Sunday, February 09, 2014

Big Bad Wolves (2013)


இப்படம் ஏற்கனவே உலகத்திரைப்பட விழாக்களில் விருதுகளை வாரிக் குவித்திருந்தாலும் ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை கவர்ந்ததென்னவோ டாரண்டினோவின் பாராட்டைப் பெற்ற பிறகுதான். 2013 ஆம் ஆண்டின் சிறந்த படம் இதுதான் என்று குவிண்டின் டாரண்டினோ இந்த இஸ்ரேலியத் திரைப்படத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். பொதுவாக டாரண்டினோ படங்களில் காணக்கிடைக்கும் இருண்மை நகைச்சுவை, குரூரம், நெடிய காட்சிஅமைப்புகள், மெல்லிய அங்கதம் என எல்லா அம்சங்களும் இப்படத்திலும் உண்டு. 2010ல் வெளியாகி பரவலான பாராட்டைப் பெற்ற ’ரேபிஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கிய Aharon Keshales  மற்றும் Navot Papushado சகோதரர்கள் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

பதின்ம வயது பிள்ளைகள் கண்ணாமூச்சி விளையாடும் காட்சி ஸ்லோமோஷனில் திரையில்  விரிய அருமையான பின்னணி இசையுடன் துவங்குகிறது படம். அவர்களில் ஒரு சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் (தலை கொய்யப்பட்டு ) கொல்லப்படுகிறாள். இந்த தொடர்கொலைகளை விசாரிக்கும் மிக்கி (Miki) சட்டத்துக்கு அப்பாற்பட்ட வழிகளில் விசாரணை செய்யும் வழக்கத்தையுடையவன். எப்படிப்பட்ட நிரபராதியும் ஒரு கட்டதுக்குமேல் அடிதாங்கமல் குற்றத்தை ஒப்புக்கொள்வான் என்னும் சித்தாந்தமுடையவன். இந்த வழக்கில் அவர்களுக்கு கிடைக்கும் ஒரே ஒரு சந்தேகத்திற்கிடமான ஆள் ஒரு பள்ளி ஆசிரியர்(Dror). அவனை மிக்கி தனது பாணியில் விசாரிக்கும்போது அதனை செல்போனில் படம்பிடித்து சிலர் இணையத்தில் பரப்பிவிடுகிறார்கள் . இதனால் மிக்கி சஸ்பெண்ட் செய்யப்படுகிறான். ஆசிரியர் விடுவிக்கப்படுகிறார் என்றாலும் வேலை போகிறது. மிக்கி ஆசிரியரைக் கடத்தமுயல்கிறான். இதற்கிடையில் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை(Gidi)  இவர்கள் இருவரையும் கடத்துகிறார். இப்புள்ளியிலிருந்து கதை முழுவதுமாக கிடியின் ரகசிய வீட்டுக்கு இடம்பெயர்கிறது. அங்கு நடக்கும் துன்புறுத்தல்களும் கடைசி நேர திருப்பங்களும் தான் மீதிக்கதை. வழக்கமான  ஹாலிவுட் வகை த்ரில்லர் போல தோன்றினாலும் கதை சொல்லும் பாணியிலும் வசனங்களிலும் இசையிலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள்.

ரத்தத்தைப் பார்த்தால் மயங்கிவிழும் ஆட்கள் இந்தப் படத்தை தவிர்த்துவிடுவது நலம். படத்தில் ஏகத்துக்கு வன்முறைக்காட்சிகள் உள்ளன. உதாரணத்திற்கு கிடியின் தந்தை ப்ளோ டார்ச் வைத்து எதிராளியின் மார்பில் அடித்து மயிர் பொசுக்கி சதையை துளையாக்குவது வரை காட்டுகிறார்கள் . இத்தோடு விடுவதில்லை கிடியின் தந்தை காற்றை முகர்ந்து என்ன வாசனை வருகிறது என்று கேட்கிறார், அதற்கு கிடி “பார்பேக்யூ”(Barbecue) என்கிறான். இதற்கா சிரித்தோம் என்று யோசிக்கவைக்கும் இதுபோன்ற குரூர நகைச்சுவை காட்சிகள் நிறைய இருக்கின்றன.

டாரண்டினோ பாணியைவிடவும் இந்தப்படம் கோயென் சகோதர்களின் படமாக்கும் பாணியை அதிகம் சார்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. வெளியில் சாமானியர்கள் போல தோன்றுபவர்கள் எவ்வளவு கொடூர செயல் செய்துவிடுகிறார்கள் அல்லது கொடூரமான செயலைபுரிபவர்கள் எப்படி சாமானியர்களின் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதற்கு கிடி தன் தாயிடம் திட்டு வாங்கும் காட்சி ஒரு உதாரணம். எதேச்சையாக கிடியின் தந்தை துன்புருத்தல் நடக்கும் இடத்துக்கு வந்து சேருகிறார். நடக்கும் அபத்தத்தை அவர் தடுத்து நிறுத்துவார் என பார்வையாளன் எதிர்பார்க்கும் போது அவரும் அந்த விளையாட்டில் இணைந்து கொள்வது சுவாரஸியம். படத்தின் கடைசி ஃப்ரேம் வரையிலும் சஸ்பென்ஸ் தக்க வைக்கப்பட்டிருப்பது அருமை.

கிட்டத்தட்ட இதே கதையமைப்பைக் கொண்ட ப்ரிசனர்(Prisoner) என்ற ஆங்கிலபடமும் சென்ற ஆண்டு வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்த அப்படம் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. இவ்வளவுக்கும் அப்படத்தில் போதுமான திருப்பங்களும் முடிச்சுகளும் நிறைந்திருந்தன. தொய்வான கதைசொல்லல் தான் அப்படத்தின் தோல்விக்குக் காரணம் என்று தோன்றுகிறது. அதே சமயம் வழக்கமான கதையமைப்பைக் கொண்டிருந்தும் தேர்ந்த திரைக்கதையாலும் மெல்லிய நகைச்சுவையாலும் வெற்றிபெறுகிறது "Big Bad Wolves".

Monday, January 13, 2014

புத்தகக் கண்காட்சி 2014

புதுபுத்தகவாசம், பக்கம் புரட்டும் சத்தம் தரும் சுகம் போன்ற‌ ஜல்லிகளையெல்லாம் நிறுத்திவிட்டு மின்னூல்களை ஆர‌த்தழுவிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டதென்றே தோன்றுகிறது. இந்த ஆண்டு புத்தகக்கண்காட்சியில் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஆனைவிலை குதிரைவிலை விற்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு புத்தகத்தின் விலையும் சுமார் அறுபதிலிருந்து தொண்ணூறுவரை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பது என் கணிப்பு. அட்டை வடிவமைப்பிலும், அச்சு நேர்த்தியிலும் ஆண்டுக்காண்டு முன்னேற்றம் இருப்பதென்னவோ உண்மைதான், ஆனால் இவ்வளவு விலைகொடுத்துதான் அதனை அடையமுடியுமெனில் அதற்கு பழையபடியே இருந்துவிட்டுப் போகலாம். content is king என்பதுதான் எல்லாருக்குமே தாரகமந்திரம்.

புலம் பதிபக ஸ்டாலிலிருந்து வெளியே வரும்போது எஸ்.ராமகிருஷ்ணன் தனியாக நடந்து வந்துகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. கடந்த வருடம் ரசிகர் குழாம் சூழ ஊர்வலம் போல பார்த்ததாக நினைவு. இவரின் எந்த‌ எழுத்துநடை முன்பு வசீகரித்ததோ அதுவே இப்போது பெரும் அயற்சி தருவதாக இருக்கிறது.

உயிர்மையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தபோது திடீரென திரவியநெடி, நிமிர்ந்தால் தமிழச்சிதங்கபாண்டியன் வந்து மனுஷ்யபுத்திரனுடன் உரையாடிக்கொண்டிருந்தார். ஏனோ வெற்றிக்கொடிகட்டு வடிவேலு ஞாபகத்துக்கு வந்தார்

"சுஜாதாவின் புதிய கட்டுரைகள்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைப் பார்த்தபோது சற்று திகிலாக இருந்தது. புரட்டிப் பார்த்ததில் அம்பலம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு என்று தெரிந்தது.சுஜாதா எழுதிய புத்தகங்கள் மட்டுமன்றி இந்தமுறை சுஜாதா பற்றிய புத்தகங்களும் நிறைய தென்பட்டன‌. என்றென்றும் சுஜாதா என்ற தலைப்பில் இருவேறு ஆசிரியர்களின் புத்தகங்கள், ரஞ்சன் எழுதிய சுஜாதா கதை என்றொரு புத்தகம்..etc....

புத்தகக்கண்காட்சி ஏற்பாடுகளில் கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் எந்த வித்யாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, ஃபுட் கோர்ட் மட்டும் சற்று சிறப்பாக இருப்பதாய்ப்பட்டது

வாங்க நினைத்து வாங்காமல் வந்த புத்தகங்கள் இன்றையகாந்தி, அறம் சிறுகதைகள், வெள்ளை யானை, ஆழிசூழுலகு,அசோகமித்ரன் கட்டுரைகள்

இனி இந்த ஆண்டு வாங்கிவந்த புத்தகங்களின் விபரம்

  • ப.சிங்காரம் நாவல்கள்(கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி)
  • வாஸவேச்வரம் - கிருத்திகா
  • சூரியனுக்கு அருகில் ஒரு வீடு -  மனுஷ்ய புத்திரன்
  • கடைசி டினோசார் - தேவதச்சன்
  • K அலைவரிசை - முகுந்த் நாகராஜன்
  • அரசு பதில்கள் 1980
  • ஞாபகம் வருதே - சித்ராலயா கோபு



Sunday, January 06, 2013

அ-புனைவு ‍ வாசிப்பு சவால்


புத்தக வாசிப்பைப் பொறுத்தவரை 2012 மிகவும் சுமாரான ஆண்டு எனக்கு. 2013‍ன் புத்தகக் கண்காட்சி நெருங்கிவிட்ட நிலையில் ஏற்கனவே வாங்கிவைத்து பிரிக்கப்படாமல் இருக்கும் புத்தகங்களே ஏராளம். ஒவ்வொரு புத்தகமும் அது எப்போது படிக்கப்படவேண்டும் என்பதை அப்புத்தகமே தீர்மானிக்கின்றது என்றெல்லாம் எத்தனை காலத்துக்கு ஜல்லி அடிப்பது?? ஆக இவ்வருடத்தில் சற்று திட்டமிட்டு வாசிக்கவும், வாசித்தவை குறித்த எண்ணங்களை சேமித்துக்கொள்ளவும் இந்த வாசிப்பு சவாலை எடுத்துக்கொள்கிறேன்.

புனைவு வாசிக்க ஆர்வம் குறைந்து வருகிறது (பொறுமை குறைந்து வருகிறது என்றும் சொல்லலாம்). வாசிக்கத்துவங்கி பாதியில் நிறுத்தியிருக்கும் புனைவுகளை வாசித்து முடித்தாலே இவ்வருடத்திற்குப் போதுமானதாக இருக்கும். இவ்வருடம் நிறைய அ‍-புனைவுகளும், கவிதைக்ளும் வாசிக்கத் திட்டம்.  இனி ஆட்ட விதிகள்




Levels:

Geek: 4-6 books in at least 2-3 different categories
Dork: 7-10 books in at least 4-5 different categories
Dweeb: 11- 14 books in at least 6-7 different categories
Nerd: 15+ books in at least 8+ different categories

Categories:

* Health, Medicine, Fitness, Wellness
* History- US, World, European, etc
* Religion, Spirituality, Philosophy
* Technology, Engineering, Computers, etc
* Business, Finance, Management
* Sports, Adventure
* Food- Cookbooks, Cooks, Vegan Vegetarianism, etc
* Autobiography, Biography, Memoir
* Art, Photography, Architecture
* Music, Film, TV
* Self Improvement, Self Help, How To
* Home, Garden
* Science-Nature, Weather, Biology, Geology
* Anthropology, Archaeology
* Animals-Insects, Mammals, Dinosaurs, etc
* Family, Relationships, Parenting, Dating, Love
* Crime, Law
* Poetry, Theatre
* Politics, Government, Current Affairs
* Literary Criticism/Theory
* Cultural Studies
* Travel
* Crafts


வகைமைகளை முன்னமே முடிவு செய்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. ஆனால், வகைக்கு இரண்டு புத்தகங்களை மட்டுமே படிப்பது விரிவான வாசிப்புத்தளம் அமைய உதவும்.

* மேற்குறிப்பிட்ட வகைகளைத்தவிர்த்து வேறு ஏதேனும் தோன்றினாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: நான் எந்தவிதிகளையும் வைத்துக்கொள்ளப் போவதில்லை. இஷ்டம் போல வாசித்துவிட்டு, வருட இறுதியில் மேற்சொன்னபடி வகைப்படித்திப் பார்க்கப் போகிறேன்.

Thanks to http://bookmarktoblog.blogspot.in/


Update(03/01/2014):


  • பாரதி விஜயா கட்டுரைகள்
  • இசையாலானது(Krishna Davinci)
  • பாம்புதைலம்(Payon)
  • கற்றதும் பெற்றதும் தொகுதி IV
  • இடாகினி பேய்களும்(Gopikrishnan)
  • மூங்கில் மூச்சு(Su.Ka)
  • A man without a Country (kurt vonnegut)
  • Where there is a will (John Mortimer)



Sunday, December 16, 2012

There is no spoon..




Spoon boy: Do not try and bend the spoon. That's impossible. Instead only try to realize the truth.

Neo: What truth?

Spoon boy: There is no spoon.

Neo: There is no spoon?

Spoon boy: Then you'll see that it is not the spoon that bends, it is only yourself.


எனக்கு மிகவும் பிடித்தமான காட்சிகளில் ஒன்று இது. ஒரு ஸென் தத்துவத்தை இதைவிட எளிமையாக விளக்கிவிட முடியாது. 

இதற்குப் பலவிளக்கங்கள் உண்டு, என்னுடைய புரிதல்
"உண்மையான உண்மை என்று ஏதுமில்லை. நமக்கான உண்மையை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். ஸ்பூனைப் பற்றிய நம் பௌதீக‌ ஆறிவு அதனை வளைப்பதிலிருந்த்து நம்மைத் தடுக்கிறது. மாயையிலிருந்து விடுபட்டு, மனதின் நம்பிக்கையைப் பொருத்தே உண்மைகள் நிர்மாணிக்கப்படுகின்றன என்பதை உணரும்போது யாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகிறோம். அதாவது மனம் எதனை முழுமையாக நம்புகிறதோ அதுதான் உண்மை!!"

Saturday, December 01, 2012

"தலாஷ்" - ‍ஒரு பார்வை (Spoiler இன்றி ரத்தமின்றி)




கமல் மற்றும் அமிர் கான் படங்களை வெளியான முதல் சில தினங்களுக்குள் பார்ப்பதை வழக்கமாக்கி சில காலம் ஆகிறது. படம் நன்றாக இல்லையென்றாலும் அதை நாமே பார்த்துதான் முடிவு செய்யவேண்டும். இல்லையெனில் இணைய உலாவரும்போது விமர்சங்கள் கண்ணில்பட்டு, முன்தீர்மானங்களுடன் படம் பார்க்க நேரிடும். ஆக, நாம் முதலில் படத்தை  பார்த்துவிட்டு மற்றவர்களுக்குத் தீர்மானங்களை வழங்கலாம் :‍‍‍‍‍‍‍‍)

* தலாஷை எந்தஅளவுக்கு இருண்மை(Noir)வகைத்திரைப்படமாக வகைப்படுத்தலாமோ அதே அளவுக்கு எமோஷன‌ல் ட்ராமாவாகவும் வகைப்படுத்தலாம்.

* தலாஷ் அதன் சஸ்பென்சால் அல்ல, நடிகர்களின் தேர்ந்த்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறது.

* மனோரமா‍‍‍  சிக்ஸ் ஃபீட் அன்டர்,ஷாங்காய் போன்ற மெதுவாகச் செல்லும் த்ரில்லர் பட்ங்கள் பிடித்தவர்களுக்கு தலாஷும் பிடிக்கும்.

* க்ளைமாக்ஸ் திருப்பம் குறித்து புகாரில்லை என்றாலும் அதை இன்னும் கொஞ்சம் க்ரிஸ்பாக சொல்லியிருக்கலாம். முடிந்தால் Lays வாங்கிச்செல்லவும்.

* அமிர்கான், நவாஸுதின் சித்திக், கரீனா கபூர், ராணிமுகர்ஜி ஆகியோர் இதே வரிசையில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

* நடந்து முடிந்த அசம்பாவிதம் ஒன்றை எப்படியெல்லாம் தடுத்திருக்கலாம் என மனதில் ஓட்டிப்பார்க்கும் காட்சி ஃபரானோ, ஸோயாவோ, ஆமிரோ இல்லை ரீமாவோ யாருடைய உருவாக்கமாக இருந்தாலும்  அவருக்கு பாராட்டுக்கள்.

*  'பார்த்த ஞாபகம் இல்லையோ'வை நினைவுபடுத்தும் 'முஸ்கானே ஜூட்டீ ஹை' பாடலும், 'ஜீலே ஸரா'வும் இன்னும் கொஞ்ச‌ நாட்களுக்குக் ஒலித்துக்கொண்டிருக்கும்.(இசை:சம்பத்)

* என்னளவில், தலாஷ் ஆகா ஓகோவெல்லாம் இல்லையென்றாலும் கண்டிப்பாக பார்க்கக்கூடிய படம், அமிர்கானுக்காகவாவது...

Saturday, July 02, 2011

டெல்லி பெல்லி சில்லி!!


டெல்லி பெல்லி ஒரு திராபை. ஆமிர்கான் பேனராயிற்றே என்று நம்ம்பி போனால் கெட்ட கெட்ட வார்த்தைகளில் வைகிறார், அதுவும் 90 நிமிடங்களும் வைகிறார்.அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக திரையில் காட்டப்படும் அசிங்கங்களால் நகைச்சுவையுணர்வைத் தூண்டமுடியாது என்ற அடிப்படை, கானுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான். படத்தில் கெட்டவார்த்தைகள் போக மீதமுள்ள வசனங்களை ஒரு பஸ்டிக்கெட்டின் பின்புறம் எழுதிவிடலாம்(க்ளிஷெ..க்ளிஷே).கதை என்று ஒன்றும் பெரிதாக இல்லை, அது இல்லாமலேயே துரத்தல்‍‍‍‍‍‍‍‍‍‍ ‍-ஆள்மாறாட்ட வகை படங்களை சிறப்பாக எடுக்கமுடியும்.ஆனால்,ஆயத்தகாட்சிகள் முடிந்து சுவாரசியம் தொடங்கும்போது படம் முடிந்துவிடுகிறது. படத்தில் வரும் "ஆய்" காட்சிகள் சிரிப்புக்குபதில் அருவெறுப்பைத்தான் தருகின்றன(இந்த சமயத்தில், பேசும் படத்தில் கமல் "ஆய்" காமெடியை 'கையாண்ட' விதத்தை வியக்காமல் இருக்கமுடியவில்லை ;) )

எல்லா வாக்கியங்களையும் கெட்ட வார்த்தைகளுடன் துவங்கி முடிக்கும் நிறைய வட இந்திய இளைஞர்களை சந்த்திருக்கிறேன், ‍அவர்கள் இந்தப்படத்தைக் கொண்டாடப்போவது உறுதி.
Shit happens,,,,,Oh yeah!!

Tuesday, May 04, 2010

Tuesday Teasers 3

# Grab your current read.
# Let the book fall open to a random page.
# Share with us few “teaser” sentences from that page.
# You also need to share the title of the book that you’re getting your “teaser” from … that way people can have some great book recommendations if they like the teaser you’ve given!
# Please avoid spoilers!

சென்னையில் ஆகாய யாத்திரை

இந்தியாவெங்கும் பிரஸித்தி பெற்ற ஸ்பென்ஸர் நமது சென்னைபுரிக்கு வந்து,
மும்முறை ஆகாய யாத்திரை செய்தார். இவர் ஆகாயத்தில் ஏறும்போது புகைக்கூட்டின் துணையினாலேறி வரும்போது அதைவிட்டு அதனோடு சேந்தாற்போல் மாட்டியிருந்த பாராசூட் என்னும் பெருங்குடையைப் பிடித்து அதன் கீழே தொங்கிக்கொண்டு தமக்கு சிறிதாயினும் அபாயமில்லாதபடி ஷேமமாக வந்திறங்கினார். சற்றேறக்குறைய 3200-அடி உயரம் மட்டும் தான் ஏறினார். அவர் இறங்கி வருகையில் இந்திர லோகத்தினின்று தேவ விமானத்தின் வழியாக யாரோ தேவதை பூமியில் வந்திரங்குவது போலிருந்ததைக் கண்டு
அங்கு வந்திருந்த பல்லாயிரம் பிரஜைகளும் அவருக்குப் பல்லாண்டு பாடி ஆனந்தமடைந்தார்கள்.
- ’ஜநாநந்தினி’ சென்னை 1891 மார்ச்
(ஆசிரியர் அன்பில் எஸ்.வெங்கடாசாரியார்)
புஸ்த. 1. இல 3. பக்கம் 53


சடுதியாக ஒரு அறிமுகம்:
ட்ராவலாக்(travelogue) என்று சொல்லப்படும் பயண இலக்கியங்கள் தமிழில் மிகக்குறைவு. அந்தக்குறையைப் போக்குவதற்காக ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்று அறியப்படும் திரு ஏ.கே.செட்டியார் தமிழக ஊர்கள், அரிய நிகழ்ச்சிகள் தொடர்பாக கி.பி.1800 முதல் 1950 வரை தமிழில் வெளியான அனைத்து செய்திகளையும் கவனமுடன் தொகுத்து ‘தமிழ் நாடு’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். அந்நாளில் ஒவ்வொரு ஊரும் எப்படியிருந்தது என்பது குறித்த விவரணைகளும், ரயில், ஆகாய விமானம் குறித்த செய்திகளும் மிக சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளன.
---------------------------------------------------------------------------------------------
நூலின் பெயர்: தமிழ்நாடு
திரட்டி தொகுத்தவர்: ஏ.கே.செட்டியார்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்

---------------------------------------------------------------------------------------------


Friday, April 30, 2010

சிதம்பர நினைவுகள் - வாசக அனுபவம்


புத்தகவிமர்சனங்கள் படிக்கும் போது ஒருவித செலக்டிவ் அம்னிஷியா இருப்பது உசிதம். அதாவது புத்தகம் குறித்த மேலோட்டமான விவரங்கள் மட்டும் நினைவில் இருக்கவேண்டும். உதாரணமாக யார் எழுதியது, புத்தகம் குறித்து விமர்சகரின் ஒட்டுமத்த மதிப்பீடு என்ன போன்றவற்றை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் நுணுக்கமான விஷயங்கள், சிலாகிப்புகளை மறந்து விடலாம். ஏனெனில் முதல்முறை புத்தகத்தை படிக்கும்போது வாசகனுக்கு நியாயமாக எழவேண்டிய உணர்வுகளை இவை பாதிக்கும். அந்த வகையில் நான் அண்மையில் கண்டெடுத்த ஒரு முத்து “சிதம்பர நினைவுகள்”. இந்த புத்தகத்தைப் பற்றி நிறைய கேள்விபட்டிருந்தாலும், இது குறித்த எந்த விபரமும் நினைவில் இல்லை. சொல்லப்போனால் இதன் ஆசிரியர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பற்றி கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஆனால், இப்போது எனக்குப் பிடித்தமான புத்தகங்களின் பட்டியலில் சேர்ந்து கொண்டுள்ளது இந்தப் புத்தகம்.

மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய “சிதம்பர ஸ்மரண” என்ற கட்டுரைத் தொகுதியினை திருமதி கே.வி.ஷைலஜா, சிதம்பர நினைவுகளாகத் தமிழில் ஆக்கித் தந்திருக்கிறார். தனித்தனி சம்பவங்களாக 21 கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூலை சுயசரிதம் என்று வகைப்படுத்துவதும் சரியாகவே இருக்கும். காரணம், புத்தகத்தை படித்து முடிக்கும்போது பாலச்சந்திரன் பற்றிய முழுமையான சித்திரம் வாசகனுக்கு உருவாகும். கட்டுரைகளின் வழியே பாலச்சந்திரன் என்ற கவிஞனை வளர்த்தெடுப்பது இனிய அனுபவம்.

புத்தகத்தின் தலைப்பிலான கட்டுரை(சிதம்பர நினைவுகள்) முதலாவதாக அமைந்துள்ளது. சிதம்பரம் கோவிலில் ஒரு வயது முதிர்ந்த தம்பதிகளைச் சந்திக்கிறார். ஒருவருக்கொருவர் ஆதரவாய், அன்யோன்யமாய் அன்பு செலுத்திக்கொள்ளும் அவர்களைக் கண்டு மனம் நெகிழ்ந்து போகிறார். தள்ளாத வயதில் சொந்த பந்தங்களைத் தாமாகவே பிரிந்து வந்து அவர்கள் வாழும் வாழ்க்கை ஒரு மகத்தான தவம் போலுள்ளது. அப்போது அவருக்கு தன் தாயின் நினைவு வருகிறது. அவரது தனிமை பற்றிய எண்ணம் மனதை சஞ்ஜலப் படுத்துகிறது. பாலச்சந்திரனுக்கும் அவருடைய தாயருக்குமான உறவு மிகுந்த சிக்கலானதாக இருப்பது கட்டுரைகளினூடாக காணக் கிடைக்கிறது. தாய்மீது மிகுந்த பாசம் கொண்டவராக ஆனால் அவரை சரியாக பராமரிக்கத் தவறியதற்காக மிகுந்த குற்ற உணர்ச்சி உடையவராக இருக்கிறார். தன் வீட்டுக்கு பிச்சைகேட்டு வரும் முதியவளிடமும், தென்னாப்பிரிக்காவில் தான் சந்திக்கும் மார்த்தா என்ற மூதாட்டியிடமும் மிகுந்த பிரியத்துடன் நடந்துகொள்ளும் பாலச்சந்திரன் அவர்களில் தன் தாயையே காண்கிறார். தன் தாயிடம் தான் கொண்ட பாசத்தைக் காட்டிலும் அதனை வெளிப்படுத்த முடியாதது குறித்த மன உளைச்சலை கட்டுரைகளில் அதிகம் பதிவுசெய்கிறார்.

இது தவிர, பாலச்சந்திரன் அதிகமாகப் பேசும் மற்றொரு விஷயம் ‘பசி’. கல்லூரியில் படிக்கும்போதே நக்ஸல் இயக்கங்களில் சேர்ந்து, அதன் காரணமாக வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார். அதுமுதல் துவங்கி வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக ஸ்திர நிலை ஏற்படும்வரை, வறுமையின் ஒவ்வொரு பல்சக்கரத்திலும் அரைபடுகிறது அவரது வாழ்வு. குறிப்பாக பசி அவரை முழுமையாக வென்றெடுக்கிறது. ஒரு திருவோண நாளன்று மிகுந்த பசியுடன் ஒரு வீட்டில் பிச்சை எடுக்கவும் தயங்காதவராக ஆகிறார். அவருக்கு உணவு வழங்கும் அந்த வீட்டில் அவரை கவிஞர் என்பதை நன்கறிந்த ஒரு பெண் இவரைக் கண்டுகொண்டு அதிர்ச்சி அடைகிறார். இதனைவிட தர்மசங்கடமான ஒரு நிலை எந்த கவிஞனுக்கும் ஏற்பட முடியாது. அப்போது அவரது மனநிலையை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“கடவுளே! பாதிகூட சாப்பிடலயே, எழுந்து ஓடிவிடலாமா? - வேண்டாம் ஒரு இலை முழுக்க இருக்கும் சோற்றைத் தூக்கியெறியவா?
மதிப்பும் மரியாதையும்விடப் பெரியது பசியும்சோறும் தான்.நான் சலனமின்றி சாப்பிட ஆரம்பித்தேன்.”
மற்றொரு கட்டுரையில், ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்து பின்பு பைத்தியம் பிடித்து தெருவில் அலையும் தன் நண்பனைக் கண்டு அவருக்கு நல்ல உடைகள் வாங்கிக் கொடுத்து உணாவகத்துக்கு அழைத்துச்செல்கிறார். அங்கே உணவைக் கண்டதும் பாய்ந்து உண்ணும் தனது நண்பனைக் பற்றி இப்படி சொல்கிறார்.

“பசி இல்லாமல் போக, பைத்தியத்தினால் கூட முடியவில்லையே என்ற துக்கம் என்னுள் ப்ரவாகமெடுத்தது. பசிதான் பரம சத்தியம். பைத்தியம் கூட பசிக்குப் பிறகுதான் என்ற உண்மை எனக்குத் தெளிவாகப் புரிந்தது.”

வறுமை காரணமாக பிள்ளை பெற்றுக்கொள்ள கூடாது என கர்பவதியான தனது மனைவியை மிரட்டி கருக்கலைப்பு செய்வதை சொல்லும் ’கர்பவதம்’ கட்டுரை மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இந்நூலை சுயசரிதம் என வகைப்படுத்த மற்றொரு காரணம் பாலச்சந்திரனின் எழுத்தில் தொனிக்கும் சத்தியம். தனது பலவீனங்களையும், கொள்கை சார்ந்த சறுக்கல்களையும் தயக்கமின்றி வாசகன் முன் எடுத்துவைக்கிறார். எதிலும் தனது செயல்களை நியாயப்படுத்தும் முயற்சி சற்றும் கிடையாது. ஒரு பாலியல் தொழிலாளியைப் போலீஸிடமிருந்து காப்பாற்றி தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கும் கட்டுரையில் அவரது கண்ணியம் வெளிப்படுகிறது. மற்றொரு கட்டுரையில், வீட்டிற்கு வரும் ஊறுகாய் விற்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டு அடிவாங்கி கூனிக் குறுகி தனது பலவீனமான பக்கத்தை வெளிப்படுத்துகிறார். ஆகச்சிறந்த சுயசரிதங்களில் ஒன்றாக காந்தியின் சத்தியசோதனையக் கொண்டாட காந்தியின் நேர்மைதானே காரணம்!
தொகுப்பில் உள்ள 'தீப்பாதி' மற்றும் 'பைத்தியக்காரன்' கட்டுரைகள்
மிகச்சிறந்த சிறுகதைகளாகக் கொள்ளத்தக்கன. சிவாஜி கணேசனைச் சந்தித்த அனுபவத்தை , ஒரு அடிமட்ட ரசிகனுக்கே உரிய குதூகலத்துடன் ‘மகாநடிகன்’ என்ற கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ஷைலஜாவின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. கல்லூரி காலத்தில் தொடர்ந்து சில மொழிபெயர்ப்பு இதழ்களை வாசித்துவந்திருக்கிறேன் என்கிற தகுதியில் என்னால் இதனை உறுதியாகச் சொல்லமுடியும். வழக்கமாக நேரடியான மொழிபெயர்ப்பில் தென்படும் வினோத வார்த்தைப் பிரயோகங்கள் (குறிப்பாக மலையாள மொழிபெயர்ப்பு), வேகத்தை தடைசெய்யும் அதிக்கபடியான வார்த்தைகள் போன்ற உபத்திரவங்கள் இல்லை. மொழிபெயர்ப்பை வாசிக்கிறோம் என்ற எண்ணமே தோன்றா வண்ணம் தெளிந்த நீரோடை போன்ற மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. நூலின் ஆசிரியர் கவிஞர் என்பதால் மங்கிய கவிதை போன்றதொரு நடையில் தான் மொத்தமுமே எழுதப்பட்டிருக்கிறது. இது மொழிபெயர்ப்பாளருக்குக் கூடுதல் சவால். இன்னமும் படிக்கவில்லையென்றால், கண்டிப்பாக வாசிக்கபடவேண்டிய புத்தகங்களின்
பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Saturday, March 27, 2010

அங்காடித் தெரு



சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களின் விலை சொல்லும் சிறுமி, ஹோட்டலில் தண்ணீர் வைக்கும் சிறுவன், சிக்னலில் டிவி கவர் வாங்கசொல்லி நச்சரிக்கும் சிறுவன் இவர்களைப்பார்க்கும் போதெல்லாம் , ஏன் இவர்களுக்கு மட்டும் இப்படியான வாழ்க்கை அமைந்திருக்கிறது என்று தோன்றும். வாழ சரியான வாய்ப்புகள் வழங்கப்படாத இவர்களின் எதிர்காலம் என்ன என்ற அச்சமும், குற்றவுணர்வும் தோன்றும். அதுபோன்ற சமயங்களில் சட்டென்று கவனத்தைக் கலைத்துக் கொண்டு சொந்தவேலைகளில் மூழ்கிப்போவேன்(வோம்). இவர்களின் வாழ்க்கையை வலியுடன் திரையில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார் வசந்தபாலன். குறைகளென்று தேடிச்சொல்ல நிறைய இருந்தாலும், மிகச்சிறந்த படங்களின் வரிசையில் சந்தேகத்திற்கிடமின்றி இடம் பிடிக்கிறது ’அங்காடித்தெரு’. படம் பற்றிய எண்ணங்கள் மனதை அலைக்கழிப்பதால் “கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்” என்பதை மட்டும் சொல்லி பதிவை முடிக்கிறேன்.

Sunday, March 21, 2010

Love Sex Aur Dhokha(no spoilers)



கொஞ்ச நாட்களுக்கு முன்பு “Paranormal Activity” என்று ஒரு படம் பார்த்தேன். நான் பார்த்த பேய்ப்படங்களில் மிகச்சிறந்தது என அப்படத்தை சொல்லலாம்; சிறந்தது மட்டுமல்ல, அது ஏற்கனவே வெளிவந்திருக்கும் பேய்படங்களின் தரத்தை கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது. ஏனென்றால் பயம் என்பது காதல், காமம், நகைச்சுவை போலவே ஒரு உணர்வு. அதீத ஒப்பனையாலோ, எதிர்பாராத சமயத்தில் எழுப்பப்படும் உரத்த ஒலியினாலோ பயம் வருவதில்லை.அது வெறும் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தும். மாறாக, இந்தப் படம் ஊசியிலுள்ள மருந்தை உடம்பில் ஏற்றுவதைப்போல பார்வையாளனுக்குள் மெதுவாக பயத்தை ஏற்றுவதாக இருந்தது. இதற்கு அடிப்படையாக அமைவது video footage உத்தி. அதாவது படம் முழுமையையுமே ஒரு கதாபாத்திரம் ஹேண்டி கேமில்(Handy cam) எடுத்த காட்சிகளின் கோர்வையாகக் காட்டுவது. இது பார்வையாளனுக்கு முதலில் தான் சினிமா பார்க்கிறோம் என்ற எண்ணத்தைக் குறைக்கும்; சகஜ நிலையை ஏற்படுத்தும். பின் இயக்குனர் சொல்ல நினைக்கும் ஒவ்வொரு விஷயமும் , மங்கூஸ் மட்டையின் மைய்யத்தில் பட்ட பந்துபோல சிக்ஸர்தான். இந்த வீடியோஃபூட்டேஜ் உத்தியைப் பயன்படுத்தி இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்கும் முதல்(முழுநீள)ப்படம் 'Love Sex Aur Dhokha' (விருமாண்டியின் முதல் பத்து நிமிடங்கள் நினைவிருக்கலாம்).

திபாகர் பானர்ஜியின் முதல் இரண்டு படங்களைப்போலவே(Khosla ka Ghosla, Oye Lucky! Lucky Oye!), இதுவும் அசலான படைப்பு. முறையே காதல்,காமம் மற்றும் துரோகம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மூன்று சிறுகதைகளை மூன்று பகுதிகளாக எடுத்திருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் இம்மூன்று அம்சங்களும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்திருப்பது சிறப்பு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் , கேமரா என்ற உபகரணம் எடுத்திருக்கும் விஸ்வரூபமும், அதனால் நாம் ப்ரைவஸி இழந்து அம்மணமாக்கப்பட்டிருப்பதும் உணர்த்தப்படுகிறது. எனினும், இவை அம்பலப்படுத்தும் உண்மைகளும் முக்கியமானவையே. குறிப்பாக நாம் ’நித்யானந்தமாக’ இருக்கும் இந்தசமயத்தில், இப்படத்தை நன்கு தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது.

படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் இவர்களைவிடவும் அதிகம் பாராட்டப்படவேண்டியவர்கள் இப்படத்தின் நடிகர்களே. ஏற்கனவே மக்களுக்கு பரிச்சயமான எந்த நடிகரையும் இந்த படத்தில் நடிக்கவைக்க முடியாது. ஆக, எல்லாரும் முதல்முறை நடிகர்கள். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த எல்லாரும் கொஞ்சமும் செயற்கைத்தனமில்லாமல், இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் குறைகளென்று பார்த்தால், ஆங்காங்கே தலை தூக்கும் பாலிவுட்தனமான வசனங்கள், அவசரகதியில் எடுக்கப்பட்டது போன்ற உணர்வைத்தரும் கடைசி கதை இவற்றை சொல்லலாம். மற்றபடி இது மிக புத்திசாலித்தனமான,தைரியமான படம் என்பதை பல இடங்களில் உணர வைக்கிறார் இயக்குனர். முதல் கதையில் எதிர்பாராத ஒரு தருணத்தில் நிகழ்த்தப்படும் வன்முறை இதற்கு ஒரு உதாரணம். மூன்றாம் தர இயக்குனர்களிடம் சிக்கி சீரழிவதற்குமுன் இந்தப்படத்தைத் தமிழில் யாராவது எடுக்கலாம்.
3.5/5

Wednesday, March 17, 2010

Crazy Heart - திரைப் பார்வை



’நடிக்கவில்லை; கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்’ என்ற அடித்துத் துவைத்துக் கிழிக்கப்பட்ட வாக்கியத்தின் உண்மையான பொருளை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் “Crazy Heart” படம் பார்க்கலாம்.நீண்ட கால கண்ணாமூச்சிக்குப் பிறகு ஐந்தாவது நாமினேஷனில்
ஜெஃப் ப்ரிட்ஜஸ்க்கு ஆஸ்கர் குழந்தையைப் பெற்றுத் தந்திருக்கிறது இப்படம்.

இந்த படத்தில் ஜெஃப் ப்ரிட்ஜஸுக்கு Bad Blake என்ற (57 வயது) குடிகார பாடகன்(Country Singer) கதாபாத்திரம். ஒரு காலத்தில் புகழுடன் இருந்து, பின்பு நொடித்துப் போய், தெருவோர பார்களில் பாடிக்கொண்டிருப்பவர். இவருடன் இணைந்து முன்பு பாடிக்கொண்டிருந்த டாமி, இப்போது பெரிய நட்சத்திரம். திருமண வாழ்வில் தொடர் தோல்விகள், இசை உலகில் வீழ்ச்சி, தீராத குடிப்பழக்கம் என அழுகிக்கொண்டிருக்கிறது அவரது வாழ்க்கை. இந்நிலையில், பத்திரிக்கைக்காக தன்னை பேட்டி காண வரும் ஜீன் என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார். ஜீனும் அவளது ஐந்து வயது மகனும் அவரது வாழ்வில் நம்பிக்கைகான ஒளியைத் தருகிறார்கள். இவர்களை பற்றுக்கொடியாகக் கொண்டு எப்படியாவது மீண்டுவரத் துடிக்கிறார். பெரும்பாலும் ஊகித்துவிடக் கூடிய தட்டையான கதையமைப்பு. எனினும்,இந்தப் படத்தை முக்கியமான படங்களின் வரிசையில் சேர்ப்பது ஜெஃப் ப்ரிட்ஜஸின் நடிப்பும், மென்மையான இசையும் தான்.

ப்ரிட்ஜஸின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்(திரை ஆளுமை!) அலாதியானது. நடை, உடை, கையசைவு, சிறு செருமல், சோர்வு என நுணுக்கமான விவரங்களுக்கும் முக்கியதுவம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தோல்வியுற்ற பாடகனை கண்முன் கொண்டுவருகிறார். விஸ்கியில் தோய்ந்த குரலில்அவர் பாடல்களைப் பாடும் போது ஜெஃப் ப்ரிட்ஜஸ் என்ற நடிகன் முழுமையாக மறைந்து Bad Blake என்ற பாடகன் உருக்கொள்கிறான். இதை விட ஒரு நடிகனுக்கு மகத்தான வெற்றி வேறென்ன இருக்க முடியும்?
இதற்கும் 'சென்ட் ஆஃப் அ வுமன்' படத்தில் அல்பசீனோவுக்கு
கிடைத்தது போல ஆளுமையை விவரிக்கும் பிரத்தியேக காட்சிகள் எதுவும் கிடையாது.கதையின் ஓட்டத்தில் முழுமையாகக் கரைந்து பல இடங்களில் அன்டர் ப்ளே(under play) செய்திருக்கிறார். ஜீனாக வரும் மேகி கில்லெனால், ராபர்ட் டூவெல், காலின் ஃபேரல் ஆகியோர் கன கச்சிதமாக அவரவர் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள். படத்தில் ஆங்காஙே வரும் கவிதுவமான வசனங்கள் புன்னகைக்க வைக்கின்றன.
(Jean: “Where’d all those songs come from?”
Bad Blake:“Life, unfortunately.” )

படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு அம்சம் இசை.பொதுவாக ஆங்கில பாடல்களைக் கேட்க்கும் வழக்கமில்லாத எனக்கே பாடல்களை திரையில் கேட்க இனிமையாக இருந்தன. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டி-போன் பர்னெட் மற்றும் (late) ஸ்டீஃபன் ப்ரூட்டன் அருமையான பாடல்களைத்
தந்திருக்கிறார்கள். குறிப்பாக "Weary kind" பாடல் இந்த முறை சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதைப் வென்றிருக்கிறது.கேட்டுப் பாருங்கள்.


இயக்குனர் ஸ்காட் கூப்பர் பல தொலைக்காட்சி தொடர்களை எடுத்திருந்தாலும் இதுவே அவருக்கு முதல் படம்.திரைக்கதை விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும், போரடிக்காமல் செல்கிறது. ஜெஃப் ப்ரிட்ஜஸிடமிருந்து மிகச் சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்ததற்காக இவரைக் கண்டிப்பாகப் பாராட்டலாம். ஜெஃப் ப்ரிட்ஜஸின் ஆகச்சிறந்க்ட நடிப்பாக 'பிக் லெபோஸ்கி'(Big lebowski) என்ற படத்தில் நடித்ததைக் குறிப்பிடுவார்கள். இந்த படத்திற்குபபின் அது மாறலாம்.

Congratz Dude!!

Tuesday, March 09, 2010

Tuesday Teasers 2

# Grab your current read.
# Let the book fall open to a random page.
# Share with us few “teaser” sentences from that page.
# You also need to share the title of the book that you’re getting your “teaser” from … that way people can have some great book recommendations if they like the teaser you’ve given!
# Please avoid spoilers!

ஒரு பூ
--------
மஞ்சள் வண்ணம்
அடுக்கடுக்காக இதழ்கள்.
ஒற்றைக் கொத்தில் ஏழெட்டாக பூப்பவை.
வஸந்த காலம் வருவதை
முதலில் தெரிந்துகொண்டு முதலில் பூப்பவை.
உற்றுப் பார்த்தால் அல்லது
சற்றே அருகில் சென்று பார்த்தால்
செந்நிறமாக மாறும் குணம் உடையவை.
முகர்ந்தால் எப்படி இருக்கும் என்று
கொத்துப் பூவைப் பறித்தேன்.
முகர்ந்தால் நாற்றம்.
இதைப்போல் அதைப்போல் என்றில்லை.
எனக்குக் குமட்டல். கிறுகிறுப்பு.
மெல்லச் சரிந்தேன்.
அற்பத்தில் அற்பம் ஒரு மஞ்சட் பூங்கொத்தை
மார்பின் மேல் வைத்துக்கொண்டு
கிடக்கிறான் என்று உலகம் சொல்கிறது

---
பக்கம் எண்: 34
புத்தகம்: பென்சில் படங்கள்
ஆசிரியர்: ஞானக்கூத்தன்
பதிப்பகம்: விருட்சம்

Sunday, March 07, 2010

லண்டன் டயரி - புத்தகப் பார்வை


வரலாறு படிப்பவர்களில் இருவகையுண்டு. முதல் வகை, அடிப்படையிலேயே வரலாறு பற்றிய செய்திகளில் ஆர்வம் உடையவர்கள். இவர்களுக்கு வரலாறு சொல்லப்படும் முறை குறித்தும், அதன் சுவாரஸியம் குறித்தும் அக்கறை கிடையாது. அதன் நம்பகத்தன்மையே பிராதமானது.வரலாற்றை சொல்லும்போது, எங்கேனும் காற்புள்ளி, அரைப்புள்ளி அதிகப்படியாக விழுந்தாலும் இவர்களுக்குக் கோபம் வந்துவிடும். இரண்டாம் வகை, என் போன்றவர்கள். பள்ளி நாட்களில் சரித்திர பாட வகுப்பில் குறட்டை விட்டுத் தூங்கியவர்கள். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மீது தீராத வெறுப்புடையவர்கள். ஆனால் , சரித்திரத்தையும் சொல்லும் விதமாகச் சொன்னால் சுவாரஸியமாகவே இருக்கும் என்று நம்புகிறவர்கள். இந்த இரண்டாம் வகையினருக்காகவே பெரும்பான்மையான புத்தகங்கள் இந்நாட்களில் எழுதப்படுகின்றன. இதில் பிரச்சினை, இந்த ஆசிரியர்கள் சுவாரசியம் சேர்க்கவேண்டி வரலாற்றினை சற்று வளைப்பது தான். இது ஆரம்பத்தில் வாசகனை உள்ளிளுக்கப் பயன் பட்டாலும், பின்பு இந்த செயற்கைத்தனம் சோர்வையே ஏற்படுத்தும். குறிப்பாக “ஆசிரியர் டுமீல் விடுகிறாரோ!!” என்று வாசகன் சந்தேகிக்கும் அந்த கணத்தில் புத்தகத்தின் தோல்வி துவங்குகிறது. அண்மையில் நான் வாசித்த ”லண்டன் டயரி” இந்த இரண்டு வகையும் அல்லாத / இரண்டுவகையினரையும் திருப்திப் படுத்தும் படி எழுதப்பட்டிருக்கும் ஒரு நூல். இரா.முருகன் இந்நூலில் கையாண்டிருக்கும் யுக்தி புத்திசாலித்தனமானது.அதாவது வரலாற்றை உள்ளபடி சொல்லி அதனோடு தன் நையாண்டியயும் இணைத்திருக்கிறார். நிகழ்வுகளின் நம்பகத்தன்மை பாதிக்காமலும், வாசகனை இறுதிவரை சோர்வடையாமலும் கொண்டு சென்றிருப்பதே இந்நூலின் வெற்றி.

லண்டன் மாநகரின் வரலாறென்பது இங்கிலாந்தின் மொத்தவரலாற்றுக்கும் , ஒருவகையில் உலக வரலாற்றுக்கும் ஆதாரமானது. ஆசிரியரே சொல்வதுபோல, இதன் வரலாறு நம்முடையதைப் போல நீண்டநெடியதல்ல. கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வாக்கில்தான் இதன் துவக்கம் அமைகிறது. இதிலும் களபிரர்கள் காலம் போன்றதொரு இருண்டகாலம் உண்டு(சுமார் 100 வருடங்கள்). அதாவது என்ன நடந்தது, ஏது நடந்தது என்று தெரியாமல் வரலாற்று ஆசிரியர்கள் கைவிரித்துவிட்ட காலம். ஆக , மீதமுள்ள பத்தொன்பது நூற்றாண்டுகளில் நிகழ்வதுதான் லண்டனின் வரலாறு.

புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயமும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதில் லண்டனின் வரலாற்றையும், இரண்டாவதில் இன்றைய லண்டனின் காட்சிகளையும் ஆசிரியர் விவரித்துள்ளார். மேலோட்டமாகச் சொல்வதென்றால் பாலம் கட்டுவது, அடுத்த நாட்டை ஆக்கிரமிப்பது, அரசனை மாற்றுவது,தூக்குதண்டனை நிறைவேற்றுவது, தேவாலயங்கள், அரண்மனைகள் கட்டுவது, அவற்றை இடிப்பது அல்லது தீக்கிரையாக்குவது பின் மீண்டும் நிர்மாணிப்பது, இவையே பொதுவான நிகழ்வுகளாக இருந்திருக்கின்றன. தட்டையாக சொல்லியிருந்தால் சீக்கிரத்திலேயே அலுப்படைய செய்யும் அபாயமுள்ள வரலாறு, இரா.முருகனின் துள்ளலான நடையினால் பிழைக்கிறது. குறிப்பாக பழைய லண்டன், இன்றைய லண்டன் என பிரித்து, மாற்றி மாற்றி சொல்லியிருப்பது வாசகரை தொய்வடையாமல் கொண்டு செல்கிறது. இந்த வேறுபாடும் ஏதோ ஒரு புள்ளியில் மறைவது அருமை. இன்றைய லண்டனின் காட்சிகளை ஒரு கேமரா பார்வை கொண்டு விவரித்திருக்கிறார் முருகன். இதில் இவர் சொல்லும் காட்சிகள் லண்டனுக்கோ, குறைந்தபட்சம் ஏதாவதுஒரு வெளிநாட்டுக்கோ சென்ற எவரும் சந்திக்க நேர்பவைதான். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ’ஈஸ்ட் ஹாம்’ பற்றிய விவரணைகள் மீண்டும் அங்கு சென்றுவந்த அனுபவத்தை தந்தன.

புத்தகம் முழுவதும் லண்டனின் அழகான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் இவையாவும் கருப்பு வெள்ளையில் இருப்பது ஒரு குறை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பான்மையான இடங்களுக்கு நான் சென்றிருந்தாலும், அதன் வரலாற்று முக்கியதுவம் தெரியாமல் வெறும் ‘மேப் மார்க்கிங்’ செய்துவந்திருப்பது இதனைப் படித்தபின் புரிகிறது. மொத்தத்தில் நம்மை இருநூறு ஆண்டுகள் ஆண்டுவிட்டுப் போன வெள்ளையர்களின் வரலாற்றை நக்கலும் நையாண்டியுமாக சுவாரஸியமாக சொல்லிச்செல்கிறது ’
லண்டன் டையரி’.

Tuesday, January 05, 2010

Tuesday Teasers

# Grab your current read.
# Let the book fall open to a random page.
# Share with us few “teaser” sentences from that page.
# You also need to share the title of the book that you’re getting your “teaser” from … that way people can have some great book recommendations if they like the teaser you’ve given!
# Please avoid spoilers!

"குறிப்பிட்ட வடிவத்தில் அச்சாவதெல்லாம் கவிதை என்ற மாயை தகர்ந்த பிறகு
கவிதை அணுகுவதற்கும் கூடிய மட்டிலும் பகிர்ந்து கொள்வதற்கும் எளிதாகிறது.

கவிதையை நல்ல கவிதை கெட்ட கவிதை என்று பிரிக்க முடியாது, கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக் கொண்டுவிடுகிறது - அதனுடைய ஸ்திரமின்மையால், கண்ணை உறுத்தும் அழுத்தமான வண்ணங்களால், அனுபவ வறட்சியால், கூச்சல் போடுவதால், இன்னும் பிற அழிந்துபோன செயற்கையான வார்த்தைக் கூட்டங்களால். "
(பக்கம் எண்:221, ஆத்மாநாம் படைப்புகள், பதிப்பாசிரியர் பிரம்மராஜன்,காலசுவடு வெளியீடு)
அவ்வப்போது Tuesday Teasers பதிய முயற்சிக்கிறேன், முடிந்தால் செவ்வாய்கிழமைகளிலேயே!!

Sunday, January 03, 2010

புத்தகத் திருவிழா 2010




சிறுவயதில், தீபாவளிக்கு முதல்நாள் பங்கு பிரித்துக் தரப்படும் பட்டாசுகளைப் பார்க்கும் போது உண்டாகுமே, அதே போன்றதொரு உவகை நேற்று புத்தக சாலையிலிருந்து வாங்கிவந்த புத்தகங்களைப் பார்த்தபோது உண்டானது. பெரிதாக பட்டியல் எதுவும் தயாரித்துக்கொண்டு செல்லவில்லை. எனினும் வெவ்வேறு சமயங்களில், படிக்கவேண்டும்(Must Read) என்று மனது குறித்து வைத்திருந்த புத்தகங்களை பார்த்த மாத்திரத்தில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. இந்த வருடத்திற்கான புத்தக கோட்டா கிட்டத்தட்ட பூர்த்தியாகிவிட்டது. விடுபட்ட ஓரிரு புத்தகங்களை வாங்க அடுத்த வாரம் செல்ல வேண்டும். இனி புத்தகப் பட்டியல்..


1) India After Gandhi - Ramachandra Guha

இந்த வருடத்திற்குள் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தாலே என்னளவில் அது சாதனை தான். (900 பக்கங்கள்).


2) ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா

ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. சாவியில் அவர் எழுதிய கதைகளைத் தவிர்த்து மற்றவற்றை ஏற்கனவே படித்திருக்கிறேன்.


3)அரசூர் வம்சம் - இரா.முருகன் (நாவல்)

இதற்கு வந்த விமர்சனக்கட்டுரைகளை படித்ததற்கு பதில் இந்த

புத்தகத்தைப் படிக்கத்துவங்கியிருந்தால், இவ்வளவு நேரம் பாதி புத்தகத்தைத் தாண்டியிருப்பேன். மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் நாவல்.


4) நவீனன் டைரி - நகுலன் (நாவல்)


5) நிழல்கள் - ஹரன் பிரசன்னா (கவிதைத்தொகுப்பு)

6) பேசாத பேச்செல்லாம் - ச.தமிழ்ச்செல்வன் (கட்டுரைகள்)

7) கிருஷ்ணா கிருஷ்ணா – இந்திரா பார்த்தசாரதி (நாவல்)

8) இடாகினி பேய்களும் – கோபி கிருஷ்ணன் (நாவல்)

9) அகி – முகுந்த் நாகராஜன் (கவிதைகள்)

10) நினைவோடை - அசோக மித்ரன் (27 கட்டுரைகள்)

11) காக்டெய்ல் – சுதேசமித்ரன் (நாவல்)

12) லண்டன் டைரி - இரா.முருகன் (பயணக்குறிப்புகள்)

13) பென்சில் படங்கள் – ஞானக்கூத்தன் (கவிதைகள்)

14) நாலு மூலை – ரா.கி.ரங்கராஜன் (கட்டுரைகள்).



Friday, July 03, 2009

யோக வசிஷ்ட்டமும் ரிலேட்டிவிட்டி தத்துவமும்




பில்லி ப்ரிசன் என்று ஒரு ஆசாமி இருக்கிறார். அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் இவர் "A Short History of Nearly Everything" என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில் பெரும்பாலான அறிவியல் தத்துவங்களுக்கு எளிமையாக விளக்கமளித்துள்ளார். எல்லாருக்கும் புரியும்படியான எளியமொழியும், மெல்லிய நகைசுவையும் கொண்ட இந்த நூல் ஒரு Best Seller. சுஜாதா தன் வாழ்நாள் முழுவதும் எழுதிய கட்டுரைகளை முறையாக ஒன்று திரட்டினால் ஒரு மினி "A Short History of Nearly Everything" கிடைக்குமென்பது எனது எண்ணம்.
'உங்களில் யார் அடுத்த சுஜாதா' நடத்தி அடுத்த சுஜாதாவாகவோ, குட்டி சுஜாதாவாகவோ, இல்லை சுஜாதாவின் வாரிசாகவோ வர விரும்புகிறவர்கள் அவர் அறிவியல் தமிழுக்கு செய்த பங்களிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும்

சுஜாதாவின் , "ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து" மின்னூலை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.

Saturday, June 27, 2009

32 கேள்விகள் - மீம்



1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பெற்றோர் வைத்த பெயர் தான். எனக்கு என் பெயர் பிடிக்கும்.மேலும் வேறு எழுத்தாளர்கள் யாரும் இந்தப் பெயரில் இல்லாததால் எனது எழுத்துலக வாழ்க்கைக்கும் இதே பெயரையே....(சரி சரி..இதுக்கே அசந்துட்டா எப்படி!! இன்னும் நுப்பத்திரெண்டு கேள்விகள் இருக்கே!)


2. கடைசியாக அழுதது எப்போ?

சில நாட்களுக்கு முன்பு, வெங்காயம் நறுக்கும் போது.


3. உங்களுக்கு உங்க கையெழுத்துப் பிடிக்குமா?
சில சமயங்களில். என் கையெழுத்து என் மனம் போல அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். செக்கில் கையெழுத்து போடக் கூட இரண்டு நிமிடம் வெயிடீஸ் விட்டு பழகி, பின்தான் போடுவேன்.


4. பிடித்த மதிய உணவு?
பருப்பு சாதம் , வெண்டைக்காய் கறி. புனேவில் சென்று தென்னிந்திய உணவு கிடைக்காமல் திண்டாடிய போதும் இதுதான் வேறு ரூபத்தில் வந்து கை கொடுத்தது. தால் ச்சாவல், பிண்டி பாஜி.



5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

உங்களையே உங்களுக்குப் பிடிக்குமான்னு பின் நவீனத்துவ முறையில் கேட்கிறீர்கள். பிடிக்கும்..அதாவது நட்பு வைத்துக்கொள்வேன்.



6. கடலில் குளிக்கப் பிடிக்குமா, அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
அருவியில்


7. ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
முதலில் பேச்சை, பின்னர் பேச்சுக்கும் செயலுக்குமுள்ள தொடர்பை


8.உங்க கிட்ட உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்த விஷயம் - இரக்ககுணம்,adaptability,உழைப்பு
பிடிக்காதவிஷயம் - அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கருதி சுயவிருப்பத்தினை தெரிவிக்காமல் விட்டுவிடுவது.


9. உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்? 31. கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
மணம் ஆகவில்லை.

10. இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
பெற்றோர் பக்கத்துல இல்லாததற்கு.


11. இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
(காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு போல வாசிக்கவும்) பதிவை எழுதிய அன்று இவர் வெள்ளை நிறத்தில் மேலாடையும், பழுப்பு நிறத்தில் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தார். இவரைப் பற்றிய தகவல் அறிந்தால் தொடர்புகொள்ள வேண்டிய........


12. என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
P.B.ஸ்ரீநிவாஸ் பாடல்கள்



13.வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
நீலம்.(அய்யா ராசா...யாருய்யா இப்படியெல்லாம் ரூம் போட்டு கெள்விகளை யோசிச்சது??)

14. பிடித்த மணம்?
புது புத்தகத்திலிருந்த்து வரும் மணம், புது காப்பிப்பொடியின் மணம், மல்லிகைப்பூ மணம்.


15. நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
நானே ரொம்ப காலதாமதமாகத்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.எனினும் அழைக்கவிரும்பும் நபர் ப்ரகாஷ். இவரது சுவாரஸியமான எழுத்துநடையும் அதில் தெறிக்கும் நகைச்சுவையும் பிடிக்கும். ஆனால் இப்போதெல்லாம் இவர் பதிவெழுதுவதில்லை. என்ன கேட்டாலும் 140 எழுத்துகளுக்குள்ளாகவே பதில்
சொல்கிறார்
. இவர் எழுதினால் மகிழ்வேன்.


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
இவர் அவ்வப்போது பார்த்த சினிமா பற்றி எழுதுகிற குறிப்புகள் பிடிக்கும். கதைகள்ள உடனே நியாபகத்துக்கு வருவது கமிஷன் மண்டி சுப்பையா. வெட்டியா மொக்கைபதிவுகள் போடாம சிறுகதை எழுதுவதில் தீவிரமா இருக்கறது பிடிக்கும்.

18.பிடித்த விளையாட்டு?
பிடித்த அல்ல பீடித்த விளையாட்டு கிரிக்கெட்.


19. கண்ணாடி அணிபவரா?
இன்னமும் இல்லை.


20. எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
எல்லாவகைப் படங்களும் என்றாலும் எதார்த்தமான படங்கள் கொஞ்சம் கூடுதலாகப் பிடிக்கும்.


21. கடைசியாகப் பார்த்த படம்?
Hangover. நகைச்சுவைப் படம், பிடித்திருந்தது.


22. என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
"பூமியின் பாதி வயது" - அ.முத்துலிங்கம் அவர்களின் அனுபவக் கட்டுரைகள்.


23. உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
கணக்கு வைத்துக்கொள்வதில்லை.


24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடிக்காத சத்தம் - வெடி சத்தம்.
பிடித்த சத்தம் - வெடி சத்தம்..நான் பற்றவைக்கும் போது மட்டும்(சும்மா அதிருதில்ல!!)


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
இதோ இங்கே..ஆக்ஸ்ஃபோர்ட்,இங்கிலாந்து.

26.உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
ஓ இருக்கிறதே! அபார ஞாபக சக்தி உண்டு. உதாரணாமா , இருபத்தாறு வருடங்களுக்கு முன்னால் எனக்கு வைத்த பெயரை இன்னமும் யார் கேட்டாலும் சரியாக சொல்லிவிடுகிறேன்.(அய்யோ, அடிக்க வராதிங்க..இது சொந்த மொக்கை இல்ல. கல்கி ஒருமுறை சொன்னது)


27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அடக்குமுறை மற்றும் அடங்குமுறை

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சாத்தான்களுக்கா பஞ்சம்? சாத்தானுக்குள் இருக்கும் என்னை அல்லவா தேடிக்கொண்டு இருக்கிறேன்.(நோட்பண்ணுங்கப்பா..நோட்பண்ணுங்கப்பா)

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
மூணாரு

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே..அப்படின்னு சொன்னா அது உடான்ஸ். இன்னும் கொஞ்சம் சந்தோஷமா, சுத்தி இருக்கறவங்களையும் சந்தோஷமா வச்சிருக்கணும்.


32. வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
(கொஞ்சம் நீளமான வரி)
Reverence for Life affords me my fundamental principle of morality, namely, that good consists in maintaining, assisting, and enhancing life and that to destroy, harm, or to hinder life is evil and the affirmation of the world ,that is affirmation of the will to live, which appears in phenomenal forms all around me -- is only possible for me in that I give myself out for other life -(Albert Schweitzer)

Life Quotes அப்படின்னு கூளில் தேடி, பொறுக்கினதாக்கும். லேசில் புரியாது....வாழ்க்கையைப் போலவே.....


விளையாட்டிற்கு அழைத்தமைக்கு நன்றிகள் ஸ்ரீதர்


Tuesday, June 23, 2009

உலகத் திரைப்படங்கள் - மீம்

சில மாமாங்களுக்கு முன் சந்தோஷ் குரு என்னை உலகத் திரைப்படங்கள் குறித்த மீம் ஒன்றினைத் தொடர அழைத்திருந்தார். வேலைபளு, இந்திய பயணம்,சோம்பல் என பல காரணங்களால் கொஞ்சகாலம் பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. பதிவு எதுவும் எழுதாத இந்த இரண்டு மாதங்களில் ,கூகிள் ரீடரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சிந்திக்க வைக்கிறது ;) .தற்போது அடுத்த மீமிற்கு அழைப்பு வந்துவிட்ட நிலையில், பாக்கியை முதலில் தீர்த்துவிடலாம் என்றிருக்கிறேன்.

உலகத் திரைப்படங்கள் பற்றிப் பேசுவது எனக்கு மிக விருப்பமானது தான். ஆனால் மிக சொற்ப எண்ணிக்கையிலேயே வெளிநாட்டுப்படங்களைப் பார்த்திருக்கிறேன். மேலும் ஒரு உலகத் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்னரே அது குறித்த விமர்சனக்கள், செய்திகளைப் படித்து , அது ஒரு மிகச் சிறப்பான படம் என்று நம்பத் துவங்கிவிடுவேன். அதனால் பெரும்பாலும் அவை ஏமாற்றம் அளிப்பதிலை. இவை தாண்டி என்னை மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டிய பத்து படங்களைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறேன். வரும் ஆண்டுகளில் இந்தப் பட்டியல் மாறலாம், மாற வேண்டும்.

1.Amelie


















அமேலியின் உலகம் சின்னச் சின்ன சந்தோஷங்களால் ஆனது. வாழ்க்கை நிகழ்வுகளை வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் இவள், நுட்பமான உதவிகள் செய்து அடுத்தவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை நிகழ்த்துகிறாள்." Life is Beautiful" படத்தைத் தொடர்ந்து, அமேலியும் நம் ஊர் இயக்குனர்களுக்கு அவ்வப்போது ஐடியாக்களை வாரி வழங்கும் அமுதசுரபியாகவே இருக்கிறாள்.

2.12 Angry Men















ஒரு பாடல் காட்சிக்கு ஸ்விட்சர்லாந்து, சண்டைக்கு ஹாங்காங், கருப்பு ஹீரோவுக்கு வெள்ளையடி, கதாநாயகியாக உலக அழகி, பாடல் வெளியீட்டுக்கு ஜாக்கிசனை கூப்பிடு என்று எதிலெதிலோ கவனத்தை செலுத்தி கதையைக் கோட்டைவிடும் இயக்குனர்கள் பார்க்க வேண்டிய (பா)படம். ஒரு அறை, 12 கதாபாத்திரங்கள் , ஒரு கொலை வழக்கு இதனை வைத்துக்கொண்டு நம்மை ஒன்றரை மணிநேரத்துக்கு இருக்கையின் நுனியில் கட்டிப் போடுகிறார்கள்.

3.City of God

















ரியோ டி ஜெனிரோ நகர சேரிகளில் அறுபது எழுபதுகளில் நடந்த குழு சண்டை, போதை மருந்துக் கடத்தல் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். பெரும்பாலும் அப்பகுதிகளில் வாழும் மக்களையே நடிக்கவைத்து படமாக்கியிருக்கிறார்கள். அற்புதமான ஒளிப்பதிவு.

4.Shindler's List

















ஸ்டீவன் ஸ்பீல்பர்க் தான் இயக்கிய படங்களில் தனக்கு மிக விருப்பமான படமாக இதனைக் குறிப்பிடுகிறார். இரண்டாம் உலகப் போரின் துவக்கத்தில் ஆஸ்கர் ஷிண்ட்லர் என்ற ஜெர்மன்காரர், தான் துவங்கவிருக்கும் தொழிற்சாலைக்கு ஜ்யூக்களை குறைந்தவிலைக்கு வேலைக்கு எடுக்க வருகிறார். அங்கு ஜ்யூக்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டு மனம் மனம் மாறுகிறார். நாஸிக்களை ஏமாற்றி சுமார் 1100பேர்களின் உயிரைக் காப்பாற்றுகிறார்.உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

5.Se7en


















அந்நியன், காக்க காக்க போன்ற படங்களில் இருந்தெல்லாம் ஐடியாக்களை சுட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால் என்ன, இந்த படங்கள் வெளி வருவதற்கு ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னரே Seven வெளியாகிவிட்டது ;) மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட த்ரில்லர். படத்தின் முடிவு யூகிக்க முடியாதது.

6.Seven Samurai


















ஒரு ஏழை விவசாய கிராமம் தங்களை கொள்ளையர் களிடமிருந்து காத்துக் கொள்ள சாமுராய்களின் உதவியை நாடுகிறது. ஏழு சாமுராய்கள் ஒன்று சேர்ந்து அந்த கிராமத்தைக் காப்பாற்று வது தான் கதை. ஷோலே, The Magnificent seven போன்றவை இந்தப் படத்தின் பாதிப்பில் உருவாக்கப் பட்டவை. தொழில் நுட்பங்கள் சுத்தமாக வளர்ச்சியடையாத 1954ல் எடுக்கப்பட்ட இப்படத்தின் காட்சியமைப்புகள் பிரமிப்பூட்டுபவை.

7.The Shawshank Redemption



















எனது All time favorite இது. ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் ஒரு புதிய கோணமும், புதிய வசனமும் நம்மைக் கவரும். பத்து படங்கள் இல்லாமல் ஒரே ஒரு படத்தை மட்டும் குறிப்பிடச் சொல்லியிருந்தால் இந்தப் படத்தைத்தான் சொல்லியிருப்பேன். A Must Watch movie!!




8.Pather Panchali
















இந்தியாவின் வறுமையை கூறு போட்டு விற்கிறார் 'ரே' போன்ற புலம்பல்களை எல்லாம் தாண்டி என்னை இந்தப் படம் கவர்ந்தது. கருப்பு வெள்ளையில் கிராமத்தின் அழகைப் படம்பிடித்த கேமரா, ரவி ஷங்கரின் இசை,துர்காவின் அழகிய முக பாவங்கள் என குறிப்பிட பல விஷயங்கள் இருக்கின்றன. தனித்துவிடப்படும் அந்தக் கிழவியின் பாடல் மனதில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

9.Let the right one in














இது வாம்பைர் (vampire) படம் என்று சொல்லுங்கள். மாய எதார்த்தவாதம் (Magical Realism) என்று சொல்லுங்கள், குழந்தைகள் படமென்று சொல்லுங்கள். இல்லை உளவியல் சார்ந்த படம் என்று சொல்லுங்கள். ஆனால் படத்தின் ஏதோவொன்று நம்மை அதனுடன் ஒன்றச் செய்கிறது. அந்த சிறு பெண்ணுக்கும், சிறுவனுக்குமான நட்பு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. அதிக எதிர்பார்ப்பின்றி பார்த்த இப்படம் மிகுந்த ஆச்சரியமளித்தது.

10.Requiem For a Dream























இந்தப் படத்தை ஏன் குறிப்பிடுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. இதுவரை இந்த அளவுக்கு மன அழுத்தம் தந்த வேறொரு படத்தை நான் பார்த்ததில்லை.போதை மருந்துக்கு அடிமையாவது, அதன் பின்விளைவுகள் பற்றி பேசும் படம். எடுக்கப்பட்டிருக்கும் முறையும் முற்றிலும் வித்தியாசமானது. என்னை பாதித்தது என்றவகையில் இந்தப் படத்துக்கும் பட்டியலில் இடமுண்டு.

சந்தோஷ் , அழைப்பிற்கு நன்றி, தாமதத்திற்கு மாப்பு

Sunday, March 22, 2009

புத்தகப் பார்வை: The Stranger

"Mother died today. Or maybe yesterday, I don't know. I had a telegram from the home: 'Mother passed away. Funeral tomorrow. Yours sincerely.' That doesn't mean anything. It may have happened yesterday."

ஆல்பெர் காம்யூவுக்கு நோபல் பரிசை பெற்றுத் தந்த "The Stranger" என்ற நாவலின் பிரசித்தி பெற்ற துவக்க வரிகள் இவை. இருத்தலியல் குறித்த மிக முக்கியமான புனைவாக இன்றளவும் இந்நாவல் கொண்டாடப் படுகிறது . இரண்டாம் உலகப்போருக்கு சற்றுமுன் துவங்கும் கதை ,மெர்சால்(Mersault) என்ற அல்ஜீரிய இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை அவனது மன ஓட்டங்களின் ஊடாக விவரிக்கிறது. அயின் ராண்டிற்கு(Ayn Rand) அவரது சித்தாந்தங்களின் முழு உருவமாக ஹோவர்ட் ரோக் திகழ்ந்தது போல காம்யூவின் இருத்தலியல் கொள்கைகளின் மொத்தவடிவமாக மெர்சால் விளங்குகிறான். தாய் இறந்துவிட்ட துக்க செய்தியை, யாருக்கோ நடந்ததைப் போல உணர்ச்சியற்று அணுகுவதிலிருந்து துவங்குகிறது கதை. மெர்சால் உடல் சார்ந்த உணர்ச்சிகளுக்கு மட்டுமே இடமளித்து , நிகழ்கால செளகரியங்களை மட்டுமே பேணி வாழ்பவன். அவனைப் பொருத்தவரை உலக நியதி, உறவுகள்,வாழ்வின் அர்த்தம் எல்லாம் மனிதனால் கற்பித்துக் கொள்ளப்படுபவவை. உள்ளபடியே அவற்றுக்குப் பொருளேதும் இல்லை, அறிவியல் சார் உண்மைகள் உட்பட.

தாயின் சவ அடக்கத்திற்கு செல்கிறான் மெர்சால். அங்கு, தாயின் முகத்தைப் பார்ப்பதற்கு கூட அவன் ஆர்வமற்று இருப்பதை கண்டு அங்குள்ளவர்கள் வியப்படைகிறார்கள். அடுத்தநாள் அலுவலகத்திற்கு சென்று வழகம்போல் தன் பணியைத் தொடர்கிறான். அவனது மேலதிகாரி அவனது பணி உயர்வினைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் மெர்சால் அதில் ஏதும் விருப்பமின்றி இருப்பது கண்டு அவருக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. அதற்கு மெர்சால் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
I answered,that one never changed his way of life; one life was as good as another. I’d have preferred not to vex him, but I saw no reason for “changing my life.”

மெர்சாலைக் காதலிக்கும் மேரி, அவனும் தன்னைக் காதலிக்கிறானா, திருமணம் செய்துகொள்ளலாமா எனக் கேட்கிறாள். அதற்கு மெர்சால், காதலிக்கவில்லை ஆனால் திருமணம் செய்துகொள்வதைப் பற்றி ஆட்சேபம் ஏதும் இல்லை என்கிறான். மெர்சாலின் இயல்பினைப் புரிந்துகொள்ள முடியாமல் மேரி திணருகிறாள்.

மெர்சால் ஒரு நாள் நண்பர்களுடன் கடற்கரைக்கு செல்கிறான். அங்கு ஒரு அரேபிய கும்பலுடன் ஏற்படும் சண்டையில் அவனது நண்பனுக்குக் காயம் ஏற்படுகிறது. பின் மெர்சால் தனியாக மீண்டும் கடற்கரைக்கு வருகிறான். அங்கே அசந்தர்பமான வேளையில் ஒரு அரேபியனை சுட்டுக் கொன்றுவிடுகிறான். மதுவின் போதையிலும், வெய்யில் ஏற்படுத்திய அசெளகரியத்தாலும் முற்றிலும் தற்செயலாக நிகழ்ந்துவிடுகிறது அந்தக் கொலை. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் மெர்சாலை கைதுசெய்து அழைத்துச் செல்வதுடன் முடிகிறது முதல் பகுதி.

இரண்டாவது பகுதி வழக்கு விசாரணையையும், சிறையில் மெர்சாலின் வாழ்க்கையையும் விவரிக்கிறது.மெர்சால் நீதிபதியால் விசாரிக்கப்படுகிறான்.தனது குற்றத்தை முழுமையாக ஒத்துக்கொள்கிறான். ஆனால் தாயின் மரணத்துக்குகூட கண்ணீர் சிந்தாத அவனது வினோதமான இயல்பு கண்டு அனைவரும் ஆச்சரியப் படுகிறார்கள்.அவனது தாய் தங்கியிருத்ந்த காப்பகத்தின் அதிகாரி, சவ அடக்கம் செய்தவர், மேரி, அவனது நண்பர்கள் யாவரும் விசாரிக்கப் படுகிறார்கள். விசாரணை கொலைக்கு சம்பந்தமில்லாத திசையில் மெர்சாலின் போக்கைப் பற்றியதாக இருக்கிறது.அவன் செய்த கொலையைக் காட்டிலும் அவனது மாற்று இயல்புகள் பாதகமானவையாகப் பார்க்கப் படுகின்றன.அபத்தத்தின் உச்சக் கட்டமாக , 'இத்தகைய வினோத போக்குடையவர்கள் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்கள்' என முடிவுசெய்யப்பட்டு அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

காம்யூ மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கிறார் என்று சிலர் சொல்வதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. மாற்றுக்கருத்துடையவர்களை சமுதாயம் எப்படி நடத்துகிறது என்பதன் குறியீடாகவே மரணதண்டனையைப் பயன்படுத்துகிறார் என்று தோன்றுகிறது.மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முதல் நாள் ஒரு பாதிரியார் அவனை சிறையில் சந்திக்கிறார். அவன் செய்திருக்கும் பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு இறைவனிடம் மன்றாடும் படி சொல்கிறார். மெர்சால் இதனை மறுத்து அவரை அங்கிருந்து விரட்டிவிடுகிறான். தான் செய்த செயலுக்கான முழுப்பொறுப்பையும் தானே ஏற்க விரும்புகிறான். சாவையும் அபத்தம் நிறைந்த இந்தவாழ்வின் ஒரு அங்கமாகவே பார்க்கிறான். வாழ்க்கையின் இந்த பாரபட்சமற்ற தன்மை குறித்து அவனுக்கு ஆசுவாசம் உருவாகிறது.மெர்சால் தன்னை சிறை வாழ்க்கைக்குப் பழக்கப்படுதிக்கொள்வதை விளக்கும் பகுதிகள் காஃப்காவின் உருமாற்றம்(Metamorphosis) நாவலை நியாபகப்படுத்துகின்றன.

இருத்தலியல் கொள்கையின் முக்கிய கூறுகளான இறப்பு, தனிமனித சுயதேர்வு அல்லது சுதந்திரம், உலக வாழ்வின் அபத்தம்,பாரபட்சமற்ற தன்மை யாவும் இந்நாவலில் விளக்கப்பட்டுள்ளன. இருப்பியல்வாதத்தை விளக்கும் மிகச்சிறந்த புத்தகம் இது இல்லை என்றாலும் புனைவின் வழியே அதனை அணுகும் முக்கிய நூலாகக் குறிப்பிடலாம். மேலும் காம்யூவின் அபத்தவியல்(Absurdism) தொடர்பான கருத்துக்ள் அடங்கிய "The Myth of Sisyphus" என்ற தலைப்பிலான கட்டுரைகளுக்கு அவர் கொடுத்த புனைவு வடிவங்கள்தான் "The Stranger" முதலான கதைகள் என்றும் சொல்லப்படுகிறது. ஹெமிங் வேயின் நடையை நினைவூட்டும் கச்சிதமான சிறுசிறு வாக்கியங்களால் எழுதப்பட்டுள்ளது நாவல். நோபல் இலக்கியம் என்றால் சுமார் எழுநூறு பக்கங்களுக்குக் குறையாமல் புரியாத மொழியில் எழுதப்பட்டிருக்கும் என்ற எனது எண்ணத்தை மாற்றியிருக்கிறது இந்நூல்.