின் எளிமை பற்றியும்,அதீத நகைச்சுவையுணர்வு பற்றியும் சிலாகிக்கிறார்.நான் இ.பா படித்ததில்லை.படிக்க வேண்டும்.
*நாகூர் ரூமியின் பெயரை முதலில் கேள்விப்பட்டபோது எதோ ஆண்மைகுறைவு லேகியம் விற்கும் லாட்ஜ் வைத்தியர் போன்ற பிம்பம்தான் தோன்றியதாகவும் பார்க்க அவர் ஜீன்ஸ் போட்ட அகத்தியர் போலிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.ரூமியின் "குட்டியப்பா" நாவலில் தமிழில் இதுகாரும் எழுதப்படாத உயர்தர நகைச்சுவை இருப்பதாகக் கூறுகிறார்.குட்டியப்பா கதாப்பாத்திரம் உண்மையில் ரூமியின் மாமனார்தான் என்பதையும், நிஜத்துக்கும் கதாபாத்திரத்திற்குமான இடைவெளி மிகக்குறைவு என்பதையும் அறிய வியப்பாக இருக்கிறது.கட்டுரை படித்தவுடன் வாங்கிப் படிக்கவேண்டு என்று தோன்றிய புத்தகங்களில் குட்டியப்பா முக்கியமானது.

*இவை தவிர பிறமொழி நாவல்களில், மார்க்குவேஸின் லத்தீன் அமெரிக்க நாவலான நூற்றாண்டுகால தனிமை(One Hundred years of Solitude), டால்ஸ்டாயின் தோல்வியுற்ற நாவல் புத்துயிர்(Resurrection), வைக்கம் முகமது பஷீரின் சரஸ்வதிதேவியுடனான காதல் மற்றும் அவரது டைரிக்குறிப்புகள் "அனுராகத்தின் நாட்கள்" என நாவலாக்கப்பட்ட விதம், ஸ்டாலின் காலத்து சித்திரவதைக் கூடங்களை விவரிக்கும் "இவானோ டெனிஸோவிச்சின் வாழ்விலே ஒருநாள்"(One day in the life of Ivan denisovich), பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

*மேலும் எம்.வி.வி தனக்கு காதில் வினோதமான ஒலிகள் கேட்பது பற்றி எழுதிய "காதுகள்" நாவல்( தமிழின் முதல் மாய-யதார்த்தவாத முயற்சி என்கிறார்.), தனது நண்பர் ஆர்.வெங்கடேஷின் "இருவர்" நாவல், உற்சாக மனிதர் வேணுகோபாலின் நுண்வெளிக்கிரணங்கள் பற்றிய கட்டுரைகள் நன்றாக எழுதப்பட்டுள்ளன. பிரபஞ்சன், சமுத்திரம், விஷ்ணுபுரம், சல்மான்ருஷ்டி பற்றிய கட்டுரைகள் அழுத்தமாக இல்லை.


வலை(பதிவு) மேய்வதின் ஆகப்பெரிய பயனாக நான் கருதுவது புத்தகங்கள்/திரைப்படங்கள்/கலைப்படைப்பு இவற்றைப்பற்றி அறிமுகம் கிடைப்பதுதான்.நல்ல அறிமுகங்கள் அவற்றைத் தேடி படிக்க/பார்க்க தேவையான உந்துதலைத் தரும். எல்லா எழுத்தாளர்களும் இதுபோல தங்களைக் கவர்ந்த புத்தகங்களைப் பற்றிய பட்டியலையும் அறிமுகத்தையும் தந்தால் நன்றாகயிருக்கும்.ஏனென்றால் எழுத்தாளர்கள் யாவரும் நல்ல வாசகர்கள் என்பதில் எனக்கு நிரம்பவும் உடன்பாடு உண்டு.

Friday, June 13, 2008

தசாவதாரம் விமர்சனம்(without spoilers)




டிஸ்கி:நான் without spoilers போட்டதுக்கு காரணம் என் பெருந்தன்மை அல்ல.கதையை சொல்வது அவ்வளவு கடினம்.ஒரு பயணம் போல நீளமாக செல்லும் இந்த திரைக்கதையை இரண்டு வரிகளில் சொல்லலாம் அல்லது கமல் போல மூன்று மணிநேரத்தில்(3.10) சொல்லலாம்.ஆனால் சஸ்பென்சை உடைக்கிறேன் என்று யாரும் உங்களை ஏமாற்ற முடியாது.அதனால் தைரியமாக படியுங்கள்.


படம் மிக நன்றாக இருக்கிறது.சற்றே நீளமாக இருந்தாலும் Worth watching.கமல் தனது இரண்டு வருட உழைப்பிற்கு நியாயம் செய்திருப்பதாகவே உணர்கிறேன்.வெவ்வேறு அவதாரங்களில் படம் முழுவதும் கமல் வியாபித்திருக்கிறார்.நான் வெவ்வேறு அவதாரங்கள் எனக்குறிப்பிட்டதில் கமலின் எழுத்தாள,நாத்திக அவதாரங்களும் அடங்கும்.

"கிறித்துவமும்,இஸ்லாமும் இந்தியாவிற்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் நுழையாத 12ஆம் நூற்றாண்டில்,விஷ்ணுவும் சிவனும் தங்கள் பக்தர்கள் வாயிலாக மோதிக்கொண்ட தமிழகத்தில்...." என கமலின் கனமான narrationனுடன் படம் துவங்குகிறது.படம் முழுவதும் கமலின் வசனங்கள் அசத்தல்(எனது வோட்டு கமலின் இந்த எழுத்தாள அவதாரத்துக்குத்தான்).


படத்தின் கிராபிக்ஸ் இந்திய திரைப்படங்களின் தரத்திலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது.அதற்காக MATRIX ரேஞ்சுக்கு இருக்கும் என்று எதிர்பார்த்துப் போனால் சாரி...அதற்கும் இன்னும் தொலைவு(சற்று) இருக்கிறது.பட்த்தின் மிகமுக்கிய அம்சமான மேக்-அப் அருமையாக இருக்கிறது.பூவராகன்,பல்ராம் நாயுடு,ஜப்பானிய கமல்(சுத்தமக அடையாளம் தெரியாது) இவற்றின் மேக்-அப் உறுத்தாமல் சிறப்பாக வந்திருக்கின்றன.மோசமாக வந்திருப்பது வில்லன் கமல்.தொலைவுக் காட்சிகளில் அவ்வளவு நன்றாக இல்லாத புஷ் கமல், close up காட்சிகளில் மிரட்டலாக இருக்கிறார்.அமெரிக்க கமல் பேசும் வசனங்கள் யாவும் ஹாலிவுட் பாணியில் எழுதியிருப்பது புத்திசாலித்தனம்.அமெரிக்க கமலும்,ஜப்பானிய கமலும் மோதிக்கொள்ளும் ஒரு காட்சியில்

அமெரிக்கன்: You remember Hiroshima?

ஜப்பானியன்: you remember pearl harbour?

தசா அவதரத்தில் கலக்கலான அவதாரம் தெலுங்கு-தமிழ் பேசும் பல்ராம் நாயுடுதான்.தெலுங்கு காரர்களை ஒட்டு ஓட்டு என்று ஓட்டித் தள்ளியிருக்கிறார்(He speaks many languages,He speaks 5 languages in Telugu).அதேசமயம் "ஏன்யா,நான் தெலுங்கு,நான் தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் கத்துகிட்டு தமிழ் பேசரேன்,தஞ்சாவூர்காரன் நீ என்கிட்ட இங்லீஷ்ல பேசற" என்று பீட்டர் தமிழர்களை ஒரு பிடி பிடிக்கிறார்.தலித்தின மக்களின் பிரதிநிதியாக வரும் பூவராகன் கேரக்க்டரும் அருமை.தெற்கத்திய ஏற்ற இறக்கங்களுடன் அவர் பேசும் விதமும்,விஷயமும் பராட்டப் படவேண்டியவை.


இரண்டு மூன்று கமல்களாவது அந்தரத்தில் தொங்குகிறார்கள்.குறிப்பாக அந்த நெட்டைக் கமலும் அவதார் சிங்கும் படத்திற்கு வேகத்தடை.படம் நீளம் என்று யாரும் சொன்னால் இவர்கள் தலையில் கைவைக்கலாம்.முகுந்தா தவிர பாடல்கள் சொல்லிக்கொள்ளும் படி இல்லை(ரஹ்மான் இசையமைத்திருக்கலாமென்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவிலை)அதேபோல மல்லிகா ஷெராவத்தின் பாடலும் அநாவசியம்.மடிசார் கட்டிவரும் 12ஆம் நூற்றாண்டு அசினைவிட தாவணியில் வரும் அசின் சற்று மனதில் பதிகிறார்.அவ்வபோது சிரிக்க வைக்கிறார் கொஞ்சம் வெறுப்பேற்றுகிறார்(அசினை விட ஜெயப்பிரதா அழகாகத்தெரிகிறார் என்று சொன்னால் அசின் ரசிகர்களிடமிருந்து எதிர்ப்பு வருமோ?).Branded கமல்-கிரெஸி மோகன் வகை காமெடியும் படம்முழுவதும் அங்கங்கே தூவப்பட்டிருக்கிறது. நாகேஷ் , K.R.விஜயா, ரேக்கா,பாஸ்கர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.


கமல் தன் அப்பா பெயர் ராமசாமி நாயக்கன் என்கிறார்.படம் முழுவதும் நாத்திக கருத்துக்களை ஒளித்து வைத்திருக்கிறார்("மடம் ன்னா உள்ள கிரிமினல்கள் இருக்கக்கூடாதா?"- பல்ராம் நாயுடு).படத்தில் ஜெயலலிதாவும் வருகிறார்,கருணாநிதியும்(போலி) வருகிறார்.யாருடைய ஆட்சி காலத்தில் படம் வெளிவரும் என்ற நிச்சயமின்மை காரணமாக இருந்திருக்கலாம்.


இவ்வளவு கடினமான விஷயத்தை(10 roles concept) திட்டமிட்டு அதனை வரலாற்று நிகழ்வுடன் தொடர்பு படுத்தி எடுத்திருப்பது அபாரம்.கமலை திட்டவும் குற்றம் கண்டுபிடிக்கவும் படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.ஆனால் படம் நன்றாக இல்லை என்று கமலைப் பிடிக்காதவர்களால் கூட சொல்லமுடியாது.


இவ்வளவு பெரிய விமர்சனத்தை படிக்க பொறுமை இல்லாமல் கடைசி வரிக்கு தாவியவர்களுக்கு: படம் அருமையாக இருக்கிறது .தியேட்டருக்குப் போய் பாருங்கள்.கமல் மற்றும் குழுவினருக்கு "சல்யூட்".

Saturday, June 07, 2008

சுப்ரமண்ய ராஜு கதைகள் - வாசக அனுபவம்

எளிமையாக எழுதுவதுதான் உலகிலேயே கடினமான விஷயம்,எழுதிப்பாருங்கள் தெரியும் -Ruskin Bond

நேற்று இச்சிறுகதைத் தொகுப்பினைப் படித்துமுடித்தபோது, இது பற்றிய எனது எண்ணங்களைப்பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.சரியாகச் சொன்னால் ஆறு மாதங்களுக்கு முன்னரே எழுதியிருக்க வேண்டியது.புத்தகம் வாங்கி ஆறுமாதங்களாகிறது.ஏதேனும் ஒரு புது விஷயம் நம்மை ஈர்க்கத் துவங்கும்போது அதனைப் பற்றிய தகவல்கள் பல்வேறு திசைகளிலிருந்த்தும் நம்மை நோக்கி வந்தபடியே இருக்கும். இது எனக்கு பலமுறை நிகழ்ந்திருக்கிறது.சுப்ரமண்ய ராஜுபற்றி கேள்விப் பட்டதிலிருந்து அவரைப் பற்றிய செய்திகள் வலைபதிவுகள் வாயிலாகவும், நண்பர்கள்வாயிலாகவும் வந்து கொண்டே இருந்தன.ஆர்வம் மேலிட இந்தபுத்தகத்தை வாங்கிவந்துவிட்டேன். வரிசையாக கதைகளை வாசிக்கத் துவங்கி சிறிது நேரத்தில் ஆர்வம் குன்றி அங்கொன்று இங்கொன்றுமாக வாசித்து பத்து கதைகளுக்குள்ளாகவே மூடிவைத்துவிட்டேன்.அப்போது பரணுக்குபோன புத்தகத்தை இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வெளியிலெடுத்தேன். இந்தமுறை அவ்வளவு ஏமாற்றமில்லை.பெரிய எதிர்பார்ப்பு இன்மையும் காரணமாக இருக்கலாம். உண்மையில் பல கதைகள் என்னை ஆச்சரியபடுத்தின.
x
முப்பத்தியிரண்டு கதைகள் கொண்ட இத்தொகுப்பில் முப்பது சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும் அடங்கும்.ஒரு எழுத்தாளனின் முழு ஆக்கங்கள் என நோக்கும் போது அளவில் இது மிகவும் குறைவு.இதற்கு காரணம் அவர் 39 வயது வரைதான் வாழ்ந்தார் என தெரியவரும்போது மனது கனக்கிறது. ஆதவனின் கதைக்களம் டெல்லியை அடிப்படையாகக் கொண்டிருப்பது போல ராஜுவின் கதைக்களம் சென்னையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நடுத்தர மக்களின் அன்றாடபிரச்சனைகளும் தனிமனித ஒழுக்கச் சிக்கல்களும் தான் பெரும்பாலான கதைகளின் கரு.இவரது கதை சொல்லும் பாணியில் இருக்கும் அதீத எளிமைதான் இவரது பலம்.அருகில் ஒருவர் அமர்ந்த்து கதை சொல்லிக்கொண்டிருப்பதைப் போல மனதில் காட்சிகளை விரியச் செய்கிறார். ராஜுவின் வார்த்தை உலகமும் சிறியது என்றே தோன்றுகிறது. படிக்கும் பொழுது எந்த எதிர்பாராத வார்த்தையும் உங்களைஆச்சரியப் படுத்துவதில்லை. சுஜாதா போல வார்த்தைக் கலப்போ,ஆதவன் போல வடமொழிச்சொல் பிரயோகமோ இருக்காது(ஆனால் ஆங்கிலக் கலப்பு உண்டு)தெளிந்த நீரோடை போன்று ஓடிக்கொண்டே இருக்கிறது இவரது வர்ணனைகள். பார்க்கின்ற எதையும் இயல்பாக வர்ணிக்கத் துவங்கிவிடுகிறார். இது பல நேரங்களில் சுவாரசியமாகவும் சில நேரங்களில் சோர்வாகவும் இருக்கிறது.
x
கதையின் நாயகர்கள் பெரும்பாலும் சுவாமி நாதன், ராஜாராமன்என்ற பெயர்களையும் நாயகிகள் லதா, ராஜி என்ற பெயர்களையும்
கொண்டிருக்கிறார்கள். நாயகர்கள் எல்லாரும் ஸ்த்ரீ லோலர்கள்.பார்க்கிற பெண்ணையெல்லாம் புணருகிறார்கள் குறைந்த்தபட்சம் மனைவியையாவது சந்தேகிக்கிறார்கள். சொல்லி வைத்ததுபோல,கதை துவங்கி மூன்றாவது பாராவில்”ஹவ் அபெளட் விஸ்கி?” என்று கேட்கிறார்கள்.பெண்கள் அந்நியாயதுக்கு சோரம் போகிறார்கள்.
x
ராஜுவின் கதைகளில் பெரிய குறையாக நான் கருதுவது கதை முடிவுகளைத்தான்.மிக மிக சம்பிரதாயமான கதை முடிவுகள்.எந்த்த கதை முடிவும் அழுத்தமாகவோ வித்தியாசமாகவோ இல்லை(விதிவிலக்குகள்
உண்டு). சுஜாதாவிடம் சிறுகதை நுணுக்கங்களைப் பயின்றவர் ராஜு என்று படித்திருக்கிறேன்.ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறது இவர் பாணி. சுஜாதாவின் சுமாரான சில சிறுகதைகள் கூட அதன் எதிர்பாராத முடிவு காரணமாக மனதில் பதிந்து போகும். ஆனால் ராஜுவின் நல்ல சில சிறுகதைகள் கூட அதன் சோகையான முடிவு காரணமாக மனதில்பதிய
மறுக்கிறது.
x
இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த சிறுகதைகளாக கேள்விகள்,இன்னொரு கனவு,சாமி அலுத்துப் போச்சு,தூண்டில்,கொடி,நாலு பேர், வழியில்
சில முட்டாள்கள் மற்றும் காதலிக்கணும் சார் இவற்றைக் குறிப்பிடலாம். இரண்டு குறுநாவல்களில் 'இன்று நிஜம்' நாவலைக்காட்டிலும் 'இரவுகள் தவறுகள்' பிடித்திருந்த்தது. கொஞசம் இடறினாலும் ராஜேஷ் குமார் நாவல் போலாகிவிடும் அபாயம் இருந்தாலும் ராஜுவின் எழுத்துநடையால் தப்பிக்கிறது.'இன்று நிஜம்' ஒரு அருமையான நாவலுக்கான கதைக்களமும் துவக்கமும் இருந்த்தும் கூட சுவையற்ற இரண்டாவது பாதியால் கவனம் இழக்கிறது.
x
சுப்ரமண்ய ராஜுவின் நண்பரும் எழுத்தாளருமான தேவக்கோட்டை மூர்த்தி, ராஜு பற்றிய நினைவுகளை முன்னுரையில் சுவையாகப் பகிர்கிறார்.ஒரு எழுத்தாளரின் முழு ஆக்கங்களையும் தொகுப்பாகக் கொண்டுவரும் போது இத்தகைய விரிவான கட்டுரை அவசியமாகிறது. அந்த எழுத்தாளரை முதன்முறையாக படிப்பபவருக்கு அவரைப் பற்றிய பிம்பம் கட்டமைய இது உதவுகிறது.அவ்வகையில் மூர்த்தியின் கட்டுரை நன்றாகவே இருக்கிறது(அதற்காக ரயில்வே க்ராஸிங்கை கடக்க உதவியதையெல்லாம் குறிப்பிட்டு புளகாங்கிதம் அடைவது கொஞ்சம் ஓவர்).எழுத்தாளர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதராகவும் ராஜு நம்மைக் கவர்கிறார்.மூர்த்தியின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
x
”கற்பனை கலைக்கு முரண்” என்ற நகுலனின் கொள்கைதான் ராஜுவின் எழுத்தில் மீண்டும் மீண்டும் பரிமளித்தது.நெர்மாறாக அனுபவத்தை எழுதுவது அநேகமாக ரிபோர்ட்டேஜில்தான் முடிகிறது; எனவே கலைக்கு கரு கற்பனைதான் என்பதை விடாப்பிடியாக வைத்துக்கொண்டிருக்கிற ஆள் நான்.இந்த விவாதம் எங்களுக்குள் பலவருடங்கள் நடந்துகொண்டிருந்தது.ஒரு சமயம் பொறுமை மீறி,அவன் பாராட்டிய,என் ”புளிக்கும் திராட்சைகள்” நாவலின் கதாநாயகி கற்பனையில்தானே சாத்தியம் என்று கேட்டேன். ”யார் சொன்னது? உனக்கு புடவை கட்டினா அப்படித்தான் இருக்கும்” என்று சிரிக்காமல் சொன்னான் ராஜு.ஆனால் உன்னோட ஆர்க்யூமெண்ட் எனக்குதான் சாதகமா இருக்கு.எனக்கு புடவை கட்டினா என் நாயகி மாதிரி இருக்கும்ங்கறதே கற்பனைதானே ராஜு? என்று நான் பதில் சொல்ல,ராஜு சிரித்தான். ஆனால் என் கதாநாயகி போன்ற புத்திசாலியான பொறுமைசாலியான பரோபகாரியான, அதே சமயம் லேசான குறும்புக்காரியான பார்ப்பதற்கும் ரம்மியமான ஒரு பெண்,ராஜுவுக்கு,புடவை கட்டியிருந்தால் சுலபசாத்தியம் என்பது புரிந்தபோது,கலைக்கு அடிப்படை கற்பனையா அனுபவமா என்ற எங்கள் விவாதம் அன்றோடு முடிந்தது. 'How things ought to be' என்ற அயன் ராண்ட் விதியை கற்பனை என்ற சொல்லால் நான் வரையறுக்க, அனுபவம் எனற சொல்லால் ராஜு விவரித்தான். அதனால்தான் எழுத்தும் வாழ்வும் ஒன்றுதான் என்று இறுதிவரை ராஜுவால் இயங்க முடிந்தது.

காலத்தைக் கடந்து நிற்கும் 25 சிறுகதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன், அதில் சுப்ரமண்ய ராஜுவின் கதையும் ஒன்று, என்று சுஜாதா சொன்னதில் வியப்பேதும் இல்லை.தொகுப்பில் சிறப்பானவையாக பத்து கதைகளாவது தேறுகின்றன. ராஜுவின் எழுத்து யாரையும் பின்பற்றாத தனித்த ஒன்று. சிறுகதை சூத்திரங்களில் முக்கியமானதான எளிமை இவரது கதைகளில் இருந்தும் அதே எளிமை காரணமாக இலக்கிய சர்ச்சைகளிலிருந்தும் புறக்கணிக்கப்படவும் கூடும்.பெரிய எழுத்தாளர்கள் சிலரின் ஆரம்பகால கதைகளை படிக்கும் போது அவரா எழுதினார் என்றிருக்கும்.எல்லாருடைய எழுத்துக்களும் கால மாற்றத்திற்குட்பட்டவைதான், பண்படுதலுக்கு உட்பட்டவைதான்.ஆனால் ராஜுவிற்கு அந்த கால அவகாசம் கூட கிடைக்காமல் இளம்வயதிலேயே மாண்டது தமிழ் சிறுகதை உலகிற்கு மிகப்பெரிய இழப்புதான்.

Sunday, April 13, 2008

கருத்து கந்த்ஸாமி

நேற்று காலையில், முக்கிய செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக செய்திச்சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தபோது,ஒன்றில் Breaking News ஓடிக்கொண்டிருந்தது.ஆஜ் தக் என்று நினைவு.என்ன செய்தி? சாயஃப் அலிகானை காண்பிக்கிறார்கள்.அவரது கழுத்துக்கு ஒரு close-up.அங்கு ஒரு நகக் கீறல் ஏற்பட்டிருக்கிறதாம்.பிறகு கரீனா கபூர்,அவரது கைக்கு ஒரு close-up.அவருக்கும் நகக்கீறல் ஏற்பட்டிருக்கிறதாம்.இருவரும் டேட்டிங் செய்கிறார்களாம்.இதனால் சகலமானவர்களுக்கும் இந்த சேனல் சொல்ல விழைவது.....த்தூ...தொலைக்காட்சியை அணைத்துவிட்டேன்.இதைவிட கீழ்தரமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தால் செய்தி வழங்கமுடியாது.அதுவும் அனைவரும் செய்திகளைப்பார்க்கும் காலைவேளையில்.ஆஜ்தக் என்றில்லை ஸ்டார் நியூஸ்,இண்டியா டிவி,டைம்ஸ்,ஸீ என வரிசையாக பெரும்பாலான செய்தி சேனல்கள் இதையே தான் செய்கின்றன.இவற்றோடு ஒப்பிட்டால் NDTV.IBN Live பரவாயில்லை.சினிமா செய்திகளைக்கொடுக்க M,V என ஆயிரம் சேனல்கள் இருக்க இவர்களும் ஏன் இதையே செய்கிறார்கள் என்பது புரியவில்லை.விதர்பாவில் இந்தவாரம் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இன்றோடு 9 ஆக உயர்ந்துள்ளது.2008ல் மட்டும் 256 பேர்.2005லிருந்து இன்றுவரை மொத்தம் 1500 பேர்.சத்தமின்றி ஒரு இனப் படுகொலையே நடந்து கொண்டிருக்கிறது,ஆனால் மக்களுக்கு இத்தகைய செய்திகளைக் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய செய்தி ஊடகங்கள் சாயஃப் அலிகானின் கழுத்துக் காயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.


உண்ணாவிரதக் கூட்டத்தில் சத்ய ராஜ் முஷ்டியை மடக்கி உணர்ச்சிமயமாகப் பேசியதைப்பார்க்க காமெடியாக இருந்தது.திரைத்துறையின்றரின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒரு வெட்டி வேலை.அவரது 'தீப்பொறி ஆறுமுகம்' வகைப்பேச்சில் கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்ததில் ஆச்சரியமேதுமில்லை.ஆனால் அவர் ரஜினியைப்பற்றி சொன்னவை அனாவசியம் என்று தோன்றுகிறது.கன்னடரான(அல்லது மராட்டியரான) ரஜினி இவ்விஷயத்தில் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து தன் கடமையைச் சரியாகவே செய்திருக்கிறார்.சத்யராஜுக்கு அவர்மேல் பல நாள் வெறுப்பு இருந்திருக்க வேண்டும் .இதுதான் சமயம் என்று சீண்டிப்பார்த்திருக்கிறார். எனக்கு 'விஜயகாந்த் படம் பார்த்து விட்டு,அகப்பட்ட நோஞ்சானை குத்துவிடும்' என்ற வலையுலக க்ளிஷேதான் நினைவுக்கு வருகிறது.


கமலின் தமிழ் பேட்டிகளைப் புரிந்துகொள்வதில் தான் சிறிது சிரமம் உள்ளது.ஆங்கிலப் பேட்டிகள் தெளிவாகப் புரிகின்றன.ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு கமல் அளித்த சிறுபேட்டி அண்மையில் நான் படித்த பேட்டிகளில் சிறந்தது எனலாம்.மாதிரிக்கு..

ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில்

My politics is private like sex. I don'twant to spoil the fun by talking about it.

Q:Both the times when you separated from your wives, there was another woman involved. Sarika led to your split with Vani and Simran caused a rift between Sarika and you.

கமல்: Unless it's a gay marriage, there's always another woman involved.


தூம்- 2 பார்த்தபோது வந்த அதே தலைவலி 'ரேஸ்' பார்த்தபோதும் வந்தது.படத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒருவர் இறந்து போகிறார்.10நிமிடங்களில் திரும்பி வந்துவிடுகிறார்.பர்முடெஷன் காம்பினேஷனில் நாயகர்கள்,நாயகிகள் ஜோடி மாறுகிறார்கள்.சோகப்பாட்டோ,சந்தோஷமான பாட்டோ அதிஃப் மூக்கால் அழுகிறார்.ஆனால் எப்படியோ இந்த படங்களும் பாடல்களும் ஹிட் ஆகிவிடுகின்றன.சொத்தைக் கடலையை சாப்பிட்டால்,வேறு ஒரு நல்ல கடலையைச் சாப்பிடும் வரை வாய் உவ்வே..என்றிருக்கும் அதுபோலதான் திரைப்படங்களும்.நல்ல வேளையாக ரேஸ் படத்திறு பிறகு ஷெளரியா(தீரம்) பார்க்கக்கிடைத்தது.ராகுல் போஸ்,K.K.மேனன்,ஜாவித் ஜாவ்ரி நடித்திருக்கும் இந்தப் படம் ராணுவ வழக்கு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டது. இது "A few Good Men"படத்தின் அப்பட்டமான காப்பி என்று கேள்விப்பட்டேன்.நல்ல வேளையாக அந்த ஆங்கிலப் படம் பார்க்காததால்,ஷெளரியாவை ரசிக்க முடிந்தது.ரீமேக் என்ற சொல்லமுடியாத படிக்கு நம் நாட்டுக்கு நெருக்கமானதொரு பிரச்சனையை கையாள்கிறது படம்.வேறெதற்காக இல்லாவிட்டாலும் K.K.மேனனின் அனாயாசமான நடிப்புக்காகவாவது படத்தப் பார்க்கலாம்.

Sunday, March 09, 2008

நானும் ஓர் கனவோ !!

சில புத்தகங்களைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிடும் இது நம் ஜாதிப் புத்தகம் இல்லை என்று.இருந்தாலும் ஒரு ஆவலில் அள்ளிக்கொண்டு வந்துவிடுவோம்.பிறகென்ன அதன் கருத்துக்களை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவும் முடியாமல்,மூடிவைத்துவிடவும் முடியாமல் 'நாய் பெற்ற தெங்கம்பழம்' நிலைதான்."The Eleven Pictures of Time" புத்தகத்தைப் படிக்கும் போது நானும் இவ்வாறுதான் உணர்கிறேன்.C.K.ராஜு என்பவர் எழுதியிருக்கும் இந்தப்புத்தகம் காலத்தைப்(Time) பற்றிய முழுமையான களஞ்சியம் எனலாம்.
துவக்கம் தொட்டு நிலவி வந்த காலம் பற்றிய நம்பிக்கைகள்,தத்துவங்கள்,தர்க்கங்கள்,மறுபிறப்பு மற்றும் கால எந்திரம் தொடர்பான சாத்தியங்கள்,சாத்தியமின்மை,காலம் பற்றிய இயற்பியல் கோட்பாடுகள்,நிரூபணங்கள் அனைத்தும் முழுமையாக விளக்கப்பட்டுள்ளன.
புத்தகத்தை முடிக்கமுடியும் என்று தோன்றவில்லை.படித்தவரையில் கிடைத்த சில சுவாரசியமான விஷயங்கள் :

1.வண்ணத்துப்பூச்சி(யின்) கனவு


சுவாங் சூ கிமு295ல் சீனாவில் வாழ்ந்த தத்துவ ஞானி.இருத்தலைப் பற்றியும்,நிலையாமை குறித்தும் தொடர்ந்து வினாக்களை எழுப்பியவர்.அவர் ஒருமுறை இவ்வாறு குறிப்பிடுகிறார்."ஒரு நாள் கனவில் நான் வண்ணத்துபூச்சியாக மாறியிருந்தேன்.வானில் உயரப் பறந்தேன்.மிகப் பரவசமாக இருந்தது.என்னை முழுமையாக வண்ணத்துப்பூச்சியாக உணர்ந்தேன்.அப்போது திடீரென விழித்துக்கொண்டேன்.நான் சுவாங் சூவாக இருப்பதை உணர்ந்தேன்.இப்போது எனக்குக் குழப்பமாக இருக்கிறது.நான், சுவாங் சூ, கனவில் வண்ணத்துப் பூச்சியாக மாறினேனா? இல்லை வண்ணத்துப்பூச்சியின் கனவில் சுவாங் சூவாக மாறியிருக்கிறேனா.வண்ணத்துப்பூச்சியின் கனவுதான் இந்த சுவாங் சூ என்றால் என்னைச் சுற்றி நிகழும் இவையெல்லாம் கனவா? காட்சிப்பிழையா?"

நிற்க,இப்போது பாரதியின் இந்த வரிகளைக் கவனியுங்கள்

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெலாம்
சொற்பனந்தானோ - பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்தானோ !

பல ஆயிரம் ஆண்டு கால இடைவெளியில்,பல ஆயிரம் மைல்கள் தூர இடைவெளியில் வாழ்ந்த இரு ஞானிகள் ஒத்த சிந்தனை கொண்டிருந்தது வியப்பைத் தருகிறது.

2.காஸ்மிக் மீள்நிகழ்வு(Cosmic Recurrence)
எந்த ஒரு நிகழ்வும் காஸ்மிக் சுழற்சியில் பல பில்லியன் ஆண்டுகள் கழித்து மீண்டும் நிகழும்.அதாவது இப்போது கட்டம் போட்ட சட்டை போட்டுக்கொண்டு இந்த பதிவை படிக்கும் நீங்கள் Mr.X, பல பில்லியன் ஆண்டுகள் கழித்து ,இதே கட்டம் போட்ட சட்டையுடன் இதே வயதில் Mr.Xஆகவே, எனது காஸ்மிக் மீள்நிகழ்வு பற்றிய இந்தப் பதிவைப் படிப்பீர்கள் என்கிறது இந்தக் கொள்கை.அப்பொது உங்கள் நியாபகங்கள் புதுப்பிக்கப் பட்டிருக்கும்.ஆனால் பிற்பாடு இந்தக்கொள்கை நிறுவப்படாமல் போயிற்று.ஜெயமோகனின் 'ஜகன்மித்யை' என்ற சிறுகதை இதே போன்றதொரு தியரியை அடிப்படையாகக் கொண்டதுதான்.

3.GrandFather Paradox
கால இயந்திரத்தில் பின்னோக்கிச் செல்வது இயலாத காரியம் என்பதை நிறுவ இது பயன்பட்டது.
ஜானியின் தாத்தா(தந்தை வழி) பெரும் பணக்காரர்.ஒருநாள் ஜானியுடன் ஏற்பட்ட சண்டையில் கோபம் கொண்டு அவர் தன் சொத்து முழுவதையும் வேறொருவர் பெயரில் எழுதிவிடுகிறார்.இது நடந்து சில நாட்களில் அவர் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார்.இதனால் ஜானி ஒரு கால எந்திரத்தில் ஏறி சில நாட்கள் பின்னோக்கி பயணித்து அதாவது தாத்தா இறப்பதற்கு முன்னால் சென்று அவரிடம் பேசுகிறான்.சொத்தை தன்பெயரில் எழுதச் சொல்கிறான்.ஆனால் அவர் மறுத்துவிடுகிறார்.இதனால் ஆத்திரமடைந்த ஜானி மேலும் பின்னோக்கி சென்று, தன் தாத்தாவை அவரது இளம் வயதிலேயெ கொன்றுவிட முடிவு செய்கிறான்.அதாவது அவர் ஜானியின் பாட்டியை(அவர் தன் மனைவியை) சந்திக்கும் முன்பே அவரை கொன்றுவிடுகிறான்.இதனால் ஜானியின் அப்பாவே பிறக்கப் போவதில்லை,அதன் விளைவாக ஜானியும் இல்லை.
சரி இப்போது சொல்லுங்கள், ஜானியின் தாத்தாவைக் கொன்றது யார்?
இப்பவே கண்ணக்கட்டுதே!!

Saturday, March 01, 2008

அரிய புகைப்படம் #1


படத்தைப் பெரிதாக்க படத்தின் மீது click செய்யவும்

Thursday, February 28, 2008

தமிழ் எழுத்துலக சக்ரவர்த்தி மறைவு - அஞ்சலி



காலையில் கூகிள் ரீடரைத் திறந்தபோது எனக்குப் பிடித்த பதிவர்கள் அனைவரும் பதிவிட்டிருப்பது கண்டு ஆச்சரியப்பட்டேன்.ஆனால் முதல் பதிவைத்திறந்தவுடனேயே மற்றவர்கள் அனைவரும் என்ன எழுதியிருப்பார்கள் என்று ஊகிக்க முடிந்கது.சில வாரங்களுக்கு முன் தேசிகனின் வலையில் சுஜாதாவின் உடல்நலக்குறைவு பற்றி படித்தபோதே என்னவோ போல் இருந்தது.இன்னும் ஒரு நூற்றாண்டிரும் என்று சொல்லிக்கொண்டேன்.நண்பனிடம் இதைப்பற்றிப் பேசும்போது கூட "டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவுடன இதை பத்தி ஒரு கட்டுரை எழுதுவாரு பாரு" என்று சொன்னேன்.மார்க் ட்வைன் சொன்னது போல "DEATH,THE ONLY IMMORTAL.." அது யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை.இன்று அது தமிழின் மாபெரும் எழுத்தாளனையும் தன்னோடு அள்ளிக்கொண்டத

சிறுவயதில் சுஜாதாவை கணேஷ்,வசந்தாகத் தான் வாசிக்கத்துவங்கினேன்.ஆனால் விரைவிலேயே கதைகளைக் காட்டிலும் அவரது கட்டுரைகள் என்னைக் கவரத்துவங்கின.அப்போது குமுதத்தில் வந்துகொண்டிருந்த "21ஆம் நூற்றாண்டின் விளிம்பில்" என்ற கட்டுரைத்தொடரை அண்ணன் பைண்ட் செய்து வைத்திருப்பான்.அதில் எனக்கு பாதிக்குமேல் அர்த்தம் புரியாது ஆனால் வாசிக்க வசீகரமாக இருக்கும்.கதைகளில் துப்பறியும் கதைகளைவிட "மத்யமர் கதைகள்",நகரம்" போன்ற யதார்த்தமான கதைகள் என்னையும் அதிகமாகக் கவர்ந்தன.சுஜாதாவின் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியரையும்,நூலையும் தேடிப்பிடித்து வாசிக்கத்துவங்கினேன்.இன்று எனக்கு விரல்விட்டு எண்ணுமளவுக்காவது ஆசிரியர்களையும் ,புத்தகங்களையும் தெரிந்திருக்கிறதென்றால் அவை சுஜாவின் கட்டுரைகளினால்தான் சாத்தியப்பட்டது.


விகடன்,குமுதம் போன்ற ஜனரஞ்ஜக இதழ்களுக்கும்,கணையாளி போன்ற சிற்றிதழ்களுக்கும் இடையில் அவர் கொண்டிருந்த பேலன்ஸ் அபாரமானது.எடுத்தவுடனேயே ஒரு பாமர வாசகனை சு.ராவையும் புதுமைப்பித்தனையும் படிக்க வேண்டும் என்று எதிபார்க்கமுடியாது.தனக்கு எழுதக்கிடைத்த பத்தியில் மெதுமெதுவாக நல்ல ஆசிரியர்கள்,நல்ல கவிதைகள் என அறிமுகப்படுத்தி,ஒரு பெரும் வாசகக் கூட்டத்தை சிற்றிதழ் நோக்கி நகர்த்திய பெருமை சுஜாதாவையே சேரும்.ஜி.நாகராஜனையும்,சாமர்செட் மாமையும்,சு.ரா வையும்,மகுடேஸ்வரனையும்,எரிகா ஜஙையும் என் போன்ற பாமரர்களுக்கு அறிமுகப்படுத்தியது அவரது மிகப்பெரிய சாதனை.


அறிவியல் கட்டுரைகளை அவரைவிட தமிழில் சிறப்பாக எழுதியவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று தெரியவிலை.அதேசமயம் அவை அவற்றின் நம்பகத்தன்மைக்காக(1 % முழுக்க தவறு பாக்கி 99% தான் உண்மை என்கிற ரேஞ்சில்)அதிகம் விமர்சிக்கவும் பட்டன.அவ்வாறு அவரை விமர்சித்தவர்களும் சுஜாதா என்ற அதே நுழைவாயில் வழியாகவே அத்துறையில் நெடுந்தொலைவு சென்றவர்களாக இருப்பார்கள்.


இன்று அவரது கட்டுரைகளை எடுத்துப் படித்தபோது ஏனோ அழுகையாக வந்தது.இன்று இவ்வளவு அஞ்சலிக்கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, சுஜாதவைப் படித்த எல்லாருக்கும் அவரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது என்று தெரிகிறது.மேலும் எழுதியவர்கள் அனைவரும் நெருக்கமான நண்பர்கள் என்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.சுஜாதாவை ஒருமுறையாவது நேரில் சந்திக்கவேண்டும் என்ற என் எண்ணம் நிறைவேறாமலே போய்விட்டது.அதனால் என்ன..அவரே ஒரு பத்தியில் சொன்னது போல,


"ஆத்மாநாமை சந்திக்கக் கிடைத்த ஒரே சந்தர்பத்தை தவற விட்டு விட்டோமே என்று வருத்தமில்லை.அதேபோல் 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று சுருக்கமாகச் சொன்ன கணியன் பூங்குன்றனார் குடுமி வைத்திருந்தாலோ,கடுக்கண் போட்டிருந்தாலோ எனக்குக் கவலையில்லை.ஆத்மாநாமோ,பூங்குன்றனாரோ...அவர்கள் கவிதைகளுடன் நான் பேச முடிகிறது.Our words knew each other.That was enough(Erica Jong)"

ஆம்.. our words knew each other.thats enough .

Monday, January 21, 2008

புனே திரைப்பட விழா - ஒரு பார்வை

ஜனவரி மாதத்து மென்குளிரில் ஆரவாரமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது ஆறாவது சர்வதேச திரைப்படவிழா.43 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 150க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட்டன.சுமார் ஒருவார காலம் நடைபெற்ற இவ்விழாவை அமைச்சர் சுரேஷ் கல்மாதி துவக்கிவைத்தார்.ஷர்மிளா டாகூருக்கும் ஷம்மி கபூருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.ஷமிளா டாகூர் 'ரே' படங்களில் நடித்து சாபல்யம் பெற்றவர்.ஷம்மி கபூர் என்ன சாதித்தார் என்றுதான் விளங்கவில்லை(பான் பராக்!!).

எல்லாமே நல்ல படங்கள் தானே என்று நினைத்து எதாவது ஒரு படத்தில் போய் உட்கார்ந்து கொள்வது தவறு.இது நான் முதல் நாளே பட்டு தெரிந்து கொண்டது.அதன் பின்னர் கூக்ளி,சினாப்சிஸ் படித்துத்தான் படங்களைத் தேர்ந்தெடுத்தேன். இவ்விழாவில் நான் பார்த்த படங்களில் குறிப்பிடத்தக்கவை

-In the name of gods(குதா கேலியே)
இந்திய விழாவில் திரையிடப்பட்டிருக்கும் முதல் பாகிஸ்தானிய படமிது.பழைமைவாதிகளால் மதத்தின் பெயரால் பாகிஸ்தானிய இளைஞர்கள் எவ்வாறு சீரழிக்கப் படுகிறார்கள் என்பதையும், 9/11 க்குப் பிறகு உலக அரங்கில் பாகிஸ்தானியர்கள் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதையும் பேசும் படம்.தைரியமான முயற்சி.பாகிஸ்தான் அரசின் தடைகளிலிருந்து தப்பி இப்படம் உலக அரங்குக்கு வந்ததே பெரிய ஆச்சரியம்.இசை இஸ்லாமில் தடைசெய்யப்பட்டிருக்கிறது என்று ஒரு பிரிவினர் நம்புகிறார்கள்,பாகிஸ்தானில் பெரும்பான்மையினருக்கு அராபிக் படிக்கத்தெரியும் ஆனால் சிலருக்குதான் அர்த்தம் புரிந்து கொள்ளத்தெரியும் போன்றவை எனக்கு புதிய செய்திகள்.வெடிகுண்டு மிரட்டல்களைத்தாண்டி அங்கு இப்படம் வசூலில் சாதனை புரிந்து வருவது அம்மக்களின் மனநிலையையே பிரதிபலிக்கின்றது.


-Cherries (china)
I am Sam படம் பார்த்ததிலிருந்து அதில் ஷான் பென்னின் கதாபாத்திரத்தை அவரைக்காட்டிலும் வேறுயாராலும் சிறப்பாக செய்யமுடியாது என்று திடமாக எண்ணிக்கொன்டிருந்தேன்.ஆனால் இந்த சீன படத்தைப் பார்த்தபோது அந்த எண்ணம் மாறிப்போனது.கிட்டத்தட்ட "I am sam" போன்றதொரு கதையில் மனநலம் குன்றிய கதாபாத்திரத்தில் மையோ பு என்ற நடிகை மிக அருமையாக நடித்திருந்தார்.இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்காதது வருத்தமே.


-Black Book (Netherland)
இரண்டாம் உலகப் போரின் போது நாஸிக்களின் பிடியிலிருந்து தப்பிக்கும் ஒரு யூத பாடகியின் கதை.விறுவிறுப்பான நாவல் படிப்பது போல இருந்தது.அக்மார்க் ஹாலிவுட் மசாலா.எக்கச்சக்க படங்களில் பார்த்ததாலோ என்னவோ யூதர்களை கூட்டம் கூட்டமாக கொல்லும் பொது வருத்தமே ஏற்படவில்லை.மாறாக போர்முடிந்தவுடன் யூதர்கள் நாஸிக்களைக் கொல்வது மனிதனின் அடிப்படை குணத்தைக் காட்டுகிறது.

கவனம் கவர்ந்த மற்ற படங்கள்
Seventh Heaven(egypt),Tricks(Poland),Bliss(Turkey)

தமிழ் படங்களில் அம்முவாகிய நான்,பருத்திவீரன்,பெரியார் ஆகியவையும் மலையாளப் படங்களில் ஒரே கடல்,நாலு பெண்கள் மற்றும் ராத்திரி மழா ஆகியவையும் திரையிடப்பட்டன.மெயின் ஸ்ட்ரீம் படங்கள் என்று சொல்லி ஓம் ஷாந்தி ஓம்,ஹே பேபி,பாட்னர் போன்ற படங்களைத் திரையிட்டது அபத்தம்.

பெட்ரோ அல்மொடோவரின் சில படங்கள் திரையிடப்பட்டன.ஆஸ்கர் இயக்குனர் ஆயிற்றே விஷயமிருக்கும் என்று நினைத்துப் பார்க்கபோனால்,ஐந்து நிமிடங்களில் "அவனா நீயி" என்று தலைதெறிக்க ஓடிவரவேண்டியதாயிற்று.

இங்க்மர் பெர்க்மென்னின் cries and whispers என்ற படம் திரையிடப்பட்டது.இவரைப் பற்றி வலை பதிவுகளிலும் புத்தகங்களிலும் ஏற்கனவே படித்திருந்ததால் படத்தைப் பார்க்கப்போயிருந்தேன்.அரங்கு நிறைந்த காட்சி.படம் முடிந்ததும் எல்லாரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் கைத்தட்டினார்கள்.நானும் தட்டினேன்'என்னைப் போல எத்தனை ப்ரகஸ்பதிகள் புரியாமலே கைத்தட்டுகிறார்களோ என்று எண்ணிக்கொண்டே'.

Thursday, November 08, 2007

சுமாரான தீபாவளி வாழ்த்துக்களும்,சூப்பரான பிறந்தநாள் வாழ்த்துக்களும்



நடிப்பு மேதை கமல் ஹாசனுக்கு உளம் கனிந்த(belated)பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------------------------------
இந்த முறை தீபாவளிக்கு ஊருக்குப் போக லீவு கிடைக்கவில்லை.போதாக்குறைக்கு, வட நாட்டில் தீபாவளி வெள்ளிக்கிழமையிலிருந்துதானாம்.அதனால் வியாழக்கிழமை(தீபாவளியன்று)அலுவலகம் உண்டு.எரியும் விளக்கில் எண்ணையை ஊற்றுவது போல பல்பீர் சிங்,ரங்பீர் சிங் என பரிச்சயம் இல்லாத மக்களெல்லாம் "Diwali Wishes" அனுப்பி மெயில் பாக்ஸை ரொப்புகிறார்கள்.அதனால் வெறுப்பில் ஒரு தீபாவளி (சிக்)ஜோக்,



குழந்தை: நம்ம மட்டும் ஏன் இந்த தடவை ஆகஸ்ட்லயே தீபாவளி கொண்டாடறோம்?
அம்மா:சும்மா இருடா உங்கப்பாவுக்கு உடம்பு சரியில்ல.
------------------------------------------------------------------------------------------------
சிரிப்புவராட்டி என்னைத் திட்டாதீர்கள்.இது சுஜாதா சொன்ன ஜோக் :)
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

Thursday, November 01, 2007

லா.சா.ரா - அஞ்சலி

'ஜனனி' சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து,

தபஸ்

நண்ப,
இது உனக்கும் எனக்கும் இடையில் ஒரு வார்த்தை.உனக்கு இதைச் சொல்ல வேண்டுமென்று வெகு நாட்களாய்க் காத்துக் கொண்டிருந்தேன்.இப்போது வகையாய் மாட்டிக்கொண்டோம்.

'இப்புத்தகத்தில் வரும் பெயரோ பாத்திரங்களோ ஒருவரையும் குறிப்பிடுவன அல்ல' என்ற சம்பிரதாயச் சொல் ஒரு பெரும் புளுகு என்று அறிந்து கொள்.ஏனெனில் ,எவரும் எவரையும் குறிப்பிடாது இருக்க முடியாது.தெய்வமே ஒரு குறிப்பிட்ட பொருள் தான்.அந்த குறிப்பைச் சுற்றி சுற்றி நாம் இயங்கி,அதனால் குறிக்கப்பட்ட பொருள்கள் ஆய்விட்டோம்.
வாழ்க்கையில் இறப்பும் பிறப்பும் இருக்கும் வரை இந்தத் தன்மையை விட்டு நாம் தப்ப முடியாது.நாம் தெரிந்தோ தெரியாமலோ இஷ்ட்டப் பட்டோ இஷ்ட்டப் படாமலோ,அர்ப்பணமானவர்கள்.இந்த அர்பணிக்கப்பட்ட தன்மையை நாம் அங்கீகரித்துக்கொண்டு விட்டோமானால் அவரவரின் உண்மையின் உள் சத்தை ஓரளவு இப்பவே புரிந்து கொள்ள முடியும்.இதனால், நம்மையும் ஆட்டுவித்துக்கொண்டு நம்முடன் தானும் ஆடிக்கொண்டிருக்கும் தெய்வத்திற்கோ,அல்லது அந்த தெய்வத்திற்கும் காரணமாயுள்ள சக்தி எதுவோ அதற்கோ நாம் உதவி புரிந்தவர்கள் ஆவோம்.

கண்ணிலிருந்து திரை கிழிந்து விழுகையில் உலகமே பீங்கான் சக்கரங்களின் மேல் நம்முன் தேர் போல் நகர்ந்து திரும்பும் கம்பீரத்தையும்,அதன் பெரும் உடலையும், அது திரும்ப முடியாமல் திரும்புவதில் துளிக்கும் சோக சாயையையும் நாம் அதனுள்ளிருந்துகொண்டே பார்க்கமுடியும்.இவ்வநுபவம் ஒருவனுடையது மாத்திரமல்ல.ஒவ்வொருவனுடைய உரிமையே ஆகும்.ஆகையால் இக்கதைகளில் எதோ ஒன்றில் ஏதோ ஒரு பக்கத்திலோ,அல்லது ஒரு வாக்கியத்திலோ,சொற்றொடரிலோ,பதங்களிலோ அல்லது இரு பதங்களுக்கிடையில் தொக்கி, உன்னுள்ளேயே நின்று கொண்டு உன்னைத் தடுக்கும் அணு நேர மெளனத்திலோ உன் உண்மையான தன்மையை நீ அடையாளம் கண்டு கொள்வாய்.இறப்புக்கும் பிறப்புக்கும் இடையில் நம் எல்லாரையும் ஒன்றாய் முடித்துப்போட்டு,நம் உள் சரடாய் ஓடிக்கொண்டிருக்கும் உண்மையின் தன்மை ஒன்றே தான்.ஆகையால் ,இக்கதைகளில் நான் உன்னையும் என்னையும் பற்றி தான் எழுதுகிறேன்.வேறு எப்படியும் எழுத முடியாது.இக்கதைகளைப் படித்ததும் உன்னிடமிருந்து உன் பாராட்டையோ,உன் நன்றியையோ நான் எதிர்பார்க்கவில்லை,உன்னைச் சில இடங்களில் இவைகள் கோபப்படுத்தினால் அக்கோபத்திற்கும் நான் வருத்தப் படப் போவதில்லை.உடன் பிறந்தவர்களிடையில் இவ்விரண்டையும் பாராட்டுவதிலேயே அர்த்தம் இல்லை.ஆனால் இவைகளின் மூலம் உன்னை நீ அடையாளம் கண்டு கொண்டாயெனில் இவைகளின் நோக்கம் நிறைவேறிய மாதிரியே.
இக்கதைகள்,தாம் வெளிப்படுவதற்கு என்னை ஒரு காரணமாக உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம்; ஆனால் இவைகள் வெளிப்பட்ட பிறகுஇவைகளைப் பார்க்கையில் நானும் உன் மாதிரி தான்.எப்படியும் இப்புத்தகத்திற்கு நான் காரணமில்லை.நீ தான் அல்லது உன் மாதிரி நாலு பேர் மாசு, வை,சு ,தாத்து,வேம்பு,செல்லம்,ரங்கன் - இவைகள் உனக்கு வெறும் பெயர்கள்.எனக்கு இவர்கள் இப்பெயரின் அர்த்தங்கள்-உன் மாதிரி.
ஆகையால் இந்த உண்மையை-வெளிப்பூச்சின் அடியில்புதைந்து கிடக்கும் உண்மையின் ஒரே தன்மையைப் பற்றி உன்னிடம் சொல்லத் தான் வந்தேன்.இது எனக்கு எப்பவும் அலுக்காது.
நான் இருக்கும் வரை,இதை நீ புரிந்து கொண்டாலும்,புரிந்து கொள்ளாவிட்டாலும்.செவி சாய்த்தாலும்,சாய்க்காவிட்டாலும் சொல்லிக்கொண்டு தான் இருப்பேன்.இனி இவைகள் உன்னுடையவை.

லா.சா.ராமாமிருதம்

Friday, October 05, 2007

திரை விமர்சனம்

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக\தோல்விகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சில ஹிந்திப்படங்களின் குறு விமர்சனங்கள்.


நான்கு(மார்கெட் போன)கதாநாயகர்கள்.நான்கு பேரும் முட்டாள்கள்.இவர்களுக்கு வேலை வெட்டி இருக்காது.இவர்களை தூக்கி சாப்பிடும் விதமாக அடிமுட்டாளாக ஒரு வில்லன்.இவர்கள் எல்லாரும் பணத்தையோ பெண்ணையோ தேடி அலைய வேண்டும் + ஒரு மூட்டை பழைய ஜோக்குகள்(பீர்பால் நகச்சுவைகள்,தெனாலி ராமன் துணுக்குகள்,சர்தார்ஜி ஜோக்குகள்).
இது தான் பாலிவுட்டில் தற்போது எல்லா நகைச்சுவைப் படங்களும் இன்ஹெரிட் செய்யும் பொதுவான டெம்ப்ளேட்.



தமால்(Dhamaal)




Director :Indra Kumar
Actors :Sanjay Dutt,Arshad Warsi,iJaved Jaffrey,
Ritesh Deshmukh, Aashish Chaudhary,Asrani
Music Director:Adnan Sami

சாகும் தருவாயில் பிரேம் சோப்ரா புதையல் பற்றிய ரகசியத்தை நான்கு பேரிடம் சொல்லிவிட்டு இறந்து போகிறார்.புதயலைத் தேடி வரும் (போலீஸ்)சஞ்சய்தத்துக்கும் இந்த நால்வருக்கும் நடக்கும் சண்டைகளும்,புதையலை அடைய ஒவ்வொருவரும் தனித்தனியே செய்யும் முயற்சிகளும் தான் கதை.இரண்டு மணி நேரத்துக்குத் தொடர்ந்து துணுக்கு மழை.ஆனால் எல்லாம் நாம் ஏற்கனவே கேட்டு சிரித்த பழைய ஜோக்குகள்.காதலா காதலாவில் இறந்தவர் வீட்டுக்குபோய் ஓவியம் விற்கும் காட்சியைக் கூட காப்பியடித்திருக்கிறார்கள்(காதலா காதலா ஒரிஜினலா??).அங்கங்கே சிரிப்பை வரவழைத்தாலும் மொத்ததில் படம் சுமார்.

மதிப்பெண்கள்: 1/5

டோல்(Dhol)




Director :Priya Darshan
Actors :Sharman Joshi,Tusshar Kapoor,Kunal Khemu,
Tanushree Datta,Rajpal Yadav,Om Puri
Music Director:Pritam chakraborty

நான்கு வெட்டி கதாநாயகர்கள்.எதிர் வீட்டுக்குக் குடிவரும் தனுஷ்ரீயை கவர நால்வரும் வித விதமாக முயற்சி செய்கிறார்கள் .தனுஷ்ரீ தத்தாவோ இறந்துபோன தன் அண்ணனின் சாவில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்று தோன்றியது.ராஜ்பால் யாதவ் "பக்கியா கல்டி மாரோ" என்று அலறிய போது மூளையில் பல்ப் எறிந்தது."கோபாலா பிச்சுக்கோ" ஞாபகம் இருக்கிறதா?.படம் பெயர் எம்.ஜி.ஆர் காலனி என்று நினைக்கிறேன்.ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்தது.இதன் மூலம்- "ஹரிஹர் நகர்"(மலையாளம்) .பிரியதர்ஷன் ஆனாலும் அர்த்தபழசுகளைக்கூட விடாமல் ரீமேக் செய்துகொண்டிருக்கிறார்.முதல் பாதி அறுவை,இரண்டாவது பாதி தப்பிப்பிழைக்கிறது.

மதிப்பெண்கள்: 1/5


மனோரமா-Six Feet Under



Director :Navdeep Singh
Actors :Abhay Deol,Raima Sen,Gul Panag,Sarika,Vinay Pathak,Kulbhushan Kharbanda

MusicDirector: Jayesh Gandhi,Raiomond Mirza


வாரத்திற்கு ஐந்து ஆறு படங்கள் ரிலீஸாவதில் உள்ள சங்கடம் சில நல்ல முயற்சிகள் கவனம் பெறாமல் போவது தான்.நான் போனவாரம் பார்த்த மனோரமா-six feet under அப்படிப்பட்ட முயற்சி எனலாம்.ரோமன் பொலன்ஸ்கியின் "சைனா டவுன்" படத்தை லேஸாகத் தழுவி எடுக்கப் பட்டிருக்கிறது.ஜெய்பூர் அருகே வறசியான ஒரு கிராமத்தில் கதை நடக்கிறது.இரிகேஷன் டிப்பார்ட்மெண்டில் ஜூனியர் இஞ்சினியராக வேலை பார்க்கும் 'அபய் தியோல்' லஞ்ச ஊழல் காரண்மாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு வீட்டில் இருப்பவர்.எழுத்து தான் இவருக்கு முதல் காதல்.துப்பறியும் கதைகள் எழுதிபெயர் பெறவிரும்பும் இவரின் முதல் கதையே படுதோல்வி.போததற்கு சதா தொணதொணக்கும் மனைவி.இந்நிலையில் ஒருநாள் இரவு இவரது வீட்டிற்கு வரும் சரிகா தன்னை மந்திரியின் மனைவியாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.மந்திரிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகவும்,அவரை வேவு பார்க்கவேண்டும் என்றும் கூறி பெருந்தொகை ஒன்றைக்கொடுத்துச் செல்கிறார்.விளையாட்டாக 'அபை' இதில் இறங்க, அடுத்தடுத்து நிகழும் கொலைகளும்,விழும் முடிச்சுகளும் அவரை பெரும் சிக்கலில் மாட்டிவிடுகின்றன.சாகசங்கள் எதுவும் செய்யத்தெரியாத ஹீரோ இதனை எப்படி எதிர் கொள்கிறார் என்பது மீதிக்கதை.வித்தியாசமான கதையையும்,கதைக்களத்தையும் தேர்ந்தெடுத்ததற்காகவே அறிமுக இயக்குநர் 'நவ்தீப் சிங்கை' பாராட்டலாம்.மிக மெதுவாகவும்,இயல்பாகவும் பயணிப்பதே இப்படத்தின் பலம் மற்றும் பலவீனம்.பாலைவனத்தின் வெய்யில் அருமையாக சிறைபடுத்தப்பட்டிருக்கிறது கேமராவில்(அரவிந்த் கண்ணபிரான்).இப்படத்தின் ஹீரோ 'அபை தியோல்' எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர்.வழக்கமான மசாலா படங்களை ஒதுக்கி வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர்(சோச் நா தா,ஆஹிஸ்தா ஆஹிஸ்தா,ஏக் சாலிஸ்..),இந்த படத்திலும் படு இயல்பாக நடித்திருக்கிறார்.கொஞ்ச நேரம் வந்தாலும் விநாயக் பதக்(பேஜா ஃரை) கலக்குகிறார்.கடைசி இருபது நிமிடங்களில் நிகழும் திரைக்கதைக் குழப்பங்கள் படத்திற்கு மைனஸ்.மொத்தத்தில் இது ஒரு Refreshing Movie.

Noir என்று சொல்லப்படும் Black Film வகையைச் சேர்ந்தது இந்தப்படம்.தமிழில் இவ்வகைப்படங்கள் உள்ளனவா?தெரிந்தவர்கள் குறிப்பிடலாம்.

மதிப்பெண்கள்: 3/5


ஜானி கத்தார்(Johny Gaddar)



Director :Sriram Raghavan
Actors :Neil Mukesh,Zakir Hussain,Dharmendra,Rimi Sen,Vinay Pathak
Music Director:Vishal Dadlani · Shekhar Ravjiani

"மனோரமா" விற்கு எதிர் மாறாக ஒரு த்ரில்லர்.படத்தின் முதல் பத்து பதினைந்து நிமிடங்களிலேயே யார் செய்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் ,இருந்தும் அடுத்து வரும் இரண்டுமணி நேரமும் உங்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து படம் பார்க்க வைக்கிறார் இயக்குநர்.ஐந்து பிரதான கதாப்பாத்திரங்களைச் சுற்றி கதை சுழல்கிறது என்றாலும் படத்தின் உண்மையான கதாநாயகன் திரைக்கதை தான்.ஹாலிவுட் பாணியில் புத்திசாலித்தனமான படம் கொடுத்ததற்காக ஸ்ரீராம் ராகவனுக்கு(தமிழ்?) ஒரு "சபாஷ்".நடிகர்களின் நடிப்பு OK ரகம்.தர்மேந்திரா,விநாயக் பதக் நன்றாக நடித்திருக்கிறார்கள்.ஹீரோ அவ்வப்போது என்ன முகபாவம் கொடுப்பது என்று தெரியாமல் விழிக்கிறார்(அது கதைக்கு பொருத்தமாகவும் உள்ளது!).சின்ன சின்ன லாஜிக் வழுக்கல்கள் தவிர பெரிதாகக் குறிப்பிட குறைகளெதுவும் இல்லை.பின்னணி இசை கச்சிதம்.இரண்டு ஹிட் பாடல்கள்,இரண்டுமே திரையில் வராது.
பாக்கிய ராஜின் "விடியும் வரை காத்திரு" பார்த்திருக்கிறிர்களா?அந்த ஜாதிப் படம் இது.

மதிப்பெண்கள்: 3/5

Friday, September 21, 2007

உதிரிக் குறிப்புகள்

இந்தக் கலைநயமிக்க புகைப்படத்தை எடுத்த தமிழ் நடிகர் யார் என்று கண்டுபிடியுங்கள்.விடை இறுதியில்


*போலி,போலியல்லாத,கருப்பு,சிவப்பு மற்றும் ஜாதீயப் பதிவுகளைத் தொடர்ந்து படித்துவிட்டு,கடந்த இரண்டுநாட்களாக அத்தகைய பதிவுகள் எதுவும் சூடான இடுகைகளில் காணக்கிடைக்காத போது கைநடுக்கம் ஏற்பட்டது.


*வாராவாரம் (மெனக்கெட்டு) "ராஸ்தா பேட்" வரை சென்று விகடன் வாங்கிவர எனக்கு மீதமிருந்த ஒரு காரணமும் தீர்ந்து போனது(க.பெ).


*சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்கள் ரொம்பவும் வெறுமையை உணரச்செய்தன.


(1)Metamorphosis(Kafka)

ஒரு நாவலுக்கு இவ்வளவு அருமையான துவக்க வரிகள் அமைவது அபூர்வம்.

"As Gregor Samsa awoke one morning from uneasy dreams he found himself transformed in his bed into a gigantic insect."


(2)நாளை மற்றுமொரு நாளே(ஜி.நாகராஜன்)


"உங்களுக்கு வாழ்க்கையில லட்சியம் என்னண்ணே?" என்றான் முத்துசாமி.

"அப்படீன்னா?" என்றான் கந்தன்.

"நீங்க வாழ்க்கையில எதை சாதிக்கணூம்னு திட்டம் போட்டிருக்கீங்க?"

கந்தன் சிரித்தான்."எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா வயத்துல வந்து பொறந்தேன்?"என்றுவிட்டு மீண்டும் சிரித்தான்.


பின்நவீனத்துவமாக சொல்கிறேன் பேர்விழி என்று சாதாரண விஷயங்களைக் கூட குழப்பியடித்து படிப்பவனை மண்டைகாயவைக்கும் நூல்கள் ஒருபுறமிருக்க, நா.ம.நா போன்ற நாவல்கள் "இருத்தலியல்" போன்ற பெரிய தத்துவங்களைக்கூட அதன் பளு தெரியாமல் வாசகனுக்குள் இறக்கி வைத்துவிடுகின்றன.
தஞ்சை பிரகாஷின் "கள்ளம்" இந்த நாவலுடன் நிறைய ஒப்புமைகளைக் கொண்டிருக்கிறது.கள்ளம் இந்த நாவலுக்குப் பின்னால் வெளிவந்தது என்று நினைக்கிறேன்.


* "சக்தே இண்டியா" இரண்டாவதுமுறை பார்த்தபோது,திரைக்கதை நேர்த்தியும்,படம் ரியலிஸ்டிக்காக இருக்கவேண்டும் என்பதில் இயக்குனருக்கிருந்த சிரத்தையும் வியக்கவைத்தன.ஆண்கள் அணியுடன் பெண்கள் அணி மோதும் காட்சி இதற்கு உதாரணம்.பெண்கள் அணி வலுவானது என்று காட்ட வேண்டும் அதேசமயம் ஆண்கள் அணியைத் தோற்கடிப்பது போன்றும் காட்டமுடியாது,அபத்தமாக இருக்கும்.ஒரே ஒரு கோல்(Goal) குறைவாக இருப்பதுபோல ஆட்டத்தை முடிப்பது புத்திசாலித்தனம். 'அப் தக் சப்பன்' பட டிவிடியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.


* ஷாருக் கான் "ஓம் ஷாந்தி ஓம்" படத்திற்காக உடம்பை கல்லாக இறுக்கியிருப்பது பிரமிக்க வைக்கிறது.இப்படத்தில் வரும் "Aanhko mein teri " பாடலைக் கேட்டீர்களா?அதில் கேகே வின் குரல் மயிலிறகால் வருடுவது போலுள்ளது.

ஆரம்பக் கேள்விக்கான பதில்: கமல் ஹாசன்

Sunday, September 09, 2007

நோ கமெண்ட்ஸ்

1)எழுத்தாளர்கள் கையாலாகாதவர்கள்

2)தமிழில் நல்ல மரபுக்கவிதைகள் எல்லாம் எழுதப்பட்டுவிட்டன.

3)லா.சா.ரா-வைப் படிக்காதவன் தமிழ் சிறுகதையைப் பற்றிப்பேச லாயக்கற்றவன்.

மேலுள்ள இந்த ஸ்டேட்மெண்ட்களை உதிர்த்த தமிழ் எழுத்தாளப் பிரபலங்கள் யார் யார் என்று கண்டுபிடியுங்கள்.விடை இறுதியில்..

********************

ஆதவனின் "கார்த்திக்" என்ற சிறுகதையிலிருந்து (தொடர்ச்சியற்று)உருவப்பட்ட இரண்டு பத்திகள்

அவன்,தன் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒருத்தியைத் தேடிக்கொண்டிருந்தான்.மனிதகுலம் இழந்துவிட்டிருந்த நிரபராதம் குறித்துச்சோகம்.இயற்கையை நசுக்கித் தேய்த்தவாறு எங்கும் செயற்கை படர்ந்து வருவது குறித்துச் சோகம்.

ஆம்,கார்த்திக் ஓர் உலர்ந்த,ஒற்றைப் பரிமாணப் பகுத்தறிவு வாதியல்ல.அவன் எதிர்த்தது பழமைவாதிகளின் மூட நம்பிக்கைகளை மட்டுமல்ல. புதுமைவாதிகளின் மூடநம்பிக்கைகளும்தான் அவனுக்குப் பிடிக்கவில்லை.அதிலும் இந்தப் பெண்கள்...

நவநாகரீக உடைகள் உடுத்து,ஆங்கிலத்தில் பேசவும் சிகரெட் குடிக்கவும் தெரிந்து விட்டதால் மட்டுமே,தாங்கள் முன்னேற்றமடைந்துவிட்டதாக எண்ணுகிற இவர்களுடைய மேலோட்டமான போக்கு...

இவர்களைப்போல உடுக்காத ஆங்கிலம் பேசாத பெண்களைவிட - தம் தாயாரையும் பாட்டியையும் விட - தங்களை உயர்ந்தாவர்களாக நிரூபித்துக்கொள்ள ஒவொவொரு கட்டத்திலும் முயற்சி செய்கிற பரிதாபம்...
புதுப் பணக்காரர்களின் ஆர்பாட்டத்தையும்,திடீரென உரிமையும்,சக்திகளும் பெற்ற மாஜி அடிமைகளின் பழிவாங்கும் குரோதத்தையும் வஞ்ஜகத்தையுமே இவர்களிடம் அவன் கண்டான்.பழைய பெண்களின் அசட்டு நம்பிக்கைகள்,பிடிவாதங்கள் இவையே மீண்டும் மாறு வேஷமணிந்து வந்தது போலிருந்தது.

ஒருவேளை தனக்கு எத்தகைய பெண்மைக்குத் தகுதி உள்ளதோ,அத்தகைய பெண்மையையே ஒரு சமூகம் பெறுகிறது, என்பதாக இருக்கலாம்.

சிந்தனைகளிலும் செயல்களிலும் இந்தச் சமூகத்திடமிருந்து வேறுபடுகிறவர்களும்கூட, அதில் வாழ்கின்ற காரணத்தாலேயே,இச்செயல்கள் விளைவிக்கும் தண்டனைகளிலிருந்து தப்ப முடிவதில்லை.
****
அவனைப் போலவே அவளும் மலர்களையும் இலைகளையும் மரங்களையும் செடிகளையும் விரும்புகிறவள்.அமைதியை விரும்புகிறவள்.அதிகம் பேசாதவள்.மூட மரபுகள்,பழக்கங்கள் ஆகியவற்றைத் தொடர விரும்பாதவள்.அதே சமயத்தில் இந்த நம்பிக்கையை அல்லது நம்பிக்கையின்மையை உரக்க பறைசாற்றிக்கொண்டு அதன் மூலமாகத் தனக்கு ஒரு ஹோதாவை உருவாக்கிக் கொள்ள முயலாதவள்.மனதில் மூளியில்லாதவள்.தன்னைத் தானாகவே உணருவதில் சங்கடமில்லாதவள்.ஒன்றைச் சார்ந்தவளாகவோ மற்றொன்றைச் சாராதவளாகவோ,சிலரைவிட உயர்ந்தவளாகவோ,சிலருக்குத் தாழ்ந்தவளல்லாதவளாகவோ தன்னைக்காட்டிக்கொள்ளாமலேயே ஸ்திரமாக உணருகிறவள்.

அவளுடைய உறுதியும் திண்மையும் கார்திக்கிற்கு மீண்டும் மீண்டும் வியப்பளித்தன,தெம்பூட்டின.

'இவள் எனக்கேற்ற விசேஷமானவள்.நான் தவறு செய்யவில்லை' என்று அவன் நினைத்தான்.இன்பம் நிறைந்த எதிர்காலம் அவன் கண்முன் விரிந்தது.

ஆனால் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிரம்பியது.நம்மைப் பற்றியும் பிறரைப்பற்றியும் புதிய கண்டுபிடிப்புகளை நம் முகத்தில் எறிந்து, சரியை தவறாகவும், தவறைச் சரியாகவும் மாற்றுவது.

********************************

திடுக்கிடும் திருப்பங்களையோ,அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலையோ ஏற்படுத்தாத நின்று நிதானமாகப் பயணிக்கும் மேற்கூரியவகை கதைசொல்லல் உங்களைக் கவர்கிறது என்றால் கை கொடுங்கள் நீங்கள் தான் ஆதவனின் எழுத்துக்கள் தேடும் வாசகர்! ரெடி...ஸ்டெடி..ஸ்டார்ட்........

ஆதவனின் எழுத்துக்கள் குறித்த எனது முந்தைய பதிவு

*******************
கேள்விகள் ஒன்றிலிருந்து மூன்றுவரைக்கான பதில்கள் முறையே சுஜாதா, சுஜாதா மற்றும் சுஜாதா !!!!

Monday, September 03, 2007

ஜானகி அம்மாள்




கணித மேதை ராமானுஜன் இங்கிலாந்தில கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது ஒரு முறை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார்.அவரைப் பார்க்க அவரின் நண்பரும் , கணித மேதையுமான ஹார்டி வாடகைக்காரில் வந்திறங்கினார்.அவர் பயணித்த கார் எண் 1729.அவர் கணித மேதையில்லையா..அதனால் வரும் வழியெல்லாம் அந்த எண்ணின் சிறப்பைப்பற்றி ஆராய்ந்து கொண்டேவந்தார்.ராமானுஜத்தை சந்தித்தபோது இந்த எண்ணைக் குறிப்பிட்டு "இந்த எண்ணிற்கு எந்த சிறப்புமே இல்லை.போரிங் நம்பர்" என்று சொல்லியிருக்கிறார்.ஒரு விநாடி யோசித்த ராமானுஜன்"நீங்கள் சொல்வது தவறு.இது மிகவும் சுவாரஸியமான எண்" என்றாராம்.இந்த எண்ணின் சிறப்பாக ராமானுஜன் என்ன சொல்லியிருப்பார் என்று இப்பதிவின் இறுதிவரை யோசித்துப் பாருங்கள்.


*******************************************

ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டுகையில்,அவரது துணைவியார் ஜானகி அம்மாள் பற்றிய செய்திகள் ஆச்சரியம் அளிக்கின்றன.10வயதில் திருமணம்,திருமணம் என்றால் என்ன என்று புரியத்துவங்கும் முன்னரே(21) விதவைக்கோலம்.சொற்பகாலமே வாழ்ந்த ராமானுஜனுக்கு எதிப்பதமாக கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுகாலம்(94 வயதுவரை)வாழ்ந்து மறைந்திருக்கிறார்,தனிமையில்.

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில்,ஆச்சாரமான ஒரு பிராமணக் குடும்பத்தில் ஒரு இளம் விதவையின் விதி எவ்வாறு அமையும் என்பது நன்றாகவே தெரியும்.அப்பெண் தன் பெற்றோரையோ,சகோதரனையோ அண்டி,ராமா ராமா என்று ஜெபித்தபடி தன் மிதமுள்ள வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதுதான்.ஆனால் ஜானகி தன் வாழ்க்கை அவ்வாறு அமைய அனுமதிக்கவில்லை.கணவன் இறந்தபின் பம்பாய்யில் தன் சகோதரனின் வீட்டில் தங்கி முறையாக தையலும்,ஆங்கிலமும் பயின்றிருக்கிறார்.பின் சென்னை வந்து அனுமந்தராவ் தெருவில் குடியேறிய ஜானகி அடுத்து வந்த 50 ஆண்டுகளை தனியாக இல்லை தனித்து வாழ்ந்திருக்கிறார்.அவர் பயின்ற தையல் தொழில் அவருக்கு நல்ல பொருள் ஈட்டித்தந்திருக்கிறது.இதற்கிடையில் அவரது தோழி ஒருவர் திடீரென்று இறந்து போக,அவரின் குழந்தையை தத்தெடுத்து படிப்பு செலவு முழுமையையும் ஏற்றிருக்கிறார்.ஏழ்மைகாரணமாக படிப்பைத்தொடரமுடியாத பலருக்கு பொருள் கொடுத்து உதவியிருக்கிறார்.
ராமனுஜருக்கு சிலை ஒன்று வைக்கக் கோரிக்கை விடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

Dear Sir,
I understand from Mr. Richard Askey,
Wisconsin, U.S.A., that you have contributed
for the sculpture in memory of
my late husband Mr. Srinivasa Ramanujan.
I am happy over this event.
I thank you very much for your good
gesture and wish you success in all your
endeavours.
Yours faithfully,
Signed S. Janaki Ammal
மறுமணம் செய்துகொள்வதைவிட ஒரு பெண் தனியாக வாழ்ந்துகாட்டுவது இன்னும் புரட்சிகரமானதாகத் தோன்றுகிறது.மறுமணம் செய்துகொள்ளும் போது மறுபடியும் ஒரு ஆணைசார்ந்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்.ஆனால் எவருடைய துணையுமின்றி தனியாக வாழ அதிக மன உறுதியும்,தன்னம்பிக்கையும் தேவைப்படுகிறது.பெண்விடுதலை,பெண்ணுரிமை என்று எந்தவித முழக்கங்களுமின்றி அதேசமயம் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்திருக்கும் ஜானகி, சந்தேகத்திற்கிடமின்றி பாரதியின் புதுமைப் பெண்களுள் ஒருவர்.

********************************************
1729 சிறப்பு:

இரண்டு கன சதுரங்களின் கூட்டுத்தொகையாக இருவேறு முறைகளில் சொல்லக் கூடிய மிகச்சிறிய எண்.புரியும்படி சொன்னால்

"It is the smallest number expressible as the sum of two cubes in two different ways."

two different ways

1) 10X10X10 + 9X9X9 = 1729

2) 12X12X12 + 1X1X1 = 1729

1729 ராமானுஜன் எண் என்று அழைக்கப் படுகிறது.

Saturday, August 25, 2007

लक... लक... लक (லக... லக.. லக...)


மணிசித்திரத்தாள் என்ற அருமையான மலையாளப்படத்தை ஹீரோயிச மசாலாக்கள் சேர்த்து கன்னடத்திலும் தமிழிலும் குடலாப்பரேஷன் செய்தாயிற்று.இப்போது ஹிந்திக்காரர்களின் முறை.இருக்கவே இருக்கிறார் ரீமேக் மன்னன் ப்ரியதர்ஷன்.எந்தப் படத்தை ரீமேக் பண்ணப்போகிறோம் என்று முடிவுசெய்வதற்கு முன்னமே பர்வேஷ்ராவல்,அக்ஷய் குமார் இருவரிடமும் கால்ஷீட் வாங்கி வைத்துக்கொள்வாராம் :))

ஆக மோகன்லால்,ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்(தேவுடா)
ஷோபனா நடித்த கதாபாத்திரத்தி வித்யா பாலன் ...
"Bhool Bhulaiya " என்ற பெயரில் முழு நீள நகைச்சுவைப் படமாக வெளிவரவிருக்கிறது மணிசித்திரத்தாள்.

மொழி மாநிலங்களை கடந்த "பேய் இருக்கிறதா இல்லையா?" என்ற வசீகரமான பிரச்சனையும் , சுவாரஸியமான கடைசி இருபது நிமிஷங்களும் இந்த படத்தை எல்லா மொழிகளிலும் வெற்றியடையச் செய்கின்றன.
அடுத்து போஜ்பூரியில் நக்மாவை வைத்துகூட ரீமேக் செய்யப்படலாம்,யார்கண்டார்கள்!.

Friday, August 10, 2007

ஹி ..ஹி...

ஒரு டெலி போன் சம்பாஷனை

"ஹலோ"

"ஹலோ"

"யார் பேசறது?"

"நான் தான்"

"நான் தான்னா யார்?"

"நான் தான் ரேவதி"

"ரேவதி! அப்பா இல்லையா?"

"இல்லை"

"அம்மா"

"இல்லை"

"சரி அப்பா வந்தா ராமன் போன் பண்ணினதாகச் சொல்கிறாயா?"

"யாரு?"

"ராமன்.எழுதிக்கோ ரா - ம - ன் "

"ரா எப்படி எழுதறது?"

"சரிதான்! பாப்பா , வீட்ல வேற ஒருத்தரும் இல்லையா?"

"சேகர் இருக்கான்"

"சரி சேகரைக் கூப்பிடு"

"சேகர் இந்தா" என்று ரேவதி சேகரிடம் (வயது 1) டெலிபோனைக் கொடுக்கிறாள்...


- சுஜாதா

Tuesday, August 07, 2007

"Gandhi My Father" - விமர்சனம்


'Spoiler Warning'போடுவதற்கு அவசியம் ஏற்படாதபடி போஸ்டரிலேயெ கதை சொல்லிவிடுகிறார்கள்.ஒரு தேசத்திற்கே தந்தை என கொண்டாடப்படும் மனிதர் தன் மகனுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருந்திருக்கவில்லை என்பது தான் கதை.

(1948)முதல்காட்சியில், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரனை மருத்துவமனைக்குக் கொண்டுவருகிறார்கள்.சுயநினைவு தப்பிக்கொண்டிருக்கும் அவனிடம், நீ யார்? உன் அப்பா பெயர் என்ன ? என்று கேட்கிறார்கள்."பாபு" என்று ஈனசுவரத்தில் முனகுகிறான்.மெதுவாக பின்னோக்கி விரிகின்றன காட்சிகள்.(1906) இளமையான காந்தி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகிறார்.மூத்தமகனான ஹரிலால் குஜராத்தில் படித்துக்கொன்டிருக்கிறான்.கால்பந்தாடுகிறான்.பாரீஸ்டர் பட்டம் பெற ஆசைப் படுகிறான்.ஹரிலால் தன் தந்தையின் பேச்சை மீறி திருமணம் செய்துகொள்வதில் தொடங்குகிறது இருவருக்குமிடையேயான முதல் இடைவெளி.


சிறிது காலம் கழித்துத் தென்னாப்பிரிக்காவரும் ஹரிலாலை , காந்தி தன் ஐடியாலஜியை பரிசோதிக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்.தந்தைக்காக சிறை செல்கிறான்.இதனால் கல்வியில் தொடர்ச்சியற்று பாரீஸர் பட்டம் வாங்கும் அவனது கனவு தகர்கிறது.இந்தியா வந்து துணி வியாபாரம் செய்து நஷ்டமடைகிறான்.மனைவி இறக்கிறாள்.மது அருந்துகிறான்.மீண்டும் காந்தியுடன் சேர்ந்து சிறிது காலம் சுதந்திரத்திற்காகப் போராடுகிறான்.இஸ்லாமிற்கு மதம் மாற்றப் படுகிறான்.விபசாரியிடம் செல்கிறான்.யாகம் வளர்த்து இந்து மதத்திற்கு மீண்டும் வந்து சேருகிறான்.கஸ்தூர்பாவின் இறப்பிற்குக்கூட வரமுடியாமல் தொலைந்துபோகிறான்.இறுதியாக காந்திஜி இறந்ததற்கு ஐந்து மாதங்கள் கழித்து பம்பாயில் ஒரு மருத்துவமனையில் அனாதையாக இறந்து போகிறான்.
யாரும் தொடத்தயங்கும்,யாரும் அறியாத காந்தியின் மறுபக்கத்தை படமாக்கத் துணிந்ததற்காக இயக்குனரையும்(Feroz Abbas Khan),தயாரிப்பாளரையும்(Anil Kapoor) பாராட்டியே ஆகவேண்டும்.அதுவும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் அனில் கபூருக்கு இது முதல் படம்!

இளவயது காந்தியாக மனதில் ஒட்டமறுக்கும் 'தர்ஷன் தாரிவாலா' வயதாக ஆக உருவம்,நடை ...என அனைத்திலும் காந்தியாகவே மாறியிருக்கிறார்.

அக்க்ஷை கன்னாவிற்கு இந்த படம் நடிப்பில் ஒரு மைல்கல்.காந்தியை எதிர்த்துப் பேசமுடியாமலும்,தன் விருப்பங்களை விட்டுக்கொடுக்க முடியாமலும் ஆற்றாமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.குறிப்பாக ரயில் நிலையத்தில் "காந்தி மகாத்மாவாக போற்றப்படுவதற்கு கஸ்தோர்பா தான் காரணம்" என்று சொல்லிவிட்டுப் போகும் காட்சியில் அவரது நடிப்பு அருமை.
நடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் கஸ்தூர்பா வாக வரும் ஷிவாலி சாயா.பெங்காலி நடிகைகளுக்கு நடிப்பு ரத்தத்தில் ஊறியிருக்கும் விஷயம் போல.இவர் இந்த படத்திற்காக சில விருதுகளை எதிர்பார்க்கலாம்.பூமிகாவின் நடிப்பும் நிறைவாக இருக்கிறது.
தேங்கிய நீரில் மழைத்துளி விழும் காட்சி,தென்னாப்பிரிக்காவில் ஹரிலால் காந்தியை சந்திக்கும் முதல் காட்சி என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கவிதை எழுதியிருக்கிறது மெக்டொனால்டின் கேமரா.

இவ்வளவு இருந்தும் படம் பல இடங்களில் சறுக்குகிறது.குறிப்பாக வசனம் இது ஒரு பாலிவுட் படம் என்பதை அடிக்கடி நியாபகப் படுத்துகிறது.இரண்டாவது பாதி ரொம்பவே நீளம்.நிறைய வெட்டியிருக்கலாம்.காந்தியின் மற்ற குழந்தைகள் என்ன செய்தார்கள்,அவர்களுடன் காந்தியின் உறவு எப்படியிருந்தது என்பதை சொல்ல விட்டுவிட்டார்கள்.காந்தி- ஹரிலாலின் உறவினை சொல்லத்துவங்கி , ஒரு தோல்வியுற்ற மனிதனின் வாழ்க்கையை சொல்லிமுடிகிறது படம்.

"அட காந்தி தன் மகன்கிட்ட இவ்வளவு ஓரவஞ்சனையால்லாம் நடந்துகல்ல.இயக்குனர் மிகையா காட்டிட்டார்" என்று ஒரு பேசுக்குக் கூட வாதிக்கமுடியாத அளவுக்கு காந்தி பற்றிய என்(நம்?) அறியாமை பிடுங்கித் தின்கிறது .

காந்தி என்கிற மாமனிதனின் மற்றொறு பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறது என்கிற வகையிலும்,நடிகர்களின் தேர்ந்த நடிப்பினாலும் பார்க்கவெண்டிய படங்களின் வரிசையில் இடம் பிடிக்கிறது "Gandhi My Father".